விசும்பின் துளி

visumbu

பாத்துப்போங்க மாப்பிளஎன்ற ராதாமாமாவின் கீச்சுக்குரல் பின்னால் வந்து தொடுவதற்கு முன்பே ராமு பார்த்துவிட்டான். தெற்கால விதைகால் நெல் வயலில் இருந்து வடக்கால விதைகால் நெல்வயலுக்கு செல்ல பாதிவரப்பு ஏறிய பாம்பு நிழல்வளைவதுபோல திரும்பி தெற்காலவயலுக்கே சென்றுவிட்டது. முதலில் நிழல் என்றுதான் நினைத்தான். புரண்டு திரும்புபோது தெரிந்த அடிவயிற்றின் வெண்மை பாம்பென்று உணர்த்திவிட்டது

என்ன பாம்பு?” என்று விழிகள் தெளிவதற்குள், காய்ந்த பிஞ்சு வெந்தய வண்ணத்தில் வால் மட்டும் நெளிந்து இழுபடுவது தெரிந்தது. இளம்பச்சை நாற்றுக்குள் காற்று நுழைந்த அலையாடல். நாற்றினாடலில் ஒன்றல்ல இரண்டென்று புரிந்தது. எந்தப்பக்கம் என்று நிதானிப்பதற்குள் காற்று கரைந்ததுபோல நாற்றின் அசைவுகளும் நின்றுவிட்டது. பாம்பின் அசைவின்மையால் எழுந்த பயம் வயல் முழுவதும் பாம்பை தூவியது.   பாம்புகளை மறைத்துக்கொண்ட பச்ச  போர்வைப்போல் நெற்பயிர் அசைந்துக்கொண்டு கொண்டிருந்தது

பாம்பைப்பார்த்ததுமே அன்னிச்சையாக நின்ற கால் வேட்டிக்குள் நடுங்கியதை உணர்ந்தபோதுதான் ஒரு அடிப்பின்னால் நகர்ந்து நிற்பதை அறிந்தான் ராமு. இன்னும் கால்கள் நடுங்க தொடைகள் அதிர்ந்துக்கொண்டு இருந்தன. நெஞ்சுக்குள் வெற்றிடம் தோன்றி நெஞ்சுக்கூடு வெறும் சுவர் என்று நினைக்கவைத்தது. உள்ளே காற்றின் அலையொன்று நெஞ்சு சுவற்றில் மோதி கடலின் அசைவை அழுத்தத்தை உணரவைத்தது. வலது கையில் இருந்த தூக்குச்சட்டியை இடதுக்கையிக்கு மாற்றிக்கொண்டு நெஞ்சைத் தடவிக்கொண்டான். வெள்ளொளி ஊசியென வழிந்த சூரியக்கதிரில் கன்னம் சுடுப்பட்டது.   

தோளில் கிடந்த துண்டால் முகத்தை துடைத்துக்கொள்ளும்போதுதான் வேர்த்து இருப்பது தெரிந்தது.  போகலாமா?” என்று நினைப்பதற்குள்ளாகவே கால்கள் நடுக்கத்தை மண்ணில் நழுவவிடும் அவசரத்தில் நடக்க தொடங்கி விட்டது. இன்னும் ஒரு மையில் தூரம் இருக்கிறது மேலக்கொல்லை. வரப்பில்தான் போகவேண்டும். கொல்லைக்குப்போவதற்குள் இன்னும் எத்தனைப்பாம்போ? தூரத்தில் தெரிந்த வரப்பெல்லாம் பெரும் கறும்பாம்புபோலவே வளைந்தும் நெளிந்தும் கிடந்தது. வாலும் தலையும் எங்கே? அடி ஆழத்தில் பாதாளத்தில் தன்னையே தான் சுவைத்துக்கொண்டு இருக்குமோ?

மேகமே இல்லாத வெளுத்த வானத்தில் பறந்துவந்த கொக்குகள் வயலில் இறங்கியபோதுதான் தனது வடிவத்தை வரைந்துக்கொண்டது. கொக்குகள் வயலில் இறங்கி மெல்ல மெல்ல கழுத்தை நீட்டி குறுக்கி நடக்கும்போது பாம்பு பயம்தெளிந்து மகழ்ச்சியின் துளிர் முகத்தில் பரவியது. கொக்குகளைப்பார்த்தப்படியே நடக்கத் தொடங்கினான்.

