தமிழில்: வே. சுவேக்பாலா Ph.D
வைரஸ் இயற்கையிலிருந்தா? அல்லது மனிதனின் தவறால் தோன்றியதா?
நியூயார்க்கர் என்ற அமெரிக்க இதழில் (12/10/2021) வந்த கட்டுரையின் தமிழாக்கம் – புரிதலுக்காக மிகச்சிறிய அளவில் (கருத்தாக்கம் மாறாமல்) மாறுதல் செய்யப் பெற்றுள்ளது.
2019 ஆம் ஆண்டின் இறுதியில், முதன்முதலில் கொரோனா வைரஸ் தோன்றியதாக அறிவிக்கப்பட்டது. நாற்பத்தைந்து லட்சம் மக்கள் போல, இதுவரை இறந்துள்ளனர், உயிர் பிழைத்தோரிலும் எண்ணற்றோர் பின்விளைவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர், பற்பல நாடுகளின் முழு பொருளாதாரமும் தலைகீழானது, உலகெங்கும் கல்விக் கூடங்கள் மூடப்பட்டன. இதெல்லாம் ஏன் நடந்தன?
வைரஸ் ஏதோ ஒரு விலங்கிலிருந்து முதல் மனிதனுக்கு (host- ஊட்டுயிர்), அதாவது நோயாளி பூஜ்ஜியத்திற்கு தாவியதா? அல்லது, சிலர் சந்தேகிப்பது போல, மத்திய சீனாவில் பதினோரு மில்லியன் மக்கள் வசிக்கும் வுஹானில் ஒரு ஆய்வக விபத்தின் விளைவாக (அல்லது சாதாரணமாக) பேரழிவு ஏற்பட்டதா?

கிறிஸ்டியன் (அந்தர்பல்டி) ஆண்டர்சன்
சான்டியாகோவில் உள்ள ஸ்கிரிப்ஸ் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின், தொற்று நோய் நிபுணர் கிறிஸ்டியன் ஆண்டர்சன், 2020 ஜனவரியிலிருந்து, இவ்வைரஸ் பரவும் தீவிரம் பயமுறுத்துவதாக மட்டுமல்லாமல் அசாதாரணமாகவும் இருந்ததைக் கண்டு, அதைக் கண்காணிக்கத் தொடங்கினார். தெற்கு சீனாவில் பொதுவாக வெளவால்களில் காணப்படும் இந்த வைரஸ், கொரோனா இனத்தைச் சேர்ந்தது என்று சீன விஞ்ஞானிகள் ஏற்கனவே நிறுவியிருந்தனர். இதன் மரபணுவின் எண்பது சதவிகிதம் முதல் சார்ஸ் (SARS-1)-உடன் ஒத்திருந்திருந்தது. மேலும் மற்றொரு வவ்வால் கொரோனா வைரஸான மெர்ஸுடன் (MERS) பங்காளி என்ற அளவில் தொடர்புடையது. எவ்வாறாயினும், இந்த புதிய வைரஸ் மிக விரைவாகப் பரவி, ஜனவரி (2020) மாத இறுதிக்குள் குறைந்தது இருபத்தி ஆறு நாடுகளை சென்றடைந்தது. “பெருந்தொற்றுக்கென்றே அளவெடுத்துச் செய்தால் போல் இருந்ததாகத் தனக்குத் தோன்றியது” என்று ஆண்டர்சன் கூறினார். காட்டுவிலங்குகளில் காணப்படும் பெரும்பாலான வைரஸ்களில், சில கொடியவை என்றாலும், பரவுவதில் அவ்வளவு தீவிரமானவை அல்ல. அவை இன்னும் விலங்குகளுக்கு மட்டுமே நோயினை கொடுக்கும் வைரஸ்கள். “இது கிட்டத்தட்ட முதல் நாளிலிருந்து, ஒரு மனித-வைரஸ் போல் தோன்றியது” என்று மேலும் ஆண்டர்சன் கூறினார்.
டென்மார்க்கைச் சேர்ந்த ஆண்டர்சன், ஆர்கஸில் உள்ள தபால் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, மூலக்கூறு உயிரியலைப் படிக்கலாம் என்று முடிவு செய்தார். (நமது ஊரில் தலைகீழாக நடக்கும்) அவரது வாழ்க்கை மேற்கு நைல் வைரஸ், எபோலா மற்றும் ஜிகா ஆகிய வைரஸ்களின், தோற்றம் பற்றிய ஆராய்ச்சிகளுடன் தொடங்கியது. கோவிட்-19 உடைய பெருந்தொற்று தொடங்கிய பிறகு, Sars-CoV-2 வைரஸின் தோற்றம் குறித்து தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான நிறுவனத்தின் (CDC -இது அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அமெரிக்க அரசின் நிறுவனம்) இயக்குனர் அந்தோனி ஃபௌச்சி, கலந்து ஆலோசனை பெற்ற விஞ்ஞானிகளில் ஆண்டர்சனும் ஒருவர். ஜனவரி 31, 2020 அன்று, BuzzFeed News மூலம் பெறப்பட்ட ஒரு மின்னஞ்சலின்படி, ஆண்டர்சன், அந்தோனி ஃபௌச்சி மற்றும் சில ஆராய்சியாளர்களுக்கு, SARS-CoV-2-வின் மரபணுக்கள், நாம் வரையறுத்துள்ள “பரிணாமக் கோட்பாட்டின் வரையரைக்குள் பொருந்தாது” என்று எழுதினார். மேலும், ஆண்டர்சன் சார்ஸ்-கோவி-2 மரபணுவின் “ஒரு சிறிய பகுதி” “அசாதாரண அம்சங்களை” கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார். அவ்வம்சங்கள்; SARS-CoV-2-வின் ஸ்பைக் புரதம்-ஒரு உயிர் செல் மீது (உ.ம். நம் உடலில் ஒட்டும் பொழுது) படையெடுக்க, ஒரு கொரோனா வைரஸ் பயன்படுத்தும் மனித செல் மேற்பரப்பு புரதத்தின், முக்கியமான ACE2 எனப்படும் மனித-செல் ஏற்பியுடன் இறுக்கமாக பிணைக்கக்கூடியதாக தோன்றியது. “இது மனித செல்களை பாதிப்பதில் இவ்வைரஸிற்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.”
மற்றொரு முக்கியமான குறிப்பிடத்தக்க பண்பு, ஃப்யூரின் பிளவு தளம் எனப்படும் பன்னிரண்டு நியூக்ளியோடைட்களின் ஓர் அரிய செருகல் இந்த சார்ஸ்-கோவி-2-வில் காணப்படுகிறது.
இதனால் இந்த வைரஸ் பரவுதலின் வேகம் அதிகரிக்கலாம், மேலும் விலங்கினங்களிடமிருந்து மனிதருக்கு தாவுதலுக்கு (Zoonosis) உள்ள தடுப்புகளைக் குறைக்கலாம்; அதாவது வைரஸ் நேரிடையாக வவ்வாலிருந்து மனிதர்களுக்கு மிக எளிதாகத் தாவ அனுமதிக்கிறது. ஒருவர் மிகவும் நெருக்கமாக ஆய்வு செய்யும் பொழுது “இச்சில வித்தியாசமான அம்சங்கள் (சாத்தியமானவை) வடிவமைக்கப்பட்டிருப்பதைக் காணமுடியும் என்றார். பகுப்பாய்வு செய்ய இன்னும் நிறைய தரவு உள்ளது, அதனால் அந்த கருத்துக்கள் மேலும் மாறலாம்,” என்று தொடர்ந்தார்.
ஒரு நாள் கழித்து, ஆண்டர்சன் அந்தோணி ஃபௌச்சி மற்றும் பிரான்சிஸ் காலின்ஸ் (தேசிய மருத்துவ நிறுவனங்களின் இயக்குநர்) உள்ளிட்ட முக்கிய வைராலஜிஸ்டுகள் மற்றும் (அமெரிக்க) அரசு அதிகாரிகளுடன் ஒரு கூட்டு அழைப்பில் பேசும் பொழுது, ஆண்டர்சன் SARS-CoV-2-உடைய மரபணுவின் குறிப்பிடத்தக்க அம்சங்களின் சுருக்கத்தை முன்வைத்தார், மேலும் “இது அசாதாரணமானது என்று நாங்கள் நினைக்கிறோமா?” என்று பங்கேற்பாளர்களிடையே கருத்துக்கள் விவதிக்கப்பட்டதை, ஃபௌச்சி நினைவு கூர்ந்தார். “துறை சார்ந்த அறிஞர்கள், இந்த வைரசானது மாற்றப்பட்டதாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள், ஏனென்றால் இது நீங்கள் வழக்கமாக பார்க்கும் ஒன்று அல்ல,” என்று அவர்கள் விவாதித்துள்ளனர். ஆனால் இதுபோலவே வேறு சில அறிஞர்களும் இது இயற்கையாகவே காணப்படும் ஒன்றாக (கூட) இருப்பதாகக் கூறியதாகவும் சொன்னார். இதெல்லாம் நடந்தது 2020-ன் ஜனவரியில்.
இச்சந்திப்பைப் பற்றிய சில கருத்துகள், அழைப்புக்குப் பிறகு குழுவினருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. ஆனால் மூன்று நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி 4 (2020) அன்று, ஆண்டர்சனின் முன்னோக்கு (perspective) மாறியது. “இந்த நேரத்தில் பரவி வரும் முக்கிய கிறுக்குக் கோட்பாடுகள், இந்த வைரஸை எப்படியாவது உள்நோக்கத்துடன் ஆய்வகத்தில் வடிவமைக்கப்பட்டது என்று நிருபிக்க முனைகின்றன. ஆனால் அவ்வாறு தத்ரூபமாக நிருபிக்க எந்தவிதமான முகாந்திரமும் இல்லை,” என்று, மற்றொரு புலனாய்வுக் குழுவிற்கு (Right to Know, USA) மின்னஞ்சலில் எழுதினார்.
மார்ச் மாதத்திற்குள் (2020), ஆண்டர்சனும் அவரது சில சகாக்களும் நேச்சர் சஞ்சிகையில் வெளியிட ஒரு கடிதத்தைப் பூர்த்தி செய்தனர் (இவ்விதழில் வெளியிட்டால் உலகம் முழுவதும் அது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும்), சார்ஸ்-கோவி -2 இயற்கையாகவே ஒரு வவ்வாலிருந்து இருந்து தாவியது (மனிதனுக்கு பரவியது; spill over). அடையாளம் காணப்பெறாத ஒரு மனிதனில் ஒரு பெருந்தொற்றுநோய் வைரஸாக பரிணமித்தது. “SARS-CoV-2 ஒரு ஆய்வகத்தில் வேண்டுமென்றே உருவாக்கப்பெற்ற/கையாளப்பட்ட வைரஸ் அல்ல என்பதை எங்கள் பகுப்பாய்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன,” என்று அவர்கள் எழுதினர். அடுத்தடுத்த மாதங்களில் இக்கருத்துக்கள் உலகெங்கும் மிகவும் செல்வாக்கு செலுத்தின. இந்த வைரஸ் பெரும்பாலும் இயற்கையான விலங்குவழி வந்ததாக (ஜூனோடிக் ஸ்பில்ஓவரால்), கருத்தொருமித்த அறிவியல் கருத்தாக, பல முக்கிய ஊடகங்களில் உலகம் முழுவதும் எதிரொலித்தது.
எங்கே என் வைரஸ்?
பெருந்தொற்று வெடித்துப் பெரிதாகப் பரவ ஆரம்பித்தபின்பு, இயற்கை-தோற்ற (spill-over) விளக்கத்தினை அனைவரும் நம்பவில்லை. ஒரு ஜூனோடிக் ஸ்பில்ஓவரிற்கு (விலங்கிலிருந்து மனிதனுக்குத் தாவும் இயற்கையான தொற்று), அதாவது, வெளவால்களிலிருந்து மனிதர்களுக்குத் தாவவும் இடையில் ஒரு இடைநிலை விலங்கு தேவைப்படலாம், ஆனால் அத்தகைய விலங்கினங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. ஆரம்பத்தில், வுஹானில் மீன்-உற்பத்தி மற்றும் இறைச்சி விற்கும் ஹுவானன் சந்தை, ஆகியவை சார்ஸ்-CoV-2-இன் மூலமாக இருக்கலாமென்று கருதப்பட்டது. ஏனெனில், நோயாளி பூஜ்யம் தவிர, ஆரம்பகட்ட நூற்று எழுபத்து நான்கு நோயாளிகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு நோயாளிகள் ஹுவானன் சந்தையுடன் தொடர்புடையவர்கள். சீன அதிகாரிகள், ‘நோயாளி பூஜ்யம் ஒரு நடுத்தர வயது கணக்காளர், குடும்பப்பெயர் சென், டிசம்பர் 8 ஆம் தேதி அறிகுறிகளுடன் காணப்பட்டார், பொதுவாக ஆற்றின் குறுக்கே ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்தார்,’ என்றனர். 2020 மே மாதத்தில், சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனர் ஜார்ஜ் ஃபூ காவ் கீழ்கண்டவாறு கூறினார், “முதலில், கடல் உணவு சந்தையில் வைரஸ் இருக்கலாம் என்று நாங்கள் கருதினோம், ஆனால் நாவல் கொரோனா வைரஸ் நீண்ட காலத்திற்கு முன்பே இங்கு இருந்திருக்கலாம்,” என்று கூறினார்.
