கண்விழிக்கும் போதே சாந்திக்கு நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது. பக்கத்துக் கட்டிலில் பையன்கள் உறங்கிக் கொண்டிருப்பது மங்கிய வெளிச்சத்தில் தெரிந்தது. மூச்சை இழுத்துவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். சரியான உறக்கமில்லாத எரிச்சல் கண்களில் காந்தியது. சமையல் கட்டினுள் நுழையும் போது படபடப்பு சலிப்பாக மாறியது. அடுத்த நாடியில் எந்தக் கஷ்டம் இருந்தாலும் இதை செஞ்சுதான் தீர்க்கணுமா என்று எரிச்சலானது. லைட்டரை கொப்பரைத் திண்ணையில் வீசினாள். மூன்று நாள்களாக நசநசத்துப் பெய்து அனைத்தையும் சில்லென்று மாற்றியிருந்தது மழை.

சாந்தி, “அம்மா பாவக்கா குழம்புல கடைசியா கொஞ்சூண்டு வெல்லமும் எண்ணையும் சேப்பாங்க. நானும் சேக்கறேன் ருசி வரமாட்டிக்குது,” என்றாள். சக்திக்கு ஆத்திரமாக வந்தது. எதையோ தூக்கலாகப் போட்டு சாம்பர் தொண்டையில் திமிறிக்கொண்டு நின்றது. எதுவும் சொல்லிவிட்டு சிக்கலாகுமோ என்று மென்று விழுங்கினார்.
சின்னவன்தான், “ம்மா. . குழம்பு ருசியாதான் இருக்கு. குடையக் காணுமே? லேட்டானா முதலாளி பேச்சுக் கேக்கனும்,” என்று எழுந்தான்.
தன் பேச்சை மாற்றுவதற்காகத் தான் இந்த பொய்யான அவசரம் என்பதை உணர்ந்த சாந்தி முகம் சுருங்கித் தன்னுள் ஆழ்ந்தாள். அது தெரிந்தும் தெரியாததைப் போல மூவரும் சாந்தியை வெவ்வேறு உதவிகளுக்காக அழைத்துக் கொண்டிருந்தார்கள்.
“சாவு வந்திட்டாக்கூட தேவலை. பேசறத காது கொடுத்து கேக்க ஆளிருக்கா இங்க.”
“என்னம்மா.”
“போடா. . நான் பேசினாலே உங்களுக்கெல்லாம் சலிப்பா இருக்கு.”
“மூணு நாளா நீ நீயாவே இல்ல…கோவிலுக்காச்சு போயிட்டு வரலாமா சாந்தி.”
“ஆமா. . அது மட்டுந்தான் கொறச்சல். . என்ன நடக்குதுன்னு புரியாம.. ” என்றபடி பாத்திரத்தைக் கழுவும் இடத்தில் தூக்கி எறிந்தாள்.
“என்ன புரியல. . அதான் காரியம் முடிஞ்சாச்சுல்ல. . கோயிலுக்கு போறதுக்கென்ன? மாமன் மச்சானுக்கு ஒரு கணக்குமில்ல.”
“எங்கம்மாங்க. . . நெஞ்சிலே போட்டு வளத்தவங்க. . அது எப்டிங்க உங்களக் கட்டினதும் முப்பது நாள் கூட துக்கமில்லாம ஆயிருமா?”
“வழக்கத்த சொன்னேப்பா. . விடு.”
அவர்கள் அவசரமாகக் கிளம்பி வெளியேறினார்கள். வானம் மென் தூறலாய்க் கசியத் தொடங்கியது.
குனிந்து துடைப்பத்தை எடுத்தவள் அடிவயிற்றின் நடுக்கம் தெரிந்ததும் நாள்காட்டியைப் பார்த்தாள். பத்துநாள் கூட ஆகல என்று சலித்தபடி பீரோவின் மேலிருந்த நாப்கின் பெட்டியை எடுத்தாள்.
“நின்னு தொலையறதுக்கு இத்தன கொடுமையா . . ஒரு ஒழுங்கில்லாம,” என்று தனக்குத்தானே பேசியபடி குளியலறைக்குள் சென்றாள்.
தட்டிலிட்ட இரண்டு கரண்டி சோற்றை முழுமையாக உண்ணாமல் மீதம் வைத்துவிட்டு, “சாப்பிட்டியான்னு கேக்கக் கூட ஆளில்லை,” என்றபடி எழுந்து பாத்திரங்களைக் கழுவினாள்.
