கோடையின் ஈரம் கழுத்திலும் நெற்றியிலும் தன்இருப்பை உணர்த்த, பால்காரரின் ஹாரன் ஒலி கேட்டு கோகிலா பாயிலிருந்து கண்விழித்தாள். மெல்லிய ஔி எழுந்திருந்த வானம் ஒரு சித்திரம் எனக் கண்முன்னே விரிந்தது. மொட்டைமாடியில் மென்மையான தண்மையைத் தவிர காற்றில்லை. வீடுகளை அடுத்த வயல்களில் தென்னைமரங்கள் மட்டும் வானத்தை நோக்கி பூமி நீட்டிய காம்பு நீண்ட ஒற்றைப் பூவென ஆங்காங்கே நின்றிருந்தன. அதற்குள் ஔி மேலும் தெளிந்திருந்தது.

தெருவின் தெற்கு முனையிலிருந்து ஒருசிறு பெண் அவளின் அம்மாவை ஒத்தவருடன் தோளுரச நடந்து வந்துகொண்டிருந்தாள். வயது பதினைந்திற்குள் இருக்கலாம். யார்? யார்? என்று மனம் தேடியலைந்தது. ராசு தாத்தாவின் வீட்டைத் தாண்டி வந்து கொண்டிருந்தாள்.
அமுதா . . . என்று இதயத்தினுள் படபடக்க கைப்பிடிச் சுவர் அருகே நின்று தன் வீட்டின் முன் நடந்து செல்லும் அவளைப் பார்த்தாள். இவ்வளவு பக்கத்தில் அவள் யாரோ என்றிருந்தாள். மீண்டும் கண்ணெட்டும் தொலைவில் அமுதாவானாள். பால்யத்தின் கோடைவிடுமுறை நாட்களில் மனதிற்குள் புதைந்த அவள், கண்முன்னே சாயலாகத் தெரியும் இந்நேரம், கண்ணாமூச்சி விளையாட்டில் ஔிந்துகொண்டவள் தன்பின்னாலிருந்து எட்டிப் பார்த்ததைப் போல கோகிலா விதிர்த்து நின்றாள்.
வகுப்பறையில் அமர்ந்திருந்த பெஞ்சிலிருந்து பார்க்க அவசர அவசரமாக வகுப்பிற்குள் நுழையும் அமுதா, அழுந்தியகுரல் அமுதா, நீண்ட இரட்டை சடை அமுதா என மனதிற்குள் வேறுவேறாக எழுந்து ஒன்றாகி நின்றாள். இத்தனை ஆண்டுகளாக மனதினுள் எங்கிருந்தாள்!
அந்தவயதில் சாவு என்பதன் வழிகள், பொருள் தெரியவில்லை. அதுதான் பரீட்சை முடிந்து பத்துநாளுக்கு முன்னால் சர்பத் குடுத்து பாட்டுப்பாடி பிரிவுவிழா நடந்து முடிஞ்சாச்சே என்பதால், அதன்பின் தெருப்பிள்ளைகள் தவிர மற்றவர்கள் தொலைவாகிப் போனார்கள். ‘பதின்மூன்று வயதில் தற்கொலை செய்துகொள்ளத் தோன்றுமா, தெரியுமா?’ என்று இன்று கோகிலாவிற்குள் கேள்வி எழுந்தது.
பாயைச் சுருட்டிக்கொண்டிருக்கும் போது கிழக்கே பச்சைமலைக் குன்றுகளின் உச்சியில் இளம்சிவப்பில் சூரியன் ஒரு ஔிரும் வட்ட மணியெனப் பிரிந்து எழுந்தான். மலையிலிருந்து உதித்தவன் மலையன் என்று நினைத்தபடி கண்களைச் சுருக்கினாள்.
