கருவிகளின் இணையம் – பொதுப் போக்குவரத்துத் துறை

பொதுப் போக்குவரத்து என்றவுடன், நமக்குப் பேருந்து, டாக்ஸி, ரயில் போன்ற விஷயங்கள், ஞாபகத்திற்கு வரும். வட அமெரிக்கர்களுக்கு வாடகைக் காரும், விமானங்களும் உடனே மனதில் தோன்றலாம். இவை யாவும் பொதுப் போக்குவரத்து விஷயங்கள். தனியார் கார்களில் இக்கருவிகளின் இணையம் பற்றிச் சென்ற பகுதியில் அலசினோம். இந்தப் பகுதியில், பெருவாரியான வாகனங்கள் கொண்ட ஒரு அமைப்பில், இத்தகைய கருவிகளின் தாக்கம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம். இதை ஆங்கிலத்தில், fleet management  என்று அழைக்கிறார்கள்.
இத்தகைய வாகனங்களின் அமைப்புகளில், சில முக்கியமான பிரச்னைகள், தனியார் வாகனங்களிலிருந்து மாறுபட்டவை:

  1. நிறைய வாகனங்கள் இருப்பதால், எத்தனை எரிபொருள் தேவை என்பது மிக முக்கியம். 2% மிச்சம் என்பது, தனியார் வாகனங்களைக் காட்டிலும் பொது வாகன அமைப்புகளில், மிகவும் பெரிய விஷயம்
  2. தனியார் வாகனங்களைப் போல அல்லாமல், பல நாட்கள் இவ்வாகனங்கள் தொடர்ந்து செலுத்தப்படும். நாட்டின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு சரக்கு எடுத்துச் செல்லும் லாரி, ரயில், நிற்காமல் ஓடும் வாகனங்கள். இவற்றின் பாகங்கள் சரியாக தொடர்ந்து வேலை செய்வது மிக அவசியம்
  3. இத்தகைய வாகன அமைப்பில் எவ்வளவு நேரம் வண்டி ஓடுகிறதோ, அவ்வளவி லாபம். அதாவது, ஓடாத லாரியோ, பறக்காத விமானமோ, இவ்வகை வியாபாரத்தில், ஒரு பாரமாகக் கருதப்படுகிறது

IOT part7-pic1
எப்படிக் கருவிகள்/உணர்விகள் இந்த வியாபாரத்தை முன்னேற்ற உதவும்?

  1. ஒரு ரயிலின் எஞ்சினோ அல்லது ஒரு லாரியோ, ஒவ்வொரு மைலுக்கும் பல வகை சூழ்நிலைகளைக் கடக்கிறது. இன்று, இத்தகைய சூழ்நிலைகளின் தரவு நம்மிடம் இல்லை. ஏதாவது ஒரு பாகம் வேலை செய்யாமல் நின்றாலே, என்னவாயிற்று என்று பார்க்கிறோம். இதனால், வருமுன் காக்காமல், பல நாட்கள் பழுது வேலையில் வாகனங்கள் பயனின்றிப் போகின்றன. டிஜிட்டல் உணர்விகள், ஒவ்வொரு மைலுக்கும் 10 மெகாபைட் வரை தரவுகளை (data) ஒரு மேகக் கணினி வழங்கிக்கு (cloud data server) கொடுத்த வண்ணம் இருக்கும், என்று கணிக்கப் பட்டுள்ளது
  2. உதாரணத்திற்கு, லாரியின் டயர்களில் டிஜிட்டல் வால்வுகள் சாலையின் தரத்திற்கேற்ப, எவ்வளவு தேய்மானம் அடைகிறது என்று அளந்து தொடர்ந்து தரவுகளைக் கொடுத்த வண்ணம் இருக்கும். இதை வைத்து, டயரில், ஒரு 20 சதவீதம் இருக்கும் போது, மாற்றிவிட்டால், சரக்குப் போக்குவரத்து தொடர்ந்து நடக்க வழி செய்யலாம்; மேலும், இது பாதுபாப்புக்கும் (safety) நல்லதொரு விஷயம். இத்தகைய வருமுன் பராமரிப்பு (preventive maintenance) மிக முக்கியப் பயன் தரும் விஷயம்
  3. அத்துடன், இத்தகையத் தரவுகள், ஓட்டுனர் எப்படி வாகனத்தைச் செலுத்துகிறார் என்றும் தெரிய வரும். சில வேகங்களில், சில எடை தாங்கிய லாரிகள், வழக்கத்திற்கும் அதிகமாக எரிபொருளை எரிக்கும். இன்று, ஓட்டுனர்கள் எப்படி வாகனங்களை ஓட்டுகிறர்கள் என்று பக்கத்தில் உடகார்ந்து பயணம் செய்தால்தான் தெரியவரும். ஓட்டுனர்களுக்கு எந்த வேகத்தில், பயணம் செய்தால், எத்தனை எரிபொருள் மிச்சப்படுத்தலாம் என்ற விஷயங்களை வாகனத்தின் வேகம் மற்றும் எரிபொருள் நுகரும் தரவைக் (fuel consumption data) கொண்டு பரிந்துரை செய்யலாம். ஒரு லாரியில் 50 லிட்டர் எரிபொருளைப் பயணம் ஒன்றுக்கு மிச்சப்படுத்த முடிந்தால், 1,000 லாரிகள் கொண்ட அமைப்பில், வருடத்திற்கு, எவ்வளவு எரிபொருள் செலவைக் குறைக்க முடியும் என்று கணக்கு பண்ணிப் பாருங்கள்

