கேட்கத் தவறிய கிணற்றுத் தவளையின் குரல்

சக்திவேல் கொளஞ்சிநாதன்

அடித்து நொறுக்கிய அன்றைய மதிய நேரத்து பெருமழை அப்போதுதான் சற்று ஓய்ந்திருந்தது. மோட்டார் கொட்டகையின் கயிற்றுக்கட்டிலில் படுத்துக்கொண்டு ஓலைக்கீற்றின் மழை ஒழுகலை ரசித்திக்கொண்டிருந்த நான் எழுந்து வீட்டிற்கு கிளம்பலானேன். இந்தத் திடீர் மழையினால் அரைமணிநேரம் மோட்டார் கொட்டகைக்குள் சும்மாவே முடங்கி இருக்க வேண்டியதாயிற்று இன்று. தினமும் இந்த பழைய மோட்டாரை வைத்துக்கொண்டு நாலு ஏக்கர் நெல் வயல் முழுமைக்கும் நீர்ப்பாய்ச்ச காலை பத்துமணிக்கு ஆரம்பித்தால் மதியம் இரண்டு மணியாகிவிடுகிறது. வழக்கமாய் மதியம் பன்னிரெண்டு மணிக்கு ஆள்மாற்றிவிட வரும் மகன் முருகேசும் இன்று வராததால் தனியாளாய் இருந்து மொத்தமாய் பார்க்கவேண்டியதாய் ஆயிற்று. மூன்று வருடம் முன்புவரை தனியாளாய் பார்த்த வேலைதான் இது என்றாலும், வயதேறிவிட்டதால் இப்போது கொஞ்சம் களைப்புத் தெரிகிறதோ என்னோவோ என்று தோன்றியது.

எழுந்து வெளியில் வந்து கிணற்றங்கரையில் இருக்கும் வாய்க்கால் மேட்டில் கால் பதித்து கைகால் அலம்பிக்கொண்டிருந்தேன். மழைநீர் கலந்து வழிந்தோடிக் கொண்டிருந்த வாய்க்காலில், மண்வாசமும் மழைவாசமும் குழைந்திழைந்து ஓடிக்கொண்டிருந்த நீர்கொண்டு என் முகமும் கழுவி முடித்தேன். விவசாயிக்கு மட்டுமே கிடைக்கும் இந்த இயற்கையின் வாசத்தை நுகரும்போதுதான் உணர்ந்தேன் மண்ணும் மழையும் மட்டுமே ஒன்றுடன் ஓன்று இரண்டற கலக்கும் தன்மை கொண்டதென்று. நிற்பதென்னவோ கரிசல் மண் என்றாலும் எனக்கு எப்போதோ படித்த “செம்புலப் பெயல்நீர்” செய்யுள் ஏனோ நினைவுக்கு வந்தது.

பொழிந்தது பெருமழையாயிற்றே, கிணற்றின் நீர்மட்டம் சற்றேனும் உயர்திருக்குமோ எனும் ஆவலில், உடம்பை மட்டும் சற்று ஒருக்களித்தபடி கிணற்றை எட்டிப்பார்த்தேன். மேல்மட்டச் சுவரேதும் இல்லாது தரைமட்டத்தில் இருக்கும் 80 ஆண்டுகால விவசாயக் கிணறு அது. என்னதான் ஆண்டுக்கு இருமுறை இறங்கி சுத்தம் செய்தாலும் உட்புற கருங்கற் சுவர் முழுக்க ஆங்காங்கே புதர் மண்டியபடி தான் கிடக்கும். கிணற்றின் நீர் இருப்பில் பெரிதாய் மாற்றம் தெரியாதபோதும் கிணற்று நீர் சற்றே குழம்பி இருந்தது மட்டும் தெளிவாக தெரிந்தது. எப்போதும் வாய்க்கால் மேட்டில் முகம் கழுவி கிணற்று நீரில் எட்டிப்பார்க்கும் வேளையில் தெளிவாய் தெரியும் முகம், இப்படி மழைவெயில் வேளையில் மட்டும் தெளிவற்றுதான் இருக்கும். கிணற்றில் முகம் தெரியாததாலோ என்னவோ இன்று மட்டும் கூடுதலாய் கணநேரம் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன் கிணற்றை.

