நோபல் பரிசு 2022- மருத்துவம்
அமெசானின் மழைக்காடுகளின் உட்பகுதியில் இரு பச்சை மேனகின் (Manakin) பறவைகள்- ஒன்றின் தலைப் பகுதி பனியைப் போல வெண்மையாக இருக்க, மற்றொன்றின் தலைப் பகுதி ஒரு வகை இரத்தினக்கல்லின் நிறத்தில் இருந்தது. அவை வெவ்வேறு இனமல்ல. இனக்கலப்பினாலும், பகையை ஏமாற்றும் உயிரிச்சையாலும், இணையைக் கவர்வதற்குரிய மஞ்சள் நிற வாலாலும் அவை இப்படி பரிணாம வளர்ச்சி பெற்றிருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.(1)

பேலியோஜெனாமிக்ஸ் (Palaeogenomics-பழங்காலத்தைச் சேர்ந்தவர்களின் மரபியல் ஆய்வு – பழங்கால மரபியல்) என்ற துறையில் ஆய்வு செய்த ஸ்வாந்த பேபோவிற்கு (Svante Pääbo) மருத்துவத் துறைக்கான 2022 வருடத்து நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. மேக்ஸ் ப்ளேங் அமைப்பகம், லைப்ஸ்ஜிஹ், ஜெர்மனியில் (Max Planck Institute, Leipzig, Germany) ஆய்வுகள் செய்து வரும் அவர், மரபியல், (Genomics) பழங்காலவியல், (Palaeontology) பரிணாமம் (Evolution) ஆகிய மூன்று துறைகளை இணைத்து, பழங்கால படிமப் புதைவுகளிலிருந்து டி என் ஏ வரிசைகளை அமைத்ததில் வெற்றி பெற்றவர்.[1] ஒரு திசுவில், டி என் ஏ என்பது இரு வேறு அறைகளிலுள்ளது- ஒன்று கரு, (Nucleus) மற்றொன்று மைடோகான்ட்ரியாக்கள் (Mitochondria). கருவில் மரபார்ந்த விவரங்கள் பதியப்பட்டிருக்கும்; மைடோகான்ட்ரியாக்கள், திசுக்களின் சக்தி மையம். அவை ஆயிரக்கணக்கில் இருக்கும். அவற்றை மீட்டெடுப்பது ஓரளவிற்கு எளிது. 1990 களிலேயே, 40,000 வருடப் பழசான நியாண்டர்தால் எலும்புத் துணுக்கிலிருந்து டி என் ஏ வரிசையை அமைத்து ஆச்சர்யப்படுத்தினார் அவர். முதலில் மைடோகான்ட்ரியாக்களை ஆய்வு செய்தவர், 2010-ல் கருவின் டி என் ஏ வையும் வரிசைப்படுத்திய முன்னோடியாவார். அவரது முக்கிய பங்களிப்பு என்பது பழங்கால டி என் ஏ வை பிரித்து அறியமுடியும், அதன் மூலம் ஒருவர் நியாண்டர்தால் பிரிவின் கருக்களின் அம்சம் உள்ளவரா, அல்லது முழுதும் நவீன மனிதனா என்று நம்பகமாகச் சொல்ல முடிவதும்தான்.
நியாண்டர்தால் டி என் ஏ வில் 1-4%, நாம் ஐரோப்பியர்களிலும், ஆசியர்களிலும் பார்க்கிறோம். ஆனால், முழுதும் ஆப்பிரிக்க முன்னோர்கள் வழி வந்தவர்களிடம் இந்த நியாண்டர்தால் டி என் ஏ இல்லை.

மனித மரபியல் ஆய்வுகளில் நமக்கும், நியாண்டர்தால் மனிதர்களுக்கும் ஒரு பொதுவான மூதாதையர் 8,00,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்திருக்கின்றார்கள் என்பது தெரிய வந்தது.
இந்நிலையில் தான் 40,000 ஆண்டுகளுக்கு முன்னான ஒரு சிறு கை விரல் எலும்பு சைபீரியாவின் டெனீசவ (Denisova) குகையில் கண்டெடுக்கப்பட்டது. பாபோவின் ஆய்வகம் அதை ஆராய்ந்து அது முழுதும் ஒரு புதிய ஹோமினின் (Hominin) இனம் என்றும் அது கிடைத்த குகையின் பெயரால் அது டெனீசவன் இனம் என்றும் அழைத்தது.
பாபோவின் ஆராய்ச்சியும், முடிவும், இன்று மனித இனம் அடைந்துள்ள பரிணாம வளர்ச்சியில் புது வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது.
- டெனீசவன் இனம் இன்றைய மனிதன் மற்றும் நியாண்டர்தால் இனத்துடன் உறவுள்ள ஒன்று.
- ஹோமோ ஹைடெல்பெர்ஹென்ஸிஸ் (Homo Heidelbergensis) என்ற பொது மூதாதையிடம் இருந்து இந்த முப்பிரிவுகளும் உண்டாகின.
