குறிப்பான்கள், குறிக்கப்படுபவை என எத்தனையோ விரிவான தளங்களில் மொழி பற்றியும் மொழியியல் பற்றியும் ஆராய்ச்சிகளும், நூல்களும் உள்ளன. ஆனால் அன்று மனத்தில் தோன்றியது எல்லாவற்றையும் விட முக்கியமானது மொழி என்பது தொடர்பை ஏற்படுத்த வேண்டும். இன்னும் ஒரே ஒரு நபரையாவது அது எட்ட வேண்டும். அப்படியானால் நமக்கான மொழியை, நாம் தொடர்பு கொள்ள நினைக்கும் மொழியை எவ்வாறு, எப்படித் தேர்வு செய்ய வேண்டும்? மொழி என்றால் அது தாய்மொழியாகத்தான் இருக்க வேண்டுமா? மற்ற எந்த மொழியின் கலப்பும் அற்றத் தூய்மையான மொழியாகத்தான் அது இருக்க வேண்டுமா? அந்த மொழியை மட்டும்தான் பாவிக்க வேண்டுமா? மேலும், மொழி என்பது சொற்களால் மட்டுமே ஆனதா? அது சைகையாகவும், சொற்களற்ற இசையாகவும், ஓவியமாகவும், உடலசைவாகவும், காட்சியாகவும் இருக்கக் கூடாதா? இதுபோன்ற கேள்விகளுக்குக் கொண்டுபோய்விட்டது அந்த மொட்டைமாடி உலாத்தல்.