தாவீதுகளின் சங்கீதம்: பொலான்யோவின் ‘டிஸ்டன்ட் ஸ்டார்’

1973ம் ஆண்டு, சிலே. சல்வதோர் அயெந்தேயின் (Salvador Allende) சோஷலிச ஆட்சியை இராணுவம் கைப்பற்றி அகஸ்தோ பினொஷேயின் (Augusto Pinochet) சர்வாதிகாரம் கோலோச்சிய சமயம். பாழ்நில வெளியில் உரிமைகளின் கூக்குரல் நசிந்து விட்டிருந்தது. தகிக்கும் பாலையில் அனலருவியாய் கொட்டிக்கொண்டிருந்தது கானல் நீர். மணற்புயலின் நெருப்புக் காற்றுக்கு அஞ்சி, மூக்கைப் பொத்திக்கொண்டு, கண்களை இறுக்கிக்கொண்டவர்கள் அனைவரும் எதிர்காலத்திற்குத் தகுதி பெற்றார்கள். அதை எதிர்த்துப் போராடிய நெஞ்சுரமுடையவர்களோ காணாமற் போய்க் கொண்டிருந்தார்கள் – இடதுசாரிகள், கொரில்லா போராளிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள், கவிஞர்கள்.

அர்த்துரோ பெலானோவும் கவிஞன் தான். சின்னச் சின்ன கவிதை வரிகளை எழுதியிருக்கிறான். கவிதைப் பாசறைகளில் தவறாமல் பங்கெடுக்கும் வழக்கமும் வாசிப்பு அரங்குகளுக்கு வருகிற அழகான பெண்களைக் கவர்ந்திழுக்க முடியுமா என நோட்டம் விடுவதில் ஆர்வமும் உள்ளவன். எழுத்தாளர் ரொபெர்த்தோ பொலான்யோவின் சாயல்கொண்ட கதாபாத்திரம். அவரது புனைவுகளுக்கான மறுவார்ப்பு (alter ego). இந்த நாவலின் கதைசொல்லி. அவனது நண்பர்களுக்கு நிகழ்ந்தது மாதிரி அர்த்துரோ காணாமலாக்கப்படவில்லை. ஆனால், சிறையில் அடைக்கப்பட்டான்.

சாம்பல்நிற மேகங்கள் சூழ்ந்திருந்த அந்தப் பின்மதியப் பொழுதை தன் வாழ்நாள் முழுவதும் அர்த்துரோ நினைவில் வைத்திருக்கப் போகிறான். அவனுக்கு அப்போது பத்தொன்பது வயது. நேரத்தைக் கடத்துவதற்காக, அவன் வானத்தை வெறித்துக் கொண்டிருந்த சமயத்தில், அவர்களது சிறைக்கூடத்தின் மேலே ஒரு விமானம் பறக்கிறது. மேலும் கீழும் முன்னும் பின்னுமாக இலக்கின்றி வட்டமடிக்கிறது. ஏதோவொரு பைத்தியக்கார விமானியின் ஆர்வக்கோளாறான செயல் என நினைத்து முடிப்பதற்குள், அந்த விமானம் வெளியேற்றும் கறுப்புப் புகையையே தூரிகையாக்கி, ‘Book of Genesis’-இன் முதல் வரியை ஆகாயத்தில் வரைகிறான் அந்த விமானி. “In principio creavit deus caelum et terram” (ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்). கைதிகள் பரபரப்படைகிறார்கள். பாதுகாவலர்கள் திகைப்படைகிறார்கள்.

கரும்புகை மறைய மறைய தன்னுடைய கவிதையின் ஒவ்வொரு வரியையும் அந்த விமானி ஆகாயத்திலேயே தீற்றுகிறான். இதைக் காணும் அர்த்துரோவின் நண்பனான நார்பெர்த்தோ, நிலத்தை ஓங்கி அறைந்தவாறே வெறிக் கூச்சலிடுகிறான். வேலியின் முட்கம்பிகளைப் பற்றித் தாவியபடியே, ‘இரண்டாம் உலகப்போர் மீண்டும் நிகழவிருக்கிறது’ என உற்சாக மிதப்பில் அரற்றுகிறான். கவனிக்க, மூன்றாம் உலகப்போர் மூளும் எனச் சொல்லவில்லை. இரண்டாம் உலகப்போர் மீண்டும் நிகழவிருக்கிறது. ‘புத்தொளி பிரகாசிக்கட்டும்’ என்று கவிதையை முத்தாய்ப்பாக முடித்துவிட்டு மேகங்களுக்குள் விமானம் மறைகிறது. ஆம், சிலேயில் புது யுகம் பிறந்திருக்கிறது. ஒளிக்கீற்றை மேவி மூடும் இருட்காலம். வீழும் நட்சத்திரத்தை விழுங்கிச் செரிக்கக் காத்திருக்கும் கடல்.