நேற்று உடல்நிலை மோசமாகி சாவுக்கிடப்பில் விழுந்த பெத்தா அவ்வாவைப் பார்க்கச் சென்ற பொழுது, கோகிலாவுக்கு அந்த முச்சந்தியை அடுத்த அமுதாவின் வீடு நினைவிற்குவந்தது. அப்போதிருந்துதான் அமுதா மனதிற்குள் எழுந்திருக்கிறாள் என்று எண்ணியபடி பாயுடன் கீழிறங்கினாள். இரவு பெரியமாமியாருடன் இருந்த அவளின் அம்மா தெருவில் லட்சுமி அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
வாசல் தெளிக்கத் தண்ணீர் எடுத்து வைத்து, நைட்டியை கணுக்காலில் சுருட்டிப் பிடித்துக் கொண்டு சாணியை எடுத்த கோகிலாவிடம், “ராத்திரியே அவ்வா முடிச்சிட்டாங்க…வெறும் தண்ணியத் தெளிச்சுவிடு. . . கோலம் போடாத. . புத்தகத்த எல்லாம் எடுத்து ஓரஒதுங்க வையி. . ராத்தங்கறவங்க இங்க வருவாங்க,” என்றபடி வீட்டினுள் சென்றாள்.
தண்ணீர் தெளிக்கும்போது, “இனிமே எந்திரிக்கனுன்னு ஆசப்படுற வயசில்ல,” என்று நினைத்த கோகிலா, உள்ளே சென்று பீரோவில் தேடித்தேடி பழைய பச்சை சுடிதார் ஒன்றை எடுத்து உடுத்திக் கொண்டு தெருவில் இறங்கி நடந்தாள்.
பந்தல் போட்டுக் கொண்டிருந்தார்கள். தாழ இருந்த மூங்கில், கீற்றுகளின் அடியில் குனிந்து சென்ற அவளிடம், “பெரியவரு மவதானே பாப்பா…பிள்ளங்கள விட பேரப்பிள்ளங்க கண்ணு தண்ணிக்குத் தானே பெரியகட்டைங்க ஏங்கிக்கெடக்கும்,” என்ற வெள்ளைத் தலைப்பாக்காரர், காய்ந்த தென்னங்கீற்றைத் தூக்கி உயரே வீசினார். கரியஉடலில் அந்தக் காலையில் வியர்வை வழிய எண்ணெய் தடவிய உளுந்தின் மினுமினுப்புடன், வயதிற்கு மீறிய சுறுசுறுப்புடன் தாவிக்கொண்டிருந்தார்.
பறையைத் திண்ணையின் ஒருபுறம் வைத்துவிட்டு விறகில் தீப் பற்ற வைத்துக் கொண்டிருந்த வேலு, கோகிலாவைப் பார்த்ததும் பீடியை அணைத்துக் காதில் செருகிவிட்டு நின்றான்.
கண்களை உள்ளே சாடை காட்டியபடி, “யாரு. . ?”என்றான்.
“அப்பாயிக்கு மூத்தவங்க.”
“போய்ப்பாரு,” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குப் பின்னால் சென்றான்.
குளிக்க வைக்கப்பட்டுப் புதுச் சேலையில் பொதிந்து வைக்கப்பட்ட தேகத்தைப் பார்த்தாள். கைப்பிடி தசையில்லாது சுக்கான செப்பு உடல்.
நடையிலும் தாழ்வாரத்திலும் ஆட்கள் நின்றிருந்தார்கள். அங்கிருந்த பக்கத்துவீட்டம்மா, “ஒரு மவளைப் பெத்திருந்தா இன்னேரம் ஒத்தசத்தமாச்சும் கேட்டிருக்கும்…அழுவக்கூட ஆளில்லாம போயிட்டியே,” என்றது.
எதிர்வீட்டம்மா, “தொண்ணூறு வயசுக்கு மூணுதலமுற பாத்து அனுப்பின கட்ட. . வடக்கிக்காட்டுல சேத்தாப்போதும். . சும்மா கெட. . . மவனெல்லாம் சக்கர, ரத்தக்கொதிப்புல தடுமாறிக் கெடக்குறானுங்க,” என்றாள்.
கோகிலா உள்முற்றத்தில் விழுந்த பதவெயிலில் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். செப்பு உடல் என்பது மட்டும் மனதில் நெளிய, அமுதாவுக்கும் செப்புஉடல்தான் என்று நினைத்ததும் கண்களை கண்ணீர் மறைத்தது. துப்பட்டாவை எடுத்து துடைத்துக்கொண்டாள்.
