படையல்

வயக்காடு போதைடா.. சேத்துல கால் வைக்காத வரைக்கும் தான் தயக்கமெல்லாம்.. காட்டுல இறங்கி ரெண்டொரு நாள் வேல செய்ய ஆரம்பிச்சிட்டா அப்புறம் இந்த ருசியே பழகிடும். லாபமோ நட்டமோ செடி பயிரு மரம் மட்டை காக்கா குருவி மாடுனு இதுங்ககூடவே வாழ்ந்துடலாம்னு தோணும். அதான் அவனுங்கள காட்டுல அண்டவே விடுறது இல்ல. என்ன படிச்சாலும் பெரிய பதவிக்கு போனாலும் இந்த சேறு படிஞ்ச கோவணம் தானே எல்லாத்துக்கும் முதலு..

நினைவில் நின்றவை

மஞ்சுவை வெளியே கூட்டிச் சென்ற நந்தன், அங்கு நின்ற கார்களில் ஒன்றை மஞ்சு வீட்டிற்குப் போவதற்காக ஒழுங்கு செய்தான். காருக்குச் சமீபமாகக் குந்தியிருந்த ஒருவர் சாப்பாடு ஒவ்வாமை காரணமாக வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். ஒன்றுகூடலுக்கு வந்திருந்த அவரை மஞ்சுவால் அடையாளம் காண முடியவில்லை. ஒத்துவராத சாப்பாட்டை உடல் உதறித் தள்ளுகின்றது. ஒவ்வாதவற்றை உடம்பு மாத்திரமா வெளியேற்றும், மனமும் தான் துரத்தும். மஞ்சு காரின் பின்புறம் ஏறிக் கொண்டாள்.

என் குழந்தைகளின் புகைப்படங்கள்

‘‘எங்கேதான் இருப்பாங்க அவங்க? ஏன் இவ்வளவு நேரம் ஆகுது? வெளியே போயிட்டா போதும், எப்ப திரும்பி வரணுங்கிறதே அவருக்குத் தெரியாது’ என்று கணவரை மனதுக்குள் குறை சொல்லிக் கொண்டிருக்கிறாள் அவள்.  எண்ணெய் விளக்கை ஏற்றி வைத்தபடி கதவருகே உட்கார்ந்து அவர்கள் எப்போது வருவார்கள் என்று தன் விழிகளால் துருவிப் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

பூனை சொன்ன ரகசியங்கள்

வகுப்பறைக்குள் செம்மண் நிற சேலையணிந்த ஒரு ஆசிரியை நுழைந்தாள். அவள் தலைக்கு மேலே பல வண்ணங்களில், பல வடிவங்களில் பலூன்கள். பலூன்களோடு பிணைக்கப்பட்ட கயிறுகளை கொத்தாகத் தன் கையில் பிடித்திருந்த ஆசிரியை வகுப்பறையின் நடுவே நின்றாள். குழந்தைகளைப் பார்த்து சிரித்துவிட்டு வித்தை காட்டுவதுபோல கையை விரித்து ஊதினாள். கயிறுகள் விடுபட்டு பலூன்கள் வகுப்பின் மேற்சுவரோடு ஒட்டிக்கொண்டது. வாய்திறந்து வேடிக்கை பார்த்த குழந்தைகள் ஓடிச்சென்று ஆசிரியையைச் சுற்றி நின்றார்கள்

பரிசு

பனிச் சிறுத்தைகளை படம் எடுப்பது மிகக் கடினம். முதலில் கண்களுக்கே எளிதாகத் தென்படாது. அவற்றுக்கு “ மலைப் பேய் “ என்றே பட்டப் பெயர் உண்டு. அவை பனி படர்ந்த மலைகளில் சுமார் ஒன்பதாயிரம் முதல் பதினெட்டாடிரம் அடி உயரத்தில் வசிப்பவை. குளிர் காலத்தில் மலையில் சற்று கீழே இறங்கி வரும். உருவத்தில் புலிகளை விட சிறியவை. உடலில் இருக்கும் சாம்பல்  நிறத் திட்டுகள், பனியிலும் பாறைகளின் பின்னணியிலும் அவை இருப்பதையே மறைத்து விடும். இந்தியாவில் இமைய மலைத் தொடரில் சுமார் நானூறு பனிச் சிறுத்தைகள் இருப்பதாகத் தகவல். நிறைய புகைப் பட நிபுணர்கள் அவைகளைத் தேடித்தேடிப் படம் எடுப்பதற்கு அவை எளிதில் காணக் கிடைக்காததே முக்கிய காரணம்.

கப்பை

யாரையும் வீட்டில் அழைப்பதோ அவர்கள் வீட்டிற்குச் செல்வதோ எனக்கு அறவே பிடிக்காத செயல். பழக்கத்தின் அடிப்படையில் ஒருவரை ஒருவாறு எடைபோட்டுத் தொடர்வது, பிறகு அதே நபரின் பின்புலம் வசதி குறித்தறிந்த பின் நடத்தையில் ஏற்ற இறக்கத்தை வெளிப்படுத்துபவர்களின் ஆபாசத்தில் அருவறுப்படைந்து, சிலரை விட்டு விலகியுமிருக்கிறேன். ஆதலால், யாராக இருந்தாலும் சந்திப்பு வெளியில் தான்

ராபர்ட் அற்புதராஜ்

அந்த நாள்! அப்போதுதான் பத்தாம் வகுப்பு ஆரம்பித்திருந்தது. அன்று பள்ளி முடிந்ததும் இரண்டு அணிகளாகப் பிரிந்து பயிற்சியாட்டம் ஆடினோம். ராபி எதிரணியில் ஆடினான். தாயைப் பிரியாத குழந்தைபோல பந்து அவன் காலைவிட்டு நகராமல் இருந்தது. எல்லைக்கோட்டில் நின்றிருந்த அலெக்சாண்டர் சார் ராபியின் ஆட்ட நுணுக்கங்களை சத்தமாகப் பாராட்டிக் கொண்டிருந்தார். தடுப்பாட்டக்காரனாக மாற்றப்பட்டிருந்த என்னைக் கடந்து ராபி ஒரு கோல் போட்டிருந்தான். சில நிமிடங்களில் ராபிக்கு மறுபடியும் கோல் போடும் வாய்ப்பு கிடைத்தது. காற்றில் பறந்துவந்த பந்தைப் பாதத்தில் தாங்கி நிறுத்தினான். வலப்பக்கம் நகர்ந்து இடப்பக்கம் ஓடி தடுக்க வந்த ஒருவனை ஏமாற்றினான்.

