டேடா மதம்!

என்னுடைய வயது அறுபதைத் தாண்டி விட்டது. என்னுடைய வழக்கமான மாலைப் பொழுது போக்கு, பக்கத்தில் உள்ள பூங்காவிற்குச் செல்லுவது. அங்கு விளையாடும் குழந்தைகளின் சத்தம், பறவைகளின் ஒலி, எதுவும் என்னை அதிகம் பாதிப்பதில்லை. அத்துடன், அங்கு வரும் பெரும்பாலானவர்களுடன் பேசுவதையும் தவிர்ப்பவன்.

சில மாலைப் பொழுதுகளில், அங்கு ஒரு இளைஞன் தன்னுடைய திறன்பேசியில் (smart phone) ஏதாவது செய்து கொண்டிருப்பான். இந்த பூங்காவில் நான் நிகழ்த்திய உரையாடல் என்றால் இந்த இளைஞனுடந்தான். இங்கு என் நினைவில் இருக்கும் சில சுவாரசியமான வாதங்களை முன் வைக்கிறேன்.

“வணக்கம் சார். என் பேர் காளிதாஸ். எல்லோரும் காளின்னு கூப்பிடுவாங்க. உங்களை இந்தப் பூங்காவில் அடிக்கடிப் பார்த்திருக்கிறேன். இங்கு என்ன செய்றீங்க?”

“இங்கு ஏதாவது செய்வதற்குத் தான் வரணுமா?”

கா: ”அப்படி இல்லை சார். இங்கு நான் உங்களைப் பார்க்கும் பொழுது, நீங்கள் வெறுமனே உடகார்ந்திருக்கீங்க….”

“யார் சொன்னாங்க நான் வெறுமனே இருக்கேன்னு? என்னுடைய வேலையை நான் செய்துகிட்டுதான் இருக்கேன்.”

கா: “அப்படி என்ன வேலைதான் செய்யறீங்க இங்க?”

“என்னுடைய வேலை பல தெய்வங்களைத் துதிப்பது. என்னுடைய சுவாசத்தைக் கட்டுப்படுத்துவது.”

கா: “இதை ஒரு வேலையாக நீங்க நெனக்கிறீங்களா?”

“நான் எங்க இதை வேலைன்னு சொன்னேன்? நீதான், நான் வெறுமனே இருக்கேன்னு சொன்னாய்.”

கா: “தப்பா எடுக்காதீங்க சார். கொஞ்சம் விவரமா இங்க நீங்க செய்யறதைச் சொல்ல முடியுமா?”

“அதை உனக்குப் புரிய வைப்பது கஷ்டம்.”

கா: “பரவாயில்லை, முயற்சி பண்ணுங்க, நான் புரிஞ்சுக்க முயற்சிக்கிறேன்.”


கா: “என்னோட வேலையை முடிச்சுட்டேன். இப்ப சொல்லுங்க சார்.”

“பல இஷ்ட தெய்வங்கள் எனக்கு உண்டு. ஒவ்வொரு தெய்வத்தையும் துதிப்பதற்குச் சில பாடல்கள் உள்ளன. அதை என் மனத்தளவில் பாடி விடுவேன். இதை நான் ஒரு முப்பது ஆண்டுகளாகச் செய்து வந்துள்ளேன்.”

கா: “ஒரு மாலைப் பொழுதில் எத்தனை தெய்வங்களைத் துதிப்பீர்கள்?”

“அப்படி எல்லாம் கணக்கு ஒன்னும் கிடையாது. முடிந்த அளவு நான்கைந்து தெய்வங்களை ஒரு நாளில் துதித்து விடுவேன்.”

கா: இந்த நாளில் இந்த தெய்வம்னு ஏதாவது கணக்கு உண்டா?

“அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது. ஒரு வாரத்தில், பெரும்பாலும் எனக்குத் தெரிந்த பாடல்கள் எல்லாத்தையும் சொல்லி முடிச்சுடறது வழக்கம்.”

கா: “சார், தப்பா நெனச்சுக்காதீங்க சார். எல்லா தெய்வமும் ஒன்னுதான்னு சொல்றாங்க. அப்படியிருக்க, நீங்க மட்டும் ஏன் பல தெயவங்களையும் வழிபடறீங்க?”

“நான் இந்த வாக்கு வாதத்திற்கு வரலை. எனக்குப் பிடிச்சதை நான் செய்யறேன். யாருக்கும் கெட்டது செய்யலையே.”