இருக்கிறது, ஆனால் இல்லை என்ற அமெரிக்க உளவுத்துறை
ஆனால், மற்றொரு கோட்பாடு இந்த நேரத்தில் தோற்றம் கொண்டது (ஆய்வக-கசிவு வழி தொற்று என்பது இது). இக்கோட்பாட்டினை உருவாக்கியவர்களில், பலர் விஞ்ஞானிகள், சிலர் வியக்கத்தக்க இணைய சும்பன்கள் (They too have doctorate, as per Monhali Rahalkar, a former member of DRASTIC). வுஹான் என்ற நகரத்தில் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி (WIV) உள்ளது, இது, முதல் சார்ஸ் தொற்றுநோயிலிருந்து (SARS-1 pandemic), உலகின் மிகப்பெரிய வவ்வால் கொரோனா வைரஸ்களின் (மாதிரி) தொகுப்பினை ஆராய்ச்சிக்காக குவித்து வைத்துள்ளது; சுமார் பத்தொன்பதாயிரம் மாதிரிகள் அதன் ஆய்வகங்களில் சேமிக்கப்பட்டுள்ளன. Whuhan Institute of Virology (WIV)-ன் விஞ்ஞானிகள் வைரஸ் சர்வதேச ஆராய்ச்சிக் குழுக்களுடன் நெருக்கமாக ஒத்துழைத்து, முன்னணி ஆராய்ச்சி இதழ்களில் கட்டுரைகள் வெளியிட்டு, அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து நூறாயிரக்கணக்கான டாலர்கள் ஆராய்ச்சி நிதியாகப் பெற்றனர். WIV நிறுவனம் வுஹான் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்துடன் (Whuhan-CDC) அடிக்கடி இணைந்து செயல்படும், இந்த நோய் கட்டுப்பாட்டு மையம் 2019 ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில், அதன் ஆய்வகத்தை ஹுவானன் சந்தைக்கு அருகில் ஒரு புதிய இடத்திற்கு மாற்றியது.
வுஹானில் ஒரு ஆய்வக விபத்தில் இருந்து தொற்றுநோய் தொடங்கியிருக்கலாம் என்று ஒரு புதிய கருத்தை ஆதரிக்கச் சூழ்நிலை சான்றுகள் 2020-இன் பிற்பகுதியில் குவியத் தொடங்கின. WIV-யிலிருந்து இதுவரை செய்த கொரோனா வைரஸ்களின் மரபணு பகுப்பாய்வு (genome sequencing) ஆன்லைன் தரவு தொகுப்புகள் 2019 Oct முதல் உலகின் கண்களிலிருந்து திடீரென மறைந்துவிட்டன. முந்தைய (சந்தேகத்திற்குரிய) நோய்த்தொற்று பற்றிய தகவல்கள் மறைக்கப்பட்டன. WIV ஆராய்ச்சியாளர்கள் கட்டமைக்கப் பெற்ற (Engineered) வைரஸ்களுடன் சோதனைகளை நடத்தியிருந்தனர். வுஹானில் வைரஸ் தோன்றுவது “ஒரு பைத்தியக்காரத் தனமான தற்செயல் நிகழ்வு” என்பதை ஆண்டர்சன் கூட ஒப்புக்கொண்டார். மே, 2021-இல், முக்கிய விஞ்ஞானிகளின் குழு, அறிவியல் (Science) என்ற மேதமையான ஆய்வு இதழில் ஒரு கடிதத்தை வெளியிட்டது, அது, ஆய்வக-கசிவு கருதுகோளை தீவிரமாக எடுத்துக் கொண்டு, விசாரணைக்கு அழைப்பு விடுத்தது. அமெரிக்க உளவுத்துறை ஆதாரங்களில் இருந்து மூன்று WIV ஆராய்ச்சியாளர்கள் 2019 நவம்பரில் கோவிட்-19 போன்ற அறிகுறிகளால் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனை கவனிப்பை நாடியுள்ளனர் என்பது புலனாகியது.
இவ்விளைவாக, ஜனாதிபதி ஜோ பைடன் பெருந்தொற்றின் ஆரம்பத் தோற்றம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார். “ஒரு சீரிய முடிவுக்கு நெருங்கக் கூடிய தகவல்களைச் சேகரிக்கும் முயற்சிகளை இரட்டிப்பாக்குமாறு அமெரிக்க உளவுத்துறையினை கேட்டுக்கொண்டார்.” உயிரியல் வழியே பேரழிவுக்கான ஆயுதங்கள் பரவுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட தேசிய பரவல் எதிர்ப்பு மையம் (The National Counter Proliferation Center) இம் முயற்சியை எளிதாக்குவதற்காக முடுக்கிவிடப்பட்டது. ஆகஸ்டில் (2021) வெளியிடப்பட்ட விசாரணை வழி கண்டுபிடிப்புகளின் வகைப்படுத்தப்படாத (வகைப்படுத்தப்பட்ட, ரகசிய கோப்புகளில் என்ன இருக்கிறதென்று யாரும் கேட்ககூடாது) சுருக்கத்தின்படி, வைரஸ் ஒரு உயிரியல் ஆயுதமாக உருவாக்கப்படவில்லை. மேலும் இது, ”நவம்பர் 2019-க்குப் பிறகு மனிதர்களைப் பாதித்ததாக அறியப்பட்ட முதல் தொற்றுக் கொத்து (Cluster) டிசம்பரில் சீனாவின் வுஹானில் எழுந்த கோவிட்-19 மட்டுமே,” என்று ஒரு ‘தெளிவான’ அறிக்கையினை சமர்ப்பித்தது.
ஆனால் அனைத்து அமெரிக்க கண்காணிப்பு நிறுவனங்களும் நோயின் தோற்றம் பற்றி கொடுக்கப்பட்ட இரு வகைக் கருதுகோள்களும் “நம்பத்தகுந்தவை” என்று ஒப்புக் கொண்டன. முதலாவது, “ஒரு பாதிக்கப்பட்ட விலங்கில் வைரசின் இயற்கையான வெளிப்பாடு,” இரண்டாவது, ஒரு ஆய்வகத்துடன் தொடர்புடைய நோக்கமுடைய/உள்நோக்கமற்ற வைரஸ் வெளியேற்றம்.”
கைவிடப்பெற்ற சுரங்கமும், ஷி-ஜெங்லியும்
2012 வசந்த காலத்தில், சீனாவின் யுன்னான் மாநிலத்தில், டாங்குவான் நகருக்கு அருகிலுள்ள கைவிடப்பட்ட ஒரு செப்பு சுரங்கத்திலிருந்து வவ்வால் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஆறு பேர் கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் குன்மிங்கில் உள்ள ஒரு பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், இது நான்கு பேரின் இரத்த மாதிரிகளை WIV-இன் தொற்று நோயின் மையத்தின் (Emerging Infectious Diseases) தலைவர் ஷி ஜெங்லியின் ஆய்வகத்திற்கு அனுப்பியது. ஷி, சீனாவின் மிகவும் பிரபலமான வவ்வால் கொரோனா வைரஸ் ஆராய்ச்சியாளர் ஆவார். பல வருடங்களுக்கு முன்பு, குதிரைலாட (உருவுள்ள) வௌவால் (horseshoe bat) எனப்படும் ஒரு வகையான வவ்வால்கள், ஏராளமான சார்ஸ் தொடர்பான வைரஸ்களுக்கான இயற்கையான தேக்கமாக செயல்படுவதைக் கண்டறிந்த சர்வதேச அணியில் இருந்தார். ஷியின் குழுவினர் முன்பு கண்டுபிடித்த, பரவச் சாத்தியம் கொண்ட ஜூனோடிக் நோய்க்கிருமிகளுக்காக (விலங்கிலிருந்து பரவ வாய்ப்புள்ள) தொழிலாளர்களின் நிணநீரைச் (Serum) சோதித்த பொழுது, அவ்வைரஸ்கள் அவர்கள் உடலில் இல்லை என்றாகியது. இதனிடையே அவர்களில் மூன்று தொழிலாளர்கள் இந்நோயினால் இறந்தனர்.
2012 மற்றும் 2015 க்கு இடையில், ஷி மற்றும் அவரது குழுவினர் வுஹானிலிருந்து சுமார் ஆயிரம் மைல் தொலைவில் உள்ள டோங்குவான் சுரங்கத்திற்கு தவறாமல் பயணம் செய்தனர். மாலை வேளையில், ஆராய்ச்சியாளர்கள் வவ்வால் குகைகளின் நுழைவாயிலில் ஒரு வலையை கட்டிக்கொண்டு, அந்தி வர காத்திருந்தனர். ஆறு வகையான குதிரைலாட மற்றும் வெஸ்பர் வெளவால்களிலிருந்து தொண்டை மற்றும் மலத்தின் மாதிரிகள் சேகரிக்கப் பட்டன. இறுதியில், ஷியின் குழு 1,300 க்கும் மேற்பட்ட மாதிரிகளை தங்கள் ஆய்வகத்திற்கு கொண்டு வந்தது.
2016 ஆம் ஆண்டில், ஷியும் அவரது சகாக்களும் இந்த வேலைகளில் கண்டறிந்தவற்றை, ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிட்டனர். பல வெளவால்கள் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு விதமான கொரோனா வைரஸ்களால் தாக்கப்பட்டிருப்பதை (அல்லது வைரஸ் வாழுமிடமாக இருப்பதை ) கண்டறிந்தனர். வெளவால்கள் எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் காலனிகளில் குவிந்திருப்பதால், அவை வைரஸ்களை முடிவில்லாமல், (அவைகளுக்குள் மட்டுமே) பரப்புகின்றன, இது பல்வேறு வைரஸ்களை மீண்டும் இணைக்க வழி வகுக்கிறது. இச்செயல், ஒரு பரிணாம வளர்ச்சித் தூண்டலினால் புதிய கொரோனா வைரஸ் விகாரங்களை (natural variants virus) உருவாக்குகிறது. இறுதியில், டோங்குவான் சுரங்கத்திலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து சார்ஸ் தொடர்பான கொரோனா வைரஸ்களின் (9 மாதிரிகள்) மரபணு்ப பகுப்பாய்வினை, ஷியின் ஆய்வகம் வரிசைப்படுத்தி அவர்களின் ஆன்லைன் தரவுகளில் சேமிக்கின்றது. இத்தரவுகள்தான் காணாமல் அடிக்கப்பட்டிருந்தன.

பெருந்தொற்று ஆரம்பம்
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2019 ஆம் ஆண்டின் இறுதி நாட்களில், ஷி வுஹானில் அமைதியாகப் பரவிக் கொண்டிருக்கும் ஒரு புதிய வைரஸால் (இதுதான் சார்ஸ்-கோவி-2 என்று WHO-வால் வகைப்படுத்தப்பட்டது). பாதிக்கப்பட்ட ஏழு நோயாளிகளிடமிருந்து நுரையீரல் மாதிரிகளைப் பெற்றார். ஷி இம்மாதிரிகளில் உள்ள வைரஸ்களின் மரபணுக்களை பகுத்தாய்கிறார்.
மரபணுக்களை வரிசைப்படுத்தியவுடன், இப்புதிய வைரஸினை அடையாளம் காணவேண்டி, ஷியும் அவருடைய சகாக்களும், இதன் மரபணு வரிசை எத்தகைய மற்றொரு வைரசின் மரபணு வரிசையோடு ஒத்து போகின்றது என்று கண்டறிய WIV-வின் பழைய தரவு தளங்களை ஆராய்கின்றனர். இம்முடிவுகளை அடிப்படையாக கொண்டு பிப்ரவரி, 2020 இல் நேச்சர் சஞ்சிகையில் வெளியிட்ட ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையின்படி, அவர் கண்டறிந்த நெருங்கிய உறவினம், சார்ஸ்-கோவி-2 க்கு நிகரான தொண்ணூறு-ஆறு சதவிகிதம் ஒத்துப்போகக் கூடிய மற்றொரு வவ்வால் கொரோனா வைரஸ். ஷி, அதை ராடிஜி 13 (RaTG13). என்று பெயரிடுகிறார். “Ra” என்பது வவ்வால் இனங்கள், ரினோலோபஸ் அஃபினிஸ் அல்லது இடைநிலை குதிரைலாட வவ்வாலைக் குறிக்கிறது; “TG” என்பது டோங்குவான் என்ற இடத்தைக் குறிக்கிறது. மற்றும் “13” என்பது 2013 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதைச் சுட்டுகிறது.
இந்திய ஆராய்ச்சியாளர்கள்
சில மாதங்களுக்குள், புனே, இந்தியாவில் உள்ள, மோனாலி ரஹல்கர் மற்றும் ராகுல் பாஹுலிகர் என்ற கருத்தொருமித்த கணவன், மனைவிக் குழு (இருவருமே ஜெர்மனியில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்கள்), ஷி தனது 2020-ஆராய்ச்சிக் கட்டுரையில் கவனிக்கத் தவறிய, (அல்லது வேண்டுமென்றே சொல்லாமல் விட்ட) ஒரு ஆச்சரியமான இணைப்பைக் கண்டுபிடித்தனர் – அவர்கள் அச்சுப் பிரசுரத்துக்கு முன்னால் ஆன்லைனில் வெளியிட்ட ஆய்விதழ் கட்டுரை (ப்ரிப்ரிண்ட் ஜர்னல்) ஒன்றில், இவர்களின் மரபணு பகுப்பாய்வின்படி, இந்த RaTG13 வைரசின் மரபணு, ஷி தனது 2016-ல் வெளியிட்ட மற்றொரு ஆராய்ச்சி கட்டுரையில் விவரித்திருந்த வேறொரு சார்ஸ் போன்ற கொரோனா வைரஸ் மாதிரியை “100% ஒத்ததாக” இருந்தது எனத் தெரிவித்தனர்.
