ஆழ்வார்குறிச்சிக்கு அம்மா வந்துவிட்டால் அதுவரைக்கும் ஆச்சி வீட்டுக்கு அவ்வளவாக வந்து எட்டிப்பார்க்காத ஜனங்களெல்லாம் வருவார்கள். முதலில் ‘குட்டை’ ஆச்சி வருவாள். பிறகு ‘பசு’ஆச்சி. இவர்களில் ‘குட்டை’ ஆச்சிக்கான பெயர்க் காரணம் அவளது உயரத்தைப் பார்த்தாலே நமக்கு தெரியும். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே என்னை விட குட்டையாக இ
ஆழ்வார்குறிச்சியில் ஆச்சியிடமே வளர்ந்த தம்பிக்கு சின்ன வயதில் ரத்தத்தில் உப்பின் அளவு கூடிப் போய் ரொம்பவும் சங்கடப்பட்டான். முகமும், உடலும் வீங்கிப் போனவனுக்கு பாளையங்கோட்டையிலுள்ள சுப்பையா டாக்டர்தான் மருத்துவம் பார்த்தார். கண்டிப்பாக சாப்பாட்டில் உப்பு சேர்க்கக்கூடாது என்று சொல்லிவிட்டார். இட்லி, தோசையில் கூட உப்பில்லாமல் பார்த்து பார்த்து பத்தியம் செய்து கண்ணும் கருத்துமாக கவனித்து அவனை வளர்த்தாள் ஆச்சி. உப்பில்லாத பத்தியச் சாப்பாடு போக சுப்பையா டாக்டர் தவறாமல் முட்டை அவித்துக் கொடுக்கச் சொல்லியிருந்தார். முட்டை என்று உச்சரிக்கக் கூட தயங்கும் ஆச்சி, அதற்கென்று ஒரு தனி இருப்புச் சட்டி, கரண்டி, தம்ளர், மற்றும் அடுப்பு ஒதுக்கி ‘குட்டை’ ஆச்சி கையில் ஒப்படைத்து விட்டாள். தம்பி உடல்நலமடைந்து தேறும் வரை அவனை ‘குட்டை’ ஆச்சி அப்படி பார்த்துக் கொண்டாள்.
யாராவது மண்டையைப் போட்டால் மட்டுமே தாமிரபரணிக்குச் செல்கிற திருநெல்வேலிக்காரர்களாகிய எங்களுக்கு ஆழ்வார்குறிச்சிக்குப் போனால் தினமும் ஆற்றுக் குளியல்தான். தலைக்கு எண்ணெய் தேய்த்து ஊற வைத்து பெரிய எவர்சில்வர் தூக்கில் இட்லியும், சட்னியும், சோறும், குழம்புமாகச் சுமந்து கொண்டு ஆற்றுக்கு அழைத்துச் செல்வார்கள் அம்மாவும், சித்தியும். அப்போது கீழ்வீட்டாச்சியும் சேர்ந்து கொள்வாள். நடந்து செல்லும் போது மீண்டும் மணமகள் என்.எஸ்.கிருஷ்ணன் புராணம். ஆழ்வார்குறிச்சி ஆற்றில் வெள்ளம் எப்போதுமே கரைபுரண்டு ஓடும். தலைகீழே உள்ளே பாய்ந்தாலும் கழுத்து நனையாது. மணலில் குழியைத் தோண்டி சௌகரியமாக அமர்ந்து சிந்தித்து கவிதை எழுதலாம். சோப்பு நுரைகளுக்கு மத்தியில் துணியைத் துவைத்துக் கொண்டே அம்மாவுக்கும், சித்திக்கும் கீழ்வீட்டு ஆச்சி ஊர்க்கதைகள் சொல்லுவாள்.
‘பெத்த அம்மைய பூட்டி போட்டு தொறவோல கைல எடுத்துட்டு ஆச்சியும் ஐயரும் சினிமா கொட்டகைக்கு போறாங்க. இவன் வாத்தியான் வேலைக்கு படிச்சு என்னத்துக்குங்கென்?’
இடையில் அண்ணன் தம்பிகள் எங்கள் பக்கம் திரும்பி ‘எல, இந்த ஆத்துலதான் பளனி படம் எடுத்தாங்க. கணேசனும், முத்துராமனும் ஆறோடும்னு பாடுவாங்கல்லா!’ என்பாள். வருடாவருடம் கோடை விடுமுறைக்கு அங்கு செல்லும் போதெல்லாம் இந்தத் தகவலை மறக்காமல் சொல்வதில் அவளுக்கு அப்படி ஒரு பெருமை.