அவளையே தலையிலிருந்து கால்வரை பார்த்துக்கொண்டிருந்த நெலாப்பொட்டுக்காரம்மா, “இந்தகாலத்துப்பிள்ளைகளுக்கு பதச்சி அழுவக்கூட சத்தில்ல. . . வூட்டுக்கு போயிட்டு வயித்துக்குப் போட்டுட்டு ஏறுபொழுதில வா கோகி.,” என்றதும், இவள் தலையாட்டிவிட்டு முற்றத்திலிருந்து, தாழ்வாரத்தில் கிடத்தப்பட்டிருந்த அவ்வாவைப் பார்த்தபடி வெளியே வந்தாள். மேற்கே திரும்பிப் பார்த்தாள. குனிந்தபடி தெருவிலிறங்கி கிழக்கு பார்த்துநடந்தாள்.
எட்டாம் வகுப்பிலேயே அமுதாவுக்கு வீட்டுவேலைகள் எல்லாம் தெரியும். கைவேலை வகுப்பில் வாத்தியார் வராததால் பயல்கள் பின்புறம் ஓடிய வாய்க்காலில் நீரெடுத்து மரங்களுக்கு ஊற்றிக் கொண்டிருந்தார்கள். பிள்ளைகள் அங்கங்கே உட்கார்ந்து பாண்டி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அமுதா கோகிலாவிடம், “பூக்கட்டத்தெரியுமா?” என்றாள். தெரியாது என்றவளிடம், “இலயப்பறிச்சுட்டு வா,” என்றாள். தன் பையிலிருந்த நூலை எடுத்து அந்த இலையை வைத்துக் கட்டிக் காண்பித்து, இவளிடம் தந்து கட்டச்சொன்னாள். வேலு பக்கத்தில் அமர்ந்து, “எனக்கும் சொல்லித்தா,” என்றான்.
இன்னொருநாள் சிலேட்டில் கோலம் வரையச் சொல்லித் தந்தாள். தினமும் முந்தினநாள் பழகிய கோலத்தை வரையச் சொல்வாள் . அப்படியே பிள்ளைகள் பூக்கட்டுவதற்கு, கோலம் போட என்று சேர்ந்துகொண்டார்கள். பையன்களில் சிலரும்.
“கூடிக்கூடி கோலம் போடவும், பூக்கட்டவும் இந்தப் பிள்ளைங்களப் பாருங்க சார். . அமுதா தான் டீச்சரம்மா,” என்று சிரித்த தமிழய்யாவிடம், ஜெயராஜ் வாத்தியார், “பதிமூணு வயசாகுதுல்ல கத்துக்கட்டும் சார்,” என்றபடி அமுதாவைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டார்.
அவர் வரலாறு பாடம் நடத்தும் போது, பெண்களின் திருமணவயது பதினெட்டு என்ற குண்டை வகுப்பறையில் போட்டுவிட்டு சென்றார். மெதுவாக கோகிலா அமுதாவிடம், “அய்யய்யோ இன்னும் ஐஞ்சுவருஷம் தான் பாக்கியிருக்கு,” என்றாள். அமுதா, “அதுக்கு மொதல்ல வயசுக்கு வரனும் புள்ள,” என்றாள்.
“அய்யே. . எனக்கு அத நெனச்சவ பயம்மா இருக்கு. இந்த தாவணியெல்லாம் கட்டனுன்னாலே கருமம். எங்கஅவ்வா வேற கையில குச்சிய வச்சிக்கிட்டு, காலங்காத்தால எந்திருச்சு வாய்கழுவுனதும் என்னிய ஒருசொம்பு நீராகாரத்தண்ணியக் குடிக்க வச்சுட்டுதான் மாடு ஓட்டிட்டுப் போவுது,” என்றாள்.
“ஏனாம்,”
“வெறும் வயத்துல வயசுக்கு வரக்கூடாதாம்…ஒங்கவீட்ல குடுக்கமாட்டாங்களா,” அமுதா இல்லையென்று தலையாட்டினாள்.
“ஜாலி. . உங்க வீட்ல பெறந்திருக்கலாம்.”
மாலையிட்டு தாவணி கட்டி சடையில் பூச்சுற்றிய அக்காக்கள் அவளின் நினைவில் வந்தார்கள். புதுச்சேலை கட்டி அழுதபடி பெரியமீசை மாமாவுடன் முந்தாநாள் சென்ற தனம் அக்கா நினைவில் வந்ததும் அவளுக்கு கண்ணீர் வந்துவிடும் போலிருந்தது.