ஊரில் இந்தக் கிணற்றில் மட்டும்தான் நீர்மட்டம் வரையில் இறங்கிச் செல்ல படிகள் இருக்கும். உட்புற சுவரில் நீட்டிக்கொண்டிருக்கும் வரம்புகள் ஏதுமற்ற அகண்ட கருங்கற் படிகள். கிணற்றின் சுவர் எழுப்பும்போது படிக்கற்கள் மிச்சம் பிடிக்க நினைத்தானோ என் பாட்டன் என எண்ணும் வகையில் ஒவ்வொரு படிக்கும் சரியாய் ஓரடி இடைவெளி கொண்டதாக இருக்கும் அவைகள். கொஞ்சம் எட்டி எட்டித்தான் எட்டு வைக்கமுடியும் ஒவ்வொரு முறை ஏறியிறங்கும் போதும். கிணற்றின் படிகளை பார்த்துக்கொண்டிருந்த வேளையில் தான் முதலாம் படியில் அந்த விநோதத்தை கண்டேன்.

முதலாம் படியில் கொத்தாய் கிடந்தன பத்துப் பன்னிரண்டு தவளைகள். ஒரே படியில் இத்தனை தவளைகளா, எப்படி வந்தன இத்தனையும் இங்கே? மழையில் வழுக்கி படியில் விழுந்ததா, இல்லை அந்த படிகட்டு பக்கச் சுவற்றில் பொருந்தியிருக்கும் இடைவெளியில் நெடுநாளாய் இருக்கும் பொந்தில் இருந்து வெளிவந்ததா தெரியவில்லை. ஆனால் அவை அனைத்தும் மேலே ஏற ஏதோ கூட்டுப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தது மட்டும் முதல் பார்வையிலேயே பட்டெனப் புரிந்தது. நமக்கு வேறென்ன வேலை, கொஞ்சம் என்ன தான் நடக்கிறதென்று பார்த்துவிட்டுப் போவோம் என்றெண்ணி காய்ந்த முகத்தை திரும்பத் திரும்ப துடைத்தபடியே தரையில் அமர்ந்தேன். 

ஒரு ஏழெட்டு தவளைகள் ஒன்றின் மீது ஒன்றாக ஏறி நிற்க, ஒரு தவளை அவற்றின் மீதேறி வெளியில் தவ்வும் முயற்சியை போல் தெரிந்ததது. அதுதான் நடக்கிறது என நான் ஊர்ஜிக்கும் நொடியில்தான் இன்னொரு விஷயமும் அரங்கேறியது அங்கே. கீழே நின்றிருந்த ஏதோ இரண்டு தவளைகள் அடியில் இருந்த ஒரு தவளையின் கால்களை பிடித்திழுக்க, தவளைகளின் நம்பிக்கையோடு சேர்த்து முயற்சியையும் ஒருங்கே சரித்து விழுந்தது. அட இது நாம் ஊர்வழக்கில் கேள்விப்படும் பொறாமை தவளையின் கதையாயிற்றே, நிஜத்திலும் கூட இப்படியெல்லாம் நடக்குமா? வியப்பாகவே இருந்தது எனக்கு. தொடர்ந்து பார்க்க மீண்டும் அதே முயற்சி, அதே செயல், அதே முடிவு. ஒவ்வொரு முறை சரியும் போதும் சரிந்த தவளைகளுக்குள் ஒரே கூக்குரல். அனைத்தும் கூடி காலை வாரிவிடும் தவளைகளிடம் சண்டையிடுவதாக தோன்றியது எனக்கு. இருந்தும் அந்த இரண்டு தவளையும் அதையே திரும்பத்திரும்ப செய்துகொண்டிருந்தது. இதை உற்று நோக்கிக்கொண்டிருந்த எனக்கு, ஒரு கட்டத்தில் கோபம் தலைக்கேறி என்னையறியாமல் கத்திவிட்டேன்.

“ஏ முட்டாத் தவக்களையே, இப்டி அவங்க முயற்சிய தடுக்குறியே அறிவில்ல ஒனக்கு?”

என் குரல் கேட்டு அந்த இரண்டு தவளையும் என்னை ஏறெடுத்து பார்த்தது. பார்த்ததோடு மட்டுமில்லாது அதில் ஒரு தவளை கோபத்தில் பெருங்குரலெடுத்து சொன்னது,

 “ஒனக்கு இதல்லாம் புரியாது, ஒன் வேலைய பாத்துகிட்டு போ..!”

எனக்கு ஒரே ஆச்சர்யம். தவளைகள் பேசுமா? என் கிணற்றில் மட்டுமா இல்லை என் ஊர் முழுக்க இப்படித்தானா? இல்லை இதேதும் அசரீரியா? புரியவில்லை எனக்கு. ஒருவேளை காலங்காலமாக தவளைகள் பேசுமோ? நாம் தான் அவைகளிடம் இதுவரையில் வாயெடுத்து பேசியதில்லையோ? இருக்கவே இருக்காது, நமக்குத்தான் அது பேசியது போன்றொரு பிரமை தோன்றியிருக்கும். மீண்டும் ஒருமுறை பேசிப்பார்த்தால் தெரியும்.

