நொண்டிக் குழந்தை

scan0002-006

[சிறு வயது செல்லப்பா]

மாலைவெயில் மங்கிக்கொண்டிருந்தது. பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிய குழந்தைகள், புஸ்தகங்களை வீசி எறிந்துவிட்டு தெருவில் ஒரு வீட்டுவாசல் முன்கூடி, எல்லை கடந்த உற்சாகத்துடன் விளையாட்டில் ஈடுபட்டன. திடீரென அவர்களிடையே தகராறுகளும், அபிப்ராய பேதங்களும் எழுந்து மறைவது வேடிக்கையாக இருந்தது.

திண்ணையில் ஸ்லேட்டுடன் உட்கார்ந்து ஞானம் குழந்தைகளின் உற்சாக ஓட்டங்களில் லயித்துப்போய் சுவாரஸ்யமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். அடுத்த திண்ணையில்தான் மீனா உட்கார்ந்து கண்களைப் பொத்திக்கொண்டிருந்தாள். குழந்தைகள் எல்லாம் பதற்றத்தில் ஒளிந்து கொள்ள இடம் தெரியாமல் தெருவில் ஓடித் தத்தளித்துக் கொண்டு இருக்கும். புது இடம் தெரியாமல் பழைய இடத்திலெயே ஒளிந்து அகப்பட்டுக்கொண்ட வண்ணமாக இருக்கும். இந்தச் சமயம் ராதா, அடுத்தமுறை அலமு, மறுபடியும் ராதாவின் முறை, பிறகு சீதா, லக்ஷ்மி, இப்படியாகச் சட்டுச் சட்டென்று மாறிக்கொண்டே இருக்கும், திரைப்படக் காட்சிகள் போல். ஒரு குழந்தைக்கும் சூசகமாக ஒளிந்து அவ்வளவு சாமர்த்தியமாக அலைக்கழிக்கத் தெரியாது.

ஞானம் விளையாட்டையே பார்த்துக் கொண்டிருந்தான். அவர்களோடு கலந்து தானும் விளையாட முடியவில்லையே என்று அவன் குழந்தை உள்ளம் கற்பனை செய்துகொண்டிருந்தது, அந்தக் குழந்தைகளுக்கு எப்படித் தெரியும்?

விளையாட்டு ரசனையில் ஞானம் ஈடுபட்டிருந்த மன நிலையில் கையில் பிடித்துக் கன்னத்தில் பதித்துக் கொண்டிருந்த சிலேட் அவனை அறியாமல் தவறிவிட்டது. சமாளித்து அதைப் பிடிக்கப் போனவன் கைவீச்சுக்கு மிஞ்சி விடவே கைகளைப் பின்னடித்துக் கொண்டான். மறுவினாடி சிலேட் கீழே கிடந்தது. அவன் கைகள் சிலேட்டை எட்ட முடியாமல் திண்ணை நடுவே உயர்ந்து நின்றன. அதை எப்படி எடுப்பது? பரக்கப் பரக்க விழித்துக்கொண்டே விளையாட்டுச் சிறுமிகள் இருந்த அடுத்த திண்ணைப் பக்கம் பார்வையைச் செலுத்தினான்.

சிலேட் விழுந்த சப்தம் கேட்ட குழந்தைகளும் அதே சமயம் அவன் பக்கம் பார்த்தன.

“யாராவது இந்தச் சிலேட்டை எடுத்துக் கொடுக்க மாட்டேளா?” என்று ஞானம் அவர்களைப் பார்த்துக் கேட்டான்.

அவன் வாய் திறந்து கேட்கவும் குழந்தைகள் பயந்துவிட்டன. இதுவரை அவனோடு அவை பேசினதுமில்லை; அவன் இருந்த பக்கமே அவை போனதுமில்லை. ஒன்றை ஒன்று ஏதோ ஒருவித அர்த்த புஷ்டியுடன் பார்த்துக் கொண்டன. ஒவ்னொன்றின் முகத்திலும் பீதிக்குறிகள் கிளம்பின. தயங்கித் தயங்கிப் பின்னுக்குப் பதுங்கின. அந்த சமயத்துக்கு விளையாட்டு நின்று போய்விட்டது.