வரப்புமீது நடப்பது பாம்புமீது நடப்பதுபோலவே இருந்தது, இது மழைக்காலம்தான் ஆனால் இன்னும் மழைப்பெய்யவி்ல்லை, பெய்து இருந்தால் வழுக்கும் இந்த களிமண் வரப்பு பாம்பென்றே கால் நம்பும். மழைப்பெய்து இருந்தால் ராமு ஏன் இன்று இங்கு வருகிறான்? எதோ ஒரு பாம்பு தனது கால்களையே பார்த்துக்கொண்டு அசையாமல் நிற்பதுபோல் முதுகில் உணர்ந்தான். உள்ளத்தின் விழி திரும்பி முதுகைத் தொளைத்துக் கொண்டுப் பார்ப்பதுபோல் உணர்ந்தான். அந்த நினைப்பை அகற்ற தலையை உதறிக்கொண்டு நடந்தான்.  கோரைகள் நீர்முள்ளிச்செடிகள் அடர்த்தியாக முளைத்த இடங்களை கூர்ந்து நோக்கித் தெளிந்தப்பின்பே நடக்கவேண்டி இருந்தது. நாணல்புதர்கள் அசையும்போது கால்கள் தானாகவே நின்று பின்பு நடந்தன.

அம்மாமீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. “எதற்கு இந்த வயல்? என்ன லாபம்?” பாடாய் படுத்தி பிழியா பிழிகிறது. அழுதவன்கூட ஒய்ந்துவிட ஒரு கணம் இருக்கும். உழுதவன் ஓய  ஒரு கணமிருக்கா?

வயலில் இருந்து நெல் வீட்டுக்கு வருவதற்குள், வீட்டையே தூக்கி வெளியில் போட்டுவிடுகிறது வயல். ஒவ்வொரு வருடமும் எதாவது ஒரு வழியை உண்டாக்கி பொண்டாட்டி நகையை அடகுக்கடைக்கு இழுத்துப்போய்விடுகிறது.  இதோ இந்த வருடம் தண்ணீர் இறைப்பதற்கு என்று இழுத்து போய்விட்டது

அப்பா காலத்தில் கன்னியை இடதுகாலால் இடறினால் தண்ணீர்பாயும் வயல்தான். வயலின் தலைமாட்டில் கன்னி மடை.  அப்பவெல்லாம் மருந்துப்போடவேண்டும் என்றால் வயல் தண்ணீரை முதல்நாளே வந்து வடியவைக்கவேண்டும். இப்ப பயிருக்கு உயிர் தண்ணி ஊத்தவே தவம் செய்யவேண்டி இருக்கு. தன்வயல் தலைமாட்டில் ஓடும் கன்னியில தண்ணீர் வந்தது உண்டு என்று இப்போது யாராவது சொன்னால் நீங்க எந்த உலகத்தவர் என்று கேட்பவரில் ராமு முதலாளாக இருப்பான்.

காவிரியில் தண்ணீர்வந்துவிடும் என்ற குறைந்தப்பச்ச நம்பிக்கையும், மழையாவது பெய்துவிடும் என்ற அதிகப்பச்ச நம்பிக்கையும் பொய்த்துப்போன வருடமிது. போதாததற்கு காவிரில் புதிய அணைக்கட்டவேண்டும் என்று கர்நாடக முதல்மந்திரி அரசியல் செய்கிறார்.