வானம் மெல்ல இருட்டி புழுக்கமாக இருந்தது. வியர்வையைத் துடைத்தபடி நாற்காலியில் குனிந்து அமர்ந்தாள். வயிற்றை இழுத்துப் பிடித்த வலியின் பிடிமானம் தளர்வது வரை அங்கேயே அமர்ந்திருந்தாள். பின் துடைப்பத்தை எடுத்துக்கொண்டு எழுந்தாள்.
அம்மா, மனைவி என்ற நேர்க் கோட்டிலிருந்து இருபது நாள்களாக வீட்டில் யாருமற்ற பகல் வேளைகளில் சாந்தி, சாவித்ரியம்மாவின் கடைக்குட்டியாகத் திசை மாறுகிறாள்.
இந்தப் பின்காலையில் முற்றத்துச் சாய்ப்பில் சேலைத் தலைப்பை போர்த்திக்கொண்டு அமர்ந்தாள். ஓடுகளின் மடிப்புகளில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்து. நான்கு விரல் அளவு இடைவெளியில் நீர்த்தாரைகள் ஒழுகுவது அசையும் திரைச்சீலை என நழுங்கிக் கொண்டிருந்தது. திரைக்குப் பின் பாதி வெளிச்சத்தில் மழை. சாந்திக்கு எங்கோ விழுந்து கொண்டிப்பதைப் போலத் தலை கிறுகிறுத்தது. தரையில் கைகளை அழுத்தி ஊன்றிக் கொண்டாள்.
அடைமழைக் காலங்களில் சாந்தி அம்மாவுடன் ஒண்டிக் கொண்டே அம்மாவின் ஒரு பாகம் போல இருப்பாள். ஒரு மழை நாளில் இடிமின்னலைக் கண்டு உடலை குறுக்கிக் கொண்ட சாந்தியை அணைத்தபடி அம்மா, “வானத்துல என்ன நடக்குது தெரியுமா?”என்றாள்.
“என்ன?”
“அப்பா. . பையன் விளையாட்டு, “
“விளையாடறாங்களா!”
“மழைய வெயிலும் காத்தும் மறிச்சி நிக்குமாம். . காத்துக்கு ஒரு அசப்பு குடுத்தா மழ வந்துருமாம்,”
“யாரு அசைக்கறது?”
“இந்திர மகராஜா. . ”
“அவ்வளவு பெரிய கையிருக்குமா?!”
“அது அவங்க அப்பாவோட கையும் சேந்த கை . . ”
கண்களை விரித்துப் பார்க்கும் சாந்தியின் கன்னங்களைத் தட்டி , “மாயக் கிளிக்கிட்ட வரம் வாங்கி அப்பாவையே கையா மாத்தி தன்னோட வச்சிக்கிட்டார்,”
“அது எப்படிம்மா. . ”
“அப்பல்லாம் ரொம்ப பாசமா இருப்பாங்களாம். . அதனால அப்படியாக முடியுமாம்,” என்றாள்.
அதிரச் செய்யும் இடியோசை எழுந்ததும் கட்டிப் பிடித்துக் கொண்டாள். மழை சடசடவென வழுத்தது. அம்மாவின் கை சாந்தியின் முதுகை பசுவின் நாவென தடவிக் கொண்டிருந்தது. மிக அருகில் காதுக்குள் அம்மாவின் குரல் கேட்டது.
“அர்ஜுனா. . அர்ஜுனான்னு சொல்லு குட்டி,”
“அர்ஜுனா…னார்ஜுனா…னார்ஜுனா. . ”
இடி முழக்கம் நின்றதும், “ஏம்மா இந்திர மகராஜன சொல்லாம அர்ஜீனன கூப்பிடச் சொல்ற. . ”
“அப்பாவும் மகனும் சத்தம் போடறப்ப பேரப்பிள்ள வந்தாதான் எடத்தவிட்டு நகருவாங்க . . ” என்று சிரித்தாள். சாந்தி அம்மாவின் மார்பில் முகத்தை ஒட்டிக் கொண்டாள்.
ஜலதாரையின் தகரச் சாய்ப்பில் தூரல்களின் தளம் கேட்டது. தட். . தடட். . தடட் என்று ஒரு மொழியில்லாப் பாடல். சாந்தியின் மத்திம வயது மனதைப் போல. இப்பொழுதெல்லாம் சாந்தி ஒரு கண்ணாமூச்சி விளையாட்டை ஆடிக் கொண்டிருந்தாள். இங்கிருந்து கொண்டு அம்மாவைத் தேடுவது.
