நான் அரசியல் அறிந்தவளல்லள்.
ஆனாலும்
அதிகாரத்தில் அமர்ந்தவர்கள்
அத்தனை பேரின்
பெயர் தெரிந்தவள்தான்.
நேருவில் தொடங்கி
எல்லோர் பெயரையும்
கிழமைகள் போல், மாதங்கள் போல்
என்னால் சொல்ல முடியும்.
நான் ஒரு இந்தியன்;பழுப்பு நிறத்தினள்.
மலபாரில் பிறந்த நான்
பேசுவது மூன்று மொழிகளில்;
எழுதுவது இரண்டில்;
கனவு காண்பதோ ஒன்றில்.