டிஸ்டன்ட் ஸ்டார்-ஐ எழுதுவதற்கு முன் ‘நாஜி லிட்ரேச்சர் இன் த அமெரிக்காஸ்’ நாவலை வெளியிட்டிருந்தார் பொலான்யோ. அதன் இறுதி அத்தியாயத்தில் இடம்பெறும் ரமிரேஸ் ஹாஃப்மெனின் கதாபாத்திரத்திற்கு முழுமுற்றான நியாயத்தை வழங்க முடியவில்லை என பொலான்யாவும் அவரது எதிரீட்டு ஆளுமையான அர்த்துரோ பெலனோவும் கருதியதால் ஹாஃப்மேனை மையக் கதாபாத்திரமாக வைத்து தன்னுடைய அடுத்த நாவலை எழுதத் திட்டமிடுகிறார். அவனுக்குப் புதிய நாமத்தைச் சூட்டுகிறார். கார்லோஸ் வெய்தர். சிலேயினுடைய நவீன கவிதை இயக்கத்தின் தொடக்கப் புள்ளியாகவும் பினொஷே ஆட்சியதிகாரத்தின் ஆதரவாளனாகவும் கவர்ச்சிகரமான ஆளுமையாகவும் அவன் உருத்திரண்டு எழுகிறான். முந்தைய பத்தியில் விவரிக்கப்பட்டிருக்கும் விமான சாகசத்திற்குச் சொந்தக்காரன். அர்த்துரோவின் நண்பர்கள் காணாமற் போனதற்கும் கொல்லப்பட்டதற்கும் காரணமான சூத்திரதாரி.

அரசியல் கொந்தளிப்புகள் நிகழும் காலகட்டத்தில் தான் கலைச் செயல்பாடுகளின் தீவிரம் துடிப்பு கொள்கிறதென உளமார நம்புகிறேன். இதற்கான எண்ணற்ற உதாரணங்களை வரலாறு நெடுக எடுத்தாள முடியும். த தர்ட் மான் (1949) படத்தில் ஹாரி சொல்வது நினைவுக்கு வருகிறது – “பூர்ஷ்வாக்களின் கட்டுப்பாட்டின் கீழ் முப்பது ஆண்டுகளாக சிக்குண்டிருந்த இத்தாலியில் போரும் பயங்கரவாதமும் அறப்பிறழ்வுகளும் பேரழிவை உண்டாக்கின. ஆனால், அந்த நெருக்கடியான சூழலில் இருந்தே டாவின்ஸியும் மிக்கெலேஞ்சலோவும் மேலெழுந்து வந்து உன்னதமான கலைப் பொக்கிஷங்களைப் படைத்தார்கள். சுவிட்சர்லாந்தில் ஐநூறு ஆண்டுகளாக ஜனநாயகமும் அமைதியும் நிலவுகிறது. அவர்களால் குக்கூ மணியைத் தவிர உருப்படியான வேறெதையும் உலகிற்குக் கொடையாகத் தர முடியவில்லை.” சிலேயும் இதற்கு விதிவிலக்கல்ல. 1973 முதல் 1990 வரை அதன் ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டிருந்தது. பண்பாடான மனங்களின் எளிய உணர்வுகள் மீது கூர்மையான ஈட்டியை சர்வாதிகாரம் எறிந்தது. அடக்குமுறையின் விளைவாக, அவர்தம் மனவெளியின் பரப்புகள் சுருங்கி, சர்க்கஸ் கூண்டுகளுக்குள் அவர்கள் அடைபடலானார்கள். காட்டுமிராண்டிக் கூட்டத்திற்கு அஞ்சி ஒடுங்கி கிளிப்பேச்சு பேசுவதற்கா படைப்பின் ஊற்று வற்றாது சுரக்கிறது? விழித்துக்கொண்ட சுரணையுள்ள கலைஞர்கள் பலரும் தலைமறைவானார்கள். வெளிநாடுகளில் தஞ்சமடைந்தார்கள்.