கா: “எப்படி சொல்லறதுன்னு தெரியல. இந்த 21 –ஆம் நூற்றாண்டில் இப்படியெல்லாம் செய்யறது கொஞ்சம் பிற்போக்குத்தனமாகத் தெரியவில்லை?”

“அடுத்த முறை சந்திக்கும் பொழுது விவரமாக இதைப் பற்றி பேசலாம்.”


“உன்னோட வேலையை முடிச்சிட்டயா?”

கா: “முடிச்சிட்டேன் சார்.”

“அப்படி என்ன வேலை செஞ்ச?”

கா: “அது உங்களுக்கு புரியாது.”

“பரவாயில்லை. விவரி, நான் புரிஞ்சுக்க முயற்சிக்கிறேன்.”

கா: “என் பொண்ணு இங்க விளையாடறத திறன்பேசில படம் பிடிச்சிடுவேன்.”

“பார்த்திருக்கேன்.”

கா: “அப்படியே, அந்த படத்தை ஃபேஸ்புக், இன்ஸ்டாக்ராம் –ல மேலேத்திடுவேன்.”

“அப்புறம்?”

கா: “சார், உலகத்துல எத்தனை விஷயம் நடக்கறது. டிவிட்டரில என்னை ஒரு 10,000 பேர் பின்பற்றறாங்க. பல விஷயங்களைப் பற்றிக் கருத்துத் தெரிவிப்பேன்.”

“டிவிட்டர், உங்களுக்குக் கருத்துத் தெரிவிக்க பணம் ஏதாவது தராங்களா? இல்லை, அவங்க உங்களை கருத்து தெரிவிக்காவிட்டால், ஏதாவது மோசமான விளைவுன்னு
பயமுறுத்தறாங்களா?”

கா: “என்ன சார் புரியாம பேசறீங்க. உலக நிகழ்வுகளில் ஒவ்வொரு மனிதனும் பங்கேற்க வேண்டும் சார். உங்க காலம் போல இல்லை. ஒவ்வொரு மனிதனிடம் ஒரு திறன்பேசி மூலம் ஒரு ஊடகப் போரையே நிகழ்த்த முடியும்.”

“ஆக, எந்த வித நிர்பந்தமும் இல்லாம, நீங்களே கருத்து தெரிவிக்கறீங்க. Interesting. அப்புறம் வேற என்ன செய்வீங்க?”

கா: ”புதிய சினிமா பற்றி டெக்னிகலாக அலசுவோம். அதையும் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸப்பில் விவரமாகக் கருத்து தெரிவிப்போம். முக்கியமாக, யுடியூப்பில் புதிதாக டிரெண்டு ஆகின்ற விடியோக்களை அவசியம் பார்த்து விடுவேன்.”

“புரியாமத்தான் கேக்கறேன். இதை எல்லாம் செய்ய வேண்டும்னு யார் உங்களுக்கு சொல்லிக் கொடுத்தாங்க?”

கா: “எதுக்கு சார், யாராவது சொல்லித் தரணும்? எப்படி வாழ்க்கையை அனுபவிக்கணும்னு நாமே தான் முடிவு செய்யணும். இந்தப் புதிய திறன்பேசி தொழில்நுட்பம் வந்ததிலிருந்து, இந்த முறைகளை என்னுடைய சந்ததியினர் தானே கத்துக்கிட்டோம்.”

“அப்புறம், வாட்ஸப்புனு ஏதோ சொன்னீங்களே. அதுல என்ன செய்வீங்க?”

கா: “எனக்கு ஒரு 30 வாட்ஸப் குழுக்களில் பங்குண்டு. என்னோட பள்ளி, கல்லூரில, படிச்சவங்க, பல ஆபீஸ்ல வேல செஞ்சவங்க, சில அரசியல் மற்றும் சினிமா ஆர்வமுடைய குழுக்கள்னு ஒரு நாளைக்கு குறைஞ்சது ஒரு 100 செய்திகள் வரும். சில சுவையான செய்திகளை மற்ற குழுக்களுடன் ஷேர் செய்வது, சில கருத்துக்களுக்கு என்னுடைய ஆமோதல், எதிர்ப்பு, விளக்கம் என்று அது ஒரு பெரிய உலகம். உங்களுக்கு புரியாது சார்.”

“கொஞ்சம் புரியுது, உனக்கு எவ்வளவு வேலைகள் இருக்குன்னு. நாளைக்கு மேலும் பேசலாம்.”