- டெனீசவன் இனம் அதன் டி என் ஏ வால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் இனம். மற்றவையெல்லாம் டி என் ஏ வம்சாவளி முறையைப் பின்பற்றி அடையாளப்படுத்தப்பட்டவை அல்ல.
- முற்றிலும் அழிந்த நமது மூதாதையரை அடையாளம் காணக்கிடைத்த ஒரு சான்று இது.
- நியாண்டர்தால் மேற்கிலும், டெனீசவன் கிழக்கிலும் அதிக அளவில் இருந்திருக்கின்றனர். பின்னர் புலம் பெயர்ந்து, கலந்து, போரிட்டோ, திறமைகளாலோ ஒரு இனம் மற்ற ஒன்றை அழித்திருக்கலாம். இரு இனமும், இன்றைய மனித டி என் ஏ வில் ஒரு குறைந்த அளவில் இடம் பெறுகிறார்கள்.
- மரபு சார் நோய்களுக்கான அறிகுறிகளையும், அதை நேர் செய்யும் முறையையும் விளக்க இந்தப் பழங்கால மரபணுத் தொடரில் விடை காண முடியும்.
- பாபோவும், ஹ்யூகோ ஜீபெர்க்கும் (Hugo Zeberg) இணைந்து செய்த ஆய்வில், நீரிழிவு-வகை 2, உடல் எதிர்ப்புச் சக்தி குறைபாடு ஆகியவைகளுக்கான காரணியுடன் நியாண்டர்தால் டி என் ஏ வைத் தொடர்புறுத்த முடியலாம் என்று எழுதினார்கள்.[2] கோவிட்-19ல் மூச்சுத் திணறலுக்குக் காரணிகளில் ஒன்றாக நியாண்டர்தால் மரபணுக்கள் இருக்கக்கூடும் என்று சொன்னார்கள் (50% தெற்கு ஆசியர்களிடமும், 16% ஐரோப்பியரிடமும் நியாண்டர்தால் டி என் ஏ இருப்பதால் இவ்வாறு தொடர்பு படுத்தினார்கள். ஆனாலும், இதை அறுதியாக எடுத்துக் கொள்ளக்க்கூடாது. பயோ பேங்கில் (Bio Bank) இருக்கும் பல்லாயிர மரபணுத் தொகுப்பிலிருந்து சலித்தெடுத்து அறிவியல் பூர்வமாக நிறுவ இன்னமும் பயணிக்க வேண்டும்.
- உலகின் பிறப்பும், அது வளர்ந்துள்ள விதத்தையும் அறிந்து கொள்ள உதவும் ஒரு அறிவியல் துறையாக இது வளரக் கூடும்.
கிழக்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியில் 2.5 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் மனிதர்கள் உருவானார்கள் என்று இன்றைய அறிவியல் கருதுகிறது. இன்றைய மனிதர்களுக்கு ஒப்புமை சொல்லும் வகையில் ஒத்த, உடல் எழும்பி நேராக நிற்கும் (Homo Erectus) விரைப்பானத் தன்மை கொண்ட வகையினர் அவர்கள். தொன்மையான மனிதர்களின் அழிந்து பட்ட உயிரினம் இந்த ‘ஹோமோ எரெக்டக்ஸ்.’ கிழக்கு ஆப்ரிக்காவிலிருந்து உலகின் பல பாகங்களுக்குப் பயணம் செய்து அவர்கள் பல்வேறு வகையில் ஒத்த இனங்களாக, ஆசியாவில் நியண்டர்தால்களைப் போல் பரிணாம வளர்ச்சி பெற்றார்கள். இன்றைக்கு மூன்று இலட்சம் வருடங்களுக்கு முன் வரை ஹோமோ சேபியன்ஸ் அல்லது இன்றைய நவீன மனிதன் தோன்றியிருக்கவில்லை. (சொல்வனம் இதழ் எண் 230; 12/09/2020 )
இந்திய வேத அறிமுறைகள் உயிர் பரிணாமத்தைக் காட்டிலும் சிருஷ்டியைப் பற்றித்தான் பேசுகின்றன. இதை ஆன்ம பரிணாமம் எனச் சொல்கிறார்கள். இல்லாததைக் கொண்டு வருவதல்ல சிருஷ்டி; அதுவே வளர்ச்சி. இது ஒரு செயல்முறை; நிகழ்வல்ல. இந்த உலகமே சைதன்யத்தின் சிறு துளி. ரிக் வேதத்தின் 7 மந்திரங்கள் இதை அழகாகச் சொல்கின்றன.
- அப்போது இருப்புமில்லை; இருப்பில்லாமலுமில்லை; உலகோ, ஆகாயமோ இல்லை.
- இறப்புமில்லை; இறப்பில்லாமலுமில்லை; இரவு பகலைப் பிரியவில்லை; அசைவில்லாத் துடிப்பு இருந்தது.
- முதலில் இருட்டில், மறைந்த இருட்டு இருந்தது.
