முதியவர்களின் மரணங்களும் குடியிருப்புப் பகுதிகளின் அழிவுகளுமாக இந்தச் சிறிய கதை முழுவதும் நிரம்பி வழிந்து நம் மூச்சை அடைக்கிறது. கதையின் கடைசியில், ஆரண்யங்களை நெருப்பிட்டு அழித்து இந்திரப் பிரஸ்தம் எழும்பிய புராண இதிகாசத் தொன்மங்களையும் அம்பை இணைக்காமல் இல்லை. ஒரே தம்மில் மூச்சைப் பிடித்துக்கொண்டு அத்தனை கதைகளையும் அடர்வனம் போல ஒரு பிழையும் இல்லாமல் எழுதியிருக்கிறார். அப்படியும் கதை 11 பக்கத்தில் முடிந்துவிடுகிறது. வெற்றிகரமான சிறுகதைகளின் எண்ணற்ற வடிவங்களில் இதுவும் ஒன்று.