முனி பள்ளம்

அங்கத்தான், 1949’ல ஒரு மிகப் பெரிய அசம்பாவிதம் ஆயிருக்கு. நீர் மின் நிலையத்துக்கு தண்ணீ கொண்டு போற பெரிய சுரங்கப்பாதை வெட்டிகிட்டு இருந்திருக்காங்க. அது மழை சீசன். ஒரு நாள் மத்தியானம் மேக வெடிப்பு ஏற்பட்டு எதிர்பாராத, கடுமையான மழை. தொடர்ந்து  பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு கல்லு மண்ணு பாறையெல்லாம் தண்ணியோட அடிச்சிட்டு  வந்து கட்டிட்டிருந்த குகையோட வாசலை மூடிடுச்சு! அப்ப உள்ளே கிட்டத்தட்ட 600 பேர் வேலை செஞ்சிட்டு இருந்திருக்காங்க”

நாய்கள் ஜாக்கிரதை

“ஏங்க? ரூல்ஸை நான் என்ன உள்ளங்கைலயா பச்சை குத்தி வச்சிருக்கேன், காட்டறதுக்கு? ஏத்தக் கூடாதுன்னா ஏத்தக் கூடாதுதாங்க.. அடுத்த ஸ்டேஷன்ல எறங்கி ஒழுங்கா லக்கேஜ் புக் பண்ணி லக்கேஜ் வேன்ல ஏத்துங்க… இல்லேன்னா பாசஞ்சர் சேஃப்டிக்குக் குந்தகம் வெளவிச்சீங்கன்னு அடுத்த ஸ்டேஷன்ல நாயோட சேத்து எறக்கி விட்ருவோம், தெரிஞ்சுக்குங்க”

யாழ் பறவை

“அவன் அப்ப இருந்த மனநிலையிலை, அந்தரிச்சுப்போய் அப்படி நடந்திருக்கலாம். உங்களைத் தேவையில்லையெண்டா, பேந்தும் பேந்தும் ஏன் அவன் உங்களைத் தொடர்பு கொள்ளவேண்டும்? பாவம் அவன்ரை மனிசி… அவள் ஒரு அப்பிராணி,” பராசக்தி மீண்டும் உபதேசம் செய்துவிட்டு, தனது மொபல்போனைத் திறந்து தங்கச்சுரங்கத்தில் எடுத்த படங்களைப் பார்த்து ரசிக்கத் தொடங்கினார். 

பாப்பாக்காவும் பிரசாந்த் சினிமாவும் 

வாத்தியார் வீட்டின் வாசலில் நிற்கும் ஓங்கு தாங்கான முருங்கை மரத்தின் பொந்தில் தான் அவர்களின் காதல் சிறுக சிறுக வளர்ந்தது குருவி குஞ்சுகளோடு. துண்டு சீட்டு அதற்கு பதில் சீட்டு என்று இருவரும் மாறி மாறி குருவிகளை விட அந்த பொந்தை அதிகமாக பயன்படுத்தி கொண்டார்கள்.  எந்த கை உள்ளே வருகிறது, எந்த கை எடுக்கிறது என்பெதெல்லாம் முருங்கையும், பொந்தில் அடையும் குருவிகளுமே அறிந்த ரகசியம். கொஞ்ச நாட்களிலேயே குஞ்சுகள் வளர்ந்தன. தங்கள் திசை நோக்கி பறந்தன. 

40+

இந்தப் பூஜா ஹெக்டே ப்ளூ டூத் ஹெட்செட்டைத் தூக்கிப் போட்டுட்டு சென்ஹைஸர் வாங்குமா” பாபு அடிக்கடி கலாய்ப்பது நினைவுக்கு வந்து அதன் பங்கிற்கு புன்சிரிப்பை டெலிவரி செய்தது. இந்தப் பிட்ரான்(pTron) ப்ளூ டூத் சாதனம் நன்றாகத் தான் இருக்கிறது. பாடல்கள் கேட்க, செல் அழைப்புகளை ஏற்றுப் பேச, கைப்பையில் மொபைலைப்  பத்திரப்படுத்தி விட்டு வாகனத்தில் பயணிக்கும் சந்தர்ப்பங்களில்  மிகவும் செளகர்யமாக இருக்கிறது. துல்லியமான ஒலித்தரம், ஆடியோ அவுட்புட், பக்கா பேஸ் என பாபு ஏதேதோ சொல்கிறான்.

இசை

ஒரு இங்கிலீஷ் பயங்கரப் படம். பேரு ஞாபகமில்லீங்க. வெள்ளக்கார பொண்ணு குளிக்க போறா. வில்லன் கத்தியோட வந்து அவள குத்து குத்துனு குத்துறான். ரத்தம் சும்மா பீறி அடிக்குது. அப்ப பேக் கிரவுண்ட் மியூசிக்க கேக்கணுமே….. “வீல், வீல் . வீல் ” எணு சும்மா பிச்சி வாங்குது. மாமா சவுண்ட் டயல உச்சத்தில் வச்சி புடிச்சாரு. தியேட்டர் சும்மா அதிருது. அரைவாசி பசங்க கால தூக்கி கதிரையில் வைச்சி……. அத கேக்காதீங்க சார். கதிரைய நனைக்சிட்டானுக எண்ணா நம்புவீங்களா சார்?

கேட்டதும் கண்டதும்

அந்த வீட்டுக்குப் பெரியவா வந்தா. அப்போ வீட்டுக்காரரோட பரிச்சயம். பெரிய காம்பவுண்டு  உள்ளே நாலஞ்சு வீடுகள்.  ஒரு ரூம், சின்ன கிச்சன், அதை விடச்  சின்ன பாத்ரூம்ன்னு வீடு. வாடகைன்னு நானா கொடுக்கறதுதான். கொடுக்காட்டாலும் கேக்க மாட்டார். அப்படி ஒரு மனுஷன். “வாடகையை விட்டா ஒத்தக்கட்டைக்கு வேறே என்ன பெரிய செலவு?  சாப்பாடுதான்.  மாசா மாசம் பென்ஷன் வரது. இங்கே மாசத்திலே பதினஞ்சு நாள் தக்ஷணையோட சாப்பாடும் கிடைச்சுடும். பாத்தேளா, தக்ஷனைன்னதும்தான் ஞாபகம் வரது. ஐநூறு ரூபாயை வாத்தியாருக்கு வாபஸ் கொடுக்கணும்” என்றபடி கையிலிருந்த பர்ஸைத் திறந்து ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்தார்.