“அப்ப நீ பண்றதெல்லாம் சரின்னு சொல்ல வர்றியா?” என்று கேட்டுப் பார்த்தேன் கோபமாக.

“சரி நீதான் நாட்டாமயா இருந்து கேட்டு ஒரு ஞாயத்த சொல்லிட்டு போ பாப்போம்” என்றதது. 

ஆம் தவளையே தான் பேசியது. இருந்தும் என்ன ஒரு எகத்தாளம் அதற்கு. தற்குறித் தவளை என்பார்களே ஒருவேளை அது இதுதானோ? எனக்கு இப்போது தவளை பேசுகிறது என்ற ஆச்சர்யம் கடந்து, கேவலம் ஒரு தவளை நம்மை ஏளனம் செய்கிறதே என்ற எண்ணம் என்னை மேலும் அகங்கொள்ள வைத்தது. அப்படியொரு கோபமும், அப்படி என்னதான் சொல்கிறது பார்ப்போம் என்ற ஆர்வமும் ஒருங்கே சேர,

“உம்.. சொல்லு ஒன் ஞாயத்த, என்னனுதாங் கேப்போம்” என்றேன்.

அப்படிச் சொல்லி முடித்த கையோடு எனக்கு இதுதான் தோன்றியது. ஒன்று, இதுவரை யாரும் கேட்டிராத தவளையின் குரலை கேட்டுக் கொண்டிருக்கிறேன் நான். மற்றொன்று, நாம் கேட்டுப் பழக்கப்பட்ட ஒரு கதையின் மறுபக்க காரணத்தை கேட்க உள்ளேன் நான். சரி அப்படி என்னதான் நியாயம் சொல்லிவிடப் போகிறதென்று பார்க்கும் தோரணையில் முழங்கை முழங்காலில் பதிய கன்னத்தில் கைவைத்து இன்னும் அழுத்தமாய் அமர்ந்தேன் நான். ஆரம்பித்தது அதுவும் அதன் பக்க கதையை,

“நாங்க இங்க பன்னெண்டு பேர் இருக்கோம்..,” 

பார்த்த மாத்திரத்திலேயே சரியாய் தான் எண்ணிக்கையை கண்டுபிடித்துள்ளேன் நான் என்று பெருமையாக இருந்தது எனக்கு. மேலும் அதுவே தொடர்ந்து பேசியது,

“எல்லாரும் குனிஞ்சி ஒருத்தன் மேல ஒருத்தன் நின்னாலும் எகிறி குதிச்சி ஒருத்தன் மட்டுந்தான் வெளிய போவ முடியும். சரியா அவ்வளவு பேர்தான் இங்க இருக்கோம்.”

“அது நீயா இருக்க முடியலன்னு கோவம் உனக்கு” என்று நான் நக்கலாய் கேட்டாலும், அது அதீத நிதானத்தோடே பதில் சொல்லியது,

“அது நானாவே இருந்தாலும் மீதி பதினோரு பேரோட கதி? பத்துப் பதினொராவதா இருக்குற ஒருத்தனால நிச்சயம் அவ்ளோ தூரம் எகிறிக் குதிக்க முடியாது. ஒருத்தன் வெளிய போன பின்னால இங்க மிச்சம் இருப்பவங்களோட கூட்டு ஒயரம் இன்னும் கம்மியாயிடும் இங்க.”

சொல்வது சற்றே சரியென தோன்றினாலும் இன்னும் அது சொல்வதை எல்லாம் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என் மனதுக்கு. அதனால்,

“எப்டியோ யாரும் வெளிய போவ முடியாம இருக்கறதுக்கு ஒருத்தனாவது வெளிய போவலாம்ல. இப்டியே எல்லாரும் கெணத்து தவக்கலையா கெடந்து சாகணும்னு சொல்றியா?”

விட்டுவிடுமா அந்த முரட்டுத் தவளை. முன்னைவிட கூடுதல் வேகத்தில்,

“அது நீயா புரிஞ்சிக்கிட்டது. நாஞ் சொல்ல வந்தது அதில்ல”, என்று சொல்லி ஒரு முறைப்பு முறைத்துவிட்டு மீண்டும் அதுவே தொடர்ந்தது.