குழந்தைகளின் தயக்கத்தைக் கவனித்த ஞானம், “மாட்டேளாடி?” என்று சிலேட்டுப் பக்கம் கைநீட்டிக் கேட்டான். அவன் பார்வை பரிதாபமாக இருந்தது.

ஆனால் இந்தக் கெஞ்சுதல் கூட குழந்தைகள் மனதைத் தொடவில்லை. சிறுமிகளின் மனம் பயத்தால் நிரம்பி இருந்தது. ஞானத்தை நெருங்குவதே ஆபத்து என்ற எண்ணம் அந்தக் குழந்தைகளின் மனதில் உறுதிப்பட்டிருந்தது.

“நான் போய் எடுத்துக்கொடுக்க மாட்டேண்டி, அம்மா” என்று இரண்டு மூன்று சிறுமிகள் நிர்த்தாக்ஷிண்யமாகக் கூறி அப்புறம் போய்விட்டனர்.

“அம்மாடி! எனக்குப் பயமாயிருக்கு” என்று ராதா கண்களை விரியவைத்துக் கொண்டு சொன்னாள்.

திண்ணையில் உட்கார்ந்திருந்த மீனா இதை கவனியாமல் இல்லை. ‘ஐயோ பாவம்! எடுக்க முடியாமல் திண்டாடுகிறது பாருடி!” என்று இடம் நகராமலே பயம் கலந்த தொனியில் இரக்கத்தோடு பேசினாள்.

அவள் வாய் அனுதாபம் கூட இரண்டொரு சிறுமிகளுக்கு அதிகமாகப்பட்டது. “போடி போ! காலைப்பாரு, கோரமாக இருக்கு” என்றாள் அலமு.

“ஆமாண்டி, அதன் கிட்டப் போனால் எல்லோரையும் கடித்துவிடுகிறதாம்; பைத்தியமும் வேறயாண்டி!” என்று இன்னும் ஒரு சிறுமி தன் யூகத்தைக் காட்டினாள்.

இதுதான் குழந்தைகள் ஞானத்தைப் பற்றி நினைத்திருந்ததெல்லாம்.

ஞானம் பிறந்து ஆறு கோடைகளைப் பார்த்திருக்கிறான். ஆனாலும் அவன் இன்னும் நடை பழகவில்லை. ஏன், நிரந்தரமாகவே அந்த ஜீவன் பாதங்களைத் தரையில் ஊன்றி அடியெடுத்து வைக்க முடியாது. பிரம்ம சிருஷ்டிக்கு மாற்று ஏது? வேஷ்டி விளிம்பிற்கு மேலாக வாழைப்பூ முனைபோல் கும்பிப்போல் எலும்பு இல்லாத சதைப் பிண்டமாக பாதங்கள் வெளிக்காட்டி நிற்கும் அந்தக் கோரந்தான் குழந்தை உலகோடு அவனுக்குத் தொடர்பே இல்லாமல் போகும்படி செய்துவிட்டது.

ஞானம் என்ற அழகான பெயர் அவனுக்கு இடப்பட்டிருந்தும் நொண்டிப்பிள்ளை என்றுதான் ஊரார் அவனைப் பற்றி பிரஸ்தாபித்தார்கள்.

தன் சிருஷ்டி கோரத்தின் கடுமையை அவனால் பூரணமாக உணர முடியவில்லை. இதர குழந்தைகள் அறிந்து வித்தியாசம் பாராட்டின.

ஓடி ஓடி விளையாடின குழந்தையின் விளையாட்டில் ஈடுபட்ட ஞானம் குதூகலமடைந்தான். துள்ளிக் குதிக்கும் பாதங்களைப் பார்த்துப் பரவசமடைந்து கொண்டே கண்களைத் தன் பாதத்தின் பக்கம் திருப்புவான். அவனுக்கே புரியாத ஒருவித சந்தேகம், தெளிந்து நிலைக்காத ஒரு வேதனை நிழல்போலத் தோன்றும். அடுத்த க்ஷணம் அந்த நினைப்பு அழிந்து விளையாட்டுக் கவனம் வந்துவிடும்.