குப்பைத் தொட்டி

ப்ளீஸ்.. அப்பா தான் புரிச்சுக்கல.. நீயாச்சும் புரிச்சுக்கோ.நீ எல்லாரயும் மாதிரி கம்ப்யூட்டர் படிச்சுட்டு ஒரு ஐடி கம்பெனில பொட்டி தட்ட மாட்டேன்னு எவ்வளவு வீம்பா லா படிச்சே..  இப்ப வாய்க்கா, வரப்பு தகராறுல அண்ணன் தம்பியையும், டைவர்ஸ் கேஸ்ல புருஷன் பொண்டாட்டியையும் பிரிச்சுட்டு திரியற.. கேட்டா லா என்னோட passionன்னு சொல்லத் தெரியுதுல.. அது எனக்கு இருக்கக்கூடாதா?”

கடாரம் கொண்டான்

பாட்டி என்றால் நார்மடிப் பாட்டி இல்லை. நாகரீகப் பாட்டி. சுருக்கங்கள் இல்லாத ரவிக்கை அணிந்து இருக்கிறாள். காதில் வைரத்தோடு துலங்க கம்பீரமாக, தாத்தா போன இந்த பத்து வருடங்களில் ஓரிரண்டு சுற்றுகள் பெருத்தும் நிறத்தும் இருக்கிறாள்.”ஏன் பாட்டி.. நீ நல்லவளாத் தான இருந்தே? ராமாயணம் வியாசர் விருந்துன்னு படி படின்னு படிச்சுண்டு இருந்தே.. இந்த கூட்டத்தோட சேர்ந்து இப்படிக் கெட்டுப் போயிட்டியே..”

வெந்துயர்க் கோடை

படிக்கையில் சிரிப்பும் ஏக்கமுமாக இருக்கிறது. இவ்வளவு உக்கிரமான காதல் எப்படி பிரிவில் முடிந்தது. அவ்வளவு கறாரானதா வாழ்க்கை? இது என்ன இப்படியெல்லாம் மனதை உழட்டிக்கொள்கிறேன். நான் பாட்டுக்கு நெட்ஃப்லிக்ஸில் எதாவது ஸாம்பி படம் பார்த்துக்கொண்டிருப்பேன். இவனால் வாழ்க்கையை பற்றியெல்லாம் யோசிக்கவேண்டியாகிவிட்டது. மாதவை நேரில் பார்த்து இரண்டு வருடம் இருக்கும். மைசூரில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான். ஊர் பக்கம் வருவதே இல்லை. சென்னைக்காவது வா என்றாலும் வருவதில்லை.

கடிதம்

கண்ணு, இந்த கொஞ்ச நாள்லியே என்னமா எளச்சி போயிட்டடீ?. முந்தியெல்லம்கூட ஒனக்கு இப்படி ஒடம்புக்கு முடியாம போயிருக்குதான்!. ஆனா, கூட கூட போனாக்கா ரெண்டு நாளு. பேரு வெட்டி வந்துருவியே?.. ஏண்டி, இந்த தடவ ஒடம்புக்கு ரொம்ப முடியிலியா?. நா வந்ததுகூட தெரியாமா கண்ண மூடியே கெடக்குறியேடீ?. அது சரி! நாந்தான் எனக்கு புள்ளிங்களே கெடையாதுன்னு சொல்லிட்டன்!. எனக்காவ நீயும் அவுங்கள ஒரேடியா ஒதுக்கி வெச்சி, பெத்த மனம் பித்துன்றத பொய்யாக்கிட்டியேடீ!. இப்படி முடியாம இருக்கறப்பகூட அவுங்கள பத்தியெல்லாம் ஏங்கிட்ட ஒரு வார்த்த பேசுனது இல்லியே!.  

உள்ளிருத்தல்

‘கல்யாணத் தரகு விசுவநாதன் இருக்கானே அவன்தான் போற போக்குல சொல்லிட்டு போனான் ‘என்ன சோம சுந்தரம்.. ராஜா வீட்டு கல்யாணத்துக்கும் நானே புடவ குடுக்குறேன்னு கேக்க வேண்டிதானே’ ன்னு, அன்னக்கி ராத்திரி எனக்கு தூக்கமில்ல. பொரண்டு பொரண்டு படுக்குறேன். காலைல விடியிறப்ப முடிவு பண்ணேன் ‘போயி கேட்டுர்ரதுன்னு. என்ன நடக்கும். விதி பெருசா ஓடிட்டு இருக்கு. யார எங்க தள்ளும் யாருக்குத் தெரியும்.  பாறைல மோதுமா இல்ல அப்டியே தூக்கி கரைல போடுமா யாருக்குத் தெரியும். காலைல குளிச்சு கோயிலுக்குப் போய் அப்பா காசி விசுவநாதா நீதான் கதீன்னு கும்பிடு போட்டு நேரா அரண்மனைக்கு நடந்தேன். இப்ப வேணா அவங்க ராஜாவ இல்லாம நாட்ட ஆளாம இருக்கலாம். ஆனாலும் ராஜ வம்சம் தானே. பணிவா போய் நிக்கிறேன். நல்ல ஆஜானுபாகுவான தோற்றம் அவருக்கு. தயங்கித் தய்ங்கி கேக்குறேன். கேட்டா நம்ப மாட்ட மணி. உடனே ஒத்துக்கிட்டார். அறுபத்திரெண்டு புடவ வேணும்னு சொல்றார்.

போர்

டெக்ஸாஸில் இருந்து கரடுமுரடாக வாஷிங்டனுக்கு வந்த ஜான்சனுக்கு முதலில் தன் படிப்பு, பின்புலம் சார்ந்து தாழ்வுமனப்பான்மை இருந்தது. பல இடங்களில் அது நெருடல்களாகவும், தெளிவின்மையின் சிக்கல்களும் வெளிப்படுவதை முதலில் ரேபரனும் அவர் மூலமாக ரஸ்ஸலும் அறிந்தனர். இருவருக்குமே ஜான்சனை பிடித்துப்போக முக்கியக் காரணம் அவர் தெக்கத்திக்காரன் என்பதே, மற்றபடி தேர்தல் அரசியலில் தொடர்வதற்கு தேவையான அனைத்துத் தகுதிகளும் அவரிடம் ஏற்கனவே இருந்தது. ரஸ்ஸலும், ரேபரனும் ஜான்சனுக்கு எந்த இடத்தில் உண்மையான அதிகாரமும், செல்வாக்கும் இருக்கிறது என்பதை காண்பித்துக் கொடுத்தவர்கள்.

