பிடி நிலம்

அதே போன்று அவருடைய காட்டில் வேலையென்றால் கலியனும் சேர்த்து உரிமையெடுத்துக் கொள்வான். எந்த பருவத்தில் எந்த பயிர் செய்யலாம், போன முறை வைத்த உரத்தின் வீரியம் எப்படி, தேங்காய் சிரையெடுக்கும் நாள் பக்குவம் என விவாதிப்பதோடு அனைத்திலும் அபார உழைப்பைக் கொட்டுவான். கூலிக்கு பார் ஒதுக்கும் போதெல்லாம் வியர்வைத் தண்ணீர் மூக்கு நுனியில் திரண்டு மண்வெட்டியில் ஒழுக ஒழுக இருபுறமும் வாரி இழுத்துச் சேர்க்கையில் மாது பின்னாலிருந்து கட்டியை எடுத்து எறிந்து ‘யே.. சாமி.. கொஞ்சம் மெதுவா தான் போப்பா.. என்னமோ உன் சொந்த காடாட்டம் இந்த வேகம் காட்டுறியே?’ எனக் கிண்டலாக இறைவான்.

சைக்கிள்

உள்ளறையில் விதவிதமான பழைய சைக்கிள்கள் சர்வீஸ் செய்யப்பட்டு பாதி கம்பீரத்தோடு நின்றிருந்தன. பள்ளிக்கூடத்தில் சும்மா தரப்பட்டவையும் நிறைய கடைக்காரரின் கைக்கு வந்திருந்தன‌. ஆனால் அவையெல்லாம் தண்ணீரடிக்க லாயக்கில்லை என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். கேரியர் தடிமனாக இருந்த ஒரு சைக்கிளை சுற்றிச் சுற்றி வந்து நோட்டமிட்டான். எண்ணெய் தேய்த்த மினுமினுப்பில் கருகருவென காளையின் தோரணையில் இருந்த அது அவனுக்குப் பிடித்துப் போனது. அடித்து பேரம் பேசப் பேச படியாமல் போய்விடுமோ என்ற கலக்கம் தீர்ந்து ஒரு வழியாய் ஆயிரத்து ஐநூறுக்கு முடிந்தபோது தான் இவனுக்கு நிம்மதி வந்தது.