
“மெய்யப்பா உங்களோட கொஞ்சம் பேசலாமே”
“ என்ன பேசப்போறீர் , நீர் சொல்லப் போறதை கெதியிலை கேளும். எனக்குக் கொஞ்சம் அவசர வேலை இருக்கு,” சின்னப்பு தன் மனைவி பாக்கியத்துக்கு பதில் சொன்னார்.
“உங்களுக்கு தெரியும் எங்கள் வீட்டுக் காணியில் நாலு பக்கத்திலும் கிடுகு வைத்த வேலிகள் . அதோடு வீட்டு முன் படலை, கரல் பிடிச்ச தகரப் படலை.”
“நீர் அதை சொல்ல தேவை இல்லை அதுக்கு இப்ப என்ன “?
“அந்த வேலிகள், படலை ஆகியவற்றை மாற்றச் சொல்லி எங்கடை மகன் செல்வன் லண்டனில் இருந்து போன் செய்தவன்”.
“ இங்கை பாரும் , வேலியிலுள்ள பூவரச மரத்திலிருந்து அடிக்கடி அவன் சரி குஞ்சன், வந்து இலைகளை வெட்டிக் கொண்டு போய்விடுகிறான் அதிலை எங்களுக்கு வருமானம் வருகுது . அது உமக்கு தெரியும் தானே. அவன் தரும் காசு முழுவதையும் நீர் தான் வாங்கி வைக்கிறீர்.”
“ நான் இப்ப அதை சொல்ல வர இல்லை. அவன் எங்கள் மகன் செல்வன் லண்டனில் இருந்து போன் செய்து சொல்லுறான், வேலிகளையும் படலையையும் மாற்றட்டாம்.”
“அவன் என்ன சொல்ல வருகிறான்?”
“அவன் செல்வன் சொல்லுறான் நாலு பக்கத்து வேலிகளையும் எடுத்து போட்டு கல் மதில்கள் கட்டட்டாம் . படலையை இரும்பு படலையாக மாற்றட்டாம். காசு தான் லண்டனில் இருந்து அனுப்புறானாம், பாக்கியம் சொன்னாள்.”
“அவனுக்குப் பைத்தியமே? அந்த பூவரசம் இலைகளை பிடிங்கி அவன் சின்ன வயசிலை பிப்பீ ஊதினதை அவன் மறந்திட்டானே. அந்த மரங்களை வெட்ட சொல்லுறானே?”
“தான் பிப்பீ ஊதியது அவனுக்கு தெரியும் , அவன் சொல்றான் அடிக்கடி அந்த வேலி கதியால்களையும் கிடுகையும் மாற்ற வேண்டி வரும். அது வீண் செலவாம்.”
“அவன் சொல்லுறதிலை நியாயம் இருக்கு, அதோடு மட்டுமே எங்கள் பக்கத்து வீட் டு சண்டைக் கோழி சரசுவுடன் வேலிக் கதியால் மாற்றும் போது அவளுடைய காணியில் நாங்கள் ஆறு அங்குலம் ஆக்கிரமித்து விட்டோம் என்று சண்டை போட வருவாள். உதெல்லாம் தேவையா?” பாக்கியம் காரணம் சொன்னாள்.
“அவள் எதுவும் சொல்லிட்டு போகட்டும். அவள் மீன்காரி தேவி வரும்போது அவளிடம் இரால் வாங்க நீர் அந்த பூவரசமரத்து இலையைத் தான் பிடிங்கி கொண்டு போறீர் . அதை, அதோடை வேலியில் ஓட்டை வைச்சு அடுத்த வீட்டிலை என்ன நடக்குது விடுப்பு பார்ப்பீர் அதை மறந்திட்டீரே?”
“அது போகட்டும் வேலி இருந்தால் அதை அடைக்க கிடுகு விலை கொடுத்து வாங்கவேண்டும் தானே. அது வீண் செலவு,” பாக்கியம் சொன்னாள்.
“ அது உண்மைதான் நீர் கூட முந்தி கிடுகு வேலிக்குள் ஒரு பொட்டு வைத்த பக்கத்து வீட்டுக்குப் போய் மிளகாய் தூள் வாங்கி வருவீர் . கல் மதில் வேலி கட்டினால் இதெல்லாம் செய்ய முடியுமா?”
“ அப்படி சொல்லாதீங்க அவன் சொல்றான் தன்னுடன் லண்டனில் வேலை செய்தவர்கள் எல்லோரும் தங்கள் ஊரிலை கிடுகு வேலிகளை எடுத்துப் போட்டு கல் மதில் கட்டிப் போட்டாங்களாம்.”
“ அவனுடைய நண்பர்கள் செய்கிறார்கள் என்பதற்காக நாங்களும் செய்யவேண்டுமே. நான் எங்கள் பின் தோட்டத்துக்கு உள்ளே போனால் பசுமை நிறைந்த பூவரசம் மரங்களையும் பூக்களையும் பார்த்து ரசிப்பேன். கிளுவன் தடி எடுத்து பல் கூட துலக்குவேன் . அதெல்லாம் கல் மதில் வந்தால் செய்ய முடியாது.”