பாவப்பட்டவன்

‘என் சர்வீசிலே நான் எவ்வளவோ பார்த்துட்டேன் சார்…திருச்சில நான் இருந்தபோது இப்படிச் சொல்லிட்டிருந்த ஒரு மானேஜரை, அவர் வயலூருக்கு டூ வீலர்லே போகறச்சே இடை மறிச்சு அடி பின்னி எடுத்துட்டாங்க சார்…அந்த நிகழ்வுக்குப் பிறகு அவர் ஆபீசுக்கே வரலை. அப்டியே லீவைப் போட்டுட்டுப் போனவர்தான். மெட்ராஸ் போயிட்டார் ஒரேயடியா…! இவுங்கல்லாம் ரொம்ப வருஷமா தொடர்ந்து நம்ம ப்ராஜக்ட் ஒர்க் பார்த்திட்டிருக்கிறவங்க சார்…ஆளுகளைக் கூட மாத்த முடியாது…யாரையும் எதுத்துக்கவும் முடியாது. அவுங்களால எந்தப் பிரச்னையும் வராது. ஏன்னா எந்தச் சிக்கல்னாலும் அவுங்களே சமாளிச்சிக்குவாங்க…நாளைக்கு ஆடிட்ல பிரச்னை வந்தாலும் கையைக் காண்பிச்சு விட்டாப் போதும்..

கிரிஸ்ஸோபதேசம்

முதலீடுகளில்  பலவகை  உண்டு.  அந்த காலம் மாதிரி  மனைவியின் தாலியை  அடகு வைத்து, உனது கார்  கொட்டகையில் புத்தொழில்  தொடங்க முடியும். சில சமயம்  அது வெற்றி பெற்று ஒரு கோடி ஈட்டி ஒற்றைக் கொம்பு (unicorn) நிறுவனமாக வளரலாம்.  இல்லாவிடில்  மக்களிடம் முறையிட்டு கூட்ட நிதி சேர்க்கலாம். அடுத்த வழி  தேவதை முதலீட்டார்களை (angel  investors ) முதல் சுற்று முதலீடு கேட்பது.  பெரிய தொகையானால் முதலீட்டார்கள் கூட்டமைப்பை (syndicate )  அணுகலாம். அந்த மாதிரி பல கூட்டமைப்புகள் குழுமத்துக்கு நான்  தலைவன். 

ஓ மீ மக்காய் -சிண்டுவின் சிறு குறிப்புகள்

கொழுக்கட்டையின்  கண்கள், விரிந்து சுருங்கி, கொழுக்கட்டை குறும்புக்கு தயார் என்று சொல்லின.  சின்ன இதழ்கள் குவித்து  “ஊஊ அய்” என்று சத்தம் எழுப்பியது. அம்மா சிரித்தாள். கொழுக்கட்டை அம்மாவின் முட்டியைப்  பிடித்து மடியில் ஏறியது. கழுத்தைக் கைகளால் சுற்றியது. கழுத்தை அவள் தோள்களில் சாய்த்தது. அம்மா தட்டிக் கொடுத்தாள். வலது கையால் கொழுக்கட்டையின் கழுத்தில் கை வைத்துத் தூக்கிக் கீழே விட்டு, இடது கையால் கட்டிலின் தலைப் பகுதியில் இருந்த கூடையைத் திறந்து ஒரு அரக்கு நிற சட்டையை எடுத்து வலது தோளில் போட்டுக்கொண்டு, கழுத்தைச் சாய்த்து, அச்சட்டையைப் பிடித்துக்கொண்டு, கொழுக்கட்டையின் ஈரச் சட்டையை இரண்டு கைகளால் கழற்றி எடுத்து

உறுதி

அவர்கள் ஒருவரையொருவர் முடிவும் முதலும் இல்லாது எப்போதும் கேவலப்படுத்திக்கொண்டு எவ்வளவு தீவிரமாக வெறுத்துக்கொண்டு இருந்தார்கள் என்றால், இரண்டு பக்கத்தவர்களும்  அவரவர் பெயர்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று வெகுகாலம் முன்பே முடிவுசெய்து இருந்தார்கள். ஆனால் ஏன் மாற்றிக்கொண்டிருக்கவில்லை என்றால், அவர்கள் முதலில் மாற்றிக்கொள்ளட்டும்  என்று இவர்களும் இவர்கள் முதலில் மாற்றிக்கொள்ளட்டும் என்று அவர்களும் காத்துக்கொண்டிருந்தார்கள். அப்படியாக அந்த இரண்டு  குடும்பத்தாருக்கும் இன்னும் அப்பண்ணன் என்ற பெயரே ஒட்டிக்கொண்டு இருந்தது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவனுக்கு இன்னொரு குடும்பம் என்றால் அசிங்கம், அருவருப்பு.

மூங்கில் காடு

“புல் கொண்ட விழைவுதான்  மூங்கில்..புற்களைத்தான் முதன்முதலாக இந்த நிலத்தில் உயிராக படர்ந்தனவாம்.  அவை சூரியனை நோக்கி தவம் இருந்தன. சூரியன் தன் அதிகாலை ஔியால் புல்வெளியை தொட்டுப்பரவி பசும் ஔியே உருவாக நின்றாராம். எதற்கான தவம் என்று புற்களை எழுப்பி கேட்டாராம்..பரவுவதைப்போலவே நாங்கள் உயர்ந்து வளர வேண்டும் என்று புற்கள்  கேட்டதாம். வேகமாக பரவி நிலத்தை மூடிவிடும் நீங்கள் உயரமாக வான் நோக்கி எழுந்து வளர வேண்டும் என்றும் வரம் கேட்பது சரியா  என்றாராம். மிச்சமுள்ள  தாவரங்களுக்கு நிலம் இல்லாமல் போகாதா என்றாராம்? இல்லை நாங்கள் தான் முதலில் உங்கள் ஔியை வாங்கி உயிரானோம். காலகாலமாக தரையில்  வளர்ந்து மடியமுடியாது என்று புற்கள் ஒருசேர சொல்லயதும் சூரிய தேவர் புன்னகைத்து அப்படியே ஆகட்டும் நீங்கள் உங்கள் விழைவுபடியே உயர்ந்து வளருங்கள். ஆனால் மடிவதற்கு முன் இருதிங்களில் உங்களின் இந்த விழைவு பெருகும். அப்போது நீங்கள் வான்நோக்கி எழுந்து இப்போது போலவே அனைவரும் ஒன்றாய் பூத்து இந்த நிலத்தில் உயர்ந்து நின்று ஒன்றாய் மடிவீர்கள்..” என்று வரம் அளித்தாராம்.

