கங்கோத்ரி

வலது புறம் துள்ளியோடும் பாகீரதி ஆற்றுக்கு அரணாக பச்சைப்பசேலென இமயமலை. மலையின் ஈரம் காயாத சாலைகளில் பயணித்துக் கொண்டிருந்தோம். வெயிலைப் பார்க்க அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. நடுநடுவே சாலைகளில் உடைப்பு ஏற்பட்டிருந்ததால் எதிரே வரும் வண்டிக்கு வழியை விட்டு நகர்வதில் சிரமம் இருந்தது. இத்தகைய சூழலை அனுபவமிக்க ஓட்டுனர்கள் மிக அருமையாக கையாளுகிறார்கள். பைக்கில் பவனி வரும் கூட்டம் இந்த யாத்திரையில் அதிகம் காண முடிந்தது. எப்படித்தான் இப்படிப்பட்ட சாலைகளில் ஓட்டுகிறார்களோ என்று அதிசயித்தோம். சில இடங்களில் சாலைகளை நன்கு விரிவாக்கம் செய்திருக்கிறார்கள்.