மனைவியின் காது மூக்கு ஓட்டைகள்  ஓட்டையாகவே இருக்க தென்னவிலக்கமாறு சீவுகள் காவல்காக்கிறது. தொண்டை ஓட்டையை மூட ஏதாவது ஒரு குச்சி இருந்தால் வயலெல்லாம் எதற்கு? தோடும் மூக்குத்தியும் அடகுவைத்து விதை வாங்கி விதைத்த விதைகால் நிலம் இது. விதை பழுதில்லை வயலும் பழிவாங்கவில்லை. பால் இல்லா மார்பை எத்தனை முறை சப்பினால் என்ன? வயல் பாலில்லா தாய்போல தவித்துக் கிடக்கிறது. குட்டிக்குட்டி பச்சப்பிள்ளைகள் தண்ணீர் இன்றி காய்ந்து சுருள்கின்றது. பாளம் பாளமாய் சூட்டில் வெடிக்கும் வயல் மார்வலியில் கேவும் தாயின் வாய்புண்போல வெடித்துக்கொண்டே போகிறது

இந்த கொடுமை வந்துப்பார்க்க ராமுக்கு மனமில்லை. அம்மாதான் பிணாத்திக்கொண்டே இருக்கிறது. வயல் வெடிக்க வெடிக்க அதன் இதயம் வெடிக்கிறது. வயல்நாற்றுகள் எல்லாம் அதன் உடம்பில் வந்து ஒட்டிக்கொண்டு இரத்தத்தை உறிஞ்சுவதுபோல உடல் பதறுகிறது. அம்மா முகத்தில் அந்த வலியை பார்க்க சகிக்க முடியவில்லை. ராமுக்கு வர ஆத்திரத்திற்கு அதை அடித்துக்கொன்றால்கூட நிம்மதியாக இருக்கும் என்று நினைத்தான்.

வயலுக்கு எப்படியாவது தண்ணீர் இறைக்கனும் என்று அம்மா சொன்னபோது சுட்டுவிடுவதுபோல   அம்மாவை விழித்துப்பார்த்தான். அம்மா கூனி குறுகிவிட்டது. அவனுக்கே அவன்மீது கோபம் கோபமாக வந்தது. கோபமே இரண்டாக பிரியும் இடம் மண்டையில் அறைந்தது. இயலாமையில் பிரியமானவர்கள் மீதுக்கொள்ளும் கோபம். அகங்காரத்தில் எதிரிமீதுக்கொள்ளும் கோபம். முன்னது உள்ளே அழுத்தி புழுங்க வைக்கிறது. பின்னது வெளியேத்தள்ளி எரிக்கிறது.

இரவு தூங்கமுடியவில்லை, வேலிக்கருவேலமுள்ளை வெட்டிவந்துப்போட்டு நெஞ்சழுத்திப் படுத்துக்கொள்ளவேண்டும்போல் இருந்தது. முள்குத்தி வழியும் ரத்தத்தை நாக்கால் நக்கி நாக்கும் கிழிப்பட்டு இரத்தம் வடிந்தால் நன்றாக இருக்கும்.  வாழ்தல் என்பது உள்ளும் புறமும் இம்சைகளை அனுபவிப்பதுதானா?

விசாலம் விளக்கணைத்து அறிகில் வருவதற்கு முன்பே அவளின் வாசம் வந்து தொட்டு விழித்தொறக்கவைத்தது. எல்லா பெண்களுக்கும் வாசம் இருக்கா? அவனவன் மனைவியின் வாசம் மட்டும் அவனவன் நாசியில் நிலைத்து இருக்கும் ரகசியத்தை மங்கைப்பாகன் செய்து இருப்பானா?

இருட்டில் திறந்த விழியில் ராமும் இருட்டாகி கிடப்பதுபோல் உணர்ந்தான்.  அவன் இருக்கிறான் ஆனால் அவன் உடம்பு இல்லை. இமைகள் பிசுபிசுத்து கன்னங்கள் சுட்டது. விசாலம் வந்து தொட்டுத்தடவியபோது உடம்பு கிடப்பது தெரிந்தது. தலையில் இருந்து தடவிக்கொண்டே வந்த விசாலம் அவன் வலதுக்கையில் எதையோ வைத்தாள்.