IOT part7-pic2
 
4. மைல் ஒவ்வொன்றுக்கும், மேகக் கணினிவயலுக்கு தரவு அனுப்ப வேண்டியதில்லை. வாகனத்தில், உள்ள கணினி, இவற்றைச் சேகரிக்கலாம். பயணம் முடிந்தவுடன், தரவுகளின் சாராம்சத்தை, மேகக் கணினி வயலுக்கு மேலும் ஆய்வு செய்ய அனுப்பி விடலாம். சில உடன் வாகன முடிவுகளை, வகன கணினியே எடுக்கலாம். உதாரணத்திற்கு, வெளியே உள்ள வெப்பத்திற்கேற்ப, உள்ளே உள்ள பொருட்களைக் குளிர்விக்கும் அளவைக் கட்டுப்படுத்தலாம்
5. குளிர்விக்கப்பட்ட பொருட்கள் (பழம், காய்கறிகள்) வண்டியில் மிக அதிக தூரம் செய்யும் பொழுது, அதனுடைய குளிர்நிலை சரியாக இல்லையேல், எடுத்து செல்லப்படும் சரக்கு பயனில்லாமல் வாடிவிடும். லாரியில் குளிர்நிலையை அளந்து, அதைச் சரிசெய்யும் உணர்விகள்/கருவிகளின் இணையம் மூலம் இந்த இழப்பை பெருவாரியாகக் குறைக்கலாம். பிரேஸில் நாட்டில் இப்படி ஒரு முயற்சியின் விடியோ இங்கே:

எப்பொழுது எந்த ரயில், விமானம், பேருந்து வரும் என்பதைப் பெரும்பாலும், நாம் இணையம் மூலம் தெரிந்து கொள்கிறோம். குறிப்பாக, விமானம் எங்கு பறந்து கொண்டிருக்கிறது, எத்தனை மணிக்கு அதன் இலக்கைச் சென்று அடையும் என்பதை வெறும் கூகிள் வைத்துத் தெரிந்து கொள்ளலாம் – காரணம், பறக்கும் விமானம் ஒவ்வொரு நொடியும் தன்னுடைய இடம், வேகம், உயரம், போன்ற முக்கிய விஷயங்களைத் தரைக்கு அனுப்பிய வண்ணம் உள்ளது. எதிர்காலத்தில், பஸ், ரயில் போன்ற பொது வாகன அமைப்புகளும் இவ்வாறு காத்திருக்கும் பயணிகளுக்கு செய்திகளை அனுப்பி, நேரத்தை மிச்சப்படுத்தும் என்பது நிச்சயம்.
IOT part7-pic3
இன்றைய விமானங்களில், ADS-B என்ற சுய கண்காணிப்பு தொழில்நுட்பம் நிறுவப்பட்டுள்ளது. இதனால், விமானத்தில், வேகம், உயரம் போன்ற விஷயங்கள் விண்வெளியில் பறக்கும் செயற்கைகோள் மூலம், உலகில் எந்த விமான நிலயம் மூலம் வேண்டுமானாலும் கண்காணிக்கலாம். அத்துடன், இந்தக் குறிப்பிட்ட அதிர்வெண்ணை யார் வேண்டுமானாலும் கண்காணிக்க முடியும். இதையே பல்வேறு இணைய தளங்கள் விமானத்தின் சரியான நிலையைச் சுடச்சுட வெளியிடுகின்றன.
இதைக் கருவிகளின் இணையம் என்று சொல்லலாம், சொல்லாமலும் இருக்கலாம். ஏனென்றால், கருவிகள், இந்த முக்கிய தரவுகளை நமக்கு அளித்தாலும், அது, ஒரு பாதுகாப்பிற்குப் பயன்படுவதோடு நின்று விடுகிறது.
கருவிகளின்/உணர்விகளின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. பறக்கும் விமானத்திலிருந்து பல லட்சம் பாகங்கள் உணர்விகள் மூலம் தங்களது நிலையை விமானத்தில் உள்ள ஒரு கணினியிடம் விளா வாரியாகச் சொல்லிவிடும். விமானக் கணினி, பயணம் முடிந்த பின், அதை அழகாகத் தொகுத்து, தரையில் உள்ள பராமரிப்பு அமைப்பிற்கு அனுப்பிவிடும். கீழ் இறங்கிய விமானத்திற்கான பழுது வேலைகளை, இதனால், முன்கூட்டியே அறிந்து, தகுந்த பாகங்களை உறபத்தியாளரிடமிருந்து தருவித்து, சரியான பராமரிப்பு செய்தால், விமானம் பழுது பார்த்தலுக்காக பல நாட்கள் பறக்காமல் இருக்க வேண்டியதில்லை. இதனால், விமான நிறுவனத்திற்கு லாபமும் அதிகமாகும் (பயணிகள் எப்பொழுதும் பயன் படுத்தும் விமான நிறுவனங்களில்) – கூடவே விமானப் பாதுகாப்பும் அதிகரிக்கும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.