“கோகிலாவுக்கு என்னாச்சு?” என்ற தமிழய்யாவின் குரலால் கலைந்தவள், திருதிருவென்று விழிக்கவும் வகுப்பில் அனைவரும் சிரித்தார்கள். பாஸ்கர், “அந்தப்புள்ள தூங்கிருச்சுங்கய்யா,” என்றபடி குச்சிய எடுத்து அவரிடம் நீட்டினான்.
“நீ சும்மா இருடா. . அதுக்கிட்ட கேட்கறனில்ல,” என்றவர் அவன் தலையில் ஒன்று போட்டார்.
கண்களை மழங்கமழங்க விழித்தபடி ஊதாப்பாவாடையை கசக்கி இறுக்கிப் பிடித்துக்கொண்டு நின்று, “அய்யா,” என்று வெறும் தொண்டையை விழுங்கினாள்.
அவள் நின்றிருந்த வரிசைக்கு அருகில் வந்தவர் உடலை வளைத்து எட்டி நின்று, “ஏம்மா. . ஒடம்புக்கு என்ன?” என்று நெற்றியில் கை வைத்துப் பார்த்துவிட்டு பின்னால் நகர்ந்தார்.
அவள் திடத்தை வரவழைத்துக்கொண்ட குரலுடன் படபடவென்று, “அய்யா…பதினெட்டு வயசானா கல்யாணம் பண்ணியே ஆகனுமா?” என்றதும் பயல்கள் சத்தமாக சிரித்தார்கள். பிள்ளைகள் குனிந்தபடி சிரிக்க டீ. வி. சுதா, “அய்யய்யோ. . நல்லா அடிவாங்கப்போவுது,” என்றாள்.
அய்யா தொண்டையை செருமியபடி, “இன்னிக்கி டீ. வி யில மதியானம் படம் போடலியா. . பள்ளிக்கூடத்த எட்டிபாத்திருக்கியே,” என்று அவளைக் குச்சியால் ஒருதட்டு தட்டிவிட்டு, “குடிக்கத் தண்ணி எடுத்துட்டு வாடா பாஸ்கர்,” என்று திரும்பி, “யாரு சொன்னா,” என்று கோகிலாவை அருகில் அழைத்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தார்.
“ஜெயராஜ் சார்…குடியியல் பாடத்தில இருக்குங்கய்யா.”
“ம். . பதினெட்டுலயே பண்ணிக்கனுன்னு இல்ல. அது மேல பண்ணிக்கலாம்…எடத்துக்கு ஓடு,” என்று தலையில் தட்டினார்.
“இல்லங்கய்யா…கல்யாணம் பண்ணியே ஆவனுமா,” என்றாள்.
தமிழய்யா எம்பி அவளின் குட்டிஜடையை பிடித்து ஆட்டியபடி, “பிச்சுப்புட்டேங்கழுத. . வரவர ஒனக்கு வாய்நீளுது,” என்னும்போதே, “அய்யா…அய்யா. . . விடுங்கய்யா…இனிமே கேக்க மாட்டேங்கய்யா,” என்றபடிஓடிவந்து இடத்தில் அமர்ந்துகொண்டாள்.
பள்ளிமுடிந்து வீடு திரும்பும் வழியில் அமுதா இவளிடம்,
“கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லதுதானே. . . நமக்குன்னு ஒருவீடு இருக்கும்,” என்றாள்.
“இப்ப இருக்கறது உங்க வீடுதானே. . வாடவ வீடா,”
“அது எங்க சித்தியோட வீடு. . ஏய் இன்னிக்கி எங்க வீட்டுக்கு வரியா…உங்க பெரியதாத்தா வீட்டோட உங்க வீட்டுக்குப் போயிரலாம். ,”
“ம். . அதுக்கும் முன்னாடி பாஸ்கர் பயல ஒருஅடி வச்சிறனும்,” என்றபடி முன்னால் ஓடினாள்.
இருவரும் தகரம் வேய்ந்த தாழ்வாரத்தில் நுழைந்தனர். அமுதா தாழ்வாரத்தின் வலதுஓரத்துத் திண்ணையில் பையை வைத்து, இவளையும் வைக்கச் சொன்னாள். முன்னால் பெரியவாசலை அடுத்து ஓட்டுவீடு. ஓட்டுக்கூரையில் அவரைக்கொடி ஏறியிருந்தது. வாசலின் இடதுபுறம் கல்குந்தாணியில் நீர் நிறைந்திருந்தது.
அமுதா பாவாடையைச் சுருட்டி அமர்ந்து கீழே கிடந்த சட்டிப்பானைகளை சாம்பல் வைத்துத் தேங்காய் நாரால் தேய்க்கத் தொடங்கினாள். பக்கத்தில் அமர்ந்த கோகிலா அவற்றை கழுவினாள்.
பாவாடையில் கையைத் துடைத்தபடி எழும்பொழுது, “இது யாரு,” என்றபடி ஒரு அம்மா வந்தாள்.
“எங்கூட்டாளி சித்தி,” என்ற அமுதாவைப் பார்த்தபடி அவள் வீட்டினுள் சென்றாள். அமுதா கோகிலாவின் தோளில் கைப்போட்டுக் கொண்டாள். இருவரும் திண்ணையில் அமர்ந்தார்கள். சித்தி அழைக்க, அமுதா ஓட்டுவீட்டிற்குள் சென்று ஒருதட்டில் சோறும் குழம்புமாக வந்தாள். இருவரும் சிரித்தபடி எதிரே அமர்ந்து சாப்பிட்டார்கள்.
“இங்கதான் உக்காந்து வீட்டுப்பாடம் எழுதுவேன்,”
தட்டைக் கழுவிக் கவிழ்த்துவிட்டு, திண்ணையில் அமர்ந்து காலாட்டியபடி இருவரும் வீதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அமுதா, “நீ வீட்டுக்குப்போறியா,” என்றாள்.
“ம்,” என்றெழுந்த கோகிலாவின் கையைப் பிடித்தபடி முடக்குவரை வந்த அமுதா காட்டிய இடத்திலிருந்து, கோகிலாவின் வீட்டிற்கு வழி தெரிந்தது. முடக்கு தாண்டும் வரை தன்னைப்பார்த்துக் கொண்டிருந்த அமுதாவின் முகம், கோகிலாவின் மனதில் இன்று எழுந்து பார்த்துக்கொண்டிருந்தது.
கோகிலா தட்டிலிருந்த காகிதக்கோப்பைத் தேநீரை பந்தலின் கீழிருந்தவர்களுக்குக் கொடுத்தாள். குளுசநேரம் என்பதால் ஆட்கள் வரவில்லை. வந்தவர்களும் கிளம்பியிருந்தார்கள். பறைகளை ஓரமாக வைத்துத் திண்ணைக்குக் கீழே அமர்ந்தவர்களுக்குத் தேநீரை நீட்டினாள். தானும் ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டு திண்ணைக்குக் கீழிருந்த வாசல்படியில் அமர்ந்தாள்.
வேலுவிடம், “என்ன. . நெறய வெத்தலப்பாக்கு போடறியா,” என்றாள்.
ஒன்றும் சொல்லாமல் குனிந்துகொண்டான்.
“அப்பா ரொம்ப தளந்துட்டாரே,”
“ம்,”
“இவனுக்கே ஒருபிள்ள பெறந்திடுச்சு. . இன்னும் போக்கத்தவனாவே இருக்கான்,” என்று குத்துக்காலில் வேட்டியைச் சுருட்டி அமர்ந்திருந்த வேலுவின் அப்பா எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னார்.
“வேலு கூட படிச்சியோ,” என்ற சின்னய்யா, அவள் தலையாட்டுவதைப் பார்த்தபடி உள்ளே சென்றார்.
அருகில் இருந்த சின்னய்யனிடம், “சின்னபிள்ளயில வேலுகூட வூட்டுக்கு வரும். . எப்பப்பாத்தாலும் நெலக்குச்சியில இடிச்சுக்கும். . வேலுதான் குனிகுனின்னு தலயபிடிச்சு அமுக்குவான்,” என்று வேலுவின் அப்பா புன்னகைத்தார்.
“ஒடம்புக்கு ஏதாச்சுன்னா கள்ளுக்கட மொடக்குல புதுசா வந்திருக்கற ஹாஸ்பிட்டலுக்கு போலாம்ப்பா,” என்றாள்.
“அங்கதான் சாமி போறேன்,”
“நேரத்துக்கு வயித்துக்கு போடனும்…முடியலன