[stextbox id=”info” caption=”வல்லரசுகளின் காலம் முடிந்து விட்டது”]
வல்லரசுகளின் காலம் முடிந்து விட்டது, அதனால் வரலாறு முடியப்போகிறது, வேறொரு யுகம் துவங்கவிருக்கிறது என்று ஃபூகயாமா என்ற ஒரு அரசியலாய்வாளர் 90களின் துவக்கத்தில் எழுதினார். அவரைப் புகழ்ந்தவர்கள் இருந்த எண்ணிக்கைக்குச் சமமாக இழித்தவர்களும் இருந்தனர். அதொன்று போதுமே ஒருவர் திடீரென்று சர்வப்பிரக்ஞர் என்று எல்லாராலும் கருதப்பட்டு மேடைகளில் ஏற்றப்படுவதற்கு. அவர் ஒரு எட்டுப் பத்தாண்டுகள் அப்படி வலம் வந்து விட்டு, பின் மறுபடி மேடையின் நிழல்களில் ஒதுங்கி நிற்க வைக்கப்பட்டார். முதலியத்தின் பொது வெளிகளில் நிற்க ஏதோ ஒரு கவர்ச்சி தேவை, அது வெறும் ஒப்பனையாக இருந்தாலும் சரிதான். ஹ்ம். இல்லை, அது ஒப்பனையாக மட்டும் இருக்க இருக்க கொடுக்கப்படும் வெளியின் அகலநீளங்களும், கால அவகாசமும் கூடும். ஒரு அடிப்படையும் இல்லாமல் அடாவடியாக பாவனை செய்வதற்கு கூடதிகமாக ‘தில்’ வேண்டும் என்ற ஒரு குருட்டு நம்பிக்கை இது. அதனால் உள்ளே ஒரு திடத்தன்மை இருக்கும் என்றும் ஊகம்.
சோவியத் யூனியன் என்ற பொய்க்கனவு இப்படிப்பட்ட ‘தில்’லைக் கொண்ட ரூபமாகத்தான் இருந்தது என்பது ‘89 இல் அது நொறுங்கிச் சுக்கானபோது உலக கம்யூனிஸ்டுகளுக்குத் தெரிய வந்தது.
இதே போல வெறும் கனவுகளில் வாழும் தன்மையை முதலியம் சற்றே நகாசு வேலைகள் செய்து அமெரிக்க மக்கள் மேல் அவர்களின் விருப்பத்தோடே பூசி, அரசு/ சமூக/ பொருளாதார அமைப்புகளிலெங்கும் மெழுகி இருப்பதால் அமெரிக்க மக்களுக்கு அன்றாட வாழ்வில் எது நிஜம் என்பது தம் உடனடி சூழலைத் தாண்டி வேறெதையும் பற்றித் தெரியாத வாழ்க்கை லபித்திருக்கிறது. அதிலுமே அவர்களுக்குப் பல விஷயங்கள் தெரியாது.
சென்ற இதழில் டெட்ராய்ட் என்கிற நகரின் சின்னா பின்னமான பொதுக் கல்விக் கூடங்கள் பற்றியும், அதே மாநிலத்தில் (மிஷிகன்) ஃப்ளிண்ட் என்கிற முன்னாள் தொழிற்பட்டறை நகரில் பல ஆண்டுகளாகக் காரீயம் கரைந்த குடிநீரைச் சத்தம் போடாமல் கொடுத்து வந்தது குடியரசுக் கட்சி நிர்வாகம் என்பது பற்றியும் செய்திகளுக்குச் சுட்டிகள் கொடுத்தேன்.
இப்போது அந்த ஊரில் வசிப்பவர்களுக்கே கூடச் செய்திகளாகக் கொஞ்சம் கொஞ்சமாக இப்போதுதான் கசிந்து வந்திருக்கின்றன. செய்தியை அரசுக்கு உடன்பட்டு உள்ளூர் செய்தி அமைப்புகள் வெளியிடாமல் மௌனம் காத்ததும் இப்போது தெரிய வருகிறது. குழந்தைகள் மருத்துவச் சோதனையில் மூளை வளர்ச்சி குன்றியவர்களாகத் தெரிய வந்த பிறகுதான் அந்த வெள்ளை/ கருப்பினப் பாட்டாளிகளுக்கும், கீழ் மத்தியதர மக்களுக்கும் உண்மை தெரிந்து பெரும் பதற்றம் கொண்டிருக்கின்றனர். ஆனால் கூண்டில் அடைபட்ட மிருக வாழ்வுதான் அவர்களுக்கு.
