Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

இரண்டு கவிதைகள்

கந்தர்வர்களின் உலகம்

அங்கிங்கெனாதபடி
அனைத்தும் பார்த்தபடி
அந்தரத்தில் நிற்கிறார் சாடிலைட் கடவுள்

தேனிலவைக் கொண்டாடும்
காத்தரினும் பார்த்திபனும்
விண்படகில் மிதக்கிறார்கள் புவியை மறந்து

என்னிடமில்லாதது உன்னிடம்
என்னடி அரிதானதிருக்குதென்றாள் எமிலி
கேளுன் கணவனையென்றாள் எட்னா

கத்திக் கத்தி சமரசமானபின்
கத்தியுடனலைந்தனரிருவரும்
தலைமறைவான சைமனைத் தேடி

எப்படியிருக்குமோ என்னசெய்யுமோவென
எண்ணியெண்ணிப் படபடக்கும்
பெஞ்சமினுக்கு பல்பீர்சிங்குடனின்று முதலிரவு

ஒருபிறவியில் மறுபிறவி
சாராவாய் மாறிய சைமனுக்கு இருபாலநுபவம்
அவரவர் நல்லூழ் அவரவரறியார்

மணல்வீடுகட்டும் சிறார் மூவரில்
சோபியாவின் பிள்ளை ஒன்று
தாவூதின் பிள்ளை ஒன்று
இருவரின் பிள்ளை ஒன்று

இந்திர உருவிலிருந்த கௌதமர்
இனி கல்லாய் நில்லாள் அகலிகை
இனிது திறந்தவெளியுலகமென்றார்

அந்தரத்தில் நின்றபடி
அனைத்தையும் கேட்டபடி
அனைவரையும் ஆசீர்வதிக்கிறார் சாடிலைட் கடவுள்

திமிர்

முன்பதிவு அதற்கில்லை
தட எண்ணும் வரும்வழியும்
தெரியாது இங்கெவர்க்கும்
எப்போது வருமென்றும்
வந்தபின்தான் தெரியும்
இன்று வந்தால்
நாளை பால்
எலக்ட்ரிக் அடுப்பு
எங்கள் ஊருக்கு
எப்போது வருமோ
தெரியவில்லை
எதற்கும் கொடுப்பினை வேண்டும்
விறகு விரட்டி கெரசின்தான்
எனக்கு வாய்க்கும்போல
சீமெண்ணெயும் விரட்டியும்
சேர்ந்தெழுப்பும் நெடி தாங்காது
எழுந்திருப்பேன்
எலே உனக்கித்தனை திமிராவென்று
உருட்டுக்கட்டையால்
புரட்டிப்புரட்டியடிப்பான்
சுடலைமாடன்
அடிவாங்கிச் சாகவேண்டும்
அதை நினைத்தால் துக்கமாக வருகிறது

Exit mobile version