ஞானத்தைவிட மீனாவுக்கு ஒரு வயது அதிகமிருக்கும். எட்டி நின்று ஞானத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் மீனா. ஞானத்தின் பரிதாபமான பார்வையையும் அவன் கைக்குத் திரும்பக் கிடைக்க வழி இல்லாமல் கீழே கிடந்த சிலேட்டையும் மாறி மாறிப் பார்க்க ஆரம்பித்தாள். அவள் மனம் கிளர்ச்சி அடைந்தது. “ஐயோ பாவம்! அவனால் அந்தத் திண்ணையிலிருந்து இறங்கி அதை எப்படி எடுக்க முடியும்? நடக்க முடியாதே, பாவம்!” என்ற நினைவு ஊறியது சிறுமி மீனாவுக்கு.

“பாவம் எடுத்துக் கொடுத்து விடுவோம்” என்று சொல்லி முடிப்பதற்குள் குழந்தைகள் அவள் மீது சீறி விழுந்தன.

மீனா தயங்கி நின்று யோசித்தாள். அவளுக்கும் உள்ளூற ஞானத்தை நெருங்குவதற்கு பயம். ஆனால் நொண்டிப் பிள்ளையின் கெஞ்சும் பார்வை அவள் மனதில் ஆழத் தைத்துவிட்டது. அந்தச் சில நிமிஷங்களுக்குள் பலவித சிந்தனைகள் அவளுடைய மனதில் குறுக்கிட்டு ஓடின. “எடுத்துக் கொடுப்பதா, வேண்டாமா? ஐயோ பாவம்! கிட்டப் போனதும் ஏதாவது பண்ணிவிட்டால் – ஹூ ஹூம் தள்ளியே நின்று கொடுத்துவிட்டு வந்துவிடுவோமே. இல்லாவிட்டால் திண்ணைமேல் வச்சுட்டு வந்துவிடுகிறேன்” என்றெல்லாம் நினைத்துக்கொள்வதனால் முகக்குறி அடிக்கடி மாறிற்று. அதே சமயம் மீனாவைப் பார்த்து ஞானம் கையை அசைக்கவும், அருகில் நின்ற குழந்தைகள் அவளை “போகாதேடி” என்றதைக் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. கூட்டத்திலிருந்து விர்ரென்று பாய்ந்து ஓடினாள். பரபரப்புடன் சிலேட்டை எடுத்துத் திண்ணை விளிம்பில் ஒருபக்கம் தடாரென்று வைத்துவிட்டுத் திரும்பவும் சகாக்களுடன் சேர்ந்து கொண்டாள். அவளுக்கு இருந்த பயத்தில் “மீனா! மீனா!” என்று ஞானம் கூப்பிட்டது கூட அவள் காதில் விழவில்லை.

மீனாவின் முகத்தில் ஒரு பெரிய காரியத்தை, மற்றக் குழந்தைகள் செய்யத் தவறிய ஒரு கடமையைச் செய்துவிட்ட ஒரு கர்வம், திருப்தி இருந்தது அப்போது.

மற்றச் சிறுமிகள் அவனை ஒருதரம் விறைத்துப் பார்த்துவிட்டு மீண்டும் விளையாட்டில் ஈடுபட்டனர். சிலேட்டைக் கையில் வாங்கிய ஞானம் மறுபடியும் ரசனையில் ஈடுபட்டான். ஆனால் அவன் பார்வை இப்போது பெரும்பாலும் மீனாவின் ஓட்டத்திலும் உருவத்திலுமே லயித்து இருந்தது.

குழந்தைகளின் மனதில் எந்தவிதமான உணர்ச்சியும் நிரந்தரமாகத் தங்குவதில்லை. வளரவளரத்தான் மனிதன் குரங்காகிறான். எதிலும் தன் பிடிவாத முத்திரையைப் பார்ப்பதில் அவன் மனம் உற்சாகம் அடைகிறது. குழந்தைகள் சண்டை இடுக்கொள்வதும், ஒத்துப்போவதும் எவ்வளவு சுலபம், எவ்வளவு சீக்கிரம்!