தம் வாழ்நாள் சேமிப்பை, தாம் தங்கி இருக்கும் வீட்டில் முதலீடு செய்திருப்பார்கள். அதை அப்படியே போட்டு விட்டு வேறு ஊர்களுக்குப் போவது திவாலாகிப் போவதற்குச் சமம். அதோடு போயிற்று என்றும் இல்லை. சேமிப்பை ஒரு குறைந்த பட்ச முன்பணமாக வைத்துக் கடன் வாங்கி வீடு கட்டி இருப்பார்கள். இப்போது அந்த வீடுகளுக்கு விலை கொடுத்து வாங்க யாரும் இல்லை என்பதோடு, வாங்கிய கடனையும் திருப்பிக் கொடுக்க வேண்டும். ஊரை விட்டு ஓடி விட்டாலும் கடன் துரத்தும், ஏனெனில் அமெரிக்காவில் ஒவ்வொருவருக்கும் அடையாள எண்கள் உண்டு. அவற்றை வைத்துத்தான் எந்த ஊரிலும் மறுபடி வீடு வாடகைக்கு எடுக்கவோ, கடன் பெற்று வாங்கவோ, ஏன் கடன் அட்டை/ வங்கிக் கணக்கு ஆகியன துவங்கவோ கூட முடியும். சோஷியல் செக்யூரிடி எண் என்பது இல்லாமல் ஒருவர் வாழ்வது இன்னொரு சிறைவாசம் போல இருக்கும்.
சரி, இது ஏதோ ஒரே ஒரு ஊரில் நடந்தது, இதை மொத்த அமெரிக்காவுக்கும் பொதுமைப்படுத்திப் பேசுவது, தேவையில்லாத ஊதிப்பெருக்கல் இல்லையா என்று சில கணக்கு கந்தையாக்கள் கேட்பார்கள். அவர்களுக்கு என்றுதான் கீழே உள்ள கட்டுரையைக் கொடுத்திருக்கிறேன்.
அமெரிக்க நீர்த் தொழில் சங்கத்தின் ஒரு ஆய்வின் படி அமெரிக்கக் குடிநீர்க் குழாய்களில் 70.5%த்தில் ஏற்க முடியாத அளவு காரீயம் கலந்த நீர் இருக்கிறதாம். இந்த லட்சணத்தில் அமெரிக்க மக்களவையும் உயர் அவையும், முன்பு ஒரு தடவை, அமெரிக்காவின் குடிநீரைச் சோதிக்கவும் நல்ல தரத்தை அடையவும் எனக் கொணரப்பட்ட ஒரு விதியை, தம் அவைகளில் தோற்கடித்திருக்கின்றன. சரி மக்களவைகள்தாம் அரசியல் ஆதாயத்துக்காகத் தம் மகவையும் விற்கக் கூடிய அப்பாவி அரசியல்வாதிகளைக் கொண்டவை என்று பார்த்தால், அதி புத்திசாலி நீதிபதிகளைக் கொண்ட அமெரிக்க உச்ச நீதி மன்றம் என்ன செய்தது? 2001 இலும், 2006 இலும் இப்படி அமெரிக்கக் குடிநீர்த் திட்டங்களைச் சோதித்து ஒரு கட்டுப்பாட்டுக்குக் கொணர அமெரிக்க அரசு திட்டமிடுவதைக் கிட்டத்தட்ட நிறுத்தி விட முயன்றிருக்கிறது. இந்த இரு சம்பவங்களோடு சம்பந்தப்பட்ட கட்டுரைகளையும் கீழே சுட்டி இருக்கிறேன்.
தனிமனித சுதந்திரம் அத்தனை முக்கியமாம், அல்லது மாநில அரசுகளின் அதிகாரம் பங்கப்படக் கூடாதாம். மாநில அரசுகள் என்ன செய்தன என்றால், இப்படி விதிமுறைகள் கொணர்வது அந்த மாநிலத்து தொழில் நிறுவனங்களை நஷ்டப்படுத்துமாம். இந்த விதிகளை எதிர்த்து 24 மாநிலங்களுக்கு மேலானவை வழக்குத் தொடர்ந்திருக்கின்றன.