ஷி தனது 2016 ஆய்வுக்கட்டுரையில் (கைவிடப்பட்ட மினிஷாஃப்ட் சுரங்கத்தில் எடுக்கப்பெற்ற மாதிரிகளிலிருந்து பிரித்து எடுக்கப்பெற்ற) அந்த வைரசிற்கு வேறு பெயர் கொடுத்திருந்தார்: RaBtCoV/4991. விந்தை என்னவென்றால், ஷியின் எந்தக் கட்டுரையிலும், விஞ்ஞானிகள் முதலில் கைவிடப்பட்ட மினிஷாஃப்டுக்கு வழிவகுத்த நோய்வாய்ப்பட்ட தொழிலாளர்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை.
சுருக்கமாக, 2019-ல் உருவானதாக கருதப்படும் SARS-CoV-2-வின் 96% நெருங்கிய சொந்தக்கார/பாசக்கார வைரஸினை ஷி, 2016-ம் ஆண்டே கண்டறிந்திருந்தாலும், பெருந்தொற்று காலம் வரை (2020 வரை), ஏதோ காரணங்களால் எங்கேயும், அதாவது 2020 ஆராய்ச்சி கட்டுரையிலும் கூட சொல்லாமல் இருந்திருக்கிறார். மேலும் இத்தகைய வகையான வைரஸ்களால் ஆறு பேர் மர்மமாக இறந்ததும், ((சிறிய அளவிலான தொற்று)), அங்கிருந்து மாதிரிகள் எடுக்கப்படுவதும் யாருக்கும் தெரியப்படுத்தப்படவில்லை.)
@TheSeeker268 என்ற ஒரு ட்விட்டர் பயனர், ரஹல்கர் மற்றும் பாஹூலிகர் ஆகியோருக்கு மின்னஞ்சல் அனுப்பினார், இது 2013-ம் ஆண்டில் குன்மிங் மருத்துவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ மாணவர் ஒருவர், (வுஹான் நோய்தடுப்புத் துறையின் இயக்குநரின் வழிகாட்டுதலின்படி), மேற்படி ஆறு தொழிலாளர்களின் நோய்கள் பற்றிச் செய்த முதுநிலை ஆய்வறிக்கை ஆகும். இதில், ஆறு நோயாளிகளுக்கும் கோவிட்-19-க்கான சிகிச்சையைப் போலவே, ஆன்டிவைரல்ஸ், ஆன்டிபயாடிக்குகள் மற்றும் பூஞ்சை காளான் மருந்துகளுடன் சிகிச்சை கொடுக்கப்பட்டிருந்ததாகத் தெரிந்தது. ஒரு முக்கிய நுரையீரல் நிபுணர் இரண்டு நோயாளிகளுடன் ஆலோசனை செய்திருக்கிறார். மேலும் அவர்களுக்கு வைரஸ் நிமோனியா, பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருந்தது. சுரங்கத்தில் உள்ள குதிரைலாட வவ்வால்களிலிருந்து கசிந்த சார்ஸ் போன்ற கொரோனா வைரஸ்களால் நிமோனியா ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவ மாணவர் முடிவு செய்திருந்தார்.
அடுத்து (2016-இல்), சீனாவின் சி.டி.சி., இயக்குநர் காவோவால் மேற்பார்வையிடப்பட்ட ஒரு மாணவரின் பிஎச்டி ஆய்வில் இருந்து கிட்டும் மற்றொரு ஆய்வறிக்கையில், (இது நாம் முன் பார்த்த ‘TheSeeker268’ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது), WIV-ஆல் பரிசோதிக்கப்பட்ட நான்கு நோயாளிகளின் இரத்த மாதிரிகள், சார்ஸ் தொடர்பான கொரோனா வைரஸ்களுக்கு ஆன்டிபாடிகளைக் கொண்டிருந்தன. இது முந்தைய தொற்றுநோயைக் குறிக்கிறது என்று இயக்குனர் கூறியிருந்தார்.
அந்த வைரஸ்தான் இந்த வைரஸ்
இந்த கண்டுபிடிப்புகள் வெளியான பிறகு, 2020 நவம்பரில் ஷி, தான் 2020-பிப்ரவரியில் நேச்சர் இதழில் வெளியிட்ட ஆய்வறிக்கையின் ஒரு தொடர்ச்சி (Addendum) என்று ஓன்றை, நேச்சரில் வெளியிட்டார். அதில், RaTG13-க்கும் சுரங்கத்திற்குமான தொடர்பை ஒப்புக் கொண்டார். “எங்கள் ஆய்வகத்தில் தொழில்நுட்பமும் திறனும் மேம்பட்டிருப்பதால்” 2018 இல் தனது ஆய்வகம் முழுமையாக RaTG13-ன் மரபணுவினை வரிசைப்படுத்தியதாக ஷி தெளிவுபடுத்தினார். (sample ID4991; renamed RaTG13 in our Article) தொழிலாளர்களின் சீரம் மாதிரிகளில் தனது ஆய்வகம் நடத்திய சோதனைகள் பற்றிய விவரங்களையும் அவர் வழங்கினார், மேலும் ஆய்வகம் சமீபத்தில் மாதிரிகளை மீண்டும் பரிசோதித்ததாகக் கூறினார், இந்த முறை சார்ஸ்-கோவி-2 க்கு அவை எதிர்மறையாக இருந்தன. ஸார்ஸ் போன்ற கொரோனா வைரஸுக்கு ஆன்டிபாடிகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். சுருக்கமாக, சார்ஸ்-கோவி–2-விற்கு மிக நெருக்கமான ஒரு வைரஸினை-2016-லேயே கண்டறிந்து ஆய்வகத்தில் வைத்திருந்திருக்கிறார்கள். அதனை வைத்து என்ன செய்ய உத்தேசித்திருந்தார்கள் என்று இக்கட்டுரையில் பின்னால் பார்க்கப் போகின்றோம்.
தொழிலாளர்கள் சார்ஸ்-கோவி-2-வால் பாதிக்கப்படவில்லை, அல்லது எங்களிடம் கோவிட்-19 இல்லை. ஆனால் சில விஞ்ஞானிகள் மத்தியில், வெளிப்படைத்தன்மை இல்லாதது கேள்விகளை எழுப்பியது. WIV போன்ற ஆய்வகங்கள் அச்சுறுத்தலாக இருக்கும் வைரஸ்கள் பற்றி உலகை எச்சரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாங்குவானில், உயிருக்கு ஆபத்தான நோயின் ஒரு சிறிய தொற்று ஏற்பட்டது, இது சார்ஸ் போல தோற்றமளிக்கிறது, ஆனால் சார்ஸ் அல்ல, சார்ஸ் போன்ற வவ்வால் கொரோனா வைரஸ்கள் நிறைந்த ஒரு சுரங்கத்தில் கண்டறியப்பட்டுள்ளது. WIV, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களைப் பற்றி எதுவும் கூறவில்லை. இவை அவர் அறிக்கையின் சாரம்.
சுயாதீன ஆராய்ச்சியாளர்கள் தங்களின் சுயமுயற்சியினால் இவ்விணைப்பிணை கண்டறியும் வரை, அச்சுரங்கத் தொழிலாளர்களின் நோய்களுக்கு இப்பெருந்தொற்றுடன் நேரடியாக சம்பந்தம் இருந்தபோதிலும், எத்தகவல்களும் வெளியே வரவில்லை.
@TheSeeker268 என்ற ட்விட்டர் பயனர், கோவிட்-19 தடங்களை விசாரிக்கும் (கடுமையான அல்லது பரவலாக்கப்பட்ட தீவிர தன்னாட்சி தேடுதல், DRASTIC; Decentralized Radical Autonomous Search Team Investigating covid-19) தன்னார்வ குழுவில் உறுப்பினராக உள்ளார். இக்குழு ட்விட்டரில் உருவானது மற்றும் ஆய்வக-கசிவு கோட்பாட்டின் தரவுகளை மிகவும் தீவிரமாக தேடும் குழுவாகும். (ரஹல்கர் மற்றும் ராகுல் இக்குழுவிலிருந்து சமீபத்தில் வெளியேறியிருக்கிறாரகள்). WIV, பற்றிய ஒரு ட்வீட்டில். @TheSeeker268 சுருக்கமாக எழுதினார், ”அவர்களின் சுரங்க பயணங்களின் நோக்கம் மற்றும் அவர்கள் மாதிரி செய்த அனைத்து CoV-களையும் பற்றி அவர்கள் எங்கேயும் கூறவில்லை.” அல்லது மிகக்குறைவான சுரங்க மாதிரிகளை மட்டும் குறிப்பிட்டுள்ளார்கள், என்கிறார்.
டோங்குவான் சுரங்கத்தைப் பற்றி தகவல்களை மறைக்க முயன்றதை ஷி உறுதியாக மறுத்துள்ளார். “நான் குன்மிங் மருத்துவமனை பல்கலைக்கழக மாணவரின் முதுநிலை ஆய்வறிக்கையை பதிவிறக்கம் செய்து இப்போதுதான் படித்தேன்,” என்று ஷி பிபிசியிடம் கூறினார். கடந்த ஆண்டு சயின்டிஃபிக் அமெரிக்கனுக்கு அளித்த பேட்டியில், சுரங்கத் தொழிலாளர்களை ஒரு பூஞ்சை நோய்க்கிருமி மட்டுமே, நோய்வாய்ப்படுத்தியது என்று கூறினார். “வவ்வால் கழிவுகள் பூஞ்சையால் மூடப்பட்டிருக்கும், குகையை சிதறடித்தது,” என்று ஷி கூறினார். பூஞ்சை தொற்று நிச்சயமாக தொழிலாளர்களுக்கு ஆபத்து. ஆனால் சில கோவிட் -19 நோயாளிகளில் காணப்படுவது போன்ற நிமோனியா காய்ச்சல்களில் அவை பொதுவான இரண்டாம் நிலை தொற்று ஆகும். லின்ஃபா வாங் என்பவர் டியூக்-தேசிய சிங்கப்பூர் பல்கலைகழத்திலுள்ள, புதிதாக திடீரென வரும் தொற்று நோய்களுக்கான திட்டத்தின் இயக்குனர். உலகின் முன்னணி வவ்வால்-வைரஸ் நிபுணர்களில் ஒன்றான இவர், ஷியுடன் அவரின் ஆராய்ச்சிகளில் கூட்டுப்பணி (Collaborator) செய்பவர். 2012 இல் தொழிலாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை பகுப்பாய்வு செய்ய இவர் ஷிக்கு உதவினார், மேலும் ஷி- தரவுகளை ரகசியமாக வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.
ஆர்வத்துடன் அயராது உழைக்கும், DRASTIC
DRASTIC குழுவானது WIV-உடன் தொடர்புடைய மற்றொரு மர்மத்தையும் வெளிப்படுத்தியது. WIV, பொதுவில் வைத்திருந்த அனைத்து வவ்வால் சார்ஸ் வைரஸ்களின் மரபணு பகுப்பாய்வு தரவுத்தளம் செப்டம்பர், 2019-லிருந்து அணுக முடியாததாக இருந்தது. இது தோங்குவானின் வரிசைகள் உட்பட சுமார் இருபத்தி இரண்டாயிரம் (வைரஸ்) மாதிரிகளின் மரபணு பகுப்பாய்வின் பதிவுகளைக் கொண்டிருந்தது. பிபிசி இது பற்றி கேட்டபோது, ஷி WIV-விடம் “மறைக்க எதுவும் இல்லை” மற்றும் அதன் வலைத்தளம் மற்றும் ஊழியர்களின் மின்னஞ்சல் “சைபர் தாக்குதலுக்குட்படுத்தப் பட்டதால்”, அதனை பாதுகாக்கும் பொருட்டு “தற்காப்புக் காரணங்களுக்காக ஆஃப்லைனாக மாற்றப்பட்டது,” என்றார். ஆனால் உலகுக்கு தரவு இன்னும் கிடைக்கவில்லை.
RaTG13 மற்றும் sars-CoV-2 ஆகியவற்றின் மரபணுக்களுக்கு இடையில் 1200 வெவ்வேறு பிறழ்வுகள் உள்ளன-பரிணாமத்தின் குழப்பத்தை நிரூபிக்கும் சிதறிய மாறுபாடுகள். RaTG13 சார்ஸ்-கோவி -2 இன் நேரடி முன்னோடியாக இருக்க இந்த பிறழ்வுகளின் எண்ணிக்கை மற்றும் விநியோகம் மிகப் பெரியது; அவை குறைந்தது இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொதுவான மூதாதையரிடமிருந்து பிரிந்தவை. ஆனால் அதன் மரபணு அருகாமை “RaTG13 போன்ற உறவினங்கள் காணப்படும் இடங்களில் நாம் sars-CoV-2 இன் மூதாதைகளைத் தேட வேண்டும்” என்று ஃப்ரெட் ஹட்சின்சன் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் பரிணாம உயிரியலாளர் ஜெஸ்ஸி ப்ளூம் செப்டம்பரில் என்னிடம் கூறினார். “இந்த சமயத்தில், சார்ஸ்-CoV-2-ன் நெருங்கிய உறவினங்கள் இரண்டு இடங்களில் இருந்ததாக அறியப்படுகிறது: யுன்னானில் உள்ள வௌவால் குகைகள், மற்றும் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி.”
ஷியும் அவரின் (அமெரிக்க/சிங்கப்பூர்) நண்பர்களும்
இது ஒருபுறம் இருக்க, WIV மேற்கொண்ட சோதனைகளின்/ஆய்வுகளின் தன்மை குறித்து பலர் கவலைகளை எழுப்பியுள்ளனர்.