ராமு பதறி எழுந்துவிட்டான். அவன் பதற்றத்தை தணிக்கவும், அவனை பேசவிடாமல் செய்யவும் விசாலம் அவனை வளைத்து இழுத்து தனது நெஞ்சிக்குழியில் அழித்திக்கொண்டாள். தளர்ந்த முலைகள் ஜாக்கெட்டில் நெகிழ்ந்து விலக  தாலிக்கயிற்றில் கோக்கப்பட்ட புதுமஞ்சள் அவன் நடுநெற்றியில் குத்தியப்படியே மணத்தது. விசாலம் அவனை அனைத்தப்படியே சரிந்து தளர்ந்துப்படுத்துக்கொண்டாள். அவனுக்கு  வெடித்துக்கதறவேண்டும்போல் இருந்தது. இன்னும் அழுத்தமாக அவள் முலைகளை அழுத்தி துணியோடு சேர்த்துக் கடித்தான்

ராதாமாமா வீட்டிற்கு பின்னால் ஓடும் வடிகால் வாய்க்காலில் காவிரி தண்ணீர் மூன்று நாளாய் முழங்காலளவு ஓடுகிறது. அதில் இருந்து தண்ணீர் இறைக்க வாடகை இஞ்சின் கொண்டு வந்து இறக்கி வைத்து உள்ளான். இன்றைக்குதான் இஞ்சின் கிடைத்தது அதுவும் கையில் காசுக்கொடுத்ததால் நடக்கிறது  இல்லை என்றால் நடக்காது. அது மேலக்கொல்லைக்கு வடிகால் வாய்க்கால்தான், என்னச் செய்ய? வடிகால் வாய்க்காலில் உள்ள தண்ணியைத்தான் இஞ்சின் வைத்து வயலுக்கு பாச்சவேண்டும். ஒரு கிலோமீட்டர் தூரம் ரப்பர் டியூப்போட்டு தண்ணியை கொண்டுப்போகணும். ஒரு ஏக்கருக்கு தண்ணீர்ப்பாச்சுவதற்கு  கணக்குப்பார்த்தா நெல்பயிர தண்ணி இல்லாம டீசலிலேயே வளர்த்துவிடலாம். இந்த குப்பைத்தண்ணிய இறைத்தால் வயலில் முளைக்கும் களைக்கு கணக்கிருக்காது. அம்மா முதுகு ஒடிந்துவிடும். விசாலம் வருகிறேன் என்றாலும் அம்மா விடுவதில்லை. இத்தனைப்பாடுப்பட்டு விவசாயம் தேவைதானா

வயலைவித்துவிடலாம் என்று சொல்லிய அன்று அம்மா சாப்பிடவில்லை. மீண்டும் சாப்பிட வைக்கப் பட்டப்பாடுதான் தவம். விசாலாவின் கெஞ்சலுக்கு     காசி அன்னபூரணியே எழுந்துவந்து சாப்பிட்டு இருப்பாள். அம்மா மறுநாள்தான் சாப்பிட்டது. அதுகூட விசாலா சாப்பிடமாட்டாள் என்பதற்காக.   

அம்மாதான் இன்னும் வயலில் பாடுபடுகிறது. அவனை வாவென்று கூப்பிடுவதில்லை ஆனால் இந்த ஆண்டு காச்சல் அம்மாப்பாட்டால் மட்டும் முடியக்கூடியதில்லை. அவனாலும் முடியக்கூடியதா என்பது தெரியவில்லை. காய்ந்தால் காயட்டும் இனி என்ன வீட்டில் இருக்கு அடகுவைக்க என்று அவன் கிடந்தபோதுதான் விசாலம் மஞ்சலைக்கட்டிக்கொண்டு அதைக்கொடுத்தாள்.

அடிக்கடி அவன் இந்த வயலுக்கு வந்ததில்லை, வராததாலேயே இந்த சூழலும் பாம்பும் அவனை அலைகழிக்கிறது. அம்மாவிற்கு அந்த பயமெல்லாம் இல்லை. “பாம்ப பார்த்து என்ன பயம்?” என்று கேட்கும். பாம்பு நம்மப்பார்த்துஐயோ நடந்துப்போர பாம்பபாருஎன்று பயப்படும் என்று சிரிக்கும். அம்மா சொல்லும் விதத்திலேயே பாம்பாவது கீம்பாவது எல்லாம் சும்மா என்று நினைக்கத்தோன்றும். “பாம்பைப்பார்த்தா வாழமுடியுமா?” என்று அம்மா தனக்குள் சொல்லிக்கொள்வதை அவனும் அறிவான். ஏழைகளின் வாழ்க்கையின் அடிப்படைத்தேவைகூட பயத்திற்கும் விஷத்திற்கும் அப்பால்தான் உள்ளது. பாம்பைப்பார்த்ததும் இவனுக்கு தொடை நடுங்குவதை யாரிடம் சொல்வது.

