அசோகமித்திரன் அஞ்சலி

மொழி மயக்கத்தில் கட்டுண்டு, பண்பாட்டுப் பெருமிதங்களில் சிறைப்பட்டு, ஆதாரமற்ற- அதனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப கைக்கொள்ளவும் கைவிடவும் தக்க கருவியாய் பயன்படும் தன்மை கொண்ட – பகைமைகளால் பிளவுபட்டு, இயல்பு நிலை என்னவென்பதை அறியாத காரணத்தால் இலக்கற்ற திசையில் தமிழகம் சென்று கொண்டிருந்த காலகட்டத்தில் சாதாரண மொழியில் சாதாரண மனிதர்களின் சாதாரண வாழ்க்கையை உள்ளபடியே எழுத முற்பட்டவர் அசோகமித்திரன். பெருங்கூட்டமாய் உரத்து ஒலித்த ஆரவார கோஷங்களுக்கு இடையில் சன்னமாய், தனித்து ஒலித்த அவரது குரல் முகமற்ற, நாவற்ற தனி மனிதர்களுக்காக பரிந்துரைத்த குரல், அவர்களுக்குரிய நியாயத்தை எடுத்துரைத்த குரல். எவ்வளவு மென்மையானதாக இருந்தாலும் அவர் முன்வைக்கும் விமரிசனத்தை தமிழகம் எதிர்கொண்டாக வேண்டும் – நீதிக்கான தேவை இருக்கும்வரை அவரது குரல் ஒலித்துக் கொண்டிருக்கும்.

எளிய மனிதர்களின் எளிய வாழ்வை அகலாது உற்று நோக்கிய அசோகமித்திரனின் பார்வைக்குரிய தீர்க்கம் அவர் தலைமுறையில் மிகச் சிலருக்கே இருந்திருக்கிறது. இன்று அவரை நாம் இழந்திருக்கிறோம், ஆனால் இனி அவரது அக்கறைகள் நம்மோடிருக்கும், அவரது எழுத்துக்கும் பொருளிருக்கும்.

சொல்வனம் அசோகமித்திரனின் பங்களிப்பை தொடர்ந்து பேசி வந்திருக்கிறது. அதன் நூறாவது இதழை ‘அசோகமித்திரன் சிறப்பிதழ்‘ என்றே கொண்டாடியிருக்கிறது. தொடர்ந்து அவரையும் அவரது பங்களிப்பையும் நினைவுகூர்ந்து சொல்வனம் ஊக்கம் பெறும்.

கூடிவரும் வேளை

இடம்பெயர்தலைப் பற்றி எழுதிவரும் ஆப்பிரிக்க நாவலாசிரியர்களின் புதிய அலை ஒன்று புறப்பட்டிருக்கிறது. இதற்கு உலகளாவிய அங்கீகாரமும் கிடைத்து வருகிறது. ஃபியாமெட்டா ரொக்கோ இவர்களின் எழுச்சியைப் பற்றி கூறுகிறார். … பெரிய ஆப்பிரிக்க இலக்கியங்கள் அலைகளைப் போல வந்தவை. முதலாவது 1950ல் எழுதப்பட்டு 1958ல் பதிப்பிக்கப்பட்ட சின்னுவா அசேபேயின் “திங்ஸ் ஃபால் அபார்ட்” என்ற, கிட்டத்தட்ட 12மில்லியன் பிரதிகள் விற்று இன்றும் பதிப்பிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற, நூலால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. காலனியாட்சியின் அனுபவங்கள் சில அசாதாரணமான இலக்கியங்களைத் தோற்றுவித்தன.