2015 ஆம் ஆண்டில், வட கரோலினா பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் நிபுணரான ரால்ப் பாரிக் என்பவர், ஷி-யுடன் சேர்ந்து, நேச்சர் என்ற அறிவியல் ஆய்விதழில் வவ்வால் கொரோனா வைரஸ்கள் எவ்வாறு மனிதனுக்கும் ஊறு விளைவிக்கும் என்று ஒரு முக்கியமான கட்டுரையினை பிரசுரித்திருந்தார். முன்னோடி மரபணு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எந்தமாதிரியான (மற்ற) வைரஸ்களை கொண்டு ஒரு கொரோனா வைரஸை மனிதர்களைப் பாதிக்கும் திறனைக் கொடுக்கும் வைரஸாக மாற்ற முடியும் என்பதை பாரிக் ஆய்வு செய்தார். இத்தகைய ஆராய்ச்சி கைமெரிக் வைரஸ் என்று அழைக்கப்படும் ஒருவிதமான “இயற்கையில் இல்லாத’ வைரஸினை உருவாக்குவது பற்றியதாகும்.
இந்த கட்டத்தில், ஷியின் மாற்றியமைக்கப்பட்ட (ஒரு திரிபு க்ளோன்) வைரஸானது, யுன்னானில் ஷி கண்டுபிடித்த மற்றொரு வவ்வால் கொரோனா வைரஸ் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்பைக் புரதத்துடன் இணைக்கப்பட்டது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ரான் ஃபோச்சியர் என்ற டச்சு விஞ்ஞானி, ஆபத்தான பறவை காய்ச்சல் வைரஸான H5N1 ஐ மேலும் பரப்ப முடியுமா (அதாவது பரவும் வேகத்தினை அதிகரிக்க முடியுமா) என்று பார்க்க முடிவு செய்தார். மரபணு ரீதியாக வைரஸை மறுசீரமைப்பதில் தோல்வியடைந்த பிறகு, ஃபோச்சியர் ஒரு மேம்பட்ட முறைக்குத் திரும்பினார்: அவர் வைரஸை மீண்டும் மீண்டும் நேரடியாக ஃபெர்ரெட்டுகளில் (மரநாய் போன்ற விலங்கு, சோதனைச் சாலைகளில் பயன்படுத்தப்படுவது) மீண்டும் மீண்டும் அனுப்பினார், வைரஸை அதன் புதிய ஊட்டுயிரில் (ஹோஸ்ட்) உருமாறும்படி/மாறுபாடு அடையும்படி கட்டாயப்படுத்தினார். பத்து சுற்றுகளுக்குப் பிறகு, மாறுபாடடைந்த வைரஸ் காற்றில் பரவும் நிலையினை அடைந்தது. அவர் தனது ஆய்வகத்தில் ஒரு பெருந்தொற்றுநோய் ஆகப் பரவக்கூடிய தயார் நிலை நோய்க்கிருமியை உருவாக்கியிருந்தார்.
இச்சோதனை, “செயல்பாட்டின் ஆதாயம்” (gain of function, GoF) என்று அழைக்கப்படும் ஒரு வகை ஆராய்ச்சியை உருவாக்கியது, இது மேலும் அபாயம் குறித்த எச்சரிக்கையைத் தூண்டியது. உயர்மட்ட சந்திப்புகள், மற்றும் அறிக்கைகள், இத்தகைய GoF ஆராய்ச்சிகள் அது உருவாக்கும் மதிப்பினை விட ஆபத்தானவை என்று விமர்சித்தன.
2014 ஆம் ஆண்டில், ஜனாதிபதி பராக் ஒபாமா இன்ஃப்ளூயன்ஸா, சார்ஸ் மற்றும் மெர்ஸ் சம்பந்தப்பட்ட செயல்பாட்டு ஆதாய ஆய்வுகளை நிறுத்தி, ஒரு புதிய ஒழுங்குமுறை செயல்முறையை உருவாக்கக் கட்டாயப்படுத்தினார். இருப்பினும், பாரிக் தனது சிமெரிக்-வைரஸ் பரிசோதனையின் நடுவில் இருந்தார். எனவே, அவருக்கு NIH-உயிர் பாதுகாப்பு வாரியம் இடைநிறுத்தத்திலிருந்து விலக்கு அளித்தது.
மனித சுவாசப் பாதை செல்களில் பாரிக், கைமெரிக் வைரஸை சோதித்தபோது, அதன் ஸ்பைக் புரதம் செல் ஏற்பி ace2 உடன் பிணைய முடிந்தது என்பதை நிரூபித்தது. வைரஸ் இப்போது இனங்களை கடந்து தாவத் தயாராக இருக்கிறது. ஆய்வக எலிகளில், இது நோயை ஏற்படுத்தியது. எதிர்பாராத இந்த முடிவைக் கருத்தில் கொண்டு, “விஞ்ஞான மறுஆய்வு குழுக்களில் இதேபோன்ற ஆய்வுகளை சூழல்களில் இருக்கும் திரிபு வைரஸ்களில் செய்து, அடிப்படையில் புதிய சிமெரிக் வைரஸ்களை உருவாக்குவது மிகவும் ஆபத்தானது,” என்று பாரிக் முடித்தார்.
அந்த அபாய எச்சரிக்கை ஏற்கப்பட்டு அத்தகைய ஆய்வுகள் நிறுத்தப்படவில்லை. ஆனால் வினோதமாக, பாரிக்கின் சோதனைகள், NIH-ஆல் GoF ஆராய்ச்சி இல்லையென்று முடிவெடுக்கப் பெற்று (ஏனென்று எல்லாம் கேட்கக் கூடாது) வட கேரோலைனா பல்கலைக் கழகத்தில் அதே வகைச் சோதனைகள் தொடர்ந்து செயல்படலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. மறுபக்கம் சீனாவில் இருந்த கூட்டு ஆய்வாளரான ஷியின் ஆய்வகம், கைமெரிக் வைரஸ்களை உருவாக்க தன் சொந்த தளத்தை கட்டமைத்தது. யுன்னானிலிருந்து WIV-1 என்று பெயரிடப்பட்ட மற்றொரு வௌவால் கொரோனா வைரஸை – வெவ்வேறு நாவல் ஸ்பைக் புரதங்களின் குளோன்களுடன், மனிதமயமாக்கப்பட்ட எலிகளில் சோதித்தது. அந்த வைரஸ்கள் விரைவாக பிரதியெடுத்தன என்பது கண்டறியப்பட்டது. அவை இத்தகைய வேலையைக் குறிப்பாக ஆபத்தானதாக மாற்றின. ஏனென்றால், WIV-1 ஏற்கனவே மனிதர்களுக்கு ஆபத்தானது என்று அறியப்பட்டதுதான். பாரிக் 2016 ஆம் ஆண்டின் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையில் “SARS போன்ற WIV1-CoV வைரஸ், மனிதனில் நோய் உருவாக்க எழுச்சிக்குத் தயாராக உள்ளது” என்ற தலைப்பில் இதை தெளிவுபடுத்தினார்.

அமெரிக்க நிதியுதவி மற்றும் லாபி
ஷி வெளியிட்ட ஆராய்ச்சி கட்டுரைகள், ஆவணங்கள் மற்றும் NIH-ஆராய்ச்சி நிதியுதவி விண்ணப்பங்கள் மற்றும் (இடைமறிப்பு மூலம் பெறப்பட்ட) ஆராய்ச்சி முன்னேற்ற அறிக்கைகள் ஆகியவற்றின்படி, WIV-இல் நடந்த இந்த சோதனைகள் சிலவற்றிற்கு அமெரிக்க அரசாங்கம் நிதியளித்திருந்தது தெரியவந்துள்ளது. 2014 இல், NIH-USA-அமைப்பானது ஈகோஹெல்த் அலையன்ஸ் எனப்படும் நியூயார்க்கை சார்ந்த ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனத்திற்கு ஐந்து வருட, $37 லட்சம் டாலர்கள் மானியம் வழங்கியிருந்தது, அதில் ஒரு பகுதி-சுமார் ஆறு இலட்சம் டாலர்கள்-WIV-க்கு சென்றது. WIV-யில் செய்யப்பட்டு வந்த இத்தகைய ஆராய்ச்சிகள், செயல்பாட்டு ஆதாய ஆராய்ச்சியாக (GoF research) கருதப்படத் தகுதி பெறவில்லை என NIH கருதியது, அதனால் ஒபாமா கால இடைநிறுத்தத்தை அவை மீறவில்லை என்றாகியது. (டிரம்ப் நிர்வாகம், 2017-இல் இடைநிறுத்தத்தை நீக்கியது, மூன்று வருட பட்டறைகள் மற்றும் பல ஏஜென்சிகளில் கலந்துரையாடல்கள் வழியே ஒரு புதிய ஒழுங்குமுறையை ஏற்ற செயல்முறைக்கு வழிவகுத்தது). இங்கே ஃபௌச்சியின் (Anthony Fauci) குரல் எழுகிறது. “எங்கள் வரையறையின்படி, இது செயல்பாட்டின் ஆதாய ஆராய்ச்சி அல்ல. (உயர்ந்த குரலில்) உங்களுக்கு வரையறை பிடிக்கவில்லை என்றால், வரையறையை மாற்றுவோம்,” என்றார். [Gain of Function-னுக்கான வரையறை]. அதாவது, ”இனிமேல் உங்க பெயரை எல்லோரும் அறிக்கி, அறிக்கி என்றழைப்போம் ” என்றார்.
சமீபத்திய மாதங்களில், இயற்கையான வைரஸ் தோற்றத்தில் சந்தேகம் கொண்டவர்கள், ஷி தனது கைமெரிக்-வைரஸ் பரிசோதனைகளை ஒரு உயிர் பாதுகாப்பு நிலை-2 ஆய்வகத்தில் நடத்துகிறார், இதை, உயிர் பாதுகாப்பு நிலை-3 ஆய்வகத்துடன் ஒப்பிட்டால், இங்கு முழு PPE போன்ற அதிக முன்னெச்சரிக்கைகள் தேவையில்லை, ஆராய்ச்சியாளர்களுக்கான மருத்துவ கண்காணிப்பு, கட்டாய உயிர் பாதுகாப்பு அலமாரிகள், கட்டுப்படுத்தப்பட்ட காற்றோட்டம் மற்றும் இரண்டு செட் தானியங்கி கதவுகளை பூட்டுதல் போன்ற அபாயத் தடுப்பு முறைகள் இல்லை, இங்கு பாதுகாப்பு குறைவானது என்றனர். ஆனால் அவை, சீனச் சட்டங்களின்படி இருந்தன. மாறாக, பென்சில்வேனியா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் கொரோனா வைரஸ் நிபுணரான சூசன் வெய்ஸ், ஆண்டர்சன், “இப்பரிசோதனைகளை ஒரு உயிர் பாதுகாப்பு நிலை-2 ஆய்வகத்தில் நடத்துவது ஒரு நல்ல அணுகுமுறை அல்ல,” என்றார்.
இருந்தாலும், ”கைமெரிக் வைரஸ்களை உருவாக்கும் ஷியின் (ஆவணப்படுத்தப்பட்ட) ஆராய்ச்சி வேலைகள் எதுவும் சார்ஸ்- CoV-2 ஐ உருவாக்கவில்லை. (அந்த குறிப்பிட்ட சோதனை சார்ஸ்-CoV-2 வுக்கு வழிவகுத்திருக்கலாம் என்று நீங்கள் கூற முயன்றால், அது முற்றிலும் சாத்தியமற்றது” என்று ஃபௌச்சி கூறினார். WIV உருவாக்கிய கைமெரிக் வைரஸ்கள், அதன் கட்டமைப்புப் பொறியியலில் கொரோனா வைரஸ் குடும்பத்தில் (சார்ஸ்- CoV-2) இலிருந்து வெகு தொலைவில் உள்ளன. ஷியின் கூற்றுப்படி, WIV-கொண்டுள்ள பத்தொன்பதாயிரம் மாதிரிகளில் மூன்று நாவல் கொரோனா வைரஸ்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், இது ஆபத்துகளை சகித்துக் கொள்கின்ற வேலை என்று ஸ்டான்ஃபோர்ட் பல்கலையின் நுண்ணுயிரியலாளரான (மைக்ரோபயாலஜிஸ்ட்) டேவிட் ரெல்மேன், கூறினார்.
நடந்தது/நடந்து கொண்டிருப்பது/நடக்கபோவது எதுவும் அறியாத WHO
சார்ஸ்-கோவி-2 இன் தோற்றத்திற்கான முதல் கட்டத் தடயத்தேடலை நடத்த ஜனவரி 2021-ல், உலக சுகாதார அமைப்பு சர்வதேச விஞ்ஞானிகள் குழுவை வூஹானுக்கு அனுப்பியது. பீட்டர் டாஸ்ஸாக் அக்குழுவில் இருந்தார் (வேலிக்கு ஓணான் சாட்சி போல. இது ஏனென்று அடுத்தடுத்த பத்தியில்). மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்ட குழுவின் அறிக்கையில், ஒரு ஜூனோடிக் ஸ்பில்ஓவர் -ஒரு வவ்வாலிருந்து, ஒரு இடைநிலை விலங்குக்கு மாறி வருவது- வழியாக, ஒரு மனிதனுக்கு மாறுவதை – (இது பெரும்பாலும் இயற்கைவழித் தோற்றம் எனச் சொல்லப்படக் கூடிய பாதை)- அதாவது அவர்கள் ஆய்வகத்திலிருந்து தற்செயலாக வெளியேறிய சம்பவத்தை “மிகவும் சாத்தியமற்றது” என்று தீர்ப்பளித்தனர்.