தேவகுமாரன்

அத்துடன் அந்த வேலையைவிட்டது. தெருவில் நான்கு ‘ரைட்டர்’ பெயர் பலகை தொங்க அரசு தேர்வு நடத்தத் துவங்கியது. விடைக் குறிப்புகள் கொண்டு சிறுகதைகள் திருத்தப்பட்டன. அடிக்கு மூன்று சொல் இருக்கும் பட்சத்தில் கவிதை என்று வரையறுக்கப்பட்டு கணினியில் code செய்து திருத்தப்பட்டன. அதுவுமின்றி என் வாழ்க்கையில் ஒரு புத்துணர்வு, அவன் எனக்கு கிடைத்தான். குழந்தைகளை திறம்பட எழுதுபவர்தான் நல்ல எழுத்தாளராமே. சொல்பவர்களுக்கு திருமணமாகி குழந்தைகள் உண்டு. எனக்கு அப்படியா? எனது மொத்த வாழ்க்கையிலும் குழந்தைகளை தூக்கியதே ஐந்தாறு முறைதான். 

வாசம் 

சில நிமிடங்கள் கொடுமையான மௌனம் என் அறையில் நிலவியது. நெடிய மௌனத்திற்கு பிறகு அவள் பேசலானாள். “எங்க வீட்ல என்னை வெளியே போக சொல்லிட்டாங்க. எங்க போறதுன்னு தெரியாமல் கால் போன போக்கில் போயிக்கொண்டிருந்தேன்.  வழியில் மழையில் தெப்பலாக நனைந்துவிட்டேன். சாப்பிட்டு ரெண்டு மூணு நாளாகிவிட்டது. பசி தாங்க முடியல. மயக்கமும் சோர்வுமாக இருக்கு. தலை சுத்துச்சு. மேற்கொண்டு நடக்க விடவில்லை. இங்க வரும் பொது மழை சரியா பிடிச்சிக்க ஆரம்பித்தது. உங்க வீட்டில் ஒதுங்கினேன். நீங்கள் என்னை தேடி வெளியே வந்த பொது, குளிர் பொறுக்காமல் உள்ளே புகுந்துவிட்டேன்”, என்று நடுங்கி கொண்டே விட்டு விட்டு சொல்லி முடித்தாள் .

வெத்தலப்பட்டி

இரவானால் தண்ணியடிக்காமலும் இருந்தததில்லை. மாதம் நான்கைந்து முறை “பெண்” கூடுதலும் உண்டு. அப்படித் துரை பாட்டாவிற்கும், கேசவன் பிள்ளைக்கும் அறிமுகம் ஆனவள் தாள் இந்த “வெத்தலபட்டி”. வறுமையில் பிறந்து, புத்தி குறைந்த கணவனுக்கு மனைவியாகி, பின்னர் வயிற்று பிழைப்புக்காக “உடல் தொழில்”-லுக்கு உட்பட்டவள். இம்மாதிரி தொழில் செய்யும் மகளிரின் முந்தைய வாழ்வு எல்லோருக்கும் பொதுவானதுதான். வறுமை, வெறுமையைத் தவிர வேறென்ன இருக்க முடியும். காசு கொடுக்கும் கண்டவர்களோடு, அம்மணமாக உறவாட வேண்டுமென்பது அவர்களின் கனவா, ஆசையா என்ன? அவர்களும் மனிதர்கள் தானே.. அவர்களுக்கும் ஆசா.. பாசம்.. இருக்காதா…. ? 

மூட்டம் 

அவன் தயங்கினான். பிறகு குரலைச் செருமிக் கொண்டு ” நிஜமாவே எனக்கு இப்ப பேசப் பிடிக்கலே. நீ கிளம்பறேன்னு சொல்ல நான் உள்ள போனேன்லே. அப்ப சித்தி என்கிட்டே வயசுப் பிள்ளே நம்ம வீட்டுலே இருக்கு. அதை நீ ஞாபகம் வச்சுக்க. இந்தத் தனம் பிள்ளே விபரந் தெரியாம கெக்கே பிக்கேன்னு சிரிச்சுக்கிட்டு வாயாடிகிட்டு இருக்கு. அவனும் வயசுப் பிள்ளதானே.  தனத்தை அவன் அடிக்கடி பாத்துகிட்டே இருந்ததை நானும் பாத்தேன். பொண்ண வச்சுக்கிட்டு நாமதான ஜாக்கிரதையா இருக்கணும்னாங்க.”

ஆயுதம்

டீக்கடைக்காரன் அவசரமாய் டீயை ஆற்றினான். டீ வழிந்து தரையில் விழுந்தது. “சேகர்ணா” என்று சொன்னான். பாதி வார்த்தை வாயிலிருந்து வரவில்லை. சேகர் தலைகுனிந்து அமர்ந்திருந்த வேலுவைப் பார்த்தான். பொருந்தாத பாண்ட் சட்டை அணிந்திருந்த வேலு மேசைமேல் கைகளைக் கட்டிக்கொண்டு குறுகி அமர்ந்திருந்தான்.  தலைமுடி கலைந்து, தூங்காத கண்களுடன் அவன் முகம் வாடிப்போய் இருந்தது.  

பிடி நிலம்

அதே போன்று அவருடைய காட்டில் வேலையென்றால் கலியனும் சேர்த்து உரிமையெடுத்துக் கொள்வான். எந்த பருவத்தில் எந்த பயிர் செய்யலாம், போன முறை வைத்த உரத்தின் வீரியம் எப்படி, தேங்காய் சிரையெடுக்கும் நாள் பக்குவம் என விவாதிப்பதோடு அனைத்திலும் அபார உழைப்பைக் கொட்டுவான். கூலிக்கு பார் ஒதுக்கும் போதெல்லாம் வியர்வைத் தண்ணீர் மூக்கு நுனியில் திரண்டு மண்வெட்டியில் ஒழுக ஒழுக இருபுறமும் வாரி இழுத்துச் சேர்க்கையில் மாது பின்னாலிருந்து கட்டியை எடுத்து எறிந்து ‘யே.. சாமி.. கொஞ்சம் மெதுவா தான் போப்பா.. என்னமோ உன் சொந்த காடாட்டம் இந்த வேகம் காட்டுறியே?’ எனக் கிண்டலாக இறைவான்.