அலுவல் மொழி என்னும் பிதற்றல்

மொழிகள் தனித்து இயங்குபவை அல்ல. அவை கலாசாரத்தின் உறுப்புகள். உண்மையில், ஒவ்வொரு கலாசாரமும் அதன் மொழியில் தன்னை நேரடியாய் வெளிப்படுத்திக் கொள்கிறது. இந்தியாவுக்கு உரிய மொழிகள் 1500க்கும் மேற்பட்டவை என்று சொல்லும்போது அத்தனை கலாசாரங்கள் நமக்கு உரியவை என்று சொல்கிறோம். பல்வகைப்பட்ட மொழி மரபுகள் இத்தனை இந்தியாவில் உள்ள நிலையில் அரசுப்பணிகளையும் அதன் அதிகாரபூர்வ நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து தேசமெங்கும் மேற்கொள்வது கடினம். மிக எளிமையாய்ச் சொல்ல வேண்டுமென்றால், பொதுப்பண்புகளும் தொடர்புகளும் இல்லாமல் சாதாரண மனிதர்களும்கூட உரையாடிக் கொள்ள முடியாது. குழப்பமே நிலவும். அதிகாரபூர்வ அலுவல் மொழி ஒன்று வேண்டும்…

பசு, பால், பெண்

This entry is part 32 of 48 in the series நூறு நூல்கள்

மரத்துப் போன பசு, மரத்தால் ஆன பசு என்று பால் வற்றிப் போன உபயோகமற்ற மிருகமாயும், உயிரே இல்லாத பொம்மை மிருகமாயும் இரு பொருள் படும்படி பெண்ணை உவமித்துக் கூறும் மரப்பசு என்ற தலைப்பு மேற்கொண்ட பாதை பெண்பாலைப் பற்றிய பாரபட்சம், பூடக அவமதிப்பு, பொய்மை நிறைந்த மதிப்பீடுகள் இவற்றால் கட்டப்பட்ட பாதை. இந்தப் பாதை இந்த நாவலில் எப்படி எல்லாம் புகுந்து புறப்படுகிறது, இதன் அடித்தளம் என்ன என்று தெரிந்துகொண்டால்தான் இத்தலைப்பையும், அதன் விளக்கத்தையும், இந்த நாவலையும் நாம் புரிந்துகொண்டு விவாதிக்க முடியும். பெண்ணின் பால்தன்மை பற்றி ஆணித்தரமாகக் கூறக்கூடியவர்கள் ஆண்கள்தான் என்ற நிலைமை ஆரம்ப காலத்திலிருந்தே இருக்கிறது.

ஹைப்பர்லூப்: வேகம் தடை இல்லை

எங்கள் ரயில் டெல்லிக்கு 28 மணிநேரம் தாமதமாகச் சென்றது. அந்த 3 நாள் பயணம் ஒருவழியாக முடிந்தபோது எனக்கெல்லாம் வாழ்க்கையே வெறுத்துப் போனது. ஊருக்கு போயி மூணு நாள்ல கடிதம் வரும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். ஆனா ஊருக்கு போகவே மூணு நாளா ? என்ன கொடுமை இது! பிறகு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல விரைவு ரயில்களில் பயணம் செய்திருக்கிறேன். நம்மூர் கொங்கன் ரயில் பாதையில் 100 கி.மீ வேகம் செல்லும் ரயிலில் பயணித்தேன். ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரிலிருந்து நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டெர்டாம் சென்ற ரயில் 220 கி.மீ வேகத்தில் சென்றது பிரமிப்பாக இருந்தது. பின்னர் பிரான்ஸ், பெல்ஜியம், ஜப்பான் என்று பல நாடுகளில் பயணங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு சீனாவின் ஷாங்காய் நகரின் விமான நிலையத்துக்கு செல்ல அங்குள்ள மக்லேவ் ரயிலில் ஏறினேன். 42 கி.மீ தொலைவு கொண்ட அந்தப் பயணம் வெறும் 6 நிமிடங்களில் முடிந்தது மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியையும், அந்த நாட்டின் மீது பொறாமையையும் ஏற்படுத்தியது.