முதலாவதாக, ஒரு இயற்கை தோற்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நவம்பர், 2002-இல் ஒரு நகர்ப்புற சந்தையில் வவ்வால்களிலிருந்து சிவெட்எனப்படும் புனுகுப் பூனைகளுக்கு (இவை ஆய்வுக்கூட மிருகங்களாகப் பயன்படுவன) SARS-1 பரவியது. 2012-இல் சவுதி அரேபியாவில் உருவான மெர்ஸ் வைரஸ், வவ்வால்களிலிருந்து ஒட்டகங்களுக்கும், அங்கிருந்து மக்களுக்கும் சென்றது. சார்ஸ்-1 நோய் உருவான நான்கு மாதங்களுக்குள், புனுகுப்பூனை மிகவும் சாத்தியமான ஆதாரமாக அடையாளம் காணப்பட்டது; மெர்ஸ் நோய்க்கு ஆதாரமாக ஒன்பது மாதங்களுக்குள் ஒட்டகங்கள் அடையாளம் காணப்பட்டன.
ஆனால், சார்ஸ்-கோவி-2 கான இன் இடைநிலை விலங்கு இன்னும் கண்டறியப்படவில்லை. அது மட்டுமே இந்த விஷயத்தில், வுஹான் ஆய்வகங்களிலிருந்து சார்ஸ்-2 தோன்றவில்லை என்பதை உறுதியாக நிரூபிக்கக்கூடிய ஒன்று. இருப்பினும் அப்படி ஒரு விலங்கு சில மாதங்களில் கண்டறியப்படலாம்தான். ஆனாலும், இன்றைய நிலைப்படி, பெருந்தோற்று-சாத்தியமுள்ள வைரஸினை ஆய்வகத்தில் உருவாக்க முயற்சித்தார்களா என்ற கேள்வி முக்கியமானது.
WHO-வின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஒரு உறுப்பினர், ஈகோஹெல்த் கூட்டணியின் தலைவர் பீட்டர் டாஸ்ஸாக் ஆவார். முதல் சார்ஸ் 2002-ல் உருவாகியதிலிருந்தே அவர் WIV இன் நெருங்கிய பங்காளிகளில் ஒருவராக இருந்தார், NIH-நிதி, துணை ஒப்பந்தங்கள் மற்றும் ஷி மற்றும் அவரது குழுவுடன், துறையில் விரிவாக வேலை செய்தார். அதனால் ஷி -யிற்கு கண்மூடித்தனமாக, தானாகவே ஆதரவளித்தார். மேலும் ஆய்வக விபத்து பற்றிய எந்தவொரு ஆலோசனையையும் சதிக் கோட்பாடு என்று அழைத்தார். “இந்த ஆய்வக வெளியீட்டுக் கருதுகோளின் சிக்கல்; இது ஒரு முக்கியமான விஷயத்தைப் பொறுத்தது. வைரஸ், வெளியேறுவதற்கு முன்பு அந்த ஆய்வகத்தில் இருந்தது என்று நிருபிக்கவேண்டும். ஆனால் அந்த வைரஸ் ஆய்வகத்தில் இல்லை என்பது எனக்குத் தெரியும்,” என்றார்.

சுற்றி சுற்றி விடும் பீட்டர் டாஸ்ஸாக் என்னும் கரகாட்ட கலைஞன்
நோய்ச் சூழலியல் நிபுணரான டாஸ்ஸாக், இயற்கையில் உள்ள வைரஸ்களின் பன்முகத்தன்மை கிட்டத்தட்ட வரம்பற்றது என்பதையும் அறிவார். மிக சமீபத்தில், அவரும் மற்ற EcoHealth விஞ்ஞானிகளும் தென் சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதிலுமுள்ள மக்களுக்கு, வெளவால்களிலிருந்து கொரோனா வைரஸ் எவ்வளவு அடிக்கடி பரவக்கூடும் என்பதை பகுப்பாய்வு செய்யும் மாதிரியை உருவாக்கினர். அவர்கள் சார்ஸ் தொடர்பான கொரோனா வைரஸ்களை மனித மக்கள்தொகையின் வரைபடங்களுடன், கைவசமுள்ள இருபத்தி மூன்று வவ்வால் இனங்களின் வாழ்விடங்களை கொண்டு அடுக்கிவைத்து, மேலும், வவ்வால் -மனித தொடர்பு மற்றும் ஆன்டிபாடி தரவுகளின் அடிப்படையில், ஆண்டுதோறும் சுமார் நான்கு லட்சம் மக்கள் சார்ஸ் தொடர்பான கொரோனா வைரஸ்களால் பாதிக்கப்படலாம் என்று மதிப்பிட்டனர். “மக்கள் ஒவ்வொரு ஆண்டும் வைரஸ் தொற்றிற்கு அவர்களுக்குத் தெரியாமல் ஆளாகிறார்கள்,” என்று தாஸ்ஸாக் என்னிடம் கூறினார். “அது அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அவர்கள் நோய்வாய்ப்பட்டு இறக்கக்கூடும்.”
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், எவரும் உணருவதை விட தடுப்பு மீறல்கள் (ஜூனோடிக் ஸ்பில் ஓவர்) இயற்கையாக அடிக்கடி நிகழ்கின்றன. மக்கள் குகைகளில் தஞ்சமடையும் போது, வெளவால்களுக்கு சவாலாகின்றார்கள், உலகின் சிறந்த உரமான வவ்வால் எச்சங்களை அறுவடை செய்கிறார்கள், மற்றும் வெளவால்களை வேட்டையாடிச் சாப்பிடுகிறார்கள். இந்த நடவடிக்கைகளால் மன அழுத்தம் பெறும் பாலூட்டி விலங்குகள் (மனிதர்களைப் போலவே) நோய்வாய்ப்பட்டு, வைரஸை வெளிப்படுத்தும் வாய்ப்பு அதிகம். நிலைமை இப்படி இருக்கையில் டாஸ்ஸாக்கோ இங்கே வைரஸெல்லாம் இல்லை, சீனா ஆய்வகத்தில் தயிர் உறை ஊற்றும் ஆராய்ச்சி மட்டுமே நடைபெறுகிறது. எனக்கும் WIV-க்கும், எனக்கும் அந்தோனி பாசிக்கும் எந்த உறவும் இல்லை-யென்று சூடம் அணைத்தார்.
பெருந்தொற்றுநோய்க்கு முன்னர், ஜனாதிபதி ஷி ஜின்பிங் வனவிலங்கு பண்ணைகளை வறுமையை ஒழிப்பதற்கான வழிமுறையாக ஊக்குவித்தார், மேலும் இந்தத் தொழில், அதிக அளவில் கட்டுப்பாடற்றதாக இருந்தது. சுமார் 140 லட்சம் பேருக்கு (பதினான்கு மில்லியன்) அதிகமான மக்களுக்கு வேலை வழங்கியது. “விவசாயம் மற்றும் விலங்குகளை வளர்ப்பது மற்றும் புதிய யோசனைகளை முயற்சிப்பதில் ஈடுபட்டுள்ள மக்களின் தொடர்பு நம்பமுடியாதபடி விரிவாக உள்ளது,” என்று டாஸ்ஸாக் கடந்த ஆண்டு என்னிடம் கூறினார். WHO-வானது வுஹானுக்கு சில காட்டு-இறைச்சி சப்ளையர்கள் தெற்கு சீனாவில் அமைந்திருப்பதாக தன் அறிக்கையில் கூறுகிறது, அங்கு சார்ஸ் போன்ற கொரோனா வைரஸ்களை வழங்கும் குதிரைலாட உருவுள்ள வவ்வால்கள் முதன்மையாக வசிக்கின்றன. ஒருவேளை வவ்வால்களிலிருந்து விலங்குகளுக்கு வைரஸ் பரவியது, அந்த நோய்வாய்ப்பட்ட விலங்குகள் வுஹானுக்கு கொண்டு வரப்பட்டன, அங்கு அவை ஹுவானான் மற்றும் நகரில் அறியப்பட்ட மற்ற மூன்று நேரடி விலங்குச் சந்தைகளில் விற்கப்பட்டன. இந்த சந்தைகளில் இடைநிலை ஊட்டுயிரிகள் (host), ஹுவானன் சந்தையில் மட்டுமல்ல, வுஹான் முழுவதும், அதே போல் இந்த விலங்குகள் வந்த தொலைதூர பண்ணைகள், போன்ற அனைத்தையும் சோதனை செய்திருக்கவேண்டும். “பெரிதாகத், தவறவிடப்பட்ட வாய்ப்பு, தெளிவாக,” சாத்தியமான” வைரஸ் தேக்கங்களை கண்டறிந்திருக்கலாம்,” என்று குழப்பியடித்தார்.

வூஹான் சந்தையினை ஒழித்தால் வைரஸ் ஒழிந்தது
சீன அரசாங்கம் ஜனவரி 1, 2020 அன்று ஹுவானன் (ஈரச்) சந்தையை மூடி, சுத்தப்படுத்தியது, அடிப்படையில் ஒரு குற்றச் சம்பவத்தின் தடயங்களை அழித்தது. சீனாவின் அதிகாரிகள் WHO-விடம் உயிருள்ள பாலூட்டிகள் அங்கு விற்கப்படவில்லை என்றார்கள். ஆனால், பாரம்பரிய சீன மருத்துவத்திற்கான ஹூபே பல்கலைக்கழகத்தின் ஒரு வைராலஜிஸ்ட், கடுமையான டிக்-நோய் பரவும் மூலத்தை அடையாளம் காண, ஒரு மாதாந்திர கணக்கெடுப்புகளை (வுஹான் சந்தையில் விற்கப்பட்ட உயிரினங்களின் எண்ணிக்கையினை) “தற்செயலாக” எழுதினார். சார்ஸ்-கோவி-2 தோன்றுவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன், ஒரு ஜூன் மாதத்தில், முப்பத்தெட்டு காட்டு உயிரினங்களைக் குறிக்கும் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் உயிரிகளைக் கொண்ட (ஆவண ஆதாரங்கள்) ஒரு ஆய்வை அவர் வெளியிட்டார்-அம்மிருகங்களில் பல இப்போது சார்ஸுக்கு ஆளாகின்றன.
பிப்ரவரி, 2020 இல், சீனா நேரடி காட்டு விலங்குகளின் வர்த்தகம் மற்றும் நுகர்வுக்கு தடை விதித்தது. நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான பண்ணைகள் மூடப்பட்டன. வனவிலங்குகள் படுகொலைக்கு ஆளாகு முன்னர் பண்ணை விலங்குகள் மற்றும் தொழிலாளர்களை எந்த அளவிற்கு சோதனை செய்தார்கள் என்பதை சீன அதிகாரிகள் பகிர்ந்து கொள்ளவில்லை. இதனால் “ஆரம்பகால கொரோனா வைரஸ் கசிவுக்கான எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது” என்று WHO, அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சீன அதிகாரிகள் அவர்களின் விஞ்ஞானிகள் முப்பத்தொரு மாகாணங்களில் எண்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள், கோழி மற்றும் காட்டு-விலங்கு மாதிரிகளை சோதனை செய்தனர், நோய்ப் பெருக்குக்கு முன்னும் பின்னும் சேகரிக்கப்பட்டன, ஆனால் சார்ஸ்-கோவி-2 க்கு எந்த ஆதாரமும் இல்லை.
உலகின் மிகவும் கடத்தப்படும் விலங்குகளில் ஒன்று பாங்கோலின். ஆரம்பத்தில் இடைநிலை-விலங்காக இருக்கலாம் என்று கருதப்பட்டது, இது, அவை ஹுவானன் சந்தையில் விற்கப்பட்டதால் அல்ல, ஆனால் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீனாவின் தெற்கு எல்லையில், ஒரு கடத்தல்கார குழுவிடமிருந்து பாங்கோலின் ஒன்று பறிமுதல் செய்யப்பட்ட போது, கொரோனா வைரஸுக்கு சோதனை செய்யப்பட்டது. எல்லா வகையான விலங்குகளிலும் குறிப்பாக கொரோனா வைரஸ்கள் உள்ளன, ஆனால் இந்த விலங்கு வித்தியாசமாக இருந்தது. அதன் ஸ்பைக் புரதத்தின் ஒரு பகுதி, ஏற்பி பிணைப்பு டொமைன், சார்ஸ்-கோவி-2 ஐ விட மனித ace-2 உடன் மிகவும் இறுக்கமாக பிணைத்தது. பிப்ரவரி, 2020 இல், ஆண்டர்சன் சார்ஸ்-கோவி-2 இன் ace-2 பிணைப்பு வலிமையில் சந்தேகப்பட்டார். பாங்கோலின்-கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு அவரது மனதை மாற்ற உதவியது. பாங்கோலின் இயற்கையாகவே ace-2 உடன் பிணைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கொரோனா வைரஸை உருவாக்கியிருந்தால், sars-CoV-2 இயற்கையாகவே அத்தகைய அம்சத்தையும் உருவாக்கியிருக்கலாம்.