கொடுக்கு

வீங்கிய முகத்துடன் காலையில் எழுந்து வந்தவளை மாமியார் கூர்ந்து பார்த்தாலும் ஒன்றும் கேட்கவில்லை. அவளாகச் சொல்லட்டும் என்று விட்டு விட்டாள். அவனோ எதுவுமே நடக்காதது போல் பேப்பரில் மூழ்கியிருந்தான். நேரமாக ஆக கௌசிக்குள் அவன் வார்த்தையின் விஷம் பரவ ஆரம்பித்தது. வீட்டில் யாரும் எதுவும் சொல்லாமல் இருப்பது,.. முக்கியமாக அவன் தன்னுடைய அழுகையைக் கண்டு கொள்ளாமல் இருப்பது அவளுக்குள் ஆங்காரத்தை வளர்த்தது. மனம் கொதித்துக்கொண்டிருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மௌனமாக வீட்டுக்காரியங்களைக் கவனித்துக்கொண்டிருந்தாள்.

அறுவடை

கதிரவன் நேரில் வந்து சம்பிரதாயத்திற்கு விசாரித்து விட்டு, அடுத்த பூ போகத்திற்கான மேற்பார்வையை பூபதிக்கே மீண்டும் கைமாத்தி விட்டுவிட்டுப் போய்விட்டான். வீட்டின் செலவுகள் இடிக்கத் தொடங்கியிருந்தது. பெண்களை கட்டி கொடுத்த இடத்தில் கையேந்தி நிற்க கூடாதென்பதில் நாயகமும், ராசமும் உறுதியாக இருந்தார்கள். அரிசிப்பானை தூரை தொட ஆரம்பித்திருந்தது. அரிசி தட்டுபாட்டை நாயகத்திடம் சொல்லாமல், இருக்கிற அரிசியை முடிந்த அளவிற்கு நீட்டித்து கொண்டு வரும் எண்ணத்தில் நாயகத்திற்கு மட்டும் வயிற்றுக்கு குறை வைக்காமல் பரிமாறி விட்டு, தனக்கு அரைவயிறும் கால்வயிறுமாக நிரப்பி ஒரு வாரமாக சமாளித்துக் கொண்டிருக்கிறாள் ராசம். 

சைக்கிள்

உள்ளறையில் விதவிதமான பழைய சைக்கிள்கள் சர்வீஸ் செய்யப்பட்டு பாதி கம்பீரத்தோடு நின்றிருந்தன. பள்ளிக்கூடத்தில் சும்மா தரப்பட்டவையும் நிறைய கடைக்காரரின் கைக்கு வந்திருந்தன‌. ஆனால் அவையெல்லாம் தண்ணீரடிக்க லாயக்கில்லை என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். கேரியர் தடிமனாக இருந்த ஒரு சைக்கிளை சுற்றிச் சுற்றி வந்து நோட்டமிட்டான். எண்ணெய் தேய்த்த மினுமினுப்பில் கருகருவென காளையின் தோரணையில் இருந்த அது அவனுக்குப் பிடித்துப் போனது. அடித்து பேரம் பேசப் பேச படியாமல் போய்விடுமோ என்ற கலக்கம் தீர்ந்து ஒரு வழியாய் ஆயிரத்து ஐநூறுக்கு முடிந்தபோது தான் இவனுக்கு நிம்மதி வந்தது. 

இன்வெர்ட்டி-வைரஸ்

மணி இப்போது டாக்டருக்கு படித்து முடித்து விட்டான். திருநெல்வேலி டவுன் பக்கத்தில்  அன்சர்  கிளினிக்கில் வேலை. எனக்கு  இப்போது கல்யாணம் ஆகி ஒரு குழந்தை வேறு இருக்கிறது. எங்களுக்கும் அதே ஊரில் தான் வேலை என்றாலும் அம்மா அப்பாவை அடிக்கடி பார்க்க முடியவில்லை.  அன்றைக்கு நானும் என்  கணவரும் உணவகம் சென்ற போது   தான் மணியைப்  பார்த்தேன். அவன் என்னைப்  பார்க்காமல் யாரோ ஒரு  பெண்ணோடு பேசிக் கொண்டு இருந்தான். அவர்கள் இருவரின் உடல் மொழியை பார்த்தாலே தெளிவாக தெரிந்தது இது வெறும் நட்பல்ல என்று.

இப்படியும் ஒரு நாள், ஒரு கதை.

பிலடெல்பியா, அமெரிக்காவின் பழைய தலைநகரம் என்பதை அறிவீர்கள். வடமேற்காலே ஒரு 16 மைல் ஸ்கைகுல் (Schuylkill) நதியை ஒட்டிப்போகும்  202- பெருஞ்சாலையில் போனீர்களென்றால் நிச்சயம் இந்த ஊரை அடையலாம்.
1769 களில் வந்த ஒரு ஜெர்மானிய வந்தேரி, ஜேம்ஸ் பெர்ரி, தனது மன்னர் பெடரிக் II மேல் இருந்த விசுவாசத்தைக் காட்ட, மதுக்கடையின் பெயர்ப்பலகையில் ‘கிங் ஆப் பிரஷ்யா’ என்று பெயர் எழுத, அதுதான் அந்த ஊரின் பெயர் என்று ஒரு சோம்பேறி ஆங்கிலேய சர்வேயர் இலவச விருந்திற்கு பிறகு, இரண்டுக்கு மேல் போட்ட பெக்கினாலோ என்னவோ, அதையே கிராமத்தின் பெயர் என்று தன் பதிவேட்டில் குறித்துக் கொண்டு போனதாக ஒரு கதை உண்டு. 

ஒரு குழந்தையும் இரு உலகங்களும்

டிரவுசர் இளைஞன் பூனையின் அருகே அமர்ந்து அதன் தலையைத் தாங்கிப் பிடித்து கொஞ்சம் தண்ணீரை காயத்தின் மேல் ஊற்றினான். பூனை அசைந்தது. பூனையின் வாயருகே சில துளிகள் தண்ணீரை விட்டான். பூனை நாக்கை நீட்டி தண்ணீரைப் பருகியது. ஒன்றிரண்டு நொடிகளில் அதன் வாயின் ஓரத்தில் இருந்து நீர் சிவப்பாய் வழிந்து ஒழுகியது. பூனை தன் முன்னங்காலை அசைத்து முன்னே நீட்டி எழப் பார்த்து முடியாமல் மறுபடியும் அமர்ந்தது. மற்றொரு முன்னங்காலை வைத்து தன் உடம்பை இழுத்து மணலில் கொஞ்சமாய் நகர்ந்தது. பிரசாத் தலையை சிலுப்பிக் கொண்டு ஆனந்தியைத் தேடினான். அவள் அவனுக்கு முன்னால் நின்றுகொண்டு பூனையையே பார்த்துக் கொண்டிருந்தாள். 