இதில் கோழைத்தனம் என்கிற நினைப்புக்கே இடமில்லை. எங்கோ தூரத்திலிருந்தவாறு சொந்த நாட்டை வேடிக்கைப் பார்க்கிற அவலத்தை எண்ணி நெஞ்சுருகும் போதெல்லாம் அவர்களது அகம்பாவம் சீண்டப்படாமல் இருந்திருக்காது. ஆனால், அந்த கர்வச் செருக்கைப் புறமொதுக்கி விட்டு, வாழ்வை சூறையாடிச் செல்கிற மலினமான நாடகங்களில் இருந்து விலகி, தம்மை இழக்காமல் தத்தம் கண்ணியத்தை காத்துக்கொள்வதே கலைஞர்களின் முதன்மை நோக்கமாக இருக்க முடியும். அத்தகைய இடர்ப்பாடுகளைப் புடம்போட்டு அணி செய்கையிலேயே கலையின் விஸ்தீரணம் புதிய பரிமாணங்களைப் பெறுகிறது. விடுதலையின் சிறகடிப்பில் மதர்க்கும் ஞானப் பொலிவானது அவர்களுடைய படைப்பில் பொசிகிறது. எனவே, கலையும் அரசியலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. பிரித்தறிய வேண்டாதவை. கற்பனா சக்திக்கான கிரியா ஊக்கியாகச் செயல்படும் ஆற்றல் மிகுந்தவை. அதனால் தான், சிலேயில் எந்தப் பாறையை உருட்டினாலும் அதிலிருந்து ஐந்து கவிஞர்கள் வெளியே வருவார்கள் என பாப்லோ நெரூதா வேடிக்கையாகச் சொன்னார்.

இந்தப் பின்னணியிலேயே நான் பொலான்யோவின் வருகையைப் புரிந்துகொள்கிறேன். விடிவெள்ளிக்காக காத்திருந்த தீர்க்கதரிசிகள் நடுவே அவரொரு மெஸ்ஸையா போல தோன்றினார். கவிதை என்கிற பெயரில் நான்கு வரிகளைக் கிறுக்கிவிட்டு, நூறு பக்கங்களைத் தேற்றியவுடன் முகவாய்க் கட்டையை உயர்த்திப் பிடித்தவாறு இறுமாப்பு கொள்கிற கத்துக்குட்டி கவிஞர்களுக்கு, புனைவின் அசலான பிரம்மாண்டங்களைக் காட்டினார். கொப்பளித்து வெடிக்கிற எரிமலையின் நெருப்புத் தழல் அருகே நின்றபடி மற்றவர்களை குனிந்து நோக்கினார். அவர் எரிமலைக் குழம்பாலான நதி. அது கடலில் அமிழும் போது வெண்புகை எழுவதைப் பார்க்க முடிந்தது. அதன் தகிப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் புரண்டு படுத்த கடலின் அபயக்குரலைக் கேட்க முடிந்தது. நம்மால் ஆகக்கூடிய காரியம் தான் என்ன? நமது நெஞ்சைப் பிடித்துக்கொண்டு பிரார்த்திப்பதைத் தவிர வேறென்ன தான் செய்துவிட முடியும்? இந்த ஒப்பற்ற நிகழ்வுக்கு சாட்சியானதே மிச்ச வாழ்வுக்குப் போதாதா?

புனைவின் வழியாக பொலான்யோ கண்டடைகிற முகங்களும் உணர்ச்சிகளும் பாசாங்கில்லாமல் இருக்கின்றன. அவர் அடுக்கிவைக்கிற சம்பவங்களின் பேரமைதியில் ஒத்திசைந்திருக்கும் நுட்பமான ஆவேசத்தை எண்ணி வியக்காமல் எந்தப் பக்கத்தையும் நான் கடந்து சென்றதில்லை. நிகழ்ச்சி நிரல்களை வெறுமனே ஒப்புவித்துச் செல்லாமல் கதாபாத்திரங்களின் அடர்த்தியான எண்ணவோட்டங்களையும் உளவியற் சிக்கல்களையும் பகுக்கத் துணிந்திருக்கும் விதமும் அபாரமானது. அதற்காகவே பல்வேறு வகையான வெளிப்பாட்டு உத்திகளைப் பயன்படுத்துகிறார். மன விகாரங்களின் ஓயாத பொருமல்களின் முன்பு அதிகார ஆணவத்தின் ஊசலாட்டங்கள் எம்மாத்திரம்? மனிதர்களைப் பற்றின நமது உறுதியான அபிப்ராயங்களைக் குலைத்து, கொஞ்சம் மனக்கிலேசங்களைக் கூட்டியிருப்பதில், கலையின் நோக்கம் பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது என்றே சொல்வேன். பொலான்யோவிடமிருந்து வேறு மாதிரி திரண்டு வந்திருந்தால் தான் ஏமாந்திருப்பேன்.