குழந்தை உலகத்துடன் ஞானத்துக்கு தொடர்பு ஏற்படுவதற்கு மீனாதான் காரணமாக இருந்தாள், மீனாவுடன் ஞானத்துக்குப் பழக்கம் ஏற்பட்ட அச்சம்பவம் காரணமாக இருந்ததைப் போல.

சிறுமிகள் விளையாட்டு மும்முரமாக ஆக ஆக ஞானத்தின் உற்சாகம் அதிகரித்துக் கொண்டிருந்தது. ஒளியத் தெரியாமல் தவிக்கும் குழந்தைகளுக்குப் புதியபுதிய இடங்களை காட்டிக் கொண்டிருந்தான். முதலில் அவன் வார்த்தைகளை கேட்க மறுத்த குழந்தைகள் மீனா வழி வைத்ததும் கொஞ்சம் துணிவு கொண்டன. மீனாவுக்கு அவன் காட்டிய ஒளிவிடங்களைக் கண்டுபிடிக்க முடியாமல் தவித்த மற்றக் குழந்தைகளின் பொறாமையே அவர்களை அவனோடு நெருங்கச் செய்தது. கொஞ்சங் கொஞ்சமாகக் குழந்தைகள் மனதில் ஞானத்தைப் பற்றிய கோரச்சித்திரம் அழிந்துகொண்டு வந்தது. ஞானமும் தங்களைப் போல ஒருவன் என்ற நினைப்புத் தோன்ற ஆரம்பித்தது அவர்களுக்கு.

நீண்ட சிறை வாசத்துக்குப் பின் விடுதலையான கைதியின் நிலைமையில் இருந்தான் ஞானம். தனிமையில் தத்தளித்துப் பொருமிய அவன் இதயத்தைப் பல உள்ளங்கள் தொட்டுக் கரைக்கு இழுத்தன. கட்டவிழுத்து விடப்பட்ட அவன் உற்சாகம் பல திசைகளிலும் ஓடிப் பாய்ந்தது. போகப் போகக் குழந்தைகளின் விளையாட்டில் ஞானம் பூரணமாக ஈடுபட்டுவிட்டான். ஓடி ஒளிய யோசனை கேட்கும் குழந்தைகளுக்குப் புதுப்புது இடங்களை எத்தனை வித விதமாகக் காட்டிக்கொண்டிருந்தான் அவன்!

அந்த நிலையிலும் குழந்தைகள் எட்டி நின்றுதான் அவனிடம் யோசனை கேட்கும். மீனா ஓடிவந்து “எங்கேடா ஒளிந்து கொள்ளட்டும்?” என்று ஆவலோடு கேட்கும்போது அவளுக்கு விசேஷமான ஒளிவிடம் காட்டுவதில் அவன் மனம் தனிச் சலுகை காட்ட ஆரம்பித்துவிட்டது. மீனாதானே அவனை குழந்தை உலகத்திற்குள் இழுத்துவிட்டாள்?

குழந்தைகள் யோசனை கேட்கும்போதும், கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கும்போதும் தானே அங்கங்கே சென்று ஓடி விளையாடுவதாக நினைத்துக் கொண்டான் ஞானம். ஓடும் குழந்தைகளுடன் அவன் இருதயமும் ஓடிச்சென்று அவர்களோடேயே திரும்பிவரும். பார்க்கப்போனால் குழந்தைகள் விளையாட்டாலும் தன் யோசனைகளாலும் அடைந்த ஆனந்தத்தைப் பற்றிக்கூட அவனுக்கு அக்கறை இல்லை. சுயநலத்துடன்தான் அவன் அதில் ஈடுபட்டிருந்தான் என்று கூடச் சொல்லலாம். அந்த விளையாட்டிலும் யோசனையிலும் அவன் சந்தோஷம் அடைந்தான். அந்தத் திருப்திதான் அவனுக்குப் பெரிதாக இருந்தது. மாயக்கண்ணன் ரூபம்போல் அவன் இருதயம் பல ரூபங்களாகப் பிரிந்து அவனை மகிழச் செய்துகொண்டிருந்தது.

