காலை

பறவையின் ஒலியில்
நான் உட்பட
காற்றில் கலந்து போனேன்
ஈரக் காற்றில்
விடிந்த பொழுது
இரவைக் குடித்து முடித்திருந்தது
குளித்து முடித்த
கூட்டமான இலைகளைச்
சூடிய மரங்கள் திம்மென்று
என்னை நட்டு வைத்தது
ஓசையிலே என்
ஞாபகத்தின் கீற்று
கடிகாரத்தின் முட்களென
எனது காலத்தைச் சொல்லியது
நானும் நானும் நானுமென
அடித்துக் கொள்ளும் இதயம்
மறைந்த மரகதம்
வரைந்த ஓவியத்தில்
உயிர் பெற்றது
கலை இனி
வழியற்றவன்

வழியுமில்லை விருப்பமுமில்லை
இருக்கும் பாதையில் இருப்பது
அவமானமும் அர்த்தமின்மையும்
நீண்டகாலமாய் சுமக்கும்
ஒருவனின் இதயத்தில்
தண்ணீரின் கலங்களில்
படும்படி வீசும் காற்றில்
ஒரு கத்தியை நான் பார்த்தேன்
ஒரு காலத்தின்
மனிதர்களுள் நானும் ஒருவன்
ஞாபகத்தில் இழந்த
பொழுதுகளில் வாழும்
ஒரு ஆளினுள்
மறைந்திருக்கும் நான்
இன்னொருவரின் கண்ணாடியில்
தெரிகிறேன்
பிரதியான அடுக்குகளிலிருந்து
தனி மனித சரித்திரத்தை
கணத்துக்குக் கணம்
படிக்கிறேன்
அந்தி

எத்தனை பேசினாலும்
புரிந்தது போக
மிச்சம் நிறைய இருந்தது
சொல்லில் பொருள்
கொண்ட காலம்
கடந்துபோன நிலையில்
ஆதி மனிதனின்
கவலை இங்கே எடுபடவில்லை
ஒன்றை இருவர் பேசினால் இரண்டாகிறது
இலைகளின் சலனத்தில்
காற்றின் கட்டளை
மௌனத்தின் ஓசையில்
என் மனம் சொல்லும் கதையில்
அந்தியின் பீதி இயற்கையானது
இருள் நிரந்தரமாக
ஒரு நாள் ஓய்வெடுத்துக்கொள்கிறது
கடந்து போனதை
நாட்காட்டியில் குறித்த குறிப்புகள்
இறந்து போன எனது தினங்கள்