கா: “இஷ்ட தெயவங்களை வணங்கி முடிச்சாச்சா, சார்?”

“இன்றைக்கு முடிச்சாச்சு. கொஞ்சம் உன்னுடைய பூங்கா திறன்பேசி வேலைகளைப் பற்றி நினைத்தேன். சில சந்தேகங்கள் கேக்கலாமா?”

கா: “தாராளமா!”

“நீங்க டிவிட்டர், வாட்ஸப் மற்றும் ஃபேஸ்புக்கில் பல உலக நடப்புக்கும் கருத்து தெரிவிக்கிறதா சொன்னீங்க. உலக நடப்புகள் நடந்த வண்ணம் இருக்கு. இன்னிக்கி ஒரு பெரிய விபத்து, நாளைக்கு ஒரு வங்கி ஸ்ட்ரைக் அப்படி ஏதாவது நடந்துகிட்டே இருக்கு, இல்லையா? உங்களைப் போல பல கோடி பேர்கள் கருத்து தெரிவிக்கிறீங்க. அதுக்கு பிறகு என்ன நடக்கிறது?”

கா: “சார், அமெரிக்க தேர்தலையே மாற்றி விடும் சக்தி இந்த சமூக வலையமைப்பிற்கு இருக்கு. என் போல பல மக்களின் கருத்து, அரசியல் தலைமையை வேறு விதமாகச் சிந்திக்க வைக்கிறது.”

“அதெல்லாம் சரி. இதை வேற விதமாக சொன்னால், உங்கள் கருத்தின் வீச்சு பற்றி உங்களுக்கே தெரியாது. நம்முடைய கருத்தால், ஏதாவது நல்லது நடக்காதா என்ற எண்ணத்தில் நீங்கள் பதிவு செய்கிறீர்கள். அப்படித்தானே?”

கா: “சார், இந்த டிஜிட்டல் உலகில், உங்கள் பங்கைச் செய்தல் ஒவ்வொரு மனிதனுடைய கடமை. ஒரு பிரச்னையில், மனிதர்களின் கருத்துக்கள் எல்லாம் ஒன்றிணைந்து சரியான முடிவை உலக நாடுகள் எடுக்கும்னு நம்பணும் சார்.”

“யார் உங்களுடைய கருத்துக்களை ஒன்றிணைக்கிறாங்க?புரியும்படி சொல்லுங்களேன்.”

கா: “அதெல்லாம் உங்களுக்குப் புரியாது. எந்த ஒரு மனிதரும் இதைச் செய்வதில்லை. ஏன், எந்த ஒரு அமைப்பும் கூட இதைச் செய்வதில்லை. பல அமைப்புகள் இந்தக் கருத்துக்களை ஒன்றிணைத்து வெளியிடுகின்றன. அதன்படி சில பிரச்னைகளுக்கு முடிவெடுக்கப்படுகிறது.”

“ஆக, நம்ம அரசாங்கம் இந்த அமைப்புகளின் அறிக்கைக்காக காத்திருந்து முடிவெடுக்கிறதா? அப்புறம் அதிகாரிகள், அமைச்சர்கள், துறை வல்லுனர்கள் எதுக்கு?”

கா: “நம்ம நாட்டுல இன்னும் அந்த அளவுக்கு முன்னேறல. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பல அறிக்கைகளை டிவிட்டர் மூலம் வெளியிடுகிறார்.”

“சரியா போச்சு. தப்பு இல்லாம ஆங்கிலம் கூட டைப் செய்யத் தெரியாத ஒரு அதிபர், உங்களுக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாகி விட்டாரோ?”

கா: “அத விடுங்க சார். தப்பான உதாரணம். இன்னிக்கி அமெரிக்க செனட், மார்க் மற்றும் சுந்தரை கேள்விக் கணைகளால் துளைக்கக் காரணம் என்ன? சமூக வலைத்தளங்களின் பலத்தைக் கண்டு அரசாங்கங்கள் பயப்படுகின்றன.”

“சரியா நீங்க புரிஞ்சுக்கல தம்பி. சமூக வலைத்தளங்கள் டிவி மற்றும் செய்தித்தாள்கள் போல ஒரு கட்டுப்பாட்டோடு நடந்து கொள்வதில்லை என்பதற்காகவே செனட் இவர்களைக் கேள்வி கேட்டது. சரி, யார் இந்த மார்க்?”

கா: “என்ன சார் ஓட்டரீங்க. மார்க் ஃபேஸ்புக்கின் தலைவர். சுந்தர் கூகிளின் தலைவர்.”