Femino 16

எழுபது ஜீஎஸ்எம், மென்சிவப்புத் தாளில் கொட்டை எழுத்துகளில் ஃபெமினொ பதினாறின் முதல் துண்டுப் பிரசுரம் அவள் கண்முன்னே விரிந்ததும் ஆயிரம் பெண்களின் ஏக்கமும் நம்பிக்கையும் வேட்கையும் அதன் மேல் சுடராய் எரிவதை ஆயிரம் ஆண்கள் சபித்தபடி வசவுகளால் அச்சுடரை கைகளை வீசியணைப்பது போலவிருந்தது அவளுக்கு. கேடீ பதினாறில் ஒரு விசிறியும் ஒரு எதிரியும் வீட்டுக்கு வீடு தெருவுக்குத் தெரு ஒரு செவ்வரத்தையும் நந்தியாவட்டையும் அருகருகே பூப்பதைப் போல முளைத்திருப்பார்களென்று அனுமானித்தாள்.

சுத்தமும் ஐரீனும்

கணவன் தன்னை விட்டு இன்னொருப் பெண்ணை ரகசியமாகத் திருமணம் செய்தபோது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஓர் பேரிடி தன்னை வெகுண்டு தாக்கியது போல் தோன்றியது.தான் யாரை நம்பி வந்தேனோ அவரே தன்னை ஏமாற்றியதை நினைத்து ஒவ்வொரு நாளும் முள் பாதையில் வெறும் கால்களோடு நடப்பது போன்ற உணர்வை அடைந்தார்.எதை எதையோ தாங்கி கொண்ட இரும்பு நெஞ்சம் நம்பிக்கைத்  துரோகத்தை மட்டும் தாங்க இயலவில்லை.அவ்வபோது வந்து செல்லும் கணவனை கண்டிக்கவும் வழி இல்லை

ஒரு தபலா, சாரங்கி, கே.கே மற்றும் நான்

“நீ சொல்றது சரிதான் ஸ்ரீ. அப்பல்லாம் உன் அப்பா இசையமைச்ச ஒரு படத்தில் வர்ற்ற எல்லாப் பாட்டுக்களையும் என்னையேப் பாடச் சொன்னார். இப்ப பாரு ஒரு பாட்டுக் கேட்டேன். நாலு பேர் பாடறங்க.என்ன பண்றது. உங்கத் தலைமுறைக்கு நெறைய வேணும். வேகமா வேணும். சீக்கிரம் முடியணும். அதனால இன்றைய சினிமா உன் அப்பாக்கு வராதுன்னு நானும் சொன்னேன்.. கேகே எம்மேலயும் கோபமாய்ட்டார்.”

பனிக்காலத்தின் பகல்

மறுநாள் அதிகாலை மைதானத்திற்கு சென்றபோது பனிபடர்ந்திருந்த சிறுபுற்களைப் பார்த்தபடியே நடந்தேன். இந்த டிசம்பர் மாதக் காலை எப்பொழுதும் பனியுடனே மலர்கிறது. அறுபது நிமிட நடைப்பயிற்சிக்குப் பின் மூன்று முறை மைதானத்தை சுற்றி ஓடவேண்டும். முதல் இரண்டு சுற்று ஓட்டத்திற்கு பின் மூன்றாவது சுற்று கொஞ்சம் கடினமாக இருக்கிறது. ஆனாலும் அதுதானே இலக்கு, மூச்சிரைக்க ஓடி முடித்து நின்றபோது உடலெங்கும் வியர்த்து தொப்பலாக நனைந்திருந்தது டிசர்ட். 

ஊர்பேர்

தவினூடே நின்றிருப்பவள் இன்னும் அழுது கொண்டிருப்பாளா? அவள் அழுகை நின்றதாவெனத் தெரியவில்லை. அழுகை வந்தது. கண்ணீர் சிந்தினேனா என்று சந்தேகமாய் இருக்கிறது. நான் அழுகிறேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வது தான் பிரக்ஞையின் அடையாளமா? வேறொரு காட்சிக்குள் என்னை யாரோ தள்ளிவிட்டார்கள்….காட்சிகள் ஏதுமில்லை. இருட்டு அறைக்குள் நுழைந்துவிட்டேன். எங்கிருக்கிறேன். இது வேறோரு காட்சியா? அல்லது வேறொரு எண்ணமா? வடிவங்களும் சிந்தனைகளும் பிணைந்து என்னை நெருக்குவது போல் இருந்தது.

ஒரு துண்டு வெயில்

நம்முடைய இறந்த காலத்தின் மடிப்புகளை வெங்காயத்தோல் போல ஒவ்வொன்றாக உரித்துப் போட. உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் – எல்லோரும் தத்தம் பங்கை வசூலித்துக்கொண்டு போக வருவார்கள். தாய்- தந்தை, கணவர், நண்பர்கள். எல்லா தோல்களும் அவர்களிடம். ஒரு உபயோகமும் இல்லாத, காய்ந்து போன கடைசி குச்சி உங்கள் கையில் மிஞ்சும். மரணத்திற்குப் பிறகு அதை எரிப்பார்கள் அல்லது மண்ணில் புதைப்பார்கள். மனிதன் தனியாகத்தான் இறக்கிறான் என்று எல்லாரும் சொல்கிறார்கள்.  நான் இதை ஏற்பதில்லை. அவனுக்குள்ளிருந்த, அவன் சண்டையிட்ட அல்லது அன்பு செலுத்திய அத்தனை பேரோடும் சேர்ந்து தான் அவன் இறக்கிறான்

திருவண்ணாமலை

சென்ற வாரம் ஒரு நண்பருடன் போனில் நடத்திய உரையாடல் நினைவில் வந்தது. பல வருடங்களுக்குப் பின்னர் அந்த நண்பருக்கு போன் செய்திருந்தேன். திருவண்ணாமலையில் இருப்பதாகச் சொன்னார். கொச்சியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தவர் அவர். நிறுவனத்துக்கு என்னாயிற்று என்று கேட்டேன். வேலையாட்களிடம் ஒப்படைத்துவிட்டதாகச்  சொன்னார். அடேங்கப்பா….கிட்டத்தட்ட 25 கோடி வியாபாரம் செய்யும் நிறுவனத்தின் முதலாளி வேலையாட்களிடம் ஒப்படைத்திருப்பதாகச் சொல்கிறாரே என்று அவருடைய தைரியத்தை வியந்தேன். திருவண்ணாமலையில் வேறு ஏதாவது தொழில் தொடங்கியிருக்கிறாரோ! இல்லையாம்! ஓர் ஆசிரமத்திற்கருகே வீடெடுத்துத்  தங்கி ஆசிரமத்துக்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்துவருகிறாராம்! மனைவியும் மகனும் கூட  விரைவில் அவருக்கு ஒத்தாசையாக அவர் பணி செய்யும் ஆசிரமத்துக்கே  வந்துவிடப் போகிறார்களாம்! 