போனவருஷம் மேலக்கொல்லை கீழவரப்பில் உள்ள கருவேலமரத்தில் நல்லபாம்பு ஒன்று காய்ந்த கொன்னக்கா மாதிரி தொங்கி இருக்கு. “புள்ளக்குட்டிகள் பொழங்குற இடத்தில என்ன ஊஞ்சலாடிக்கிட்டு கிடக்கிற, போயி மறைவா வஞ்சிக்க உன் கூத்தஎன்றுகூறி கையெடுத்து கும்பிட்டுவிட்டு அம்மா களையெடுக்க தொடங்கி இருக்கு. அம்மா சொன்னது புரிஞ்சுதா இல்ல அம்மாவின் வேண்டுதலில் நெகிழ்ந்ததா தெரியல அதுப்பாட்டுக்கு இறங்கி மறைஞ்சிப்போயிருக்கு. அன்னையில இருந்து வயலுக்கு வந்தா அது எங்கையாவது தொங்குதான்னு பார்க்காமல் இவன் இருந்தது இல்ல. கண்ணுல தட்டுப்பட்டதில்ல, கண்ணுல தட்டுப்படாததாலேயே அது எங்கும் இருப்பதுபோல தோன்றும். ராதாமாமாகூட ஒருமுறைப் பார்த்து இருக்கிறாரு.

போன தைக்கு திடுதிப்பு என்று வந்த மழையாலா, காயப்போட்ட வைக்கோலை அள்ளப்போன மாமா கைவிரலில் முள்ளுமாதரி சுருக்குன்னு பட்டிருக்கு, வைக்கோல்ல ஏது முள்ளு? வைக்கோலை விளக்கிப்பார்த்தபோது பெருவிரல் அளவுக்கு ஒரு முழம்நீட்டுக்கு துள்ளி ஓடி முள்வேலியில் மறைந்துவிட்டது. மாமா கடலூர் பெரிய ஆஸ்பத்திரியில் சேர்ந்து பிழைத்கொண்டார்.

நம்ம ஊர்ல, பாம்புக்கடித்து பிழைத்துக்கொண்டது நான்தான் மாப்பிளஎன்ற மாமா வயல்வெளி வேலைக்கு சென்று பாம்புக்கடித்து செத்தவர்கள் யார் யார் என்று சொன்னார். இதில் என்ன பெருமை இருக்கு? மனிதன் ஏதோ ஒருவிதத்தில் தான் மற்றவர்களைவிட பெரியவன் என்று நம்புகிறான் அல்லது நம்பச்சொல்கிறது மனம். மெல்லச்சிரித்தான். சிரிக்கமுடியாத இடத்தில் சிரிக்கும்படி வைக்கிறது வாழ்க்கை. அழவேண்டிய இடத்தில் கண்ணீர் வராமல் இருக்கும் கணங்களும் இருந்துக்கொண்டுதானே இருக்கிறது. அவன் வயல் அந்த ஊரில் இருந்தாலும் அவன் அந்த ஊரில் இல்லாததால் மாமாவைப்பாம்புக்கடித்ததை அம்மாச்சொல்லிதான் தெரிந்தக்கொண்டான்.

வயல் இன்னும் பாதி தூரத்தில் இருந்தது. குக்கூ..என்று தொலைவில்  இருந்த மூங்கில் புதரில் இருந்து குயில் ஒன்று கூவிய ஒலிக்கேட்டு திரும்பிப்பார்த்தான். மற்றொரு இனிய இசையை காற்றில் எழுதிவிட்டு  குயில் வடக்கே வேகமாய் பறந்தது, அதன் பின்னே மற்றொரு குயிலும்
கூவியப்படி சென்றது. பக்கத்துவயிலில் இருந்து வெள்ளைப்பலூன்கள் மேல் எழுந்ததுபோல கொக்குகூட்டம் வானுக்கு எழுந்து வட்டமடித்து மீண்டும் அந்த வயலிலேயே வந்தமர்ந்தது. அந்த வயலில் ஒரு அம்மா மாட்டை விட்டுமேய்த்துக்கொண்டு இருந்தார். புடவை முந்தாணையால் தலையில் முக்காடுப்போட்டு இருந்தார். முழுவதும் காய்ந்துப்போய்விட்டதா? நெற்பயிரைவிட களை அதிகமாகிவிட்டதா? அந்த முகத்தை அருகில் சென்று பார்க்கமுடியுமா? மனம் கனத்து கால்கள் பின்ன ராமுக்கு நடை பின்னியது. வரப்பில் இருந்து தவறிவிடாமல் நின்று நிதானித்து நடந்தான்.