“இவர்களை உனக்குத் தெரியுமா?”

கா: “இதென்ன கேள்வி சார்? அவர்களை எனக்குத் தெரியும். அவ்வளவுதான். என் வேலை இந்த டிஜிட்டல் உலகில் பங்கேற்பது.”

“சரி நாளை மேலும் பேசுவோம்.”


“சரி, காளி, இன்னொரு கேள்வி கேட்கலாமா?”

கா: தாராளமா!

“எப்படி, வாட்ஸப், ஃபேஸ்புக், யுடியூப், இன்ஸ்டாக்ராம் போன்ற பல வகை சமூக வலைத்தளங்களை ஒரே சமயத்தில் சமாளிக்கிறீர்கள்?”

கா: “ஒரே சமயத்தில் எல்லாத்தையும் செய்யறது முடியாத காரியம் சார். ஒரு வாரத்தில், ஏறக்குறைய எல்லா தளங்களிலும் ஓரளவிற்கு என்னுடைய பங்களிப்பை முடித்து விடுவேன்.”

“புரியுது. ஆனால் இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு முறை இருக்கல்லவா?”

கா: “உண்மைதான். ஆனால், இதெல்லாம் எளிதில் புரிஞ்சுக்கலாம். கடைசியில் எல்லாம் ஒன்னுதான். நம் பங்கு, நம் கருத்துக்களை எழுத்துக்களாகவோ, விடியோவாகவோ, அல்லது படமாகவோ தெரிவிப்பது. சில சமயம் ஒலியாகக் கூட சொல்லிவிடுவோம்.”

“இப்ப புரியுது உங்களது மதத்தின் அடிப்படை.”

கா: “என்ன சார், நான் டெக்னாலஜி பற்றி சொல்றேன், நீங்க மதம்கிறீங்க. சரியில்லை சார்!”

“நீ சொன்னபடி உன்னுடைய எழுத்து, படம், ஒலி, விடியோ எல்லாம் அடிப்படையில் என்ன?”

கா: “அது டிஜிட்டல் உலகில் டேடா அல்லது தமிழில் தரவுன்னு சொல்ல்லாம்.”

“இப்ப சொன்னாயே, அந்த தரவுக்கு பல வடிவங்கள் உண்டு, இல்லையா?”

கா: “அது சரி, அதுக்கு என்ன?”

“நீ சொன்னபடி, வாரத்திற்கு எல்லா வடிவங்களிலும் இந்த பல சமூக வலைத் தளங்களில் உன் பங்கீட்டை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நீ செய்கிறாய், இல்லையா?”

கா: “இதென்ன சார், நான் சொன்னதையே திருப்பி சொல்றீங்க?”

“சரியா கவனி – நான் ‘எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்’ என்பதை சேர்த்துச் சொன்னேன். ஒவ்வொரு சமூக வலத்தளத்திற்கும் ஒரு அனுகுமுறையுடன் உன் கடமையைச் செய்கிறாய் இல்லையா? இதை யாரும் நீ செய்ய வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தவில்லை, சரியா?”

கா: “சார், என்னதான் சொல்ல வரீங்க?”

“பெரிதாக உனக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லை. நான் இஷ்ட தெய்வங்களை பல விதங்களிலும் துதிக்கிறேன். நீயும் பல முறைகளில் இந்த சமூக வலைதளங்களில் உன் பங்கீட்டைச் செய்கிறாய். நீயும் சரி, நானும் சரி, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இதைச் செய்கிறோம். சரியா?”

கா: “சார், என்னை மதவாதியாக்கி விடாதீங்க சார்…”

“நீ டிஜிட்டல் மதத்தைச் சேர்ந்தவன். நான் சற்று பழமை முறைகளைப் பின்பற்றுகிறேன். மற்றபடி, எனக்கு ஒரு பேட்டரி கூடத் தேவையில்லை. ஒரு விதத்தில் உன் மத முறைகளை விட, என்னுடைய முறைகள் மேலானது. மற்றவருக்கு எந்த தீங்கும் இதனால் நேராது.”

கா: “That’s a stretch, சார்.”

“சமூகப் பொறுப்பு எல்லாருக்கும் உண்டு. அதை மறந்துடாத. வெறுமனே இருந்தாலும் சரி, டிஜிட்டல் மதவாதியாக இருந்தாலும் சரி.”

கா: “குட் நைட் சார்.”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.