சுழற்சி

மெயில் படிக்க ஆரம்பித்தான். “உங்களுடைய அனுபவமும், திறனும் எங்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. உங்களை போன்ற ஒருவரை தான் நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம். உங்களுக்கு வேலை அளிப்பதில் நாங்கள் பேரு மகிழ்ச்சியடைகிறோம்.” அவனுக்குளிருந்து ஆனந்தம் வெளியே சிரிப்பாக பொங்கி வந்தது. மனதில் என்றும் அவன் அனுபவிக்காத மகிழ்ச்சியொன்று பரவியது. வாழ்கையில் ஜெயித்துவிட்டோம். இனி எந்த ஒரு எதிர்ப்பு வந்தாலும் அதை எதிர்த்து போராடலாம். நமக்கும் திறமை இருக்கிறது. நாம் யாருக்கும் அடிபணிய வேண்டியதில்லை. லேப்டாப்பை மூடி பைக்குள் வைத்தான். இனி வீட்டுக்கு கிளம்பவேண்டியது தான். இவர்கள் தேடுவார்கள். தேடட்டும்.

பிடிபடா சலனங்கள்

நிரந்தரமாக ஏதுமில்லாமல் ஒரு அரசியல்வாதிக்கு அடியாள் போல வாழ்வு குறித்து கொஞ்சம் அச்சமாக இருந்தது. தானும் வில்லியம் போல ஒரு அர்த்தமற்ற வாழ்க்கை கொண்டிருக்கிறோம் என நினைத்தான். இன்னும் சொல்லப்போனால் அவனுக்காவது தேட ஒரு அழகிய மனைவி இருக்கிறாள். நமக்கு என்ன இருக்கிறது? இருக்கும்வரை அம்மா தேடுவாள்? இல்லாதபோது? எனும் கேள்வி ராஜாங்கத்தை இம்சை செய்தது. அர்த்தமற்ற வாழ்க்கைக்கு பெயர்கூட அர்த்தமில்லாமல் இருப்பது குறித்து நீண்ட பெருமூச்சு வந்தபோது காவல் நிலையத்தை அடைந்திருந்தான்.

ரத்னா

பாரதியார் காலனி நகர்ப்புற வளர்ச்சித் துறையால் குறைந்த வருமானம் ஈட்டும் ஏழ்நிலைக் குடும்பங்களுக்காக கட்டப்பட்டது. வடக்கில் செல்வசிந்தாமணிக் குளம், மெயின் ரோட்டில் இருந்து வழி குளக்கரையோர சாலையாக நீண்டு காலனியைத் தொடும், மேற்கே கவுண்டர் தோட்டம், கிழக்கே தனிவீடுகள், தெற்கே முள்ளுக்காடு. ஆங்கில எழுத்துக்கள் ‘A’ முதல் ‘T’ வரை இருபது பிளாக்குகள், தளத்திற்கு நான்கு என்று இரண்டு மாடிகள் கொண்ட ஒவ்வொரு பிளாக்கிலும் இரண்டு பத்துக்குப்பத்து அறைகள் கொண்ட பன்னிரண்டு வீடுகள். இருநூற்றி நாற்பது வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டதும் 1980ல் குலுக்கல் முறையில் விண்ணப்பித்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.

பப்பிக்குட்டி

நான் கூடையைப்  பார்த்தேன்.  வெள்ளைப் பஞ்சு மேகம் போல புசு புசுவென்று  ஒரு அழகான குட்டி. பிறந்து சில வாரங்கள் தான் ஆகி இருக்க வேண்டும். பொமேரேனியன்  வகை என்று நினைத்தேன்.  கூடையின் பக்கத்தில் ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மாள் நின்று கொண்டு யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தார். “ஆமாங்க, நம்ம பேரப்  பிள்ளைங்களுக்குத் தாங்க.  போன மாசம் தான் குட்டி போட்டது. எழுபதாயிரம்  கேட்டாங்க. நாங்க  அம்பதுக்கு  பேசி முடிச்சிட்டோம்”.

மாநகரம்

இரு நிமிட அமைதி. திடீரென குடிகாரன் திமிறி முன்னால் ஒரு அடி எடுத்து வைக்க சேகரின் பிடி நழுவியது. குடிகாரனின் சட்டைக் காலரை விடாமல் பிடித்துக் கொண்டிருந்த காவலன் அவனைப் பின்னால் இழுத்தான். குடிகாரன் முன்னே செல்ல முடியாமல் திணற அவன் கையைப் பிடித்து முறுக்கிய சேகர் “த்தா எங்க போற?” என்று அதட்டினான். குடிகாரன், “சார் சார் சார், வலிக்குது… விடுங்க விடுங்க” என்றான்.

பூனைகளின் குருதியாறு

துண்டிக்கப்பட்ட சிறுவனின் தலையைத் தேடி ஒரு குழு இரு படகுகள் மூலம் நேப்பியர் பாலத்துக்கு அருகிலான கூவத்தின் சாக்கடையில் தேடிக் கொண்டிருந்தபோது, ஜீப்பில்  செம்மஞ்சள் பூனையை வைத்துக் கொண்டு, இன்ஸ்பெக்டர் பூனை ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்று விசாரித்துக் கொண்டிருந்தது. எப்போதும் சிரித்துக் கொண்டே இருந்த அந்தச் செம்மஞ்சள் பூனை எந்த விசாரணைக்கும் மறுப்பு தெரிவிக்காமல் அழைத்த இடத்துக்கெல்லாம் சென்று முழு ஒத்துழைப்பு கொடுத்தது. “என்னய்யா… உன் ஒருத்தனால, எத்தனை பேருக்குக் கஷ்டம் பாரு. உண்மையைச் சொல்லிடுய்யா.’