அமெரிக்க நூலகங்கள்: அன்றும் இன்றும்

அமெரிக்காவின் பல்வேறு நூலகங்களை தாமஸ் ஆர் ஷிஃப் (Thomas R Schiff) என்பவர் படம் பிடிக்கிறார். இது அகல் பரப்புத் தொடர் காட்சியாக விரிகிறது. அந்தக் கால நிறுவனங்கள் முதல் தற்கால கட்டிடங்கள் வரை நம் கண் முன்னே தி கார்டியன் நாளிதழில் பரந்ததோற்றம் காண்கிறது.

தமிழர் முகங்கள் : எனக்கோர் அறிமுகம்

“சீக்கிய வீரனைப் போல் முண்டாசு கட்டியிருந்தார்;வற்றி உலர்ந்த உடம்புதான்;வாடிப் போன கன்னங்கள்தான்; எனினும் மார்பை முன்னே தள்ளித் தலை நிமிர்த்தி ஒரு வெற்றி வீரனைப் போல் உள்ளே நடந்து வந்தார். எந்த போர் வீரனுக்குத்தான் அவ்வளவு காம்பீர்யம் இருக்கமுடியும்? நீண்டு நிமிர்ந்த மூக்கும், அடர்ந்த புருவங்களும், உருண்ட கண்களும் அவற்றின் கூர்மையான வீரப்பார்வையும், பரந்த நெற்றியும், அதன் நடுவிலே குங்குமப் பொட்டும் அந்த வீரம் செறிந்த முகத்தை வசீகரமாக்கிவிட்டன. பித்தான் இல்லாத கிழிந்த ஷர்ட்டு மேலே அல்பாகா கோட்டு ;அதற்கு ஒரே பித்தான்; கோட்டும் காலம் கண்டதுதான். ஆனால் அவ்வளவு வறுமையாலும் அவிக்க முடியாத ஒரு பெருமை-ஒரு பெருமிதம்-ஒரு மாட்சி ஒளி வீசியது அந்த முகத்திலும்,கண்களிலும்-மெல்லிய மேகத்திரைக்குள்ளே ஒளிந்து கொண்ட சந்திர பிம்பம் போலே .

மகரந்தம்

விமானியில்லாத விமானங்களை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது இந்த எண்ணம் உதித்து இருக்கிறது: அவற்றை உண்ண ஏற்றவையாக மாற்றி அமைத்திருக்கிறார்கள். எங்கெல்லாம் பேரழிவு தாக்குகிறதோ, எங்கு பசி வாட்டுகிறதோ, எப்பொழுது போர் மூள்கிறதோ, அப்போது இந்த விமானியில்லா விமானம் விண்ணில் செலுத்தப்படும். பஞ்சப் பகுதிகளில் தானாகவே இறங்கும். உடனை அதற்குள் இருப்பதையும் அந்த விமானத்தையும் பிய்த்து பங்கு போட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். இறைச்சியும் தேனடைகளும் உலர் காய்கறிகளும் கொண்டு இந்த விமானம் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. களப் பணியாளர்கள் இந்த டிரோன் வெறும் கண்துடைப்பு என்று…

வாக்கு தவறாமை

“நீங்க குடுத்த காசுக்கு தென்ன மரச்சின்னத்துல ஒரு குத்து” என்று வாக்குச்சீட்டுகளில் சின்னத்தின் மேல் முத்திரையிட்டு பெட்டியில் போடும் தேர்தல் முறையை நாம் கடந்துதான் வந்திருக்கிறோம். மின்னணு வாக்கு இயந்திரங்கள் வந்தபின்பும் தோற்ற கட்சிகள் ஒரு தேய்ந்த ரெக்கார்டை ஓட்டுகின்றன. “எந்த பட்டன் அமுக்கினாலும் ஒரே கட்சிக்கு ஓட்டு விழும்படிச் செய்துவிட்டார்கள்” இந்தக் கூற்று எந்த அளவு சாத்தியம், அந்த வாக்குப்பதிவு இயந்திரம் எவ்வாறு இயங்குகிறது. கொஞ்சம் பார்க்கலாம்.