இருளில் ஒளியைக் காணும் சொகுசும் கொடுப்பினையும் எல்லோருக்கும் எப்போதும் வாய்த்து விடுவதில்லை. பாதாளத்தின் அடியாழங்களில் சிறிய வெளிச்சப் பொட்டு தென்பட்டாலும் அதைக்கொண்டு மற்றவரை அளந்து பார்க்கவே முற்படுவோம். இன்னும் சொல்லப்போனால், நாம் நமது மனக்குகைகளில் விழிகள் மின்னக் காத்திருப்பதெல்லாம் அருகிலிருப்பவரை அஞ்சும் கூர்மையுணர்வின் வெளிப்பாடு தான். அதிலும், பேய்கள் அரசாளும் இக்கட்டான சூழ்நிலையில், தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு, எந்த எல்லைக்கும் செல்ல அநேகம் பேர் தயாராக இருப்பார்கள். எவரையாவது அண்டிப் பிழைத்து, தமது சௌகரியங்களுக்கு ஏற்ப பிறரை வளைத்துப் போட்டு, சுற்றத்தையும் நட்பையும் சுரண்டித் தின்பதில் எந்தவிதமான கூச்சமும் உண்டாகப் போவதில்லை. நண்பர்கள் உளவாளிகளாக இருப்பார்கள். கையில் மதுக்கோப்பையுடன் கபடதாரிகள் வலம் வருவார்கள். உயரிய விழுமியங்களைப் பற்றி நமக்குப் பாடமெடுத்து விட்டு வீட்டுக்குத் திரும்புகிற வழியில் நம்மையே காட்டிக் கொடுப்பார்கள். அங்ஙனம் நேர்கையில் நமது நம்பிக்கைப் பிடிமானங்கள் அத்தனையும் சடுதியில் நழுவி விடுகின்றன. மானுடக் கரிசனம் பொய்த்துப் போகிறது. நம்மைச் சூழ்கிற நிச்சயமின்மையும் நிர்க்கதியும் திகிலூட்டுகிறது.

ஜனநாயகத்தின் வீழ்ச்சிக்கு பலியாகி தலைமறைவாக வாழ்ந்துகொண்டிருக்கும் அர்த்துரோவுக்குள்ளும் அத்தகைய எச்சரிக்கையுணர்வின் உறுமல்கள் எக்களித்தவாறே இருக்கின்றன. இதிலுள்ள அவலம் என்பது தன் கையாலாகாத நிலைமையை நினைக்கையில் அவன் மனத்துள் குறுகுறுக்கும் குற்றவுணர்ச்சியல்ல. மாறாக, வேறு யாரோ ஒருவரது பழி வேட்கையின் அங்கமாக அவன் உருமாறி விடுகிறான் என்பது தான். பிழைத்திருத்தல் ஒன்றே நோக்கமாகி விட்ட பின் தேவைகளின் ஈடேற்றமே மனிதர்களை உய்விக்கிறது, இல்லையா? பினொஷேயின் சர்வாதிகாரம் முடிவுக்கு வந்திருந்த காலம். இருபது ஆண்டுகள் கடந்துவிட்டிருக்கின்றன. அப்போது பார்சிலோனாவில் வசித்துவந்த அர்த்துரோவை, அவனது உற்ற நண்பனான பிபியானோவின் உதவியுடன், ரொமேரோ கண்டுபிடிக்கிறார். வரலாற்றுச் சுவடுகளில் இருந்து தப்பி மறைந்து தற்சமயம் பொந்துகளுக்குள் இடுங்கி வாழும் கார்லோஸ் வெய்தரைக் கொல்வதற்கு அர்த்துரோவின் உதவியைக் கேட்கிறார். ‘பழைய புண்ணை வீணாகக் கிளறி வம்பில் மாட்டிக்கொள்வானேன்?’ எனத் தயங்கும் அர்த்துரோவிற்கு பெரும் பணத்தை ஊதியமாக அளிக்க முன்வருகிறார். பேரம் படிகிறது.