சில நாள்களில் நள்ளிரவிலோ, சில நாள்களில் அதிகாலையிலோ கண்டுபிடித்து விடுவாள். இப்போதெல்லாம் அம்மா தோற்பதே இல்லை. அம்மா மாறிவிட்டாள். ஆனால், சிறு பிள்ளையில் சாந்தி அழத் தொடங்குவதற்குள் குதிரின் பின்னாலிருந்தோ, அடுக்குப் பானைகளின் பக்கத்திலிருந்தோ வந்துவிடுவாள்.
“தாங்க முடியலடீ குட்டீ. . ரங்கன்தான் வேடிக்க பாக்கறான்னா. . அந்தக் காட்டுமிராண்டியும் கை கொடுக்க மாட்டேங்கிறாண்டி. .” என்று வலிக்கொல்லி மாத்திரைகளைப் போட்டுக் கொண்டும் வலி நிற்காமல் கோபப்படுவாள். அம்மா அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு கதறுகையில், சாந்திக்கும் அங்கே கூச்சம் போல் ஒரு வேதனை எழுந்து உடல் முழுவதும் பரவும்.
காலம் தள்ளி ஆயுதம் போட்டிழுத்த பிள்ளை அவள். அந்த ரணம்தான் காரணமா என்று சாந்தி டாக்டரிடம் கேட்டபோது அவர், “காரணம் தேடாதீங்கம்மா. வந்திருச்சு அவ்வளவுதான். எண்பது வயசுக்கு ட்ரீட்மெண்ட் தாங்க முடியுமா? வலிய குறைக்க முடியுமாங்கறததான் பாக்கனும்,” என்றார்.
மலைக் கோட்டையின் அடிவாரத்தில் நாற்பது நாள்கள் அம்மாவுடன் மாறி மாறி இருந்தார்கள். அம்மா உறங்கும் நேரங்களில் சாந்தி விஸ்வநாதப் பிள்ளை சிலைக்கு அருகேதான் அமர்ந்திருப்பாள். ‘இந்த மனசுக்கு அப்பவே தோணியிருக்கே இத்தனை வலி இல்லாதப்பட்டவங்களுக்கு வந்தா என்ன பண்ணுவாங்கன்னு,’ என்று நினைத்தபடி அந்த சிலையைப் பாத்திருப்பாள். இரவு நேரங்களில் அந்த மார்பளவு சிலையைத் தொட்டுப் பார்ப்பாள். சிலை செய்தவர்களுக்குக் கைகளோடு செய்யவேண்டும் என்று தோன்றியிருக்கலாம் என்று நினைத்துக் கொள்வாள்.
அம்மாவின் கடைசி நாள்கள் சாந்தியின் நினைவில் இருந்து கொக்கி மாட்டியது. எடுக்க வேண்டிய பொருளில் ஆழப் பதிந்து இழுக்கும் கொக்கி. அதை மறக்கத்தான் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டைக் கண்டுபிடித்தாள். சமையலறையில் சுரைக்காய் தீய்வது தெரியாமல் நின்றிருந்த அன்று இதைக் கண்டுகொண்டாள்.
எட்டு வயதிருக்கலாம் அம்மாவும் அவளும் கண்ணாமூச்சி விளையாடிய அன்று இதேமாதிரி சுரைக்காய் அடிப்பிடித்துக் கொண்டது. “ச்சோ. . இந்த கொடுக்குக்கிட்ட விளையாண்டு சுரக்காய கருப்பாக்கிட்டனே,” என்று சொல்லிக்கொண்டே, பதறாமல் மேலாக எடுத்து வேறுபாத்திரத்தில் வைத்தாள்.
உண்ணும் போது தீய்ந்த வாசனையோடு கூடிய சுரைக்காயின் மணம் ஆழத்தில் கிடந்த நினைவுகளை மேலே கொண்டு வந்தது. அந்த நேரத்தில் அந்தக் கொக்கி, தன் பிடியை தளர்த்தியிருப்பதன் விடுதலையை உணர்ந்த சாந்தி காலத்தில் பின்னோக்கி விழுந்தாள்.
தினமும் தன் கண்ணாமூச்சி விளையாட்டிற்காக வெவ்வேறு ஔிந்து கொள்ளும் இடங்களை மாற்றினாள். கொப்பரைத் திண்ணையில் ஒருநாள், தாழ்வாரத்தில் ஒருநாள், ஆற்றில் ஒருநாள், வயல்பாதையில் என்று ஊரின் இடங்களைத் தேர்ந்தெடுத்தாள்.
முதலில், கண்ணாமூச்சி விளையாட்டாகத் துவங்கியது. பின்பு பேச்சாக, சிரிப்பாக மாறியது. சாந்தி தன் கதவுகள் அனைத்தையும் இறுக சாத்திக்கொண்டாள். கதவுகளைத் திறக்க வேண்டிய நேரம் மிகவும் சிரமப்பட்டுத் திறந்தாள். திறப்பதற்குள் பையன்களும் கணவரும் சலித்துக்கொண்டு வாயிலில் நின்று குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.
