சாவைப் படைத்த எழுத்தாளன்

‘என்னால வர முடியும்னு தோணலைப்பா!’ அவர் சன்னமாகச் சொன்னார், சிறுமையைத் தரித்தவராகத் தெரிந்தார். ‘அந்த ஜன்னல் வழியே நான் பார்த்தால், எனக்குத் தெரியறதெல்லாம் இரண்டு பரிமாணத்தில்தான் இருக்கிறது.’
நாங்கள் திரும்பி, இருவருமாக அங்கே பார்த்தோம். வெளியே ஒளி மங்கிக் கொண்டிருந்தது. ‘அது கூட அத்தனை கிடையாது,’ என்றார் அவர். ‘எனக்கு ரெண்டே வாக்கியங்கள் தான் கிடைக்கிறது. “வெளியே குளிராக, சாம்பல் நிறமாக, தட்டையாகத் தெரிந்தது.” அடுத்து, “சில இலைகள் ஆடி அசைந்து அந்த மரத்திலிருந்து மெதுவாகக் கீழே அந்த நடைபாதை மீது விழுந்தன, அவை பழுப்பாகவும், தங்க நிறமாகவும், செத்துப் போனதாகவும் இருந்தன.” அவ்வளவுதான்.’