“தெறமையுள்ள ஒருத்தன் ஏதேதோ சொல்லி மேல ஏற, மத்தவனல்லாம் என்ன நடக்குதுன்னே தெரியாம அறியாமையில பணிஞ்சி நிக்கறது தான் சரியான பண்பா?”

அந்த ‘பண்பு’ என்ற வார்த்தை என்னை என்னவோ யோசிக்கவைத்தது. தவளைகள் என்றாலும் அதற்கும் பண்பு என்றொன்று இருக்கும் தானே. இருந்தும் விடாமல் அடுத்தக் கேள்விக்கணையை தொடுத்தேன், 

“அப்ப அந்த ஒருத்தன் மேல வர்றது கூட புடிக்கல உனக்கு?”

“ஒரே ஒருத்தன் மத்தவங்க முதுவுல ஏறி மேல போறது சரியா? இல்ல யாரும் யாருக்கும் முதுவ காட்டாம எல்லாரும் வெளிய வர்றது சரியா? எது சரின்னு நீயே சொல்லு பாப்போம்”, என்று கேட்டதது மிகவும் அழுத்தமாக.

இந்தமுறை அதன் குரலில் தெரிந்த அதீத திடத்தன்மை அது தீர்கமானதொரு முடிவில் இருந்ததை மட்டும் பளிச்சென பறைசாற்றியது. அதுபோல் அதன் கேள்வியிலும் அப்படியொரு தெளிவிருந்தது. மேலே வருவது, வெளியே வருவது, எது முக்கியம்? ஒருத்தரா, எல்லோருமா, எது நியாயம்? நல்ல கேள்விகள் தான் என்று யோசித்தபடியே என் அடுத்தக் கேள்விக்கு நகர்ந்தேன். இந்தமுறை ஏனோ என்குரலின் சத்தம் வெகுவாக தணிந்திருந்தது.

“அப்ப வெளிய வர்ற வழி இருக்கு உன்கிட்ட?”

“அதுக்குதா காலப்புடிச்சி இழுக்குறன், ஆனா யார் கேக்குறேங்குறா அத?”

இவ்வளவும் யோசித்திருந்த இந்தத் தவளை நிச்சயம் வெளியே வரவும் ஏதோவொரு வழி யோசித்து வைத்திருக்கும் என்பது பரிட்சயமாகிப் போனது எனக்கு. கொஞ்சம் கொஞ்சமாய் அந்தத் தவளை என்னை தன் ஆளுகைக்குள் இழுத்துக்கொண்டிருக்கிறது. அப்படி என்னதான் வழி சொல்லுப் போகிறது கேட்போம் என்ற ஆர்வம் மேலும் அதிகமாகிவிட்டது எனக்கு. அந்த ஆர்வத்தோடே கேட்டேன்,  

“சரி என்ன பண்ணி வெளிய வர்றதா இருக்க, அதயுஞ் சொல்லு கேப்போம்.”

தண்ணீர், மண், இருட்டு என அனைத்திலும் வாழப் பழகிய பண்பு கொண்டது தான் ஒரு தவளை. ஏற்கனவே தவளைகளின் பண்பு பற்றி கேள்வியெழுப்பிய இந்தத் தவளை இன்னும் திண்ணமாய் இப்போது தொடர்ந்தது,

“தோ.. இந்த படிக்கட்டுக்கும் செவத்துக்கும் நடுவுல ஒரு பொந்து இருக்குது பாரு, நேரா மண்ணுக்குள்ள போவுது அது. மழைபேஞ்சி நல்லா நனஞ்சி போயிருக்குற ஈர மண்ணு வேற அது. என்னா ஒரு ஓரடி இருக்குமா அதுவழியா தரையத் தொட. எல்லாரும் உள்ளபோயி ஆளுக்கு கொஞ்சம் கொஞ்சமா மண்ண சரிச்சு வழி பண்ணுனா மேல போவ பாத வருமில்ல. யாரும் யாருக்கும் அடிபணியாம ஆளாளுக்கு தம்பங்கு வேலைய செஞ்சா எல்லாரும் சுலுவா வெளிய போவலாம் இல்ல?”

சரியான வாதந்தான். ‘நுணலும் தன் வாயால் கெடும்’, என்பார்கள். ஆனால் புத்தியுள்ளது அங்கே பிழைத்துக்கொள்ளும், அடுத்தவன் பிழைக்கவும் வழிசொல்லும். இருந்தும் இன்னும் ஒரேயொரு கேள்வி மட்டும் தொக்கி நிற்கிறது என்னிடம். இறுதியாய் அதையும் கேட்டுவிட நினைத்தேன் அதனிடம்,

“இவ்ளோ பேசுற நீ, அவங்களுக்கு புரியிற மாதிரி இத எடுத்துச் சொல்லிருக்கலாம்ல. எதுக்குக் காலப் புடிச்சி இழுத்துகிட்டு இருக்க?” 