உளன் எனில் (உலகெங்கும்) உளன்
அப்போதிருந்து, சார்ஸ்-கோவி-2 இன் நெருங்கிய உறவினர்கள் சீனா, தாய்லாந்து, கம்போடியா மற்றும் ஜப்பானில் அடையாளம் காணப்பட்டன. ஆனால் இயற்கையான தோற்றத்தை ஆதரிக்கும் மிக முக்கியமான கண்டுபிடிப்பு செப்டம்பரில் (2021) அறிவிக்கப்பட்டது. லாவோ-தாய்லாந்து விஞ்ஞானிகள், டாங்குவான் சுரங்கத்திலிருந்து வரும் வைரஸை விட, யுன்னானின் எல்லையின் லாவோ-தாய்லாந்து பகுதியில் தெற்கே-குதிரைலாட-வௌவால் கொரோனா வைரஸ் மரபணு ரீதியாக சார்ஸ்-கோவி-2 உடன் நெருக்கமாக இருப்பதாகக் கண்டறிந்தனர். இது கடந்த தசாப்தத்தில் எப்போதாவது ஒரு பொதுவான மூதாதையரிடமிருந்து சார்ஸ்-கோவி-2 உடன் பிரிந்திருக்கலாம். பயமுறுத்தும் வகையில், அவற்றின் கூர்முனைகள் ஒரே மாதிரியானவை மற்றும் மனித ace2 ஏற்பிகளுக்கு சமமான செயல்திறனுடன் பிணைக்கப்படுகின்றன. இந்த கண்டுபிடிப்பு “யுன்னன் வைரஸ் விசேஷமாக இருப்பது பற்றிய பல முக்கிய ஆய்வக-கசிவு வாதங்களை முற்றிலுமாக புறந்தள்ளுகிறது” என்று ஆண்டர்சன் கூறினார். “இந்த வகையான வைரஸ்கள் நாம் ஆரம்பத்தில் உணர்ந்ததை விட இயற்கையில் மிகவும் பரவலாக உள்ளன”. இயற்கையில் அடுத்து இதனை விடவும் வீரியம்கூடிய வைரஸ் வரும், ஆனால் கேள்வி என்னவோ, ஆய்வகத்தில் கோவிட் வைரஸை உருவாக்கினார்களா, இல்லையா?
வெற்றிக் கூட்டணி, ஆனால் வெளியே சொல்லமாட்டோம்
செப்டம்பர் 21, 2021 அன்று, DRASTIC குழுமம் முக்கியமான மற்றொரு கோப்பினை வெளியிட்டது. 2018 ஆம் ஆண்டிலேயே, ஷி, பாரிக் மற்றும் வாங் ஆகியோருடன் இணைந்து, ஈகோஹெல்த் அலையன்ஸ் நிறுவனத்தில் டாஸ்ஸாக், அமெரிக்க பாதுகாப்பு மேம்பட்ட ஆராய்ச்சி திட்ட முகமைக்கு (DARPA; Defense Advanced Research Projects Agency) $14.2-மில்லியன் ஆராய்ச்சி திட்டத்தை சமர்ப்பித்தார். அநாமதேய விசில்-blower-ரிடமிருந்து பெறப்பட்ட இந்த முன்மொழிவு கோப்பானது, புதிய சார்ஸ் தொடர்பான வவ்வால் கொரோனா வைரஸ்களின் இயற்கையான எல்லை மீறல் (spillover) அபாயத்தை அடையாளம் காணவும், மாதிரியாகவும், சோதிக்கவும், பின்னர் குதிரை லாட வவ்வால்களுக்கான தடுப்பூசிகளை உருவாக்கவும், இத்தகைய தடுப்பு மருந்துகளை வவ்வால் குகைகளுக்குள் பீய்ச்சி அடிக்கவும், வைரஸ்கள் ஒரு விலங்கில் இருந்து மனிதன் போன்ற மிருகத்திற்குத் தாவுவதைத் தடுக்கவும் என்று ஒரு பெரிய லட்சியத் திட்டத்தை விவரித்தது. சார்ஸ் போன்ற வவ்வால் கொரோனா வைரஸ்களில் “மனித உயிரிகளின் தனித் தன்மையான” ஃபுயூரின் பிளவு தளங்களைச் செருகுவதற்கான அவர்களின் திட்டம், தனித்துவமானது. ஃபுயூரின் பிளவு தளம் சார்ஸ்-கோவி-2 இன் தனித்துவமான அம்சமாகும். இது “இந்த வைரஸின் மாயாஜாலக் குழம்பு” என்று அரிசோனா பல்கலைக்கழகத்தின் பரிணாம உயிரியலாளர் மைக்கேல் வோரோபி சமீபத்தில் கூறினார். “இது இயற்கையானதோ அல்லது மரபணு மாற்றப்பட்டதோ, இதனால் தான் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது.”
இந்த ஒரு ஃப்யூரின் பிளவு தளம் ஒரு வைரஸ் வெற்றிகரமாக பாதிக்கக்கூடிய ஊட்டுயிர் (host) இனங்களின் பரப்பை விரிவுபடுத்தி, அதன் தொற்றுநோய் உருவாக்கும் திறனை அதிகரிக்கிறது (பெருந்தொற்று இதனை உறுதிசெய்தது). ஒரு செல்லினுள் ஒரு கொரோனா வைரஸ் நுழைவதற்கு, அதன் ஸ்பைக் ஒரு பலவீனமான உருமாற்றத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும், அதில் அது இரண்டு துண்டுகளாக வெட்டப்படுகிறது. அப்போதுதான் வைரஸ் மனிதசெல்லின் சவ்வுடன் இணைந்து அதன் மரபணுப் பொருளை அல்லது RNA-வை கடத்த முடியும். ஃப்யூரின் பிளவு தளத்தைக் கொண்ட ஒரு வைரஸ், மனிதனின் ஃபுயுரினைப் பயன்படுத்தலாம் – ஃப்யூரின் என்பது மனித உடல் உடனடியாக உற்பத்தி செய்யும் என்சைம் – வைரஸின் கூர்முனையை விரைவாக துண்டிக்க, அடுத்து செல்லினுள் நுழைய ஏதுவாகும்.
யுன்னானில் உள்ள வெளவால்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சார்ஸ் தொடர்பான கொரோனா வைரஸ்களில், (ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட பதிப்புகளில்) விஞ்ஞானிகள் ஃபுயரின் பிளவு தளங்களை செயற்கையாக ஆய்வகத்தில் அறிமுகப்படுத்துவார்கள் என்று DARPA ஆய்வுத்திட்ட முன்மொழிவு கூறியது. அதாவது (RaTG13) போன்ற ஒரு வைரஸினை அடிப்படையாக வைத்துக் கொண்டு ஃபுயுரினை குளோன் செய்யப் போவதாகத் திட்டம் தெரிவித்தது. அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மூன்று முதல் ஐந்து புது வௌவால் வைரஸ்களின் முழு வரிசை மற்றும் குளோன்களை உருவாக்கத் திட்டமிட்டனர். பின்னர் அவர்கள் மாற்றப்பட்ட வைரஸ்களை, மனித சுவாசப் பாதை செல்களிலும் மனிதமயமாக்கப்பட்ட எலிகளிலும் சோதிப்பார்கள். “இதில் தங்களுக்கு கொடுப்பட்டுள்ள எல்லைக்கு வெளியே சென்று, புதிய வைரஸ்களை உருவாக்குவோம்,” என்று இருப்பதாக ஆண்டர்சன் கூறினார், மேலும் ஃப்யூரின் பிளவு தளங்களை பழைய வைரஸ்களில் பொருத்தி புதிய வைரஸ்களை உருவாக்குவது – என்றெல்லாம் திட்டத்தில் விவரித்திருப்பது இவ்வாய்வுத் திட்டத்தினை பெரும் உரையாடலுக்கு இட்டுச் செல்கிறது என்றார்.
SARS-CoV-2 என்பது கொரோனா வைரஸ் குடும்பத்தில், ஒரு பகுதியில் ஒரு ஃபுயூரின் பிளவு தளத்தைக் கொண்ட ஒரே வைரஸ். “மனித ace2 உடன் நன்றாகப் பிணைக்கும் சார்ஸ்-CoV-2 போன்ற முழு நீள வவ்வால் வைரஸ்கள் உள்ளன என்பது இப்போது எங்களுக்குத் தெரியும்,” ப்ளூம் என்ற வைராலஜிஸ்டு, லாவோ-தாய்லாந்து வைரஸ்களைக் குறிப்பிட்டு, “ஆனால் ஃப்யூரின் பிளவு தளம் மட்டும் அதில் இல்லை, என்றார்.
WIV ஒவ்வொரு ஆண்டும் பல வைரஸ்களை சேகரித்து வந்தது. மனித ACE2-க்கு அதே பிணைப்புடன் கூடிய சார்ஸ்-கோவி-2-க்கு ஒத்த ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தால், ஆய்வகத்தில் ஒரு ஃப்யூரின் பிளவு தளத்தை அந்த வைரஸின் குளோனாக மாற்றினால் என்ன செய்வது? இத்தகைய வேலை நேரடியாக சார்ஸ்-CoV-2 உருவாக்க வழிவகுதிருக்கலாம், என்கிறார் “Broad இன்ஸ்டிடியூட் ஆஃப் எம்.ஐ.டி.யில் மூலக்கூறு உயிரியல் மற்றும் மரபணு சிகிச்சையில் ஆராய்ச்சி செய்யும் ஒரு முதுநிலை மருத்துவர் அலினா சான், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு ஒரு இயற்கை வைரஸ் பரவி ஒரு தொற்றுநோயை ஏற்படுத்துவதற்கு ஒரு புதிய நாவல் ஃப்யூரின் பிளவு தளம் கூடுதல் உதவியாக இருந்திருக்கலாம் என்கிறார். ஆய்வக வைரஸ் ஒரு ஆராய்ச்சியாளருக்குத் தாவியது, ஆய்வகத்திலிருந்து கவனிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதற்கு இது கூடுதல் காரணமாக இருந்திருக்கலாம்.அலினா சானின் வரவிருக்கும் புத்தகமான “வைரல்: கோவிட் -19 இன் தோற்றத்திற்கான தேடல்”. இவர், 2020 வசந்த காலத்தில் இருந்து, சாத்தியமான ஆய்வக விபத்து பற்றிய மிக உறுதியான ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். “SARS2 தோன்றுவதற்கு சாத்தியமான ஆராய்ச்சி நடைபெற்றதாக உலகிற்கு தெரியப்படுத்துவது, 2020 ஜனவரியில் முக்கியமானது என்று தெரிந்தவர்கள், வுஹானில் ஏன் இல்லை என்று அ. சான் கேள்வி எழுப்பியுள்ளார்.
(American) Project reviewers are often sensible!
இம்மூவர் சமர்ப்பித்த ஆராய்ச்சித் திட்ட முன்மொழிவு, DARPA-வால் நிராகரிக்கப்பட்டது. ஒரு DARPA திட்ட மேலாளர், இத்திட்டத்தின் “முக்கிய பலம், அனுபவம் வாய்ந்த குழு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட் குகைகள்” என்று விளக்கினார். ஆனால், திட்ட மதிப்பீட்டாளரகள் குழு “செயல்பாட்டு ஆதாய (GoF) ஆராய்ச்சியின் சாத்தியமான அபாயங்களைக் குறிப்பிடவில்லை அல்லது மதிப்பிடவில்லை.” என்று கூறி, இத்திட்டத்தினை நிராகரித்தது. அதாவது, ஆராய்ச்சி குழுவினர் தங்கள் சோதனைகள் ஒரு புதிய, பெருந் தொற்றுநோய் பரவலுக்குத்-தயார் வைரஸை உருவாக்கிய நிகழ்வுக்கான திட்டம் இல்லை என்று எங்கும் உறுதி படுத்தவில்லை. DARPA-வில் உள்ள விமர்சகர்கள் இந்த திட்டத்தின் “பொறுப்பற்ற” தன்மையால் “உண்மையிலேயே அதிர்ச்சியடைந்தனர்”, மற்றும் செயல்பாட்டு ஆதாய ஆராய்ச்சி, (gain of function research) அதனால் ஏற்படும் அபாயங்களைக் கருத்தில் கொள்ளாத திட்டம், என்று நிருபர்களிடம் பேசுவதற்கு அதிகாரம் இல்லாத ஒரு DARPA அதிகாரி என்னிடம் கூறினார்.
2020 வசந்த காலத்தில், அப்போதைய ஜனாதிபதி டானல்ட் டிரம்ப் ஆய்வக-கசிவு கோட்பாட்டை ஊக்குவிக்கத் தொடங்கியபோது, யாரோ அவரிடம் NIH இன் நிதி, EcoHealth வழியாக WIV-க்கு போய் சேர்ந்துள்ளது என்று சொல்லியிருக்ககூடிய காரணத்தால், என்.ஐ.எச். மானியத்தை திடீரென ரத்து செய்தார். அந்த சமயத்தில் விஞ்ஞானத்தை அரசியலாக்குவது பற்றியும், அவருடைய இந்த முடிவு EcoHealth-alliance செயல்படும் திறனை எப்படிப் பாதிக்கும் என்பதையும் பற்றி நான் டாஸ்ஸாக்கிடம் பேசினேன். இம்முடிவு WIV உடனான ஒத்துழைப்பை நிறுத்தியதாக அவர் கூறினார். EcoHealth விஞ்ஞானிகளுக்கு WIV-இன் தரவை இனி அணுக முடியாது என்றும் அவர் கூறினார். “இது மிகவும் சிக்கலான விஷயம்,” என்று அவர் கூறினார், சீனாவில் EcoHealth இன் வேலையை விவரித்தார், “சீன விஞ்ஞானிகள் என் வேலையைச் செய்ய முயற்சி செய்வார்கள், ஆனால் அது அதே வேலையாக இருக்காது.”
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஃப்யூரின் பிளவு தளங்கள் அதிக விவாதத்திற்கு உட்பட்டிருந்தாலும், ஷி, பாரிக் மற்றும் வாங் ஆகியோர் இந்த சோதனைகளை தாங்கள் 2018-ல் முன்மொழிந்ததாக பகிரங்கமாக குறிப்பிடவில்லை. பீட்டர் டஸ்ஸாக், WHO-வில் விசாரனை குழுவில் உறுப்பினராக WHO-சார்பாக சென்ற சீனவிஜயத்தின் பொழுதும் எதுவும் சொல்லவில்லை. (“அந்த வகையான ப்யூரின்-பிளவு-தள வேலைகள் வட கரோலினாவில் செய்யப்பட வேண்டும், வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியில் அல்ல” என்று ஒரு ஈகோஹெல்த் செய்தித் தொடர்பாளர் கூறினார்.) “உண்மையில் இப்போது வெளியானதைக் கண்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன் என்று ஆண்டர்சன் மேலும் கூறினார். இந்த குறிப்பிட்ட நிதி ஆதாரத்தினை பெற்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இந்த தகவலை முன்னதாக வெளியிடாமல் பெரும் அவமதிப்பைச் செய்துள்ளனர் என்று நான் நினைக்கிறேன். (EcoHealth செய்தித் தொடர்பாளர் என்னிடம் “DARPA ஆய்வு முன்மொழிவுக்கு நிதியளிக்கப்படவில்லை” என்றும் “விவரிக்கப்பட்ட வேலை ஒருபோதும் செய்யப்படவில்லை” என்றும் கூறினார்.).