இப்படி ஒரு அதிசய நாடு, இதன் அதிசய அரசியல் அமைப்பை இந்தியா பின் தொடரச் சொல்லி உலக வலைத்தளங்களில் தமிழ் அறிவுஜீவிகள் கட்டுரைகள் எழுதி மாய்ந்து போகின்றனர் என்று கேள்வி.
இந்த வழக்குகள் எத்தனை சிக்கலானவை என்பதை அறிய இங்கு செல்லவும்.
https://www.law.cornell.edu/supct/html/99-1178.ZO.html
சரி இந்தியாவில் குடிக்க நீரே கிடைக்கவில்லையே என்று கேட்பார்கள். அதைச் சரி செய்யச் சொல்லிக் கேட்கவோ, போராடவோ அனைத்து இந்தியருக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. அதனால்தான் அவர்கள் திராவிடக் கட்சிகளுக்கும், ஜாதி முன்னுரிமையையே முக்கியம் எனக்கருதும் உலகத்திலேயே அதி முற்போக்கான கட்சிகளுக்கும், தேசத்துக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தோம் என்ற முழக்கத்தில் இத்தனை காலம் இந்தியாவைக் கொள்ளை அடித்த கட்சிகளுக்கும் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் எத்தனை தூரம் தம் நலன்களைப் பாதுகாக்க விரும்புகிறார்களோ அத்தனை தூரம்தான் அவை காப்பாற்றப்படும். பல நேரம் அதிலும் கால் வாசிதான் காப்பு கிட்டும்.
இதற்கு விடை மாநில சுயாட்சியோ, தேசத்தைத் துண்டு போட்டு ‘சுயநிர்ணய’ உரிமைகளை எந்தக் குழு கேட்டாலும் அதற்குக் கொடுப்பதும் இல்லை. அப்படிக் கேட்பவர்களைச் சிறையில் அடைப்பதும் புத்திசாலித்தனம் இல்லை. வன்முறையை வழியாகக் கொண்டு அரசியலை ஆக்கிரமிக்க முனையும் எந்தக் குழுவையும் ஒடுக்கினாலே அரசியல் அமைப்பு பன்மடங்கு மேலாகி விடும். அந்த வன்முறையை ஆதரிக்கும், அல்லது முற்படுத்த முயலும், அதைப் பிரச்சாரம் செய்யும் எவரையும் அரசு தண்டிப்பதும் உதவும்.
ஜனநாயகம் என்பது மிக்க குறையுள்ள அமைப்பு. ஆனால் மாற்றுகள் அதைப் போல பன்மடங்கு பயங்கரமான கொலை வெறி அமைப்புகள். ஐஸிஸின் கீழ் வாழ்வோரையோ, சோவியத்தில் வாழ்ந்தவரையோ, மாவோவின் கீழ் வாழ்ந்த சீனரையோ கேட்கலாம். ஆனால் அந்தச் சீனரை முதலில் வெளி நாட்டுக்கு அழைத்து வந்து, உங்கள் அடையாளத்தை வெளியில் விட மாட்டோம், பயப்பட வேண்டாம் என்று சொல்லிக் கேட்டால்தான் கொஞ்சம் முனகலாக உண்மையைச் சொல்வார்கள் என்று தோன்றுகிறது.
[/stextbox]
[stextbox id=”info” caption=”கிருஸ்தவம்”]
பெருவாரி மேலை முதலிய நாடுகளிலும் இப்படி ஒரு கூண்டுச் சிறை வாழ்வு பரந்த தளத்து மக்களுக்கு இருக்கிறது என்ற உண்மை இப்போது வெளி வரத் துவங்கி இருக்கிறது. இந்த உண்மையை மறைத்து உண்மைக் கிருஸ்தவம், உண்மை மக்கள் குடியரசுமே எங்கள் கொள்கை என்ற பொய்க் கருத்தியல்களைப் பரப்பி ஒரு அரசியல் கட்சியும், அவற்றின் ஆதரவாளரான ஊடகங்களும் அதிகாரத்தைக் கைப்பற்றி ஒரு முப்பதாண்டுகள் கொள்ளை அடித்தனர். இன்று நாடெங்கிலும் பற்பல இடங்களிலும் கட்டமைப்பு க்ஷீணித்து, மக்களின் அன்றாட வாழ்வு நொடித்து வாழ்வுத்தரம் இழிந்து, மக்கள் உயிரோடு இருக்கும் காலமும் குறையத் துவங்கி இருப்பதால் அம்மக்களுக்கு இப்போது தாம் ஏமாற்றிக் கடத்தப்பட்டோம் என்ற கோபம் வரத் துவங்கி இருக்கிறது. ஆனால் என்ன, போக்கிடம் ஏதும் இல்லை.