பல வருடங்கள் கழித்து அவன் வெய்தரைச் சந்திக்கும் காட்சியைப் பற்றி என்னவென்று சொல்வது? ஒரு மின்னல்வெட்டின் அவகாசத்திற்குள் வரலாறே திரும்பிவிட்டிருக்கிறது. பீடத்தில் வீற்றிருந்தவர்கள் எல்லாம் படுகுழிக்குள் பிணமாகக் கிடக்கிறார்கள். எந்தச் சித்தாந்தமும் காலத்தின் விரிவுக்கு முன்னே தோற்றாக வேண்டும். அதன் மர்மப் புன்னகையின் உதட்டு மடிப்புகளுக்குள் அடங்கியாக வேண்டும். விதிவிலக்குகளே இல்லை. ஒரு சமூக அமைப்பு பிழைத்திருப்பதற்கும் உய்வடைவதற்கும் தனி மனிதர்களின் பெருவிழைவே ஆதாரக் காரணமாக இருக்கிறது. அந்தத் தனிமனிதர்கள் ஒருங்கிணைந்து, ஒருவிதமான சமரசத்தை எட்டி, கூட்டாக நிலைகொள்கையில் அதிகாரப் படிநிலைகள் உருவாக்கப்படுகின்றன. யார் யாருக்கு எந்தெந்த இடம் எனத் தீர்மானித்து, அவரவர்களை அந்தந்த வட்டத்திற்குள் நிறுத்திவிட்டால், தங்களுடைய ஆணைகளைச் சுலபமாக நிறைவேற்றி விடலாம் என்கிற நப்பாசை பலருக்கும் இருந்திருக்க வேண்டும்.

அதிகார அமைப்பின் அடிப்படை நோக்கமானது மனித நல்லிணக்கத்தை மேம்படுத்தி எல்லோரையும் கொண்டாட்டமான வாழ்க்கைக்குத் தயார்படுத்துவது அல்ல. மனிதரின் விழைவை ஊதிப்பெருக்கி அந்த நெருப்பை அணைந்துவிடாமல் கண்காணிப்பது தான். சித்தாந்தங்கள் தோன்றிய தொடக்க காலத்தில் என்னென்ன மாதிரியான முழக்கங்களை எழுப்பினார்கள் என்பதை நினைவூட்டிப் பாருங்கள். பழைய அமைப்பைத் தகர்த்துவிட்டாலே எல்லாம் மாறிவிடும் என்றார்கள். புரட்சி செய்து அனைத்தையும் புரட்டிப் போடுவோம் என கோஷமிட்டார்கள். வீதியில் நின்று வேடிக்கை பார்த்த நமக்கும் புல்லரிக்கத்தான் செய்தது. ஆனால், நடைமுறை யதார்த்தத்தில் அவை என்னவாக உருமாறின? புதிய இலட்சியவாதங்கள் ஆட்டிப்படைக்கும் போது கிளுகிளுவென்று இருந்ததா? முன்னதற்கு நிகரான அல்லது முன்னதைக் காட்டிலும் மோசமான பேரழிவுகளுக்கே அவை இட்டுச் சென்றன.

