கி. ரா. – அஞ்சலி

தமிழ் எழுத்தாளர்களில், நான் முதன் முதல் எனது ஆதர்சமாகக் கருதியது கி.ராஜ நாராயணன் அவர்களைத்தான். ஒரு விவசாயியாக இருந்துகொண்டு தமிழ் எழுத்தில் சாதனையை செய்த அவரையே ஒரு விவசாயி மகனான நான், எனது கதாநாயகனாக அவரை வரித்துக்கொண்டேன். அவர் எழுதிய புனைவுகள் என்று இல்லை, அவர் தொகுத்த நாட்டுப்புறக் கதைகள், நாட்டார் விளையாட்டு, கரிசல் அகராதி என அன்னம் பதிப்பகம் வெளியிடுவதை ஒன்று விடாமல் வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். நான் முதுகலை இரண்டாம் வருடத்தில் (1986-1987) இருந்தேன். அவரை புதுவைக் கல்லூரியில் நாட்டாரியல் நடத்தும் பேராசிரியராக பதவி கொடுத்து அமர்த்துவதாக சொன்ன செய்தி, வளரும் வயதில் ஊக்கம் கொடுத்த முக்கியமான விஷயங்களில் ஒன்றாக அமைந்தது.