காத்திருப்பு

spider

காத்திருப்பு
வலையில் சிக்கி நெளியும்
மனதை விடுவிக்க நேரம் பார்த்து
காத்திருந்தாள் வேலையில்லாத பெண்ணொருத்தி
சிலந்தியின் எச்சில்தடத்தின் மையத்தில்
நிலைகொண்டிருந்தது சிலந்தியின் கர்வம்
சிலந்திக்கும் பெண்ணுக்குமான போட்டியில்
கடந்துவிடுகிறது ஓர் யுகம்
காற்றடிக்கத் தொடங்குகிறது
இருவரும் இன்னும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்
அன்றொருவன் வந்திருந்தான்
அவனைக் கடவுள் என்றேன்
அன்று தெருவழியே ஒரு பிணம் சென்றது
சில மனிதர்கள் சென்றிருந்தார்கள்
நசுக்கப்பட்டுக் கிடந்தன சில மலர்கள்
மீன் கொண்டு வந்தவனை
கத்திக்கொண்டிருந்தது பூனை
மழையை எதிர்த்தன குடைகள்
அன்றுதான் அவன் வந்திருந்தான்
இத்தனையையும் அவன் கவனிக்கவில்லை
எல்லோருக்கும் ஒரே புன்னகை
மழையின் நீர்
எதிர்ப்பற்ற ஒரு மனிதன்
கிடைத்துவிட்ட வெறியில்
கலந்து தீர்த்தது மிக வேகமாய்
யாருமில்லாத தோரணையில்
அவனருகே கிடந்து
மீனைத் தின்றது பூனை
சட்டகம்
பதின்ம வயதிலிருந்து
சட்டகம் செய்துகொண்டிருக்கிறேன்
அளவு கச்சிதம் தப்பியதே இல்லை
அதன் உள்முனைகளில்
சிக்கிக் கொண்டுவிடும் மனிதர்கள்
பின் மீறி வெளியே சென்றதே இல்லை
அதை எப்படிச் சிறிதாக்கினாலும்
விரும்பி வந்து புன்னகையுடன்
தன்னை அடைத்துக்கொண்டார்கள் அவர்கள்
சுற்றித் திரியும் மனிதர்கள்
கழுத்தெல்லாம் என் தயாரிப்புப் பொருள்
அலுத்துப் போகிறது எனக்கு.
இதோ இப்போது சொல்கிறேன்,
நான் இனி சட்டகம் செய்யப்போவதில்லை
உங்களுக்கான ஒன்றை
நீங்களே கொண்டு வந்துவிடுங்கள் ப்ளீஸ்.
தேடல்
தெரியாமல் ஒரு பாம்புக்குட்டியை
விழுங்கிவிட்டால் எப்படி இருக்கும்?
யாரோ சொன்னதாகத்தான் நினைவு
யார் சொன்னதென நினைவில்லை
எப்போது என்பதும் நினைவில்லை
ஆனால் சொல்லின் காலத்தெளிவும்
சொல்லியின் தொனியும்
இன்னும் பசுமையாக
நானேதான் நினைத்தேனா
என் மனசுக்குள் இருந்துகொண்டு
நானேதான் பேசிக்கொண்டேனா
தெரியாமல் விழுங்கமுடியுமா
குழப்பமே எஞ்சுகிறது
தெளிவாக வரிசையாக
யோசிக்கலாம் என்றால் எங்கிருந்து?
நிச்சயம் கனவில்லை
யார் சொல்லியிருந்தாலும்
இப்போது யாரிடமிருந்தாலும்
அச்சொல் என்சொல்