இவ்வாறு காற்றுக்கான சித்திர எழுத்தை வைத்து அது தொடர்பான மென்காற்று, வன்காற்று, புயல், சூறாவளி என வெவ்வேறு பெயரடைகளைப் பயன்படுத்திப் பல சொற்கள் உருவாக்கப்பட்டன. கசே(風) என்றால் பொதுவாகக் காற்று என்று அழைக்கப்படுவது. மலை மீதிருந்து தவழ்ந்து வரும் தென்றலை யமாகசே(山風-மலைக்காற்று) என்பார்கள். யமா(山) என்றால் மலை. தவழாமல் வேகமாக வீசும் காற்றை அராஷி(嵐) என்பார்கள். மலையையும் காற்றையும் அடுத்தடுத்து இரு எழுத்துக்களாக எழுதாமல் ஒரே எழுத்தாக மேல்பாதியாகவும் கீழ்ப்பாதியாகவும் எழுதினால் அது சூறாவளிக்காற்று எனப்படும்.