- மனதின் விதையான விருப்பம் வந்தது. இருப்பற்றதிலிருந்து இருப்பானது தன் கிரணங்களை மேலே, கீழே, பக்கலில் என்று பரப்பி எழுந்தது.
- சிருஷ்டி பெருமையுற்றது. ஆக்க சக்தி மேலாக, தன்னை நிலை நிறுத்தும் இருப்பு சக்தி கீழாக வடிவெடுத்தது.
- யார் அறிவார் இதை? யாரால் சொல்லக்கூடும்? எப்போது தோன்றியது? எப்போது எவ்வாறு பரிணமித்தது?
- அவனையன்றி அறிவார் யார்?(ரிக் வேதம்-10 வது மண்டலம்-129-ம் சூக்தம். (சொல்வனம் இதழ் 246 ;09/05/2021)
இன்றைக்கு ஏறத்தாழ 7000 ஆண்டுகளுக்கு முன் எழுதியதாகக் கருதப்படும் வால்மீகி இராமாயணத்தில் அரக்கர், வானரர், மனிதர் என்ற மூன்று இனங்கள் அதிகமாகப் பேசப்படுகின்றன. அதுவும் அது முன்னர் நடந்த நிகழ்வை மீட்டுச் சொல்வதாக எழுதப்பட்ட ஒன்று. அப்படியென்றால் அந்த இதிகாச நிகழ்வு அதற்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்திருக்கக்கூடுமல்லவா? அதைக் கற்பனையல்ல என்று நிறுவும் பல தடயங்கள் கிடைத்திருக்கின்றன. வானரர்கள் குடல்வால் வெளியே நீள நம்மைப் போலவே இரட்டைக் கால்களால் நடக்கிறார்கள்- அவர்கள் கைகளையும், கால்களையும் பயன்படுத்தி தவழ்ந்து, தாவுவது சொல்லப்பட்டிருந்தாலும், நம்மைப் போல் நேராக நிற்கிறார்கள், நடக்கிறார்கள்; நமக்கு குடல் வால் வயிற்றினுள்ளே இருக்கிறது. வானரர்கள் பேசுகிறார்கள்- அதிலும் அனுமன் சொல் வேந்தன்- வடமொழித் திலகம். ஜடாயு என்ற கழுகு மனிதனுக்காகப் போரிடுகிறது; அதுவும் பேசுகிறது. வால்மீகியின் காலத்திலேயே பில், கான்ட், கோல் என்ற பழங்குடி மக்கள் இருந்திருக்கிறார்கள். வால்மீகி காட்டும் அசுர உடல்கள், குணங்கள் காலப்போக்கில் அருகிப் போயிருக்கக்கூடும். (உடல்கள் அருகியிருக்கலாம்; குணங்கள்?) இராமர் சேது பாலம், கிஷ்கிந்தா மலைத் தொடர், அசோக வனம், அனுமன் எரித்த இலங்கையின் ஒரு பகுதியில் இன்றும் கரும் வெப்பப் பாறைகள் போன்றவை, நாம் புராணங்களை ஆய்வுக் கோணத்தில் அணுக வேண்டுமென நிறுவுகின்றன.
உதகையிலிருந்து 20 கி மீ தொலைவில் உள்ள குன்றுப்பாறைகளில் காவிக் கட்டிகளால் வரையப்பட்டுள்ள சின்னங்கள், பனியுக ஐரோப்பிய சின்னங்களை ஒத்துள்ளதை சமீபத்தில் கண்டறிந்திருக்கிறார்கள்.(2) இன்றைய மனிதன் யூரோப்பை, ஆசியாவைக் கடந்து இந்தியாவை அடைந்து நீலகிரி மலையில் அன்றைய குளிரைத் தாங்கி வாழ்ந்து, பழங்குடியினருடன் கலந்து, மடிந்து போயிருக்கலாம் என்றும், இந்தச் சின்னங்களை ‘கார்பன் டேடிங்’ முறையைப் பயன்படுத்தி அதன் தொன்மையை, அதன் மூலம் மனித இன வராலற்றின் ஒரு பகுதியை அறியலாம் எனவும் நினைக்கிறார்கள்.
‘புல்லாகிப், பூடாகி, புழுவாய், மரமாய், பல் விருகமாய், பறவையாய், பாம்பாய், பேயாய், கணங்களாய், வல்லசுரராகி, முனிவராய், தேவராய், சொல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும்’ – திருவாசகம்.

***
[1] ஸ்வாந்த பேபோ பற்றிய ஒரு கட்டுரை இங்கே.
[2] ஹ்யூகோ ஜீபெர்க் பற்றிய ஒரு காணொளியை இங்கே காணலாம்: https://youtu.be/Isp1scKrdJs
உசாவிகள்: ஸ்வாந்த பேபோவின் காணொளி, மற்ற காணொளிகள்.
The article in The Hindu dt 09/10/22 by Jacob Koshy
திருவாசகம், ரிக் வேதம்.
(1)snexplores.org/article/mixed-hybrid-animals dt 13/09/18
(2) The Hindu dt 17/11/22