இதே போன்ற நிலைமை இன்று அமெரிக்கர்களுக்கு மட்டும் இல்லை, பல யூரோப்பிய நாடுகளிலும், ரஷ்யாவிலும், பற்பல அரபு நாடுகளிலும், சில பத்தாண்டுகள் முன்பு வரை சுபிட்சத்தின் எல்லைக்குள் வரவிருந்த நாடாகக் கருதப்பட்ட துருக்கியிலும், இன்று நிலவுகிறது. குறிப்பாகத் துருக்கியில் எர்டோஆன் ஆட்சிக்கு வந்த கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் பதட்ட நிலை நிலவுவதோடு, மதவழி ஒடுக்கலும், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையும், அரசுப் படைகளின் தாக்குதலும் அதிகரித்திருக்கின்றன. இப்போது துருக்கி ஒரு புறம் இஸ்லாமிய உலகில் தன் அதிகாரத்தைப் பெருக்க விருப்பத்தோடு செயல்படும் அதே நேரம் தன் உள்நாட்டில் குர்துக்களை முற்றிலும் ஒடுக்கவும் முயல்கிறது. குர்துப் பண்பாட்டை இல்லாமல் ஆக்கவே துருக்கியின் ஆளும் கட்சி விழைவதாகத் தெரிகிறது என்று கீழே உள்ள செய்தி தெரிவிக்கிறது.
துருக்கி இனிமேல் யூரோப்பிய ஒன்றியத்தில் சேர விருப்பமில்லாததாகத் தெரிகிறது. அண்டை நாடான ரஷ்யாவோடு அதற்குப் பெரும் மனஸ்தாபம். ரஷ்யா துருக்கியின் ஏற்றுமதிப் பொருட்களைத் தடை செய்ததோடு, தான் துருக்கிக்கு விற்கும் பொருட்களையும் தடை செய்யப் போவதாகச் சொல்கிறது.
இதை வைத்து அமெரிக்கா/ துருக்கி/ ரஷ்யா வெட்டுத்தளத்தில் எப்படி ஒவ்வொரு நாடும் தன் நலனை மட்டும் பார்த்துக் கொண்டு உலக ஏகாதிபத்தியத்தையும் அடைய விரும்புகின்றன என்பதைச் சுட்டலாம். இதில் வாஷிங்டன் போஸ்ட்போன்ற செய்தித்தாள்கள் செய்தியைக் கொடுக்காமல், எப்படி தகவல்களை எப்போதும் தம் விருப்ப அரசியலுக்குத் தக்க மாதிரியே திரிக்கின்றன என்பதையும் சொல்லலாம்.
குறிப்பாக 800க்கும் மேற்பட்ட வாசக மறுவினைகளைப் பார்த்தால் உலகம் எத்தனை குழப்படியாக ஆகி விட்டது, எல்லா அரசுகளும் எப்படி எல்லாம் பொய் சொல்கின்றன என்பது புரியும்.
https://www.washingtonpost.com/world/middle_east/turkeys-increasingly-desperate-predicament-poses-real-dangers/2016/02/20/a3374030-d593-11e5-a65b-587e721fb231_story.html
[/stextbox]
[stextbox id=”info” caption=”புடினும் ரஷ்யாவும்”]
ஆனால் யானைக்கால் வியாதியால் உப்பும் கால் பஞ்சு போல இருக்கும், தசை வலு இல்லாத காலாக இருக்கும் என்று நமக்குத் தெரியும். தொழில் திறன் இருந்தும் செயல்திறனோ, திட்டங்களை நிறைவேற்றும் நிர்வாகத் திறனோ இல்லாத ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி மன உளைச்சலும், பீதிகளும் நிறைந்த தலைமையையும், கருத்தியல்வாதிகளையும் கொண்டிருந்ததால் தம் நாட்டு மக்களை வதைத்து, வெஞ்சிறையில் அடைத்து, கொல்வதையே மிகச் சாமர்த்தியமாகச் செய்தது. அவர்களுக்கு நல் வாழ்வு கொடுப்பதாகச் செய்த எந்த வாக்குறுதியையும் அக்கட்சியால் நிறைவேற்ற முடியவில்லை. வெறும் ஜால்ராக்களுக்கும், மேலிடம் தீர்மானிப்பதைக் கேள்விகள் இன்றி நிறைவேற்றும் மூடர்களுமே கட்சியை நிரப்பினால் எந்தக் கட்சியும், அது நடத்தும் நாடும் உருப்படாது.