ஓடும் குழந்தைகளின் அத்தனை கால்களும் தன்னுடையவை போன்ற உணர்ச்சிதான். அவன் வெறி உள்ளத்தில் பதிந்து கிடந்தது. அப்போது அத்தனை கால்களும் அவனுடையவனாக இருக்கும்போது அவனுக்குக் கால்கள் இருந்தாலென்ன, இல்லாவிட்டால்தானென்ன? இத்தகைய காட்சியின் நினைப்பில் அவன் தன் மனதைப் பறிகொடுத்து இருந்தான்.

அன்றும் வழக்கம்போல் குழந்தைகள் விளையாட ஆரம்பித்தன. கொஞ்சநேரந்தான் சென்றிருக்கும். அதுவரையில் அமைதியாக நடந்த விளையாட்டு திடீரென்று நின்றுவிட்டது. அவன் உற்சாகத்துக்கும் மகிழ்ச்சிக்கும் தடை கட்டுவதுபோல் அதுவரை கண்ணாமூச்சி பொத்திக்கொண்டிருந்த சிறுமி இனி முடியாதென மறுத்துவிட்டாள். திண்ணையினின்று குதித்துத் தானும் ஓடி ஒளியத் தயாரானாள்.

இனி யார் பொத்துவது? ஆட்டத்தில் ஓடியாடி நேரடியாகக் கலந்து கொள்வதில் ருசிகண்ட சிறுமிகள் பொம்மைபோல் உட்கார்ந்து பொத்திக் கொண்டிருக்கத் தயாராக இல்லை. பல்லக்கு ஏற எல்லோரும் தயார்; சுமக்க மாத்திரம் தயாராக இல்லை.

ஞானத்தின் மனம் சஞ்சலப்பட்டது. விளையாட்டு நின்றது. குழந்தைகள் மனதில் கூட அவ்வளவாகப் படவில்லை. சண்டை மும்முரத்தில் சுயநலத்துடன் வேடிக்கை பார்ப்பதில் லயித்து ஆத்ம திருப்தி கொண்ட ஞானத்துக்குத்தான் உறுத்தியது. உற்சாகம் குன்றியது. ஒவ்வொரு க்ஷணமும் அவன் சாதகமான முடிவை எதிர்பார்க்கப் பார்க்க ஏமாற்றந்தான் அதிகமானது. அவன் வேண்டுகோள்களும் பயன்படவில்லை.

குழம்பிய மனதுடன் கொஞ்சம் யோசித்தான். சரேலென்று அவன் முகம் பிரகாசத்துடன் மாறியது. “மீனா, ராதா, நான் பொத்துகிறேன்; நீங்கள் ஓடி ஒளியுங்கோ!” என்று ஆசையைக் கொட்டிக் கூறிவிட்டு, அவர்கள் சம்மதத்தை எதிர்பார்த்து ஒவ்வொரு சிறுமியின் முகத்தையும் ஆவலுடன் நோக்கினான். விளையாட்டைப் பார்க்க அவன் மனசு அவ்வளவு ஆத்திரப்பட்டது. ஒவ்வொரு குழந்தையும் தன் விளையாட்டை ரசித்தது. ஞானமோ அத்தனை பேர் விளையாட்டையும் ரசித்தான்.

ஆனால் பழைய பயம் இன்னும் முழுதும் மறைந்துவிடாமல் அந்தக் கோரநினைவு அந்தக் குழந்தை உள்ளங்களில் இருந்தது. அவர்கள் பார்வை அதைக் காட்டிக் கொடுத்தது. சம்மதிப்பா, மறுப்பதா? அவர்களால் நிதானிக்க முடியவில்லை. பழைய கசப்பு மாறிவந்த நிலைமைக்கும், பயத்தின் சாயல் முற்றும் அழியாத நிலைமைக்கும் நடுவே கிடந்து அவை தத்தளித்தன. எல்லாக் குழந்தைகளும் மீனாவைப் பார்த்தன். அவள்தான் அந்தப் பிரச்சினையைத் தீர்க்கவேண்டுமென எதிர்பார்ப்பதுபோல்.

