வெண்முரசு பிள்ளைத்தமிழ்

”ஞாலப்பெருவிசையே, ஞானப்பெருவெளியே, யோகப்பெருநிலையே இங்கெழுந்தருள்வாயே” என விண்ணிலிருந்து உடலிலியாக எழும் கமலஹாசனின் குரல்; மடியில் முலையுண்ணும் சிசுவின் உடலில் விதிர்க்கும் அசைவை  ஒரு அன்னை மட்டுமே அண்மையில் அறியக்கூடிய அவதானமாக ’விரிமலர் முதலிதழோ எனத்தோன்றும் பெருவிரலே’ என சைந்தவியின் குரலில் வரும் சரணம்; ‘சொல்லுரைத்து செயல் காட்டி சென்ற அரசே’ ‘இப்புடவியின் மேல் உன் நோக்கு ஒரு கணமும் அணையாதாகுக – என ஆணையும் விழைவும் வேண்டலுமான உச்ச ஸ்தாயில் உயர்ந்து ஒலிக்கும் சரணத்திற்கு ஸ்ரீராமின் குரல்…

ஓசை பெற்று உயர் பாற்கடல்

வயதேற ஏற, தெலுங்குக் கீர்த்தனைகள், சமஸ்கிருத, கன்னட, மலையாள இசைப் பாடல்கள், மராத்தி மொழியின் அபங், வங்காளத்தின் இரவீந்திர சங்கீதம், உருது மொழிக் கவாலி, கஸல் போன்றவற்றைக் கேட்டு இன்புற்றாலும் தமிழ்ப் பாடல்களைக் கேட்க நேர்கையில் மனமும் மெய்யும் பரவசம் கொள்கிறது. பெற்ற அம்மையை அம்மை எனச் சொல்லக் கூசுகிறவர்களின்பால் இரக்கமே ஏற்படுகிறது.