பெண்ணுரிமை பேசிய முன்னோடி வ.உ.சி

வ.உ.சி. க்கு 1895-ல் முதல் திருமணம் நடந்தது. வ.உ.சி. ராமையா தேசிகர் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரை வீட்டில் வைத்துப் பராமரிக்கிறார். வ.உ.சி. யின் மனைவியும் தேசிகரை அன்புடன் பராமா¢க்கிறார். அடுத்து, ஊரில் உள்ளவர்கள் ராமையா தேசிகர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று குற்றம் சொல்கிறார்கள். வ.உ.சி. க்கு அவரை வீட்டைவிட்டு அனுப்ப மனமில்லை. மனைவியிடம் ஆலோசனை கேட்க செல்கிறார். வ.உ.சி. பிரச்சினை என்னவென்று கூறுவதற்கு முன்பே அவரது மனைவி வ.உ.சி. முன்பு கூறியதையே பதிலாகக் கூறுகிறார்…

தானோட்டிக் கார்கள் – தொழில்நுட்ப அறிமுகம்

தானோட்டிக் கார்களில் கைகளும், கால்களும் இல்லை. இதனால், ஸ்டீய்ரிங் சக்கரம், பிரேக் மற்றும் ஆக்ஸிலரேட்டர் தேவையே இல்லை. தானோட்டிக் கார்களில் உள்ள கணினிகள் நேரடியாக வேகக் கட்டுப்பாடு, மற்றும் நிறுத்துதல் விஷயங்களைச் செய்துவிடும். சிக்கல் எல்லாம் கண்கள் விஷயத்தில்தான். விவரமாக அடுத்த பகுதியில் பார்க்க போகிறோம் என்றாலும் ஒன்றை இங்குச் சொல்லியாக வேண்டும். சாதாரணக் காய்ந்த சாலையில் தானோட்டிக் கார் செல்வதற்கும், மழை மற்றும் பனிப்பொழிவு சாலையில் செல்வதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளன. இயக்க பெளதிகம் முற்றிலும் வேறுபட்டது. மழை கொட்டும் சாலையில் பயண வேகம் மற்றும் நிறுத்துவதற்கான தூரம் எல்லாம் வேறுபடும். நாம் இதைச் சொல்லிக் கொடுக்காமலே கார் ஓட்டும்பொழுது கடைபிடிக்கிறோம்.

உலகமயமாக்கல் – முடிவை நோக்கி?

எழுபதுகளிலும்,எண்பதுகளிலும் உற்பத்தி துறையில் (தயாரிப்பு சந்தை) உலகமயமாக்கல் பெருமளவில் ஏற்பட்டது ; பல மேலாண்மை வகுப்பறைகளில் பகிரப்பட்ட நிகழ்வு – “ஃபோர்ட் கார்களின் கதவுகள் பார்சிலோனாவிலும், குஷன்கள் புடாபெஸ்டிலும்,கியர்பாக்ஸ் பாரீஸின் புறநகரிலும்,ம்யூசிக் சிஸ்டம் ஒசாகாவிலும் தயாரிக்கப்பட்டு, ஷாங்காயில் ஒருங்கிணைக்கப்பட்டு தாய்லாந்தில் காராக விற்கப்பட்டது. இதில் அமெரிக்க பங்கு என்பது எங்கே? இது நாடு கடந்தது – புவியியல் வரம்புகளுக்கு அப்பாற்பட்டது; எனவே உலகளவில் சிந்தியுங்கள் – உள்ளூரளவில் செயல்படுங்கள்” என்று சொன்னார்கள். ’Glocal-க்ளோகல்’ என்ற…

சவுதி அரேபியாவில் வரி கிடையாது என்பது உண்மையா?

