முகநூல்
முகம்
நூல்தான்
திறந்தே
இருக்கும்
ஆனால்
திறந்த நூல்
அல்ல
எப்போதும்
படிக்கலாம்
எளிதில்
படிக்கமுடியாது
புரிவதுமாதிரி
இருக்கும்
புரிந்தது
குறைவாக இருக்கும்
ஆழமானவற்றின்
அறிகுறிகள் தெரியும்
மறைத்தாலும் முடியாது
மறைபொருளை
அறிந்துகொள்ளமுடியும்
பக்கம் மாறுவதில்லை
பாடங்கள்
மாறிக்கொண்டே இருக்கும்
மையிட்டு
எழுதுவதில்லை
மனமிட்டு எழுதுவது
நாடக ஓவியங்களை
ஓவிய நாடகங்களை
ஒருசேரக் காணலாம்
அலங்கார நூல்களும்
அமைதியான நூல்களும்
ஆழமான நூல்களும்
வெறுமையும் வறுமையும்
வறுத்தெடுத்த
வாட்டி எடுத்த
நூல்களும் உண்டு
பளிங்குபோல் காட்டும்
சில
பதுங்கிக்கொண்டும்
இருக்கும்
முகநூல்கல்வி
அனைவருக்கும்
முக்கியம்
நயத்தக்க நாகரீகத்திற்குக்
கைகொடுக்கும்
முகம் நூல்தான்
அது
ஒருநூல் அல்ல
திறந்தே இருக்கும்
அது
திறந்த நூல் அல்ல
– பிச்சினிக்காடு இளங்கோ
oOo
புத்தனைத் தேடி
தியானமே திசைவெளியில் குவிந்து அடுக்கி அடுக்கிக் கட்டமைத்தது போல் காட்சியளிக்கும் பொன்னினொளிர்ந்து பகோடா.
தியான அறைக்குள் நான் நுழைவதற்கு முன்னமேயே
மெளனம் எத்தனையோ ஆண்டுகளாய்க் காத்திருப்பது போல் காத்திருக்கும்.
ஊதுபத்தி மணம் நிறைந்தது போல் அறையில் மெளனம் நிறைந்திருக்கும்.
விட்டு விட்டு ஒரு பறவை ஒலித்து மெளனத்தை
விசிறி விடும்.
சிறிது வெளிச்சம் ஒரு குட்டித் தவளை போல் அறைக்குள் குதித்திருக்கும்.
உள் ஒளிக்க என்ன இருக்கிறது
என்பது போல் அறையில் தாழ்ப்பாளுமில்லை; பூட்டுமில்லை.
’உன் கால் நீட்டப் போதும் வா’ என்று வரவேற்கும் அறை.
மெளனம்
முகம் நெருங்கும்.
உட்செவியில் அதிரும்
மூச்சினொலி.
உள்மூச்சும் வெளிமூச்சும் விடாது
உடலைப் பின்னும்.
‘இது வரை கழற்றிப் போடாத உன் சட்டையைக் கழற்றிக் கொக்கியில் மாட்டி விட்டு உட்கார்’ என்று மெளனம் சொல்லும்.
உள் உறங்கியிருக்கும் நச்சரவு கண்
விழிக்கும்.
‘எதற்கு வந்தாய்
இங்கு?’
புத்தனைத் தேடி
என்பேன்.
ஒன்றும் சொல்லாமல் ஒதுங்கி நிற்கும்
மெளனம்.
எதிரே
வெறும் நெட்டைச் சுவர்.
‘நச்’சென்று தும்மும்
என் மேல்.
– கு.அழகர்சாமி
oOo
சதுரங்கத் தனிமை
இசை ஞானம்
காரணமில்லை
மற்றொரு பறவைக்கான
ஒலி சமிக்ஞையே
ஒரு பறவையின்
சீழ்கை
இருப்பைத் தாண்டாத
பரிமாற்றங்களில்
பறவையின் உலகு
இருப்பு பற்றிய
முரண்கள்
எதிரும் புதிருமான
சதுரங்கம்
உனக்கும் எனக்கும் தான்
அதன் கட்டங்களுள்
யாரும் தனியனே
மின்மொழியாடலில்
கவனமில்லாமல்
வாசித்த பேசிய
பரிமாற்றங்கள்
கூரேற்றும்
தனிமையின் முள்முனைக்கு
தனிமையை நீக்கத் தேடி
உள்வாங்கும்
காட்சி ஒலி
தீராப்பசியில்
தகிக்கும்
உள்ளே
மேலும் கிடைக்க
மேலும் பசிக்கும்
சங்கிலியின் கண்ணிக்குத்
தனியே இல்லை
முக்கியத்துவம்
கண்ணிகள்
பிணைந்து நீளாமல்
தனிமையும்
தொலையவே
குகையிலே
ஓவியம்
எழுதினான்
ஒரு பிட்சு
– சத்யானந்தன்
oOo