அம்மாவின் ஞாபகம் எழஅம்மா எங்கே?” என்று மேலக்கொல்லைமீதுப் பார்வையைச் செலுத்தினான். அம்மாவை வயலில் காணவில்லை. வயல்முழுவதும் விழிகளை சுழலவிட்டு தவித்து கருவேல மரத்தடியைப்பார்த்தான். வரப்பில் சுருண்டு கிடக்கும் அம்மா நிழலாக தெரிந்தது. மனம் பதறி ஓடத்தொடங்கினான். அவன் பதட்டம் முன்சென்று அம்மாவை தொட்டு எழுப்பியதா?  அம்மா வரப்பில் எழுந்து உட்கார்ந்து ராமுவைப்பார்த்தது. ஓட்டத்தை நிறுத்தி வேகவேகமாக நடக்கத் தொடங்கினான்

கையில் இருந்த பழையசோறு தூக்குச்சட்டியை அம்மாவிடம் கொடுத்துக்கொண்டேஉனக்கு வேற இடமே கிடக்கிலயாஎன்று கத்திக்கொண்டே கருவேல மரக்கிளைகளைத்தான் முதலில் பார்த்தான். .

நம்பல கடிக்க விதி இருக்கும்போது பாம்பு எப்புடிப்பா கடிக்கும்என்றபடியே அம்மா தூக்குச்சட்டிய திறந்தபடியே நீயும் கொஞ்சம் சாப்பிடு என்றது.

அவன் எதுவும் சொல்லாமல் வயலைப்பார்த்தான். பச்சை நரம்போடும் குழந்தையின் கன்னம்போல பலபலன்னு இருக்கவேண்டிய நெல்பயிர் தனது பலபலப்பை இழந்து வெளுத்து வெளுத்து வெண்மஞ்சாளாகி சுருண்டுக்கொண்டு இருந்தது. இன்னும் ஒருநாள் காய்ந்தால்கூட பழுத்து பொசுங்கி பொடிந்து விழுந்துவிடும்போல் வதங்கி இருந்தது. உயிர்வாடுதலைக் காண தண்ணீர் இல்லாமல் காயும் நெல்வயலுக்குதான் வருணும். அவன் முகம் சுருங்கி தாடைகள் இறுகி நரம்புகள் ஈழுப்பட்டது

அம்மா பழையச்சோற்றைப்பிசைந்து அவன் கையில் வைக்க நீட்டியது. அவன் கையை விரித்துப்பார்த்தான். இஞ்சின் இறக்கிய டீசல் அழுக்குக்கறை இருந்தது. அம்மாவே வாயில் ஊட்டியது. சோற்றை மென்றுக்கொண்டேபோதும்என்றபடியே எழுந்துடீசல்வந்ததும் தண்ணீர் இறைக்கவேண்டும் நான் வேலையைப்பார்க்கிறேன்என்றபடி நடக்கத்தொடங்கினான். “கொஞ்சம் இந்த இடத்தில் பார்த்து இருஎன்று சொல்ல அவன் மறக்கவில்லை.

அய்யா!” என்றது அம்மா. அவன் நின்று தலையை மட்டும் திரும்பிஎன்ன?“ என்பதுபோல் பார்த்தான்.

விசாலம் இப்பவெல்லாம் அடிக்கடி வயித்த வலிக்குதுன்னு சுருண்டுடுறா தெரியுமா?” என்றது.

அவனுக்கு புளியம் மிளாறால் நெஞ்சில் இழுத்ததுபோல் இருந்தது. அவன் விசையால் திரும்பிய பொம்மைபோல அம்மாபக்கம் திரும்பிஎப்ப இருந்து?” என்றான்.