மீனா ஞானத்தின் பக்கம் திரும்பிப் பார்த்தாள். அவன் ஆவல் கண்கள் அவளைச் சம்மதிக்கும்படி கெஞ்சுவதுபோல் இருந்தன. “நல்லதாப் போச்சு வாங்கோடி, நித்யம் அவனே பொத்துவான்” என்று உற்சாகம் காட்டிச் சிறுமிகளை இழுத்தாள். குழந்தைகளுக்கு அரை மனசு. ஆனால் அவசியமும் அவசரமும் அவர்களை விரட்டின.

“மீனா கிட்டப்போனபோது ஒன்றுமே செய்யவில்லையே!” என்றது ஒரு குழந்தை. அடுத்தடுத்து ஒவ்வொரு குழந்தையின் வாயிலும் அந்த அபிப்ராயத்தின் எதிரொலிகள் உண்டாயின.

மீனா முன்செல்ல ஞானம் இருந்த திண்ணைப்பக்கம் முன்னால் காலெடுத்து வைத்தார்கள். பாதங்களின் கோரம் அவர்கள் கண்களில் பட்டது. கால்கள் பயத்துடன் மீண்டும் பின்வாங்கின.

அவர்கள் காலெடுத்து வைத்ததும், மீண்டும், பின்னரித்ததும் ஞானத்துக்கு ஒருமாதிரியாக இருந்தன. என்ன தோன்றியதோ தெரியவில்லை, கால்களை இழுத்து வேஷ்டிக்குள் மறைத்துக் கொண்டான். குழந்தைகளைப் பொத்துவதற்குத் தயாரானவன் போல் இருந்தான்.

“மீனா!” என்று கைநீட்டிக் கூப்பிட்டான் ஞானம். மீனா ஓடிப்போய் அவன் முன் நின்று கண்ணாமூச்சிக்குத் தயாரானாள். குழந்தைகள் பயம் அதோடு நொறுங்கிப் போய்விட்டது. நிரந்தரமாகக் கண்பொத்த ஓர் ஆள் கிடைத்துவிட்டான் அவர்களுக்கு. அவனால் ஓடி விளையாட முடியாது. அவர்களிடையிலும் சண்டை ஏற்பட வழி இல்லை இனி!

“கண்ணாமூச்சி ரே ரே…”

இத்தனை வருடங்களாக ஆடி இராத விளையாட்டு அத்தைனையும் ஒரே அடியாக விளையாட விரும்பினவன் போல் வெறியுடன் கண்பொத்துவதில் ஈடுபட்டிருந்தான் ஞானம். உள்ளூற மக்கிப்போய்க் கிடந்த அத்தனை உற்சாகமும் அவன் மனத்திலிருந்து வெடித்துக் கிளம்பினதுபோலிருந்தது.

மீனாவின் ஓட்டமும் உருவமும்தான் அவன் கவனத்தை விசேஷமாக இழுத்துச் சென்றன. அவள் ஒளியும் இடம், தப்பும் வகை இவைகளையே கண்கள் பார்த்துக் கொண்டிருக்கும். தூரத்தில் அவள் ஓடிவரும்போது ஆர்ப்பரிப்பாள். அவள் தப்புவதைக் கண்டு தானே தப்பிவிட்டதுபோல் பூரிப்புக் கொள்வான்.

விளையாட்டுப்போக்கில் மீனாவிடம் அவனுக்கு ஒரு தனிப்பற்றுதல் ஏற்பட்டுவிட்டது. அவனுடைய அத்தனை உற்சாகத்துக்கும் அவள்தானே காரணம்? மீனா பிடிபடாமல் இருக்கவேண்டும் என்ற கவலைதான் சதா அவனுக்கு. நடுநிலைமை வகிக்க வேண்டிய இடத்தில் பாரபக்ஷ எண்ணம் விழ ஆரம்பித்தது. ஆனால் அந்தச் சலுகையை ஆட்டத்தில் காட்ட முடியாதே.

