உத்தரகாசி -குப்தகாசி

இந்த ‘சார்தாம்’ யாத்திரை முழுவதும் ஒரே ஒழுங்குவரிசையில் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் எனச் செல்கிறது. அதனால் யாரென்றே அறிந்திராத அன்பர்களை அங்கு தொடர்ந்து சந்தித்து அளவளாவ மகிழ்ச்சியாக இருந்தது. அதிகாலைப் பயணம் எனக்கு மிகவும் பிடித்தமானது. அதுவும் இமயமலைப் பயணம் அழகான ரசிக்கத்தக்க காட்சிகளுடன் கண்களையும் மனதையும் நிறைவு செய்து கொண்டிருந்தது. மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருக்கும் குறுகிய சாலையில் ஏகப்பட்ட வளைவுகள். அதிகாலைப் போக்குவரத்து அதிகம் இல்லாததால் பிரச்சினையில்லை. இல்லையென்றால் திகிலான பயணமாகத் தான் இருந்திருக்கும். அனுபவமுள்ள ஓட்டுநர் என்பதை எங்கள் டிரைவர்ஜி அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருந்தார்.