மேலெழுந்தபோது
குப்பைகூளங்களைத்
திமிறித் தள்ளிவிட்டு
குதூகலமாய் எழுந்து
கொஞ்சமாக உயர்ந்திருந்தது
அந்தச் செடியின் ஜீவன்
வானம் பார்க்கும் இளமிலைகளில்
தீரா நடனமாடிக்கொண்டிருந்தது
குருத்தொன்று தலையில்
பொங்கியெழத் தயாராய்.
தன்னைத் தீண்டப்பார்க்கும்
தென்றலின் விஷம விரல்களை
மெல்ல விலக்கியது செடி
சீண்டும் ஸ்பரிசமேபோல்
தன்மேல் படரும் சூரியகிரணங்களை
காணாததுபோல் இருந்தும்
மெல்ல மெல்ல மேல்வந்து
ஒரு நாள் உன்னைத் தொடுவேன்
எனத் தனக்குள் சொல்லிக்கொண்டது
இவ்வளவையும் நான்
ஆசையாக அள்ளிக்கொண்டிருக்கும்
அபூர்வ வேளையில் நல்லவேளை
யாரும் பின்னால் வந்து நின்று-
இந்தச் செடியின் இலையை
அரைச்சுக் குடிச்சா
இடுப்புவலி போயிரும் சார்
என்று இன்னும் சொல்லவில்லை

முகநாடகம்
சரியாக அணிந்துகொள்ளவில்லை
என்பதான திடீர் உணர்வினால்போல்
முகக்கவசத்தை மெல்ல அவிழ்த்து
மீண்டும் போட்டுக்கொள்வதாய்
ஒரு தருணத்தை அமைத்து
எதிரே கடக்கப்போகும்
எனக்குன் தளிர் முகத்தை
காண்பித்து மறைத்த
உன் குறுநாடகம்
கொரோனாவின் பின்புலமின்றி
சாத்தியமாகியிருக்குமா என்ன?