ரெண்டு மூணு மாசமா, தரும ஆஸ்பத்திரிக்காவது கூட்டிக்கொண்டு போயிக் காட்டு. அலையோஞ்சி குளிக்கலாமுன்னா ஆவுற காரியமா?” என்றது.

அவன் சரி என்பதுபோல தலையை ஆட்டிக்கொண்டு வெடுக்கென்ற முகத்தை திருப்பிக்கொண்டான். அம்மாவும் முகத்தை திருப்பிக்கொண்டது. இருவர் கண்ணீரும் ஒன்றை ஒன்று சந்திக்காமல் ஒரே வரப்பில் விழுந்தது.

ஒன்பதாவது படிக்கும் மகனும், பன்னிரெண்டாவது படிக்கும் மகளும் ஹாஸ்டலில் தங்கிப்படிக்கிறார்கள். பன்னிரெண்டாவது படிக்கும் மகளை அடுத்த ஆண்டு காலேஜில் சேர்க்கனும் என்பது விசாலத்தின் பெரும் கனவு. பெரும்மழை வந்தால் வீட்டுக்கூரை ஒழுகத்தொடங்கிவிடும். நிக்க இடமிருக்காது. ஒரு மழைவிழுந்தால்  மூணுமழையாய் ஒழுகும் கூரை.

அம்மாவை அனுப்பிவிட்டு அந்த மரத்தடியில் அவனுக்கு படுத்துக்கொள்ளவேண்டும்போல் இருந்தது. திரும்பி கருவேல மரத்தைப்பார்த்துவிட்டு பெருமூச்சுவிட்டு நடந்தான்

ராமு இஞ்சினுகிட்ட செல்வதற்கும் டீசல்வருவதற்கும் சரியாக இருந்தது. இஞ்சின்காரர் ரப்பர் டியூப்பை வயல்வரைக்கும் ஆள்வைத்து இழுத்து நீட்டிக்கொண்டு இருந்தார். இன்றைக்கும் விட்டுவிட்டால் இந்த வாய்க்கால் தண்ணியும் கிடைக்காமல் போய்விடும். விடியவிடிய இருந்து வயலுக்கு தண்ணீர் பாச்சிவிடவேண்டும்.

இவ்வளவு தூரம் பயிருக்கு தண்ணீர்க்கொண்டுபோவது கங்கையை பூமிக்கு அழைப்பது போன்றது. கங்கையைக்கூட தவம் மட்டும் செய்து பூமிக்கு அழைத்துவிட முடியும். இந்த வாய்க்கால் நீர் வயலுக்குபோக தவம் மட்டும்போதாது இஞ்சின் டீசல் ரப்பர்டியூப் கூலிஆள் எல்லாம் வேண்டும் அதற்கும்மேல இஞ்சின்காரர் மனம் வைக்கவேண்டும்.  அவன் வயலில் உள்ள வெடிப்புக்கு கங்கை மட்டும் வந்தால்போதாது கங்காதரனும் வந்தால்தான் முடியும். இரவு பதினோறு மணிக்கு இஞ்சின் பெல்ட் அறுந்ததோடு தண்ணீர்ப்பாச்சும் தவம் முடிவுக்கு வந்தது.

காலையில் வந்துப்பார்த்தால் இங்கு தண்ணீர் பாச்சினோம் என்ற சுவடே இல்லாமல் காய்ந்துப்போய் இருக்கும்.  அதற்காக பயிர்களை சாகவிட முடியுமா? ஏதே உயிர்த்தண்ணி ஊத்தி இருக்கோம் அதற்குள் மழைபெய்யாதா? என்ற நப்பாசைதான். நப்பாசைதானே வாழ்கிறோம் என்ற பிடிப்பை ஏற்படுத்தி வாழ்வின் சலிப்பை தள்ளி வைக்கிறது.