மீனா சேர்ந்தாற்போல் இரண்டு மூன்று தரம் பிடிபட்டுவிட்டாள். யாரையாவது பிடித்தால்தான் அவள் நிலைமை மாறும். ஓடவும் பிடிக்கவும் முடியாமல் களைத்துப்போன அவள் முகத்தை ஞானம் கவனித்தான். அவன் முகமும் கலக்கம் காட்டியது. “ஐயோ! யாராவது அகப்பட்டுக்கொள்ள வேண்டுமே” என்று உள்ளூர தெருக்கோடிப் பிள்ளையாரை வேண்டிக்கொண்டான். பயனில்லை. காட்டிவிடலாமா என்ற எண்ணங்கூட அவன் மனதில் ஒவ்வொரு சமயம் தோன்றிவிட்டது. ஆனால் எப்படியோ தன் ஸ்தானத்தின் கெளரவத்தைக் காப்பாற்றிக் கொண்டுவிட்டான்.

மீனாவும் ஒருவாறு ஒரு சிறுமியைப் பிடித்துவிட்டாள்.

மறுமுறை மீனா தான் ஒளிந்துகொண்டிருந்த இடத்திலிருந்து மெதுவாக எட்டிப் பார்த்தாள். அவளைத் தேடிய சிறுமியின் கால்கள் அவளை நோக்கிப் பாய்ந்தன. மீனாவை விரட்டினாள்.

தெருக்கோடியிலிருந்து குடல் தெறிக்க ஓடிவந்தாள் மீனா. வேகத்தில் அசைந்தாடும் அவள் பின்னலுக்கு நேராக விரட்டிய சிறுமியின் நீட்டிய விரல்கள் ஓடிவந்தன.

இன்னும் சில எட்டுகள்தான், மீனா பிடிபட்டுவிடுவாள். சந்தேகமே இல்லை.

ஞானத்தின் மனசு பதைபதைத்தது. அவள் அகப்படக் கூடாதெனத் துடித்தது. தாம் பணம் கட்டிய பந்தயக் குதிரையின் ஓட்டத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களைப் போலத் தவித்தாள்.

“மீனா! மீனா! ஓடிவா!” என்று அடித்தொண்டையிலிருந்து கத்தினான். உட்கார்ந்தவாறே கைதட்டினாள். தவ்வித் தவ்வி எழுந்தான். விளையாட்டு வெறியுடன் மீனா மீதுள்ள கவலையும் கலந்தது. அவள் ஞாபகந்தான் அவன் மனசு முழுவதும், தன்னைப் பற்றிய நினைவே அவ்வளவாக இல்லை.

மீனா கிட்ட நெருங்கிவிட்டாள். இன்னும் சில எட்டுகளே பாக்கி. அவள் அவனைத் தொட்டுவிடலாம்.

ஆனால் விரட்டிய சிறுமியின் வேகம் கொஞ்சமும் தளரவே இல்லை. மீனாவின் பின்னலைத் தொட்டால் கூடப் போதும். இடையிலுள்ள தூரம் முன்னாலும் குறைந்துவிட்டது.

ஞானத்தின் துடிதுடிப்பு தாங்கமுடியவில்லை. மீனா பிடிபடக் கூடாது என்ற ஆத்திரம் அவனை மெய்மறக்கச் செய்தது.

“மீனா, மீனா! தொடு என் கையை சீக்கிரம்!” என்று தன்னை அறியாமல் எழும்பிக் கையை நீட்டிவிட்டான். அவனுக்கு ஆத்திரத்திலும், வெறியிலும், நீட்டிய கையைத் தொட்டுவிட மாட்டாளா என்ற ஆசையிலும், கால்கள் இருந்திருந்தால் இறங்கிக்கூட எதிர்த்து ஓடியிருப்பானோ என்னவோ?

வேகமாக எழும்பிவிட்டான் திண்ணை நுனியை மறந்து.

“மீனா தொட்டுட்..” அவன் முடிக்கவில்லை.

திண்ணையிலிருந்து சாய்ந்து தலைகீழாக அவன் தரையில் விழுந்தான்.

அதேசமயம் ஓடிவந்து அவனைத் தொட்ட மீனாவின் விரல்களில் அவன் சூம்பிய பாதந்தான் பட்டது.