அறுவடை

கதிரவன் நேரில் வந்து சம்பிரதாயத்திற்கு விசாரித்து விட்டு, அடுத்த பூ போகத்திற்கான மேற்பார்வையை பூபதிக்கே மீண்டும் கைமாத்தி விட்டுவிட்டுப் போய்விட்டான். வீட்டின் செலவுகள் இடிக்கத் தொடங்கியிருந்தது. பெண்களை கட்டி கொடுத்த இடத்தில் கையேந்தி நிற்க கூடாதென்பதில் நாயகமும், ராசமும் உறுதியாக இருந்தார்கள். அரிசிப்பானை தூரை தொட ஆரம்பித்திருந்தது. அரிசி தட்டுபாட்டை நாயகத்திடம் சொல்லாமல், இருக்கிற அரிசியை முடிந்த அளவிற்கு நீட்டித்து கொண்டு வரும் எண்ணத்தில் நாயகத்திற்கு மட்டும் வயிற்றுக்கு குறை வைக்காமல் பரிமாறி விட்டு, தனக்கு அரைவயிறும் கால்வயிறுமாக நிரப்பி ஒரு வாரமாக சமாளித்துக் கொண்டிருக்கிறாள் ராசம்.