சவூதி அரேபிய அரசு தனது நாட்டு பிரஜைகளிடமும், வெளிநாட்டு பிரஜைகளிடமும் எந்த வரியையும் பெறுவதில்லை என்று மார்தட்டிக் கொள்கிறது. அரசு அறிவித்துள்ள வருமானம் என்பது கச்சா எண்ணெய், கச்சா எண்ணெய் சாராத என்ற இரு துறைகள் மூலம் தான் வருமானத்தைப் பெருக்கிக் கொள்கிறது. இதை ஒருவர் இப்படி புரிந்து கொள்ளலாம். அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த நிறுவனங்களின் மூலமாகக் கிடைக்கப்பெறும் ஏற்றுமதி + விற்பனை லாபம் என்று கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். கூடுதலாக கச்சா எண்ணெய் சாராத மற்ற தனியார் நிறுவனங்கள் தமது லாபத்தில் அரசுக்குச் செலுத்தும் கட்டணம் என்ற அளவில் அதிக பட்சமாகப் புரிந்து கொள்வார்கள். சாமானியர்களைப் பொறுத்தவரையில் அரசு தன்னை வரி செலுத்த சொல்லவில்லை என்ற அளவில் மட்டுமே பார்க்கிறது. இதைத் தான் சவுதிய அரசும் வெளி நாட்டு வாழ் மக்களுக்கு வரி எதையும் இந்த ஆண்டு அறிவிக்கவில்லை என்கிறது.

தேறு மனமே, தேறு!

“செகாவ் எழுதினார், ‘மூடர்களும், எத்தர்களும்தான் எல்லாவற்றையும் அறிந்தும், புரிந்து கொண்டும் இருப்பவர்கள்.”

“ஒத்துக் கொள்கிறேன்” அவள் சொன்னாள். “ஆனால் எதையுமே அறிந்து கொள்வதும், புரிந்து கொள்வதும்தான் சாத்தியமா? கடந்த காலம் என்பது எப்போதுமே போனதுதானா? இறந்தவர்களோடு சமாதானம் செய்து கொள்வது சாத்தியமா?”

ஆடிப்பாவை

“மூளை வெறும் உயிர்க் கருவி மட்டும் தானா?”
‘வேறு என்னவாக இருக்க முடியும்?’
“மனம், விழிப்புணர்வு, ஆழ்நிலை, ஆத்மா இவையெல்லாமே மூளையில் தான் இருக்கிறதா?’

‘புல் ஷிட். ஆத்மா என்றெல்லாம் கிடையாது.மனம் என்பது மூளை கொள்ளும் எண்ணங்கள்.விழித்திருக்கையில் நீர் உணர்வுடன் இருக்கிறீர். உறங்குகையில் உமது மூளை பல பகுதிகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு சிறு எச்சரிக்கையுடன் உம்மைக் காக்கிறது. அதை நீர் ஆழ்நிலை என்று சொல்கிறீர்.’

தேரிகாதா- மூத்த பெளத்தப் பெண் துறவிகளின் கவிதைகள்

துறவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் எப்படி வித்தியாசம் இருக்க முடியும்? ஏன் மெய்மை தேடும் பயணத்தில் ஓர் ஆண் பெண்ணை இடைஞ்சலாகக் கருத வேண்டும்?. ஏன் பட்டினத்தார் போன்ற துறவிக்கே ’கண் காட்டும் வேசியர் தம் கண் வலையில் சிக்கி மிக அங்காடி நாய் போல் நெஞ்சம் அலைய’ வேண்டும்? ஏன் ஏக நாதனின் இறையடி இறைஞ்ச போக மாதரைப் போற்றுதல் ஒழிய வேண்டும்? காமம் கடைசி வரை தெரு நாயாய்த் துரத்தும் போலும். ஏன் பின் காமத்தை வெல்லும் தன் இயலாமையாய்ப் பாடாமல் பெண் மேல் ஏற்றி பழித்துப் பாட வேண்டும்? மனம் கடந்து மெய்மை தேடும் பயணத்தில் ஆணென்ன? பெண்ணென்ன? பட்டினத்தார் பெருந் துறவி. ‘பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப் போல் ஆரும் துறக்கை அரிது’ என்பார் தாயுமானவர். பெண்ணைப் பெண்ணென்பதற்காகப் பழிப்பது பட்டினத்தார் நோக்கமாக இருக்க முடியுமா?