“ நீங்கள் ஒரு இயற்கை விரும்பி என்று எனக்கு தெரியும் ஆனால் அந்தப் பூவரசம் மரத்தில் அடிக்கடி மசுக்குட்டி வந்து குடி புகுந்து விடும் அந்த பிரச்சனை இனி இருக்காது.”
“அதுவும் ஒரு ஜீவராசி தானே இருந்துட்டுப் போகட்டுமே. எங்களுக்கு கொஞ்சம் புண்ணியம் கிடைக்கட்டும்.”
“ சரி அப்பா இப்ப நீங்கள் கடசியிலை என்ன சொல்கிறீர்கள் அவனுக்கு என்ன நான் சொல்றது? கல் மதில் கட்டுவதோ, இல்லையோ?”
“ என்னைப் பொருத்தமட்டில் எங்களுடைய மரபுவழி வந்த கிடுகு வேலியும் கதியால்களும் இருந்துவிட்டுப் போகட்டும். அது எங்களுடைய கலாச்சாரம்.”
“ சரி நீங்கள் ஒன்றும் காசு செலவு செய்யத் தேவையில்லை, அவன் முழு காசும் லண்டனில் இருந்து அனுப்புவான், நீங்கள் ஆட்களை பிடித்து மதில் கட்ட வேண்டியதுதான்.”
“அவனுக்கு இப்ப வெளி நாட்டு வருமானம் வருகுது . பேசுவான் . இந்த வீடும் காணியும் எங்களுக்கு பின் அவன் ஒரே மகனுக்கு தான் போகப் போக வேண்டும். அதனாலை எழுதும், நானும் நீரும் நானும் உயிரோடை இருக்கும் மட்டும் கல் மதில் கட்டுற கதை எடுக்க வேண்டாமென்று சொல்லும்.”
“இந்த வீதியில் உள்ள பல வீடுகளில் கல் மதில்கள் கட்டிப் போட்டினம் எங்கடை வீடு மடடும் இன்னும் பூவரசம் வேலியும் . தகரப் படலை யோடு தான் இருக்குது ஊர் சனம் என்ன நினைக்க போகினம். அவர்கள் பேசுவினம் .மகன் லண்டனிலை வேலை, இவையளுக்கு கல் மதில் கட்ட என்ன கஷ்டம்?”
“இங்கே பார் பங்கஜம் அயல் என்ன வேண்டும் என்றாலும் சொல்லி விட்டு போகட்டும் .நான் மட்டும் இப்ப இருக்கிற எங்களுடைய வேலி படலை அமைப்பிலிருந்து மாறிவிடப் போவதில்லை,” சின்னப்பு சொன்னார் .
“ அப்ப இருக்கிற கிடுகு வேலி இருகட்டும் என்கிறியளா?”
“ஒன்றுமட்டும் சொல்கிறேன் பக்கத்து கல் மதில் கட்டி இருக்கிற வீட்டுக்காரரிடம் சொல்லும் எங்கடை வேலியில் இருக்கும் பூவரச மரத்திலிருந்து இலை பிடுங்கி இறால் வாங்க இங்க வர வேண்டாம் எண்டு.”
“ எனக்கு தெரியும் நீங்கள் இப்படி ஒன்று சொல்லுவேன் எண்டு.”
“அது மட்டுமே , உனக்கு தெரியுமே சீமேந்து மணல் எல்லாம்விலை ஏறிப்போச்சு. சீமேந்துக்கு தட்டுப்பாடு. என் பென்சன் காசிலை நான் சேமித்து வைத்திருப்பதை நான் மட்டும் கைவிடமாட்டேன். என் மரணச்சடங்குக்கு வைத்திருக்கிறன். அவன் எங்கள் மகன் ஒண்டும் செலவு செய்ய வேண்டாம்.”
“நீங்கள் போய் நகரசபையிடம் மதில் காட்ட அனுமதி கேட்டு பாருங்கோ வான்.”
“ நான் பேசிப் பார்த்துட்டன். எங்கடை வடக்கு வேலி பக்கத்திலை ஒரு ஒழுங்கு சிவன் கோவிலுக்கு போகுது . அதை விஸ்திரிக்க ஒரு திட்டம் இருக்காம் . அதாலை ஐந்து அடிகள் வீதிக்கு இடம் விட்டு மதில் காட்டட்டாம் , எங்கடை காணியில் பெரும் பகுதி விட்டுக் கொடுக்க வேண்டும் . அது உனக்கு தெரியுமே?”
” அது நடக்காத விசயம். நாங்கள் உயிரோடை இருக்கும் மட்டும் கிடுகு வேலியும் படலையும் இருந்திட்டு போகட்டும் . நாங்கள் கண் மூடிய பின் அவன் பிறகு அவன் இங்கை வந்து வாழப் போவதில்லை . அதுவும் அவனுடைய மனுசி வெள்ளைக்காரி. அந்த நேரம் அவன் இந்த வீட்டையும் காணியையும் விக்கட்டும் வருகிற காசிலை அவன் மோர்ட்க்கேஜ் கட்டட்டும் . இப்ப எங்களின் கிடுகு வேலி இருக்கட்டும் . அவன் போன் செய்தால் எங்கள் முடிவை அவனுக்கு சொல்லுறன்.”
“உது நல்ல முடிவு. உதை கெதியிலை செய்யும்”. சின்னப்பு மன திருப்திடன் சொன்னார் .