அலை தீண்டாத மணல்
அங்கே நான் அமர்வதில்லை
அதில் ஒரு பிடிப்பு இல்லை
ஒரு அலை தீண்டிப் போனபின்
மறு அலை வந்து சேரும்முன்
வானம் கொஞ்சம் மிளிர்கிறது
அதன்மீதே
நான் அமர்கிறேன்
அங்கேதான்
எனது வீட்டை கட்டுகிறேன்.
அதுவே இன்னும்
உறுதியாய் இருக்கிறது

2
நிச்சலனமாய்
ஏந்திக்கொள்கிறது
நீண்ட மடி
பெருந்துயரென
வழிவிட்டு வழிவிட்டு
வருகிறது
கரைதட்டி எழவியலா
அலைகள்

3
மணலில்
படகில்
இருப்பவன் பார்க்கிறான்
தூரக்கடலின் பேரோல விழுங்கலை
தொடும்முன் கரையும்
நீண்ட சொற்களை
துழாவுகிறான்
திசைகளை
ஒளியை செலுத்தி
மேலெழுகிறான்
கடக்கிறான்
துளியை
***