சாயங்கால நேரங்களில் வாசல் திண்ணையில் வந்து உட்கார்ந்தால் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தீ எரிவது தெரியும். இரவு நேரங்களில் மிருகங்கள் அண்டாமல் இருக்க அங்கிருக்கும் மலைவாசிகள் ஆங்காங்கே வைக்கும் நெருப்பு நம் கண்ணுக்கு மினுக்காம் பூச்சி போல புள்ளி புள்ளியாகத் தெரியும். அந்த நேரத்தில்தான் சைலுதாத்தா வீட்டாச்சி வருவாள். பொழுதுபோக்காகவே நிறைய பிள்ளைகள் பெற்றவள் அவள். அந்த களைப்பும், சோர்வும் அவள் கண்களிலும், உடல் தளர்ச்சியிலும் தெரியும். ஆனால் மனதுக்கு பிடித்த மனிதர்களைப் பார்த்தால் உற்சாகம் பொங்க சிரிப்பாள். ‘பிள்ளேளுக்கு லீவு விட்டுத்தான் ஒரு வாரம் ஆச்சுல்லா! அன்னைக்கே வராம அக்காளும், தங்கச்சியுமா சடைவார இப்பொ வந்திருக்கியெ! கூட ரெண்டு நாளைக்கு ஆளாருச்சிலேருந்தா திருனோலிக்காரங்க கொறைஞ்சா போயிருவியெ?’. கொஞ்சம் குத்தலும், கிண்டலுமாகப் பேசத் தொடங்குவாள். ஆளாளுக்கு பேசப் பேச நேரம் போவதே தெரியாது. வீட்டுக்குள்ளிருந்து ஆச்சி சாப்பிட கூப்பிடும் போது நன்கு இருட்டியிருக்கும். மலையில் உள்ள தீ அப்போது அணையாமல் உருண்டையாகத் தெரியத் துவங்கியிருக்கும்.
‘வேல்சாமி காப்பித்தூளும் இல்ல. பசும்பாலும் இல்ல. ஒங்க ஆச்சி கைமணந்தான் அது.’
மாம்பழத்தாச்சியை பேரப்பிள்ளைகள் நாங்கள்தான் சிறு வயதிலேயே அப்படி கூப்பிட ஆரம்பித்து விட்டதாகச் சொன்னார்கள். அப்படியென்றால் அவள் எங்களுக்கு நிறைய மாம்பழங்கள் வாங்கித் தந்திருப்பாளாயிருக்கும். நிறைய படக்கதைகள் உள்ள புத்தகங்களைப் பரிசளிக்கிற மாம்பழத்தாச்சிக்கு குழந்தைகள் இல்லை. ‘அவளே பால்வாடி பிள்ள மாதிரிதானெ இருக்கா!’ என்பாள் ஆச்சி. உற்றுப் பார்த்தால் ஆச்சி சொல்வதன் அர்த்தம் விளங்கும். ரொம்பச் சின்னதாகத்தான் இருப்பாள் மாம்பழத்தாச்சி. ஒரு கூடை நாற்காலியில் மாம்பழத்தாச்சி உட்கார்ந்திருக்க ரெட்டை ஜடை போட்டபடி அம்மாவும், சித்தியும் அவளருகில் நின்று கொண்டிருக்கும் கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்று இன்றைக்கும் ஆழ்வார்குறிச்சியில் ஆச்சி வீட்டின் சுவற்றில் தொங்குகிறது.
இப்போது நடமாட முடியாமல் இடுப்பொடிந்து படுக்கையிலேயே உட்கார்ந்திருக்கிற ஆச்சியிடம் அவளது தோழிகள் ஒவ்வொருவராக நினைவுபடுத்தி பேசிக் கொண்டிருந்தேன். பழைய நினைவுகளில் மூழ்கி நிறைய பேசினாள். ‘குட்டையையெல்லாம் லேசுல மறக்க முடியுமா? பசு இப்போல்லாம் இருந்தா வீட்ல கெடப்பாளா? ஓடி வந்திரமாட்டா?’ பேசும் போதே அவளையறியாமல் மகிழ்ச்சி முகத்தில் படர்ந்தது. திடீரென்று குரல் உடைந்து அழத் துவங்கினாள்.
‘எல்லாளுவளுக்கும் வயசாயிட்டு. போயி சேந்துட்டாளுவொ. என்ன குத்த வைக்க வச்சுட்டு போயிட்டாளே ஒங்க அம்மை. போற வயசா அவளுக்கு! சண்டாளிக்கு ஒன் மகனப் பாக்க குடுத்து வைக்கலயே! அந்தப் பயலுக்கும்லா கொடுப்பின இல்ல! அப்பாவப் பெத்த ஆச்சிய போட்டோலெல்லா பாக்கான் ?’
[புகைப்படங்கள்: நன்றி (c) Oochappan]