அவ்வாய்வுக் குழுவிலுள்ள லின்ஃபா வாங் மட்டும்தான் ஆய்வுதிட்டத்தினை பகிரங்கமாக விவாதித்த முதல் உறுப்பினர். அறிவியல் சஞ்சிகை சமீபத்தில் நடத்திய ஒரு விவாதத்தில் அவர், ப்ளூம், வோரோபே மற்றும் சான் சேர்ந்து கொண்டனர். ப்ளூம் மற்றும் சான் இருவரும், இத்தகைய ஆய்வுத் திட்டம் ஏன் முன்னர் பகிரப்படவில்லை என்று கேட்டனர். [சீனாவில் பிறந்து வளர்ந்த வாங், ஆஸ்திரேலியக் குடியுரிமையைப் பெற்று, இப்போது சிங்கப்பூரில் வசிக்கிறார], தோல்வியடைந்த DARPA ஆய்வுதிட்ட “தகவலை வெளியிடுவதற்கான சரியான நடைமுறை” தனக்குத் தெரியாது என்று கூறினார். அறிவியல் இதழுக்கான எழுத்தாளரும், விவாதத்தின் நடுவருமான ஜான் கோஹன், வெளிப்படைத் தன்மையை வலியுறுத்தியபோது, ஃப்யூரின் பிளவு தளங்கள் முன்மொழிவின் ஒரு பகுதியாக இல்லை என்று வாங் கூறினார். “முதல் நாளிலிருந்து, நான் சொன்னேன், ஒரு ஆய்வகத்தில் ஒரு கொரோனா வைரஸை உருவாக்க, தொழில்நுட்ப ரீதியாக அது சாத்தியம். ஆனால், தற்போதைய அறிவினை கொண்டு சார்ஸ்-கோவி-2 கட்டமைப்புக்கு சாத்தியமில்லை,” என்றார்.
செயற்கையாக உருவாக்கப்பெற்ற இயற்கையான வைரஸ்?
இது என்னை விசித்திரமாகத் தாக்கியது, தற்போதைய தொழில்நுட்பத்தில், வைராலஜிஸ்டுகள் சார்ஸ்-CoV-2 மரபணுவைப் பார்த்து, அது வடிவமைக்கப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை என்கிறார்கள். (ஆனால் Zero trace தொழிட்நுட்பம் மூலம் ஒரு வைரஸானது செயற்கையாக உருவாக்கப் பட்டதை மறைக்க முடியும்.) கொரோனா வைரஸ்களை ஆய்வு செய்யும் ஒரு பிரெஞ்சு வைராலஜிஸ்ட்டிடம் இதை நான் குறிப்பிட்டபோது, அவர் சொன்னார், “நீங்கள் உற்று நோக்கினால், ஒரு சிறிய வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி கையொப்பத்தைக் (gene-signature) காணலாம்.” ஆய்வக-கசிவு நிலையினை ஆதரிப்பவர்கள், சீன அதிகாரிகள், WIV, மற்றும் ஷி ஜெங்லி ஆகியோர் தங்களிடம் உள்ள வைரஸ்கள் மற்றும் அவர்கள் செய்த வேலைகள் பற்றி பெரிதாக மூடிமறைத்துப் பொய் சொல்கிறார்கள் என்ற அனுமானத்தில் பெரும்பாலான வாதங்களை செய்கிறார்கள். இயற்கையான தோற்றம் என்ற கட்சியின் ஆதரவாளர்கள் WIV எல்லாவற்றையும் பகிர்ந்துள்ளது என்கிறார்கள். “விஞ்ஞானிகள் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்பது இல்லை” என்றும், “அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்”, என்றும் சார்ஸ்-கோவி-2 இன் தோற்றம் பற்றிய ஒரு நிலைபாட்டை எடுப்பதைத் தவிர்த்த ரெல்மேன் கூறினார்;
அனைத்துப் பக்கங்களிலும் பங்குகள் அதிகம். ஒரு கண்ணோட்டத்தில், வைரஸுக்கு இயற்கையான தோற்றம் இருப்பதை நிரூபிப்பது சீனாவுக்கு இன்னும் மோசமானது. ஆய்வகக் கசிவு ஏற்பட்டால், ஒன்று அல்லது சில, விஞ்ஞானிகள் மட்டுமே விபத்துக்குக் காரணமானவர்கள். எந்த வழியிலும், சீன அரசாங்கம் சுழலும் கோட்பாடுகளின் புயலை விரும்புகிறது, ஏனெனில், அதற்குள் அவர்கள் தங்கள் சொந்த செயல்நோக்கத்தைத் தொடர்ந்து கொண்டு மேலும் பல வழிகளை உருவாக்கலாம்: உ-.ம். அமெரிக்க வீரர்கள் அக்டோபர் 2019 இல் வுஹானுக்கு வைரஸைக் கொண்டு வந்தனர், உலக இராணுவ விளையாட்டுகளின் போது, அல்லது அமெரிக்காவில் மேரிலாந்தின் ஃபோர்ட் டெட்ரிக் நகரில் அரசாங்கம் இந்த வைரஸை தயாரித்தது. அல்லது இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த உணவை அவர்கள் குற்றம் சாட்டலாம். சதி கோட்பாடுகள் அங்கிருந்து கிளம்புகின்றன, அவற்றின் சொந்த பரிணாமத்தில்.
சீனாவிலிருந்து அதிக வெளிப்படைத்தன்மை இல்லாமல், உண்மையைக் கண்டறிவது கடினம். பெய்ஜிங் “உலகளாவிய விசாரணைக்கு இடையூறாக உள்ளது, தகவல்களைப் பகிர்வதை எதிர்க்கிறது மற்றும் அமெரிக்கா உட்பட மற்ற நாடுகளை குற்றம் சாட்டுகிறது” என்று அமெரிக்க உளவுத்துறை கூறுகிறது. “இந்த நடவடிக்கைகள், ஓரளவிற்கு, ஒரு விசாரணையை எங்கு வழிநடத்தும் என்பது பற்றிய சீன அரசாங்கத்தின் சொந்த நிச்சயமற்ற தன்மையையும், சர்வதேச சமூகம் அரசியல் அழுத்தத்தை செலுத்த இந்த பிரச்சினையைப் பயன்படுத்தி அதற்கு ஏற்பட்ட ஏமாற்றத்தையும் பிரதிபலிக்கிறது.” தகவலை முழுமையாகப் பகிர்ந்து கொள்வதையும், மற்றும் WHO-வின் விசாரணையின் இரண்டாம் கட்டத்தில் ஒத்துழைப்பதையும் பெய்ஜிங் செய்ய மறுத்துவிட்டது.
எதையும் பொருள் ஆதாரத்துடன் இன்றைக்கு நிரூபிக்கமுடியாது
இப்போதைக்கு, இரண்டு கோட்பாடுகளுக்கிடையேயான போர் முன்னேறிச் செல்கிறது. சமீபத்தில் ஒரு நண்பர் என்னிடம் சொன்னது போல், “நாம் ஏன் ஒரு பக்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது?” அடுத்த தொற்றுநோய் ஏற்படுவதைத் தடுப்பதற்காக இரண்டு முகாம்களும் வைரஸின் தோற்றத்தைப் புரிந்துகொள்ள விரும்புகின்றன (ஆனால் ஷி, பாரிக், டெஷாக் முகாம் திருடனுக்கு தேள் கொட்டியது போல் அமைதியோ அமைதி காக்கிறது, கிட்டும் தகவல்களில் ஒருங்கிணப்பு இல்லை). ஆனால், இவ்விரண்டு குழுக்களிடையே, சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன.
ஆய்வகக் கசிவு காரணம் என்ற கட்சியின் ஆதரவாளர்கள், உயிர் பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் மனித வெற்றிக்கான ஆசை ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தை கேள்விக்குள்ளாகுவதற்கும், அடக்குமுறை அரசாங்கங்களின் அநீதிகளை அம்பலப்படுத்துவதற்கும், அறிவியலிலும் ஆராய்ச்சி திட்ட நோக்கத்திற்கும் வெளிப்படைத் தன்மையைக் கொணர்வதற்கும் அவர்கள் பாராட்டத்தக்க உந்துதலை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் வைரஸ்-ஆராய்ச்சித் துறை அல்லது ஆய்வகப் பணிகளைச் நேரிடையாகச் செய்யவில்லை. (அதாவது சம்பந்தப்பட்ட துறைகளில் பணியாற்றுபவர்கள் இல்லை.)
இயற்கை-தோற்றம் காரணம் என்ற கட்சியில், பெரும்பாலான மக்கள் WIV போன்ற ஆய்வகத்தில் மற்றும் துறையில் வேலை செய்திருக்கிறார்கள். இயற்கையின் முடிவற்ற பன்முகத்தன்மையால் தொடர்ந்து உந்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் தீர்க்கப்பட வேண்டிய நிச்சயமற்ற நிலைகளுக்கு மாறாக, அறிவியல் முன்னுதாரணத்தை நம்புகிறார்கள். இந்த முகாமில் உள்ள பலர் பாதுகாப்பு, பல்லுயிர் மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றிற்காக தங்கள் தொழில் வாழ்வை அர்ப்பணித்துள்ளனர் மற்றும் பல ஆண்டுகளாக எதிர்காலத் தொற்றுநோய் பற்றி எச்சரிக்கை செய்து வருகின்றனர். நிலப்பயன்பாடு மாற்றம் அல்லது வனப் பிரதேசங்களுக்குள் மனித ஆக்கிரமிப்பு காரணமாக தடுப்பெல்லை மீறல்கள் இயற்கையாக பெரும்பாலும் நிகழ்கின்றன, இது முழு கிரகத்திலும் நடக்கிறது, ஆனால் குறிப்பாக தெற்கு சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் இயற்கையின் அழிப்பு பெருவேகத்தில் உள்ளது என்று அறிவார்கள். அதே நேரம் அவர்கள் DARPA ஆய்வுதிட்டம் பற்றி மறக்க விரும்புகிறார்கள். WIV போன்ற ஒரு ஆய்வகம், ஆய்வுக்கான நிதிஉலக அமைப்புகளால் கொடுக்கப்படாததால், தானாக முயன்று எத்தகைய சோதனைகளையும் செய்திருக்காது என்று எல்லோரையும் நம்பச் சொல்கிறார்கள்.
ஒன்றுக்கு மேற்பட்ட வைராலஜிஸ்டுகள் இயற்கையே சிறந்த உயிரி பயங்கரவாதி என்பதை எனக்கு நினைவூட்டினார். இது மனிதர்களை விட மிகவும் ஆக்க பூர்வமானது. போதுமான நேரத்துடன், பரிணாமம் என்பது நாம் கற்பனை செய்யும் எதையும், நம்மால் முடியாத அனைத்தையும் செய்ய வல்லது. “நீங்கள் ஒரு பிளாட்டிபஸைப் பார்த்தால், அது யாரோ வடிவமைத்த ஒன்றல்ல என்பதை நீங்கள் தெளிவாக உணர முடியும், இல்லையா?” என்று ஆண்டர்சன் கூறினார்.
இருப்பினும், மனிதர்கள் சமன்பாட்டை மாற்றியுள்ளனர். வைரஸ்களை ஜூனோடிக் என்று அழைப்பது அவற்றின் பரிணாம வளர்ச்சியில் மனிதர்கள் வகிக்கும் பங்கை மறைக்கிறது. வனப்பகுதியில், ஈரமான விலங்குகள் சந்தையில் அல்லது ஆய்வகத்தில் எங்கெங்கு நோக்கினும் மனிதர்கள். மனிதர்கள் எல்லாவற்றிலும் தங்கள் கைகளை வைத்திருக்கும் போது சுற்றுச்சூழல்தான் முக்கியத்துவம் என்றால் என்ன பொருள்? இயற்கையின் திகைப்பூட்டும் பன்முகத்தன்மை மனித இயல்பையும் உள்ளடக்கியது.
நியுயார்க்கரில் எழுதப்படாத சில விசயங்கள்:
- ஆண்டர்சன் கூறுவது போல், DARPA ஆராய்ச்சி திட்டத்திற்கு நிதி கொடுக்கப்படாததால், எந்தவொரு சோதனையும் செய்யப்படவில்லை என்று கூறுவதனை ஏற்கமுடியாது. “முன்மொழிவில் விவரிக்கப்பட்டுள்ள எந்த வேலையும் உண்மையில் செய்யப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஆண்டர்சன் வலியுறுத்தினார்.”
இது உண்மையல்ல.
DARPA திட்ட முன்மொழிவு: உயர் மற்றும் குறைந்த ‘தாவல்’ ஆபத்து கொண்ட SARSr-CoV QS க்கான LIPS மதிப்பீடுகளை வடிவமைக்கவும் என்ற 2019-ம் ஆண்டிற்கான ஒரு முது நிலை ஆராய்ச்சி காணக் கிடைக்கிறது. அதனை மேற்பார்வை செய்தது மேடம் ஷி தான். இதனை வெளிக்கொண்டுவந்தது Theseeker268 என்ற இந்திய twitter பயனர். இது ஒரு ஆதாரம், அத்திட்டத்தில் விவரிக்கப் பெற்றுள்ள சில சோதனைகள் நடைபெற்றிருக்க நிறைய வாய்ப்புள்ளது என்பதற்கு.
