பால்கனி கதவைத் திறந்தால் ‘சிலுசிலு’ காற்றில் சாம்பல் நிற ‘பாகீரதி’ பாறைகளின் மேல் பாய்ந்தோடிக் கொண்டிருந்தாள். சுற்றிலும் இமயமலை! பல வண்ணங்களில் உத்தரகாசி நகர கட்டடங்கள் என்று கண்ணுக்கு விருந்தாகக் காட்சிகள். சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு விடுதியின் பின்வாசல் வழியே நடந்து சென்று ‘ஜில்’லென்றிருந்த நதியைத் தொட்டு அவளை வழிபடும் பாக்கியத்தைத் தந்ததற்கு நன்றி கூறி வணங்கினோம். கோவிலில் ஜோதிர்லிங்க, சக்தி பீட திவ்ய தரிசனம். மனதில் இருந்த கவலைகளும் தெளிவான நதியின் ஓட்டத்தில் மெல்ல கரைந்து விடாதா என்று ஏக்கமாக இருந்தது. செங்குத்தான படித்துறைகளில் நிறைய படிகள். கவனமாக இறங்க வேண்டியுள்ளது.
Tag: கங்கோத்ரி
யமுனோத்ரி
யமுனா நதிப் பாலத்தைக் கடந்து யமுனோத்ரிக்குச் செல்லும் வழியில் வழியில் ‘கருட கங்கா’ என்று கிளை நதி ஒன்று வருகிறது. கோடைக்காலத்தில் பனி படர்ந்து அழகாக இருக்கும் பகுதி நாங்கள் சென்றிருந்த பொழுது நதியாக ஓடிக் கொண்டிருந்தது. தூரத்திலிருந்தே தெரியும் ஆசிரமங்களில் தங்கும் வசதிகளும் இருக்கிறது. கோவிலை அடைத்தாற்போல தெரியும் நீல வண்ண கட்டடங்களும் அழுக்குத் தார்ப்பாய்கள் போர்த்திய குடில்களும் குப்பை மூட்டைகளும் திருஷ்டிப்பொட்டாக கண்களை உறுத்தியதில் வருத்தமாக இருந்தது. எத்தனை ரம்மியமான இடத்தில் இருக்கிறது இந்த புண்ணியத்தலம்! ஏனோ நமக்குக் கோவிலைப் பற்றின அக்கறையோ அந்தச் சூழலைக் காக்க வேண்டிய பொறுப்போ இருப்பதாகத் தெரியவில்லை. யாரிடம் சென்று முறையிடுவது? திருந்த வேண்டியது நாம் தானே?