தர நிர்ணயம், தரப் பிரிப்பு, தர உயர்வு ஆகியன இல்லாத எந்த சமூகக் குழுவும், தொழிலும், கல்வி முறையும், உற்பத்தி சாதனங்களும், நுகர் பொருட்களும் வீழ்ச்சியைத்தான் சந்திக்கும் என்பதற்கு ஒரு தெளிவான உதாரணம் ரஷ்யாவின் பெரும் வீழ்ச்சி. ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி சுக்கு நூறாக உடைந்து சோவியத் ரஷ்யாவும் உடைய ஒரு காரணம் ‘சமத்துவம்’ என்ற ஒரு செல்லாக் காசை மைய நாணயமாக வைத்து இயங்குவதாகப் போலி செய்து கொண்டு தம் பொய்களைத் தாமே நம்பும் ஒரு அரசாகவும், கட்சியாகவும் ஆனதுதான்.
இன்று ரஷ்யர்களின் நிலைமை என்ன? முன்னாள் ரஷ்ய உயரதிகாரி ஒருவர் பேட்டி கொடுக்கிறார். ஆனால் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்…. என்ற குறள் சொன்னதைக் கொண்டு இவர் எங்கிருந்து பேசுகிறார், அந்த அமைப்பின் தன்மை என்ன என்பதையும் நாம் கருத வேண்டும்.
பிறகு இவர் சொல்வனவற்றைப் பன்னாட்டு தகவல் மையங்களின் மூலம் சோதித்துத்தான் நாம் ஏற்பதோ, விலக்குவதோ செய்ய முடியும் என்றும் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.
http://www.huffingtonpost.com/entry/sergey-aleksashenko-russia-economy-interview_us_56c62e7be4b0928f5a6b4586?section=india
இந்த ரஷ்யர் அமெரிக்க சிந்தனைக் கருவூலம் என்று தன்னை அமைத்துக் கொண்டிருக்கும் ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடூட்டைச் சார்ந்தவர் . அந்த அமைப்போ கிட்டத்தட்ட அமெரிக்க அரசின் நலன்களைக் காப்பதை மட்டுமே தன் பொதுக் கடமையாகக் கொண்ட அமைப்பு. இது பற்றி கார்டியன் பத்திரிகையில் க்ளென் க்ரீன்வால்ட் எழுதும் கடும் கண்டனக் கட்டுரையைக் கீழே பார்க்கலாம். போகிற போக்கில் அவர் நியுயார்க் டைம்ஸை ஒரு சாத்து சாத்தி இருக்கிறார். அதற்காகவாவது அந்தக் கட்டுரையைப் படித்து நாம் மகிழலாம். இந்தியாவை என்னென்னவோ விதங்களில் அவமதிக்க முயலும் பற்பல மேலைச் செய்தித்தாள்களில் இந்த அமெரிக்கப் பத்திரிகையும் ஒன்று என்பது என் கருத்து.
http://www.theguardian.com/commentisfree/2012/oct/15/drones-brookings-media
https://solari.com/blog/russia-and-global-geopolitics-with-the-saker/
[/stextbox]
[stextbox id=”info” caption=”இந்தியாவும் பயங்கரவாதமும்”]
இந்தியா செய்யத் தவறும் பற்பல விஷயங்களில் சில- திடீர்த் தாக்குதல்களில் சிக்கி, பயங்கரவாதிகளால் சுற்றிலும் பலர் கொல்லப்படுகையில் எப்படியோ அதில் இருந்து தெய்வாதீனமாகவோ, தற்செயலாகவோ தப்பிப் பிழைப்பவர்கள் பின்னாளில் எப்படித் தமது வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ்கிறார்கள் என்று அறிந்து அதைப் பொது மக்களுக்குத் தெரியப்படுத்துவது என்பதை அதிகம் செய்யாமல் இருப்பது ஒன்று.
