Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

அவள்

அவளை நான்
மீண்டும் பார்த்தேன்
கொந்தளித்தது கடல் மனம்
அக்காலத்திலிருந்த இளமை
நடந்து சென்றது வீதியில்
அவளை மறவாத காலம்
முன்னும் பின்னும்
நகர்ந்து என்னைச் சீண்டியது
அவள் எங்கிருந்தாலும்
நினைத்த நேரத்தில்
என் முன்னே தோன்றினாள்
எப்படிப் போக வேண்டும்
அங்கே என்றால்
என் வழியே போகலாம்
அல்லது அவள் வழியில்
சாட்சியாக இருந்தவர்கள்
சொல்வார்கள் நான் பெற்ற
தண்டனை அவளது ஏமாற்றமென
அது ஒரு விதிக்கப்பட்ட
காதல் போல்
அடுத்து அடுத்து நிகழ்ந்த
பார்வையாலும் விருப்பத்தாலும்
அவ்வாறே இறப்பதற்கு
முன் உதித்தது

***

அவன்

அவன் சொன்னான்
இப்பொழுது ஒன்றுமில்லை என்று
அவளும் சொன்னாள் ஒன்றுமில்லை
எல்லாம் சரியாகிவிடும் என்று
நான் இருந்தேன்
இவர்கள் இருக்கிறார்கள் என்று
பிறகு
நான் மட்டுமே இருந்தேன்
அதுதானே உண்மை என்பதை
நான் விரும்பவில்லை
என்றாலும்
மீண்டும் உயிர் வாழ்வது
பிணம் பிழைத்த கதை தான்
நாளடைவில் அது அடையாளமாக
தோல்வியுற்ற நான்
ஆடும் ஆட்டத்திலிருந்து
தள்ளி நின்றேன்
இடைவெளி என்பது மரணம்
அதை சொல்ல
நான் இல்லாதபோது

—-புஷ்பால ஜெயக்குமார்

Exit mobile version