ஏதோ ஓர் உறுதியான அழைப்பில் திடுக்கென்று விழித்து அவர்களுக்காக எழுந்தாள். துயில் நிலை கொண்டிருந்த கண்களும், உயிரில்லாத உரையாடல்களும் அவளை மற்றவரிடமிருந்து விலக்கின.
சரீரம் போலவே உறுதியான பருத்த குரல் அம்மாவுக்கு. அவளின் தடுமாறாத நடை போன்ற குரல். ஒரு சொல்லில் அண்ணன்களும் அக்காவும் நின்றுவிடுவார்கள். அப்பாவுக்குப் பார்வை போதும். ஆனால், சாந்தியிடம் கெஞ்சிக் கொண்டிருப்பாள். நினைத்துப் பார்க்கையில் பேரப் பிள்ளைகளிடம் கூட கண்டிப்பானவள் தான் அம்மா.
அம்மா தான் அவளுக்கு இரண்டு குழந்தைப் பேறையும் பார்த்தாள். அந்த இரண்டு நாள்களில் தான் அம்மா மிரட்டி அறிந்தாள். குழந்தையைக் கையில் எடுத்ததும் குரல் மாறிவிடும். “பய பொறந்திருக்கான்டீ குட்டி. . எழுந்து பாருடீ,” என்று சொல்லிச் சிரித்த குரல் இன்னும் காதின் நினைவில் இருக்கிறது.
ஊரில் கார்த்திகை மாதம் பயிர்பொங்கல் நாள்களில் நல்லத்தங்காள் நாடகம் போட்டால் பார்க்க விடமாட்டாள். பிள்ளைகளுக்கு அந்தக் கதை மனசில விழுந்துட்டா வாழ்க்கை கசந்து போகும் என்று நள தமயந்தி கதையைச் சொல்வாள். அண்ணன்களும் அக்காவும், அப்பாவும் கூரைச் சாய்ப்பில் அமர்ந்திருப்பார்கள். சாந்தி அம்மா மேல் சாய்ந்து கொண்டு கதை கேட்பாள்.
அந்தக் கதையை அம்மா குரலை மாற்றி மாற்றிச் சொல்வாள். அது மாறும் நேரங்களில் அக்காட்ட பேசற, அண்ணங்கிட்ட பேசற, என்ட்ட பேசற என்று சாந்தி இடையில் சொல்வாள். அவள் சொல்லும் போது அவர்களுடன் சேர்ந்து அம்மாவும் சிரிப்பாள்.
வெயிலின் உக்கிரம் எஞ்சியிருக்கும் கோடையிரவில், மெல்ல வந்து போகும் காற்றில், அம்மாவின் அருகாமையில் அவள் மனம் பொங்கி வழியக் காரணமில்லாமல் அழுதிருக்கிறாள். அவளுக்கு நள தமயந்தி கதையைச் சொல்லும் போது அருள் கூடும் என்று நைனா சொல்வார். கண்களில் அந்தக் கதையிருக்கும். கண்கள் விரிய நள தமயந்தியின் காதலைச் சொல்வாள். கண்களைச் சுருக்கிப் புருவம் நெரிய வீழ்ச்சியை அமைதியான குரலில் முகம் கூர்மையாகச் சொல்வாள். நளன் மீண்டெழ எழ அம்மாவின் முகமும் மீண்டெழும்.
அக்காவுக்குக் கல்யாணமான பின், குடும்பமே பெருமாள் மலை ஏறினார்கள். அம்மா மூச்சு வாங்க நல்லதங்காள் கதையைச் சொன்னாள். “புறப்பட்ட எடத்துக்கும், சேந்த எடத்துக்கும் அலையறத்துக்கு இப்படி மூச்சப் பிடிக்கணும். விட்றப்பிடாது குட்டிகளா. . பொம்பளப் பிள்ளைக்குதான் அத்தன தெம்புண்டு,” என்று பேசியபடி ஆயிரத்து ஐநூறு சொச்சம் படிகளை ஏறுவது தெரியாமல் ஏற்றிவிட்டாள். புரட்டாசி சனிக் கிழமைகளில் பெருமாள் மலை ஏறும் போதெல்லாம் இதைச் சாந்தி சக்தியிடம் சொல்வாள். அம்மாவுக்கு ஏனோ சிவன்தான் மானசீகமானவர்.
