ப. ஆனந்த் கவிதைகள்

  1. ஜீபூம்பா

எப்போதும்
எதையேனும்
சட்டென ஒளித்துவைத்து
ஏமாற்றவே
பயன்படுத்திக் கொண்டிருந்தேன்
அம்மந்திரத்தை அவனிடம்..
தாங்கொணா துயரிலிருந்த
பொழுதொன்றில்
ஏமாற்றாமல் மாயம் செய்தது
அருகில் வந்து மழலையாய்
மகன் சொன்ன
ஜீபூமா..

2. தூங்கும்வரை

அம்மா!
அம்ம்மா!!
அழைத்து அழைத்துப் பார்த்தான்..
எல்லா விளக்குகளையும் அணைத்து
எந்த சப்தமும் நேராது பார்த்துக்கொண்டு
அவனை தூங்கவைக்க முயன்றதில் தோற்று
தூங்கியிருந்தாள் அம்மா அயர்ச்சியில்..
ஜன்னல் வழி வந்த
மெல்லிய வெளிச்சத்தில்
மின்விசிறியை
சுவர் கடிகாரத்தை பார்த்துக்கொண்டு
இருபுறமும் புரண்டு ஆடிக்கொண்டு
பால்புட்டியை தானே எடுத்து குடித்தபடியே இருந்தவன்
தூங்கும்வரை கடந்த
அமைதியான சில நிமிடங்கள்
அம்மாவாய் இருந்தான்
அவள் உறக்கம் கலையாமல்
பார்த்துக்கொண்டதில்..

3 Replies to “ப. ஆனந்த் கவிதைகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.