இந்த நாவலிலும் அப்படியோர் அமைப்பு இருக்கிறது. குடிமக்களின் நன்னடத்தையையும் அடிபணிதலையும் கோருகிற அமைப்பு. நட்பார்ந்த தோரணையுடன் நம் தோளை அணைத்தவாறு கழுத்தருகே (இரகசியமாக) கத்தியைப் பிடித்திருக்கும் தந்திரம் நிரம்பியது. நம்மைப் பயன்படுத்திய பிறகு, கடைசிச் சொட்டு இரத்தம் வரை கசக்கிப் பிழிந்த பிறகு, சக்கையாகத் துப்புவது அதன் வாடிக்கை. உதாரணத்திற்கு வெய்தரையே எடுத்துக்கொள்வோம். ஒருகாலத்தில், சிலேயின் கதாநாயகன். உயர்மட்டத் தொடர்புகள் உடையவன். உச்சபட்ச அதிகாரம் கொண்டவர்களுக்கு அணுக்கமானவன். அவன் கண்ணசைத்தால் போதும். பேரழகிகள் எல்லோரும் அவன்மீது விழுந்து புரள்வதற்குத் தயாராக இருந்தனர். ஆனால், கலை ஈடுபாட்டின் கிறுக்குத்தனங்களுக்கு வரையறை ஏது? தன்னுள் முகிழ்க்கும் கவிஞனுக்கும் கொலைகாரனுக்கும் இடையேயான அல்லாட்டத்தில் கலைஞனைத் தேர்வு செய்தது மட்டுமே அவன் கைக்கொண்ட ஒரே பிழை. அதிகார வர்க்கத்திற்கு அவனது கலைச் செயல்பாடுகள் உவப்பளிக்கவில்லை. அந்த அமைப்புக்காக அவன் தொண்டாற்றியதெல்லாம் சொடக்கு போடுகிற நேரத்திற்குள் மறக்கப்படுகின்றன. அவனைக் கைது செய்கிறார்கள். சிறையிலிருந்து அவன் தப்பித்துச் செல்கிறான். தேடப்படும் குற்றவாளியாகிறான். ரொமேரோவால் கொல்லப்படும் வரை அடையாளமற்ற அகதியாக வாழ்கிறான்.

இருபதாண்டுகள் கழித்து, ஒரு மதுக்கூடத்தின் மெல்லிய வெளிச்சத்தில், வெய்தரை அர்த்துரோ சந்திக்கும் போது அவனது கண்களில் உயிரே இல்லை. இருவருமே தங்களது தேசத்திலிருந்து துரத்தப்பட்டு வெகு தொலைவில் இருக்கிறார்கள். சர்வாதிகாரத்திற்கு ஆதரவானவனையும் எதிரானவனையும் ஒரே புள்ளியில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது காலம். விசித்திரம் தான்! அங்கிருந்து புறப்பட்டுச் சென்று ரொமேரோவுக்கு தகவல் தெரிவிக்கும் முன், அவனைக் கொஞ்ச நேரம் வேவு பார்க்கிறான் அர்த்துரோ. உடல் வலுவிழந்தும் தசைகள் சுருங்கியும் விட்டேற்றியான மனோபாவத்துடனும் அசிரத்தையான நடத்தையுடனும் அவன் காணப்படுகிறான். அவனது பார்வையில் ஒருவகையான வெறிப்பு நிரந்தரமாகத் தங்கி விட்டிருக்கிறது. இவன் இரத்த வேட்கையும் இரும்புறுதியும் கொண்ட பழைய வெய்தர் அல்ல. பல் பிடுங்கப்பட்ட நாகம். இப்போது இவனைக் கொல்வதில் எந்தப் பயனும் இல்லை. இத்தனை காலத்திற்குப் பிறகு இவனைக் காட்டிக்கொடுக்கவும் வேண்டுமா என்கிற சஞ்சலம் அர்த்துரோவின் மனதில் மெல்ல எட்டிப்பார்க்கிறது. ஓர் அரசியல் படுகொலைக்குத் துணைபோகவிருக்கிறான். அதுதான் உண்மையான காரணமா அல்லது தனிநபர் பழிவாங்கலா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், கை நீட்டி காசு வாங்கியாகி விட்டது. இனிமேல் பின்வாங்க முடியாது. காரியத்தை முடித்துவிட்டுத் திரும்புகிற ரொமேரோவிடம், ‘வெய்தரை என்ன செய்தாய்?’ என வினவும் போது அர்த்துரோவின் குரலில் வேதனையின் சுவடே இல்லை. நீண்டகால பாரத்தை இறக்கி வைத்துவிட்ட ஆசுவாசம் தான் அவன் முகத்தில் புன்னகையாக மலர்கிறது.