ஆறு வயதில் பெருமாள் மலையின் சோபன மண்டபத்தில் நின்ற பத்துப் பெருமாளையும் அம்மாதான் அறிமுகப்படுத்தி வைத்தாள். மடியில் அரக்கனை வைத்துக் குடலை உருவி மாலையாகப் போட்டுக் கொண்டிருந்த சிங்கத்தைக் கண்டு அம்மா சேலைத் தலைப்பில் ஔிந்த அவளை முன்னால் இழுத்துவிட்டுக், “கண்ணைத் திறந்து பாருடி குட்டி…பெருமாள்டீ. . கஷ்டத்துக்கு கூப்பிடா நாலுகால் பாய்ச்சல்ல வருவாரு,” என்றாள்.
அக்கா அப்படியே அம்மாவைப் போன்ற உடலும், நடத்தையும், அதிகாரமும் வாய்க்கப்பட்டவள். அதனாலோ என்னவோ குடிகாரக் கணவனால், ஓடிப்போன பிள்ளையால், வறுமையால் அவளின் நிமிர்வை மாற்ற முடியவில்லை. சாந்திக்குத் துணை தேடுகையில் அம்மா தீவிரமாக இருந்தாள்.
அவள் பேசும்போதே தாக்கல் சொல்ல வருபவர்கள் மாப்பிள்ளையின் லட்சணத்தைப் பூசி மெழுகாமல் பின்வாங்கினார்கள். கல்யாணத்திற்கு முன் சக்தியிடம் பேசும்போது, “இவ அக்கா மாதிரி தனியா நிமிந்து நிக்கற மரமில்ல தம்பி. . அதுக்காவ கொறச்சி நெனச்சிறாதீங்க,” என்றாள்.
காலம் அம்மாவைத் தனியாளாக்கியது. சாந்திக்காகத்தான் இறங்கி வந்தாள். ஒரு போதும் அண்ணன்களும், அக்காவும் இந்த அம்மாவை உணர்ந்திருக்க மாட்டார்கள் என்பது அவளைக் குதூகலிக்க வைக்கும்.
சாந்தி எழுந்து முற்றத்து மழையில் நின்றாள். உடல் விதிர்த்து அமர்ந்தது. கைகளைக் கட்டிக் கொண்டாள். மழையில நனையாத குட்டீ . . இழுப்பு வந்துரும் என்று அம்மா மழைக்கு நடுவில் நின்று கொண்டு, வாசலில் இருந்து கத்தினாள்.
சாந்தி மழையைப் பார்த்து கொண்டிருந்தாள். துளிகளாய் விழுந்து முற்றத்தில் நிறைந்து பொந்து வழியாக வெளியே சென்றது. மழடா குட்டி என்ற அம்மாவைக் கடந்து தெருவில் இறங்கினாள்.
நீர் வெளியேறி சாக்கடையில் நிறைந்து கொண்டிருந்தது. சாக்கடையை ஒட்டி நடந்தாள். மழையோடு நடந்து சென்று கொண்டேயிருந்தாள். ஏதோ ஒன்று பிடித்து இழுத்து செல்வதைப் போல வேகமாக நடந்தாள். மழை வலுத்துக் கண்களை மறைத்தது.
நடுங்கும் உடலுடன் நடந்தாள். வேலிக்காத்தான் வீதி கடந்து, ஊர் எல்லைக்கு வந்திருந்தாள். மனதின் பழக்க தோசத்தில் கால்கள் தயங்கி நடந்தன. இடியோசை எழுந்ததும் சாந்தி திடுக்கிட்டு உடலை உலுக்கிக் கொண்டாள். ஏன் இங்கு நிற்கிறோம் என்று மனம் துணுக்குற்ற அடுத்த நொடியில் தன் பின்புறத்தைத் திரும்பிப் பார்த்தாள். மழை நனைந்து வழிந்து குருதித் தடங்கள் வெளிறியிருந்தன. தன் முந்தானையைப் பின்புறம் படர விட்டு நுனியைப் பிடித்தபடி திரும்பி நடந்தாள்.
நெற்றியிலிருந்து நாசி கன்னம் இதழ்களில் வழிந்து முகவாயிலிருந்து மார்பு நனைத்து இறங்கிய நீர் வெக்காளியின் பாதங்களில் வழிந்து சொட்டியது. சுண்டப்பட்டவள் என சாந்தி கருங்கல் மடியில் தலையைப் புதைத்தாள். அவளின் உடல் அதிர்ந்து கசிந்தது. மழை நின்று வானம் வெளிறிக் கொண்டிருந்தது. காற்றுத் தொட எழுந்தவள் வீடு நோக்கி நடந்தாள்.