- இந்திய ஆய்வாளர் மோனாலி, ஷி, வெளியிட்ட SARS-CoV-2 மரபணு பகுப்பாய்வு தகவலிலிருந்தே, ஜீன் கட்டமைப்பு செய்ய பயன்படும் வெக்டார் மரபணுக்களும் கலந்து இருப்பதனை உறுதி செய்துள்ளார், ஒருவேளை, அந்த முதல் 6 நோயாளிகளில் கோவிடிற்கான தடுப்பூசி ஆராய்ச்சி ஏதும் WIV-மேற்கொண்டிருக்கலாம், அதாவது 2019-டிசம்பரிலேயே தடுப்பூசி ஆராய்ச்சி!
- Rossana Segreto என்ற ஆஸ்திரிய ஆராய்ச்சியாளர் மூன்று விஷயங்களை நிருபித்துள்ளார்
RaTG13, MP789, and RmYN02 are the strains closest to SARS-CoV-2, ஆனாலும் இவைகளின் மரபணு பகுப்பாய்வினையும், மீண்டும் செய்ய வேண்டுமென்கிறார், ஏனெனில் இம்மரபணு பகுப்பாய்வில் முழுவதும், வெறொரு மரபணு கலந்துள்ளது. இவ்வாறு பகுப்பாய்வு செய்கின்ற அனைத்து மரபணுக்களிலும் வேறு ஏதாவது மரபணு கலந்திருக்கும் என்று ஷி-சொல்வாரேயானால், அத்தகைய ஆய்வகம் தொடர்ந்து இயங்கவேண்டுமா?
- பீட்டர் டெசாக், ஒரு 20 வைராலஜிஸ்டுகளுடன் சேர்ந்து, பிப்ரவரி 2020-ல் லான்செட்டிலும், ஆய்வக-வெளியேற்றம் என்று ஒன்று நடக்கவேயில்லை என்று எழுதி, அதில் conflict of interest எல்லாவற்றினையும் மறைத்து, லான்செட்டினை அசிங்கப்படுத்தி, தற்பொழுது லான்செட் எல்லோரிடம் போய் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறது.
- ஒரு போஸ்ட்-டாக் ஆய்வாளர் சார்ஸ்-2 ஆய்வகத்தில் உருவாக்குகின்ற (furin fusion with zero trace or marker-free) வீடியோ கிடைத்தாலும் அதை அந்தர்பல்டி ஆண்டர்சனை ஒத்துக் கொள்ளச் செய்வது கஷ்டம்தான், ஏனெனில் இது இயற்கை என்று சொல்பவர் அவர். இயற்கையில் இத்தகைய வைரஸ்கள் இருக்கும் என்பது உண்மையானால், அதனை ஆய்வகத்தில் உருவாக்க எதற்காக நிதி கேட்டார்கள் என்றுதான் கேள்வி. அதுவும் தடுப்பு மருந்தை வவ்வால் குகைகளில் பீய்ச்சுவதெல்லாம், சுத்தமான மடத்தனம்.
- 13/10/2021, அன்று WHO, 26 பேர் கொண்ட, உலகளாவிய புதுக் குழுவினை (SAGO; Scientific Advisory Group for the Origins of Novel Pathogens) உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளது. அதில், முதல் குழுவிலிருந்த ஆறு நபர்கள் தொடர்கிறார்கள். (Koopmans, Fischer, Watson, Dedkov, Nguyen, Farag). இதில Drosten, லான்செட் இதழில் வந்த இயற்கைத் தோற்ற விளைவு என்ற கருத்து அறிக்கையில் கையொப்பமிட்ட நபர். மற்றொருவர், 2020-ல் NIH-EHA உதவியுடன் ஆராய்ச்சி செய்பவர் [multi-million-dollar NIH grant to EcoHealth Alliance (Wacharapluesadee; NIH grant U01-Al151797]. An extremely serious of conflict of interest problem still continues in WHO. This SAGO has Dr Yungui Yang from BIG of Chineese Academy of Science. CAS is one of the first who labeled [lab-made/leak] as a conspiracy theory. Any big data genome analyst? ஆனால், எவனும் விட்டுப்போகக் கூடாதென்று, உலகம் மொத்த்தினையும் பாண்டி கோவில் கிடாவெட்டுக்கு லாரியில் கூட்டி போகிற மாதிரி, சீனாவுக்கு போனால், இங்கே மின்சார்ப பற்றாக்குறையினை சமாளிக்க டேட்டா சர்வர் எல்லாவற்றையும் அமர்த்தி வைச்சிருக்கோம். போய்விட்டு, அடுத்த வருசம் வாங்கன்னு சொல்லப்போறான். அரேபாய், உங்களிடம் நிலக்கரி இருக்கா மின்சாரம் எடுக்கன்னு இந்தியாகாரனிடம் கேட்பார்கள். வந்ததிற்கு, பாங்கோலின்-65-ம், பிளாட்டிபஸ் தேங்காய் கூட்டும் சாப்பிட்டு போங்கன்னு சொன்னால், இந்திய பார்வையாளரைத் தவிர எல்லோரும் விழாவினை்ச் சிறப்பிக்க உட்கார்ந்துவிடப் போகிறார்கள். ஆதலால், மீண்டும் இக்குழு உருப்படியாக எதுவும் கண்டறியாமல் போவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
- 21 அக்டோபர் 2021 அன்று NIH, EHA-யிடம் தங்கள் நிதியுதவியால் நடைபெற்ற ஆராய்ச்சியில் உருவான அனைத்து (ஆராய்ச்சி இதழில் வெளியிட்ட, வெளியிடாத) தரவுகளையும் 5 நாட்களுக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுள்ளது. அதாவது GoF-ஆராய்ச்சி நடைபெற்றுள்ளதாவென்று கண்டறியப் போகிறார்களாம்!.
- (அ) Dr. Gladys Kalema-Zikusoka is CEO of an NGO Conservation through Public Health from Uganda. (ஆ) Dr. Normand Labbe is a biosafety inspector at the Public Health Agency of Canada. என்ற இருவரை்க் கூடுதலாக கடந்த நவம்பர் 9ம் நாள், 2021 SAGO-குழுவில் WHO, சேர்த்துள்ளது. ஆனால், பிரச்சனைக்குரிய மற்ற நபர்கள் யாரும் நீக்கப்படவில்லை.
இந்த மொத்தக் கதையிலும், நம்பிக்கையான சிலவிஷயங்கள் நடந்துள்ளன. முதலாவது, DARPA திட்டத்தின் விளைவுகளை யூகித்து, அத்திட்டத்தைக் கைவிடச் சொன்ன திட்ட ஆய்வாளர்கள்/மதிப்பீட்டாளர்கள், மற்றும் அத்திட்ட வரைவு வெளிவரக் காரணமாயிருந்த ஒரு whistle blower. எந்த வைரஸ் வந்தாலும் மானுடம் ஜெயிக்கும்.
*** *** ***
[குறிப்பு: பச்சை நிறத்தில் கட்டுரையில் எழுதப்பட்டவை நியூயார்க்கர் பத்திரிகையில் கொடுக்கப்பவில்லை.]
மூலக் கட்டுரையை இங்கே காணலாம்:
https://www.newyorker.com/science/elements/the-mysterious-case-of-the-covid-19-lab-leak-theory
நியூயார்க்கர் பத்திரிகையில் எழுதியவர் கரோலின் கோர்மான் (Carolyn Kormann)
தமிழில்: வே. சுவேக்பாலா Ph.D.
உசாத்துணை
- Zhou, P., Yang, XL., Wang, XG. et al. Addendum: A pneumonia outbreak associated with a new coronavirus of probable bat origin. Nature 588, E6 (2020).
- Menachery, V., Yount, B., Debbink, K. et al. A SARS-like cluster of circulating bat coronaviruses shows potential for human emergence. Nat Med 21, 1508–1513 (2015).
- Hu B, Zeng LP, Yang XL, Ge XY, Zhang W, Li B, Xie JZ, Shen XR, Zhang YZ, Wang N, Luo DS, Zheng XS, Wang MN, Daszak P, Wang LF, Cui J, Shi ZL. Discovery of a rich gene pool of bat SARS-related coronaviruses provides new insights into the origin of SARS coronavirus. PLoS Pathog. 30 13- (2017).
- Vineet D. Menachery, Boyd L. Yount, Amy C. Sims, Kari Debbink, Sudhakar S. Agnihothram, Lisa E. Gralinski, Rachel L. Graham, Trevor Scobey, Jessica A. Plante, Scott R. Royal, Jesica Swanstrom, Timothy P. Sheahan, Raymond J. Pickles, Davide Corti, Scott H. Randell, Antonio Lanzavecchia, Wayne A. Marasco, Ralph S. Baric. SARS-like WIV1-CoV poised for human emergence. Proceedings of the National Academy of Sciences 113, 3048-3053 (2016)
- https://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(20)30418-9/fulltext
- https://onlinelibrary.wiley.com/doi/10.1002/bies.202100137
- https://onlinelibrary.wiley.com/doi/10.1002/bies.202100015
- https://onlinelibrary.wiley.com/doi/10.1002/bies.202000240
- https://drasticresearch.org/
- https://www.frontiersin.org/articles/10.3389/fpubh.2020.581569/full
- https://www.preprints.org/manuscript/202005.0322/v2
- https://www.who.int/news-room/articles-detail/public-notice-and-comment-on-proposed-new-scientific-advisory-group-for-the-origins-of-novel-pathogens-(sago)-member.
___________
பிற்சேர்க்கை: கடந்த அக்டோபர் 10, 2021 அன்று, பழைய DRASTIC-உறுப்பினர்களில் ஆராய்ச்சி செய்து, அறிவியல் இதழ்களில் வெளியிட்டுள்ள/வெளியுடம் வாய்ப்புள்ளவர்கள் சுமாராக 13-பேர் (Rossana Segreto (@Rossana38510044, Italy, Germany, Norway), TheSeeker (@TheSeeker268, India, Adrian Jones (@humblesci, Australia), Yuri Deigin (@ydeigin, Canada, Russia), Francisco de Asis (@franciscodeasis, Spain), , Rodolphe de Maistre (RdeMaistre, France), Kevin McH (@KevinMcH3, USA), Charles Rixey (@CharlesRixey, USA), Monali C. Rahalkar (@MonaRahalkar, India), Rahul A. Bahulikar (@BahulikarRahul, India), TheEngineer2 (@Engineer2The, Canada), Daoyu (@Daoyu15, Australia), António Duarte (@Antgduarte, Portugal) மட்டும், புதியதாக ஒரு குழுவினை ஏற்படுத்தியுள்ளார்கள். https://drasticscience.com/#team [கோவிட்-19 ஐ ஆய்வு செய்யும் அர்ப்பணிப்பு ஆராய்ச்சி மற்றும் அறிவியல் குழு – என்று பெயரிடப்பட்டுள்ளது].
பழைய குழுவின் மின்னஞ்சல் கணக்கு மற்றும் இணையதள நிர்வாக உரிமைகளை ஒரு உறுப்பினரால் அங்கீகரிக்கப்படாமல் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, அசல் DRASTIC நிறுவன உறுப்பினர்கள் குழுவை அர்ப்பணிக்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் கோவிட்-19 ஆய்வு செய்யும் அறிவியல் குழு என மறுபெயரிட்டு, தேவைக்கு ஏற்ப புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளனர்.
வைரஸ், சார்ஸ்-1, கோவி-2 போன்றவைகளைப் பற்றிய விவரங்கள் ஒரு தொகுப்பாகவும், புரியும் விதத்திலும் எழுதப்பட்டுள்ள ஆழமான கட்டுரை. அருமையாக மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் மட்டுமே 128 வகை வெளவால்கள் இருக்கின்றன. உலகில் 1200. இந்தப் பெருந்தொற்றுக்குப் பின் அவைகளை எதிரிகளாகப் பார்க்கத் தொடங்கி விட்டோம். ஆனால் அவை நம் நண்பர்களே! வயலில், புல் வெளிகளில், காட்டில் இருக்கும் பயிர் நாசம் செய்யும் உயிர்களை அவை உட்கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கின்றன. கொசுக்கள் ஒழிப்பிலும் முக்கிய பங்காற்றுகின்றன. நாகாலாந்தில் உள்ள போம்ர் குழுவினர் அறுவடை விழாவின் ஒரு கொண்டாட்டமாக வெளவால்கள் இருக்கும் குகையில் தீமூட்டம் போட்டு அவைகள் வெளியே வரும் போது பிடித்து கொன்று தின்று விடுகிறார்கள். எனினும் அவர்களுக்குத் தொற்றுக்கள் ஏற்படுவதில்லை. பழங்குடியினரின் வாழ்வியல் முறைகளை ஆவணப்படுத்தி ஆய்வுகள் மேற்கொண்டால் ஆய்வகங்களில் தொற்றுக் கிருமியை உண்டாக்கி பின்னர் அதன் மரபணுவை ஆய்வதை குறைக்க முடியும்.
சூப்பரானது மிக ஆக்கப்பூர்வமான உயர்ந்த வேலை/உயர்ந்த வேலை மிக அருமையான வேலை சுப்ரீம் மிக சுவாரசியமானது மிக நேர்த்தியான அற்புதமான வேலை நன்றாக யோசித்து நன்றி என்ன ஒரு ஸ்டைலான காகிதம்!