இந்தக் கேள்விக்கு மட்டும் சற்றே  சலிப்படைந்துவிட்டது  அந்தத் தவளை. ரொம்பவே தாழ்ந்த குரலில்,

“யாருங்க உக்காருறா நம்ம சொல்லறத கேக்கறதுக்கு. ஒருத்தர் ஓடுற தெசையில ஓட்றதே பழக்கமாப் போச்சு இங்க எல்லாருக்கும். அதுபோக குனிஞ்சி நிக்கறதனாலவோ என்னவோ காது கேட்க மாட்டேங்குது இங்க ஒருத்தருக்கும்.” ஏனோ குரல் தாழத்தாழ மரியாதை கூடியிருந்தது அதன் வார்த்தைகளில்.

நான்கூட முதலில் இது ஏதோ ஒற்றுமையைச் சிதைக்கும் தவளை என்றுதான் நினைத்தேன். இது சொல்லுவதைக் கேட்கக் கேட்கத்தான் புரிகிறது, இந்தத் தவளைக்கும் ஒற்றுமைதான் முக்கியம், தன்மானத்தோடு சேர்த்த ஒற்றுமை. அதுபோல் இன்னொரு தெளிவான எண்ணம், ஒருத்தர் ‘மேல’ போவதைவிட எல்லோரும் ‘வெளியே’ போவதுதான் மிக முக்கியம் என எண்ணுவது. கால் பிடித்து இழுக்கும் கோபம்கொண்ட தவளைதான் என்றாலும், தான் என்ன செய்கிறோம் என்றறிந்த தவளைதான் இது. நான் ஏதோ அமைதியாய் யோசித்துக் கொண்டிருப்பதைக் கண்ட அந்தத் தவளை, என் எண்ணக் குளத்திற்குள் கல்லெறிந்தது,

“இப்ப நீங்களே சொல்லுங்க, முதுவு காட்டி நிற்கும் அறியாமை என்பது சரியான பண்பா? மண் சரிக்கும் கூட்டு முயற்சி என்பது சரியான பண்பா?”

மீண்டும் ‘பண்பு’ குறித்த கேள்வி ஏனோ இடிச் சத்தமாய் இரைத்தது என் காதில்.

திடுக்கிட்டுக் கண் விழிக்கிறேன் கயிற்றுக் கட்டிலில் இருந்து, வெளியில் கேட்ட இடியின் இரைச்சல் கேட்டு. விழித்த நொடியில், இன்றைய பகல் நேர உறக்கம் மட்டும் ஏனோ இவ்வளவு தெளிவாய் இருந்தது எனக்கு. யாரும் கேட்டிராத அந்தக் கிணற்றுத் தவளையின் குரலைக் கேட்டதனாலோ என்னவோ என்று தோன்றியது. விழித்தும் கனவின் நிழல் கலையாமல் அலையாடிக் கொண்டிருந்த எண்ணச் சுவர்களின்மீது, அந்த நிழல் அலைகளை அலசியபடியே மெதுவாய் நடந்து கிணற்றை அடைந்தேன். படியை எட்டிப் பார்த்தேன், படியில் ஒன்றுமேயில்லை. நீரை எட்டிப் பார்த்தேன், தெளிவாய் இருந்தது கிணற்று நீர் மழைவிட்டுச் சிறிது நேரம் ஆனபடியால்!

வாய்க்கால் மேட்டில் முகம் கழுவிவிட்டு வீட்டை நோக்கி நடக்கும்போது தோன்றியது, வீட்டுக்கு போனதும் மகன் முருகேசிடம் பேசவேண்டும். கொஞ்சம் கோபக்காரன்தான் என்றாலும் நல்ல புத்திசாலி. காலையில் அவனிடம், “ஏன்டா இப்டி சொசைட்டியில ஒரண்டு இழுத்துட்டு திரியற,”ன்ணு கேட்டதும் அவன் பதிலைக் கேட்டுக் கோபத்தில் துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு வயலுக்கு வந்துவிட்டேன். அவன் சொன்னதுதான்,

“ஒனக்கு இதல்லாம் புரியாது, ஒன் வேலைய பாத்துகிட்டு போ..!”

***

4 Replies to “கேட்கத் தவறிய கிணற்றுத் தவளையின் குரல்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.