சுழலில் மிதக்கும் பூ

தேர்வன்று ராமர் மிகவும்பதட்டமாக இருந்தான். இவள், “எனக்கும்தான் மறந்துட்டு எல்லாம். சும்மா குழம்பாத,” என்று கருப்புக்கயிறைக் கையில் கட்டினாள். பக்கத்திலிருந்தவன், “நீ இந்தமாதிரி ஏதாவது ஆரம்பிச்சா கைநிறைய காசு பாக்கலாம்…அவன் பண்ணினதுக்கு இன்னும் இருக்கு,” என்றான்.

அவனிடம்,“கூட்டமான பஸ்சுக்கு காத்துக்கிட்டுருக்கவன் தானே நீ..” என்றாள். “வெள்ளப்பூனைக்குட்டி மாறி இருந்துக்கிட்டு புலின்னு நெனப்பு,” என்றவுடன் “பூனக்கி புலியத் தெரியுமோ இல்லையோ பால் எதுன்னு நல்லா தெரியும்,” என்றவுடன் வேறுபக்கம் திரும்பிக்கொண்டான் அவன்.

பல்வங்கர் பாலூ – மறக்கப்பட்ட முன்னோடிகளில் ஒருவர்

ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்னோடியாய் திகழ்ந்த ஒருவர் உண்டு. அவர்தான் பல்வான்கர் பாலு. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தடம் பதித்த முதல் தலித் ஆட்டக்காரர் அவர்தான். ஏன் இவரை முன்னோடி என்றும், சொல்லப் போனால் ஆகச்சிறந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்றும் சொல்ல வேண்டும் என்பதற்கு அவரது சாதனைப் புள்ளிவிவரங்களே சாட்சி. … 1876ம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி தார்வாடில் ஒரு தலித் (சாமர் வகுப்பில்) குடும்பத்தில் பிறந்தவர் பல்வான்கர் பாலு. அவரது தந்தை பிரிட்டிஷ் ராணுவத்தில் சிப்பாயாக இருந்தார். அவர் பூனாவின் பார்சி இனத்தவருக்கு சொந்தமான கிரிக்கெட் கிளப் மைதானத்தில் அதன் ஆடுகளத்தை பராமரிக்கும் வேலையில் இருந்ததாகவே அவரைப் பற்றிய முதல் தகவல்கள் சொல்கின்றன. அவ்வப்போது அதன் உறுப்பினர்களுக்கு பந்து வீசவும் செய்த பாலுவுக்கு மாதம் 3/- ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

குளக்கரை

மேலை நாடுகள் படிப்படியாகத் தம் வாழ்வுத்தரத்தை இழந்து வருகின்றன என்று சொல்ல இடம் உண்டு. மொத்த நாடுமே தரமிழந்ததா என்பது தெளிவில்லை. ஆனால் அவற்றுக்கும் இதர பல நாடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு குறைவதால் இப்படித் தெரிகிறதா, உழைக்கும் மக்களும், விவசாயிகளும் அனேகமாகத் தொடர்ந்து சறுக்கு நிலையில் இருக்கிறார்கள். வெள்ளைச் சட்டை உழைப்பாளிகளும் இறங்குமுகம்தான். கல்லூரிகளை விட்டு வெளியே வந்ததும் கிட்டும் வேலைகள் என்னும் ஏணிகளிலோ, படிக்கட்டுகளிலோ தொடர்ந்து ஏறிக் கொண்டு 30 வருட உழைப்புக்குப் பிறகு ஓய்வெடுத்து, முதுமையை நிதானமாக அனுபவிக்கும் ஒரு வாழ்வு என்பதை ’50, ‘60களில் நிச்சயத்தோடும், ’70-’80களில் ஓரளவு உறுதிப்பாட்டோடும் பெறக்கூடிய வாழ்வைப் பெற்றிருந்த மேலை மக்கள், இன்று அத்தகைய உறுதிப்பாடுகள் முதியோருக்கும் இல்லாது, இளைஞருக்கும் இல்லாத வாழ்வையே பெறுகின்றனர். இங்கு கொடுக்கப்படும் செய்திக்கான சுட்டி கனடா நாட்டின் பெரும் நகரான டொராண்டோவைப் பற்றியது…