ஆனால் மேலை நாடுகளில் இந்த தப்பிப் பிழைத்தவர்களைக் கண்டு பேசி, அவர்களின் மீட்சிக்கான தன் முயற்சிகளைப் பற்றி எழுதுவது என்பது ஒரு கலையாகக் கூட ஆகி விட்டிருக்கிறது.
இந்தச் செய்தியில் பாரிஸ் நகரில் சமீபத்தில் நடந்த இஸ்லாமியப் பயங்கர வாதிகளின் தாக்குதலில் சுமார் 130 பேர் கொல்லப்பட்டார்கள். ஒரு இசை நிகழ்ச்சியைத் தாக்கியவர்கள் கொல்லப்பட்டனர் ஆனால் இறக்குமுன் அவர்கள் கொன்றவர்கள் 130 பேர். ஃப்ரான்ஸை உலுக்கிய இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஃப்ரெஞ்சு அதிபர் ஃப்ரான்ஸுவா ஓலாண்ட் முன்பு தான் கொண்டிருந்த விளக்கெண்ணெயும் வெண்டைக்காயும் கலந்து குழப்பிய வெளிநாட்டுக் கொள்கையை ஓரம் கட்டி வைத்து விட்டு, இஸ்லாமியப் பயங்கர வாதிகளையும் அதன் முன்னணிப்படையினரான ஐஸிஸையும் தாக்கி அழிப்பது ஃப்ரான்ஸின் கடமை என்று அறிவித்து அதைச் செய்ய முற்பட்டு வருகிறார். ஃப்ரான்ஸ் அப்படி ஒன்றும் பிரும்மாண்டமான ராணுவ சக்தி இல்லை. ஃப்ரெஞ்சுப் பொருளாதாரமும் பெரும் படையெடுப்புகளை எல்லாம் தாங்கக் கூடிய சக்தி உள்ளது இல்லை. எனவே சில விமான வழிக் குண்டு வீச்சுகளைத் தவிர ஒலாண்ட் வேறென்ன செய்தார் என்பது பற்றி நமக்கு அதிகம் தகவல் இல்லை.
இந்தச் செய்தி அறிக்கை ஒரு ஜெர்மன் பத்திரிகையில் வந்தது. டெர் ஷ்பீகல் ஃப்ரெஞ்சு மக்களில் இப்படி அன்று தாக்குதலில் சிக்கி மீண்டவர்களைப் பேட்டி கண்டு அவர்களின் கண்ணோட்டத்தில் இதெல்லாம் எப்படி இருந்தன, இன்று அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று எழுதி இருக்கிறது. படித்துப் பாருங்கள்.
http://www.spiegel.de/international/europe/paris-terror-attack-victims-struggling-to-come-to-terms-a-1077426.html
பதான் கோட்டில் தாக்குதலுக்கு ஆளானோரையும், தில்லி பம்பாய் நகரங்களில் தாக்குதலில் சிக்கி மீண்டவர்களையும், சுவாமி நாராயண் கோவிலில் சிக்கி மீண்டவர்களையும் பேட்டி கண்டு இந்தியப் பத்திரிகைகள் ஏதும் இப்படிப் பிரசுரித்தனவா என்பது தெரியவில்லை. தெரிந்தவர்கள் அத்தகைய செய்திகளுக்குச் சுட்டிகள் கிட்டினால் வாசக மறுவினையாக அவற்றைத் தெரிவிக்கலாமே?
[/stextbox]
[stextbox id=”info” caption=”அமெரிக்கப் பண முதலைகள்”]
அமெரிக்கப் பண முதலைகள் மக்களை எப்படி எல்லாம் எத்துகின்றன? அதற்கென்று ஒரு மொத்த மாநிலமே இயங்குகிறது. பெரும் நிறுவனங்கள் இங்கு வரி கேட்காத அமைப்பாக மாநிலத்தையே ஆக்கி வைத்திருக்கின்றன. இங்கு லெட்டர்பாட் நிறுவனங்கள் ஏராளம். ஒரு தபால் பெட்டி எண் மட்டும் வைத்துக் கொண்டு, இந்த மாநிலத்தைத் தம் பதிவு அலுவலக முகவரியாக அறிவித்து விட்டு லாபங்களுக்கு சல்லி டாலர் கூட வரி கொடாமல் நிறுவனங்கள் தப்பிக்க வழி இருக்கிறது.
http://www.salon.com/2016/02/22/how_delaware_became_an_american_haven_for_grand_corruption/
[/stexbox]