தீபாவளிக்கு இன்னும் இரண்டுநாள்தான் இருக்கு, தீபாவளி  அன்னைக்காவது மழை பெய்யாதா? அந்த நம்பிக்கையில்தான் சிலர் இருக்கிறார்கள் அல்லது விசாலத்திற்கு முன்பே மஞ்சள் கட்டிக்கொண்டவர்கள் இயலாமையில் இருக்கிறார்கள். கார்த்திகைக்கு பிறகு அடமழை இல்லை என்று சொன்னாலும், சாதாரணமழைக்கூட இன்னும் பெய்யவில்லையே அதனால் ஒரு சின்ன மழையாவது திருஷ்டிக்கழிக்க பெய்யாதா?

தீபாவளி முதல்நாள் இரவு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதால் மாவட்டம் முழுவதும் காற்றும் மழையும்.  இந்த தீபாவளிக்கு இட்லிச்சுடகூட முடியவில்லை. தொடர் மழையில் சென்னை காஞ்சி கடலூர் மாவட்டம் பெரும் வெள்ளத்தில் மூழ்கியது. உண்ண உணவு, உடுத்த உடை இன்றி, வீடிழந்து சொந்த ஊரிலேயே அகதியாக வாழ்ந்தார்கள் மக்கள். மனிதர்கள் சாகலாம் மனிதம் என்றும் சாவதில்லை என்று இந்த மழையில் தமிழகம் கண்டுக்கொண்டது. எங்கிருந்து எல்லாம் உதவி. எங்கெங்கோ இருக்கும் தெரியா முகங்களின் கைகள் நீண்டுவந்து அனைத்துக்கொண்டது.

இயல்பு வாழ்க்கை திரும்பி வயலுக்கு சென்றுப்பார்த்தான் ராமு. வானமே வயலில் விழுந்துக்கிடப்பதுபோல் தோன்றியது. வயலில் தண்ணீர் மட்டும் ததும்பியது, தண்ணீருக்குள் பயிர் இருக்குமா? இருந்தாலும் பத்துநாள் தண்ணீரில் உயிர் இருக்குமா? கண்ணில் கண்ணீர் இல்லை. கண்ணீர் எல்லாம் வயலில் தண்ணீராய் நிற்கிறது. சுருண்டு விழுந்து அந்த கருவேல மரத்தடியில் நேரம்போவது தெரியாமல் கிடந்தான்.

அவன் கிடந்த வரப்பின் கன்னியில் ஓடாமல் ததும்பிய தண்ணீரில் தவளையொன்று துள்ளிவிழுந்த சத்தத்தில் விழித்து படுத்தப்படியே முகம் திருப்பிப்பார்த்தான். இன்னும் சில தவளைகள் தண்ணீருக்குள் அவசர அவசரமாய் துள்ளிக்குதித்து தண்ணீரை அவன் மூஞ்சியில் தெளித்தன.

காலில் ஏதோ வழுவழுக்கப் முகம்திருப்பினான். பாம்பொன்று தலைக்தூக்கி பிளந்த நாக்கை வெளியில் ஆடவிட்டு காற்றை சுவைப்பதுபோல நாக்கை உள்ளிழுத்து அவன் காலில் எறி நெளிந்துச்சென்று கருவேல மரத்தில் ஏறி வாலைக்கிளையில் சுற்றி தலைகீழாய் அவன் முகதிற்கு நேராய் ஊஞ்சல் ஆடியது. அவனுடைய கால்கள் நடுங்கவில்லை. அவனுடைய பயம் எங்கே போனது? அவனுக்கு உயிர் இருக்கா?

தண்ணீரில் குதித்த தவளைகளில் சில வரப்பில் தாவி ஏறி தத்தி தத்தி கொறக்..கொறக். என்று பாடியபடி சென்றது.

ராமு படுத்தப்படியே ஊஞ்சல் ஆடும் பாம்பைப்பார்த்தான், பாடும் தவளையைப்பார்த்தான்,அசையும் மரக்கிளையைத்தாண்டி, கூட்டமாய் தெற்குநோக்கிப்பறக்கும் கொக்குகளைப்பார்த்தான் அதற்கும் அப்பால் அசையாமல் விரிந்த வானத்தைப்பார்த்தான் வானத்தைப்பார்த்தான்.

துளிகள்என்றபடியே நிதானமாக எழுந்து வயல் தண்ணீரை வடிக்க நடந்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.