அம்ரிதா ப்ரீத்தம் – பஞ்சாபிக் கவிதாயினி

தன் உயிருக்கு உயிரான பஞ்சாப் பிரதேசம், தன் கண்முன்னாலேயே பிளக்கப்பட்டு சிதைவதைக் கண்டு துடித்தார் அம்ரிதா. லாகூரிலிருந்து இந்திய பஞ்சாபிற்கு விரட்டப்பட்ட அம்ரிதா நல்லவேளை, தாக்கப்படாமல் தந்தையுடன் பாதுகாப்பாக இந்தியா வந்துசேர்ந்துவிட்டார். கொடூரக் கதையாகிவிட்ட பஞ்சாப் பிரிவினையின் தாங்கவொண்ணா அவலத்தைக் குறிப்பிடுகிறது ‘ வாரிஸ் ஷா! நான் உனை அழைக்கிறேன் !’ எனும் அம்ரிதா ப்ரீத்தமின் புகழ்பெற்ற கவிதை ஒன்று. அம்ரிதாவின் இலக்கிய வருகைக்கு முன்பே, 18-ஆம் நூற்றாண்டில் பஞ்சாபின் சிறந்த கவியாகப் புகழ்பெற்றிருந்தவர் வாரிஸ் ஷா. ஹீர்-ராஞ்சா காதல் காவியத்தை பஞ்சாபி இலக்கியத்துக்கு வழங்கிய மகாகவி. அம்ரிதா அவரை தன் ஆதர்ஷ கவியாக மனதில் கொண்டிருந்தார். இளம் வயதில் விதவையாகிப்போன, சிதைக்கப்பட்ட பஞ்சாபிப்பெண்களின் துக்கத்தைத் தாளமாட்டாது வாரிஸ் ஷாவை அழைத்து முறையிடுவதாக அமைந்திருக்கிறது அம்ரிதா ப்ரீத்தமின் புகழ்பெற்ற அந்தக் கவிதை. மொழியாக்கம்…

நவம்

செலாவணி ஆகிப் போன பண்டைத் தமிழ்ச் சொல் மவ்வல். இன்றைய தமிழ் சினிமாப் பாட்டில் செல்லுபடி ஆகிறது. அங்காடி தமிழ் சினிமாப் பெயராகிறது. பனுவல் புத்தகக் கடையின் பெயராகிறது. பழம் சொற்கள் பலவற்றையும் பரணில் போட்டு விட்டோம் என்பதனால் அவை உயிரற்றவை ஆகிவிடாது என்றும். நாவல் எனும் சொல்லுக்கு நவ்வல் என்பது மாற்றுச் சொல். நவ்வார் எனும் சொல்லுக்குப் பகைவர் என்று பொருள் உண்டு. பெண்மானைக் குறிக்க நவ்வி என்று சொன்னோம். நவ்வி என்றால் மரக்கலம் என்றும் பொருள். நாவாய் என்றாலும் மரக்கலம். நய்யா என்றால் இந்தியில் மரக்கலம். Navy எனும் சொல்லையும் நீங்கள் பரிசீலிக்கலாம். நவ்வு என்றால் முழுதாக நம்புதல் என்றும் பொருள். இந்தப் பின்புலத்தில் இந்தக் கட்டுரைக்கு நவம் என்று தலைப்பு வைத்தேன். உண்மையில் எண்கள் சார்ந்து இஃதென் ஒன்பதாவது கட்டுரை. நவம் என்ற சொல்லுக்கு முதற்பொருள் புதுமை. புதுமையை novel என்பர் ஆங்கிலத்தில். நாவல் என்பதோர் இலக்கிய வடிவம் என்பதும் அறிவோம். அதனால்தான் …