காலத்தின் மட்டுறுத்தலில் நம் வாழ்வின் பூதாகர நிகழ்வுகள் கூட புள்ளியாய் மறைந்துவிடுன்றன. அதன் வெவ்வேறு பரிமாணங்களில் ஈக்களென மொய்க்கும் கோடான கோடி வாழ்க்கைகளை ஒற்றைச் சரடில் கோர்த்து வைப்பதே வரலாறு எனப்படுகிறது. அந்த வரலாற்றின் சீரான ஒழுக்கைப் பின்தொடர்ந்து கூராய்பவர்களுக்குத் தெரியும். அது பெருஞ்சுழிகளை நிரப்பிக்கொண்டு பாய்கிற நதிகளின் தொகுப்பு. அந்த நதியில் எறியப்படும் வைரங்களுக்கும் கூழாங்கற்களுக்கும் ஒரே பெறுமதி தான். காலத்தின் தாய்மடியில் அண்டுகிற பிள்ளைகளை அரவணைப்பதில் வேறுபாடு காட்ட முடியாது, இல்லையா? இங்குதான் ஓர் எழுத்தாளரின் பணி முக்கியத்துவம் பெறுகிறது. எதை கொண்டு சேர்க்க வேண்டுமோ, எதை அழுத்தமாக நிறுவ வேண்டுமோ, அதைக் கண்டெடுத்து வேரூன்றும் பொறுப்பு கலைஞர்களுக்கு இருக்கிறது. ஒரு நல்ல எழுத்தாளரால் சாதாரண கூழாங்கற்களைப் பொறுக்கியெடுத்து திருப்தியடைய முடியுமா? அவர் வேண்டுவது மாணிக்கங்கள் அல்லவா? கரையிலிருந்து வலைவிரித்துக் காத்திருக்கும் எழுத்தாளர்களுக்கு மத்தியில் கடலாழத்தில் முங்கி முத்தெடுத்தவராக பொலான்யோ சிறந்து விளங்கினார்.

டிஸ்டண்ட் ஸ்டார் நாவலுக்குப் பிறகே அவர் த சாவேஜ் டிடெக்டிவ்ஸ்-ஐ எழுதினார். அதிலும் அர்த்துரோ என்கிற கதாபாத்திரம் உண்டு. அதாவது, பெரிய நாவல்களைப் படைப்பதற்கான முன்னோட்டமாக இதை எழுதினார் எனச் சொல்லலாம். போர் விளையாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ‘த தர்ட் ரைக்’ நூலுக்கான விதையும் இந்த நாவலில் இருக்கிறது. (போர் விளையாட்டின் மூன்று படிநிலைகளைப் பற்றிய குறிப்பு வருகிறது. அந்த விளையாட்டை உருவாக்கியது வெய்தராக இருக்கலாம் என பிபியானோ சந்தேகிக்கிறான்) சிலேயின் கொடுங்கனவை விவரிப்பதன் ஊடாக அதன் முக்கியமான ஆளுமைகளை அறிமுகம் செய்கிறார். அந்நாட்டின் இலக்கிய வரலாறையும் கோடிழுத்துக் காட்டுகிறார். நிக்கனோர் பர்ரா, ஒக்டாவியோ பாஸ், அர்த்துரோ ப்ராட் (வக்கீலாகவும் கடற்படை அதிகாரியாகவும் பணியாற்றியவர். அவருக்கு இயேசுவின் முகச்சாயல்!) போன்ற பெயர்கள் அனாயசமாக வந்து விழுந்தவாறு இருக்கின்றன. அவை வெறுமனே பெயர் உதிர்த்தல்களாக அல்லாமல் சிலேயின் இலக்கியச் சூழல் குறித்த கூர்மையான விமர்சனங்களாகவும் இடித்துரைத்தல்களாகவும் அமைந்திருக்கின்றன.

இந்நாவலின் தொனியிலும் மொழிநடையிலும் ஒருவிதமான செய்தித்தன்மை விரவியிருக்கிறது. அது புனைவின் குணாம்சங்களை மட்டுப்படுத்தவும் உண்மைக்கு மிக அருகில் கொழுவியிருப்பதைப் போன்ற பாவனையை வாசகரிடையே தோற்றுவிக்கவும் வெற்றிகரமாக உதவியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பொலான்யோவின் சுயசரித நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே தூவப்பட்டிருப்பதால் அவற்றின் நம்பகத்தன்மை குறித்து சிறிதும் சந்தேகம் எழுவதில்லை. (பொலான்யோவும் கவிதைகள் எழுதியிருக்கிறார். சிறைவாசத்தை அனுபவித்திருக்கிறார். வேறு நாட்டிற்குத் தப்பியோடி இருக்கிறார். லொரென்சோவின் கதையைச் சொல்லும்போது – அவனும் கவிஞன் –  தன்னுடைய கல்லீரல் அறுவை சிகிச்சையைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.)

நகைச்சுவைத் தெறிப்புகளுக்கும் (“பொதுவுடைமைக் கவிதைகளை எழுதுவதாக பேர் பண்ணிக்கொண்டு அவமானத்திற்குரிய அற்ப வாழ்வையே அவன் வாழ்ந்து வந்தான். தனது பரிதாபத்திற்குரிய இருப்பின் வழியாக கோமாளித்தனங்களை அரங்கேற்றுவதைத் தவிர வேறெதையுமே அவன் செய்யவில்லை. அவனொரு வலதுசாரியாக வாழ்ந்திருந்தால் மேலும் பொருத்தமாக இருந்திருக்கும்”, “பல் மருத்துவமனையின் காத்திருப்பு அறையில் நிலவும் அமைதி”) தத்துவ விசாரங்களுக்கும் (“An epiphany of madness”, “Pain is our only connection with life”) குறைவில்லை. இப்படி ஆசிரியரின் புத்திசாலித்தனங்களை விதந்தோதக் கூடிய ஏராளமான தருணங்கள் இருக்கின்றன. இந்த நாவலின் பலவீனமான அம்சம் என்பது பொலான்யோவின் அத்தனை படைப்புகளுக்கும் பொதுவானது. அது அவரது கதைக்களங்களும் பார்வைக் கோணங்களும் முழுக்க முழுக்க அறிவுசார் உலகின் நுண்ணுணர்வுத் தளத்திலேயே நிகழ்கின்றன என்பது தான். அதில் சாமான்யர்களின் இருப்பை நுண்ணோக்கி வைத்து தேட வேண்டியிருக்கிறது.

நாவலை வாசித்து முடித்ததும் அர்த்துரோவுடனும் பிபியானோவுடனும் கார்மெந்திய சகோதரிகளுடனும் என்னைப் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடிந்தது. மகிழ்ச்சிக்குக் கூட்டு, துயருக்குத் தனிமை என்கிற தேய்வழக்கைக் கேள்விப்பட்டிருப்போம். அதில் எனக்குத் துளியும் நம்பிக்கையில்லை. நம்முடைய இனிமை அத்தனையும் நான்கு சுவர்களுக்குள் முடிந்துவிடக் கூடியது. எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் அலை ஒதுக்கும் நுரையின் ஆவேசத்தை மணல் செரிக்கிற அவகாசத்திற்குள் நமது சந்தோஷங்கள் எல்லாம் மறைந்து விடும். அந்தத் தற்காலிகப் பூரிப்பைக் கண்டும் பொச்செரிபவர்கள் இருக்கிறார்கள். ஆனால், துயரம் இன்னும் பிரம்மாண்டமானது. ஏதோ ஒரு மூலையில் ஒடுங்கிப் போய் உழன்றிருந்தாலும் நான் தனியன் அல்ல. என்னைப் போன்ற கோடிக்கணக்கானவர்களின் கண்ணீருடன் நான் இணைந்திருக்கிறேன். ஒருவரையொருவர் மானசீகமாக உணர்ந்திருக்கிறோம். கை நீட்டுகிற தூரத்தில் புகை நடுவிலே அவர்கள் காத்திருக்கிறார்கள். என்னை உந்திச் செலுத்தி மேலெழுவதற்கு அந்த நினைப்பின் வலிமையே போதும். நம் மகிழ்ச்சியை சொற்ப நபர்களுடனேயே பகிர முடியும். ஆனால், துக்கத்தில் எவருமே பங்கெடுக்கலாம். ஒட்டுமொத்த மானுடமும் அத்தகைய கருணையின் தீண்டலிலேயே உயிர்த்திருக்கிறது.அந்தக் கருணையைப் பற்றிக் கொண்டு பலவீனமான தாவீதுகள் சிலிர்த்தெழுவார்கள். கோலியாத்துகள் வீழ்த்தப்படுவார்கள்.

2 Replies to “தாவீதுகளின் சங்கீதம்: பொலான்யோவின் ‘டிஸ்டன்ட் ஸ்டார்’”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.