Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

கவிதைகள்

கடந்து போகும்



ரயில் ஜன்னலூடாக தெரியும்
மின்சார கம்பி இணைந்தும் பிரிந்தும்
தறியென நெய்து எடுக்கிறது
ஆழ்மௌனத்தை
நீள்தனிமையை
கொடும் குற்றச்சாட்டை
நிற்க தேவையற்ற நிலையத்தை
ரயில் பெட்டி
எத்தனை எளிதாக கடக்கிறது?
***

நினைவின் ஊஞ்சல்


இறங்கியது தெரியாமல்
ஊஞ்சல் மட்டும்
இன்னும் ஆடிக் கொண்டிருந்தது.

***

எறும்பிழுக்கும் கனவுத் துகள்கள்



மனதோடு மயங்கிய
நாட்கள் சிலவற்றில்
கண்டிருந்தேன்
கனவுகள் சில கோடி
மதுவுண்ட வண்டென
கனவுண்ணி மேகங்கள்
கலைந்து கலைந்து மிதந்தன
மரங்கொத்தியொன்றின் அளகு
கனவுகளை துளையிட்டன
சிதறிய
கனவின் சில துகள்களை
இரையாக்கி இழுத்து சென்றன
உக்கிரமான சிற்றெறும்புகள்
***

ஈரம்

எப்போதுமே
நதியோர மணல்
மழை நனைக்கவியலாதபடி
நனைந்தே இருக்கிறது.

***

சிறுமியின் வெயிலோடு



ஜன்னலோர வெயிலை
கைப்பிடியில் பொத்திய சிறுமி
சேமிக்க இடம் தேடி
வீடு முழுக்க சுற்றி வந்தாள்
விரலிடுக்குகளில் வழியும்
பிரபஞ்சத்தின் ஒளி
கோடி நூற்றாண்டின்
புராதன இருளண்டிய இடுக்குகளை
ஒளியூட்டியது
விளையாட்டு பொம்மையிடம்
வெயிலை ஒளித்து வைத்து
விளையாட நினைத்தவள்
கையடக்க பொம்மை ஏதும்
கிடைக்காமல் வேறிடம்
தேடி நடந்தாள்
புத்தகப்பையில்
சேமிக்க நினைத்தவள்
படபடக்கும் பக்கங்களால்
காற்றோடு கரையுமென
மேலும் சிலதை தேடினாள்
ஆடைகள் இருக்குமிடம்
அலங்கார பொருள் வைக்குமிடம்
குளியலறை நீர்நிரப்பிகளென்று
எதிலும் வெயிலை இறக்கி
வைக்க இயலாதவள்
இறுதியில்
அடுக்களை சூரிய அடுப்பில்
சேர்த்து வைத்தாள்
வெயிலும் இவளோடு வளர்ந்து
உணவு சமைக்ககூடும்
பின்னொரு நாளில்.
லாவண்யா சுந்தரராஜன்
***

நதி போலும் என் காதல்



ஆண் பெண்ணைக்
காதலிப்பது போலன்றி
ஆதிச் சுடர் அண்டத்தைக்
காதலிப்பது போலவுமன்றி
நதி கரையைக்
காதலித்தல் போலானது
நம் காதல்.
நதியாய் நான்
ஒரே நேரத்தில்
ஓடிக் கொண்டும்
நின்று கொண்டும் இருக்கிறேன்.
அதே சமயத்தில் நீ
நின்று கொண்டும்
ஓடிக் கொண்டும் இருக்கிறாய்.
தொட்டுக் கொண்டே இருப்பினும்
நம் தளங்கள் வெவ்வேறு.
நாம் சேர்வதில்லை.
உன்னில்
வனம் பார்க்கவே
நான் விழைந்து நீர் கொணர்வேன்.
என்னைக் கடல் சேர்க்கவே
நீ திரண்டு திசை தருவாய்.
எனினும்
எதையும்
கொடுப்பதற்கும்
பெறுவதற்குமாய் அன்றி
இருப்பதற்காக மட்டும் இருக்கும்
நம்மிடையே காதல்.
ஓடையிலும் கோடையிலும்
ஓங்குமலை வீழ்ச்சியிலும்
திரட்டி வந்த காதலை எல்லாம்
ஒவ்வொரு புது வளைவிலும்
மறுபடி புதுப்பித்தவாறே
நான் கடல் ஏகுவேன்.
அங்கே கடல் என்னை
எதிர்நோக்கிக் காத்திருக்கும்
கடல் என்னை அரவணைக்கும்
நான் கடலைப் பூரணமாக்கும்
அதே நொடியில்
கடல் என்னைச் சூனியமாக்கும்.
விதிக்கப்பட்டபடி
பிரபஞ்சத்தின் காதல் எல்லாம்
கடலில் சங்கமிக்கும்.
மீண்டும் மழை வீழும்.
வனம் துளிர்க்கும்.
மிகச்சரியாய் அதே கணத்தில்
நான்
நதியாயும் இருப்பேன்.
நீ கரையாய் இருப்பாய்.
வேறொரு தளத்தில்
எனைக் கடந்து போகையில்
நதியென
நீ உணர்ந்தால்
நான் கரையில்
வனமாகிக் கிளைத்து ஒரு
மஞ்சள் மலரையும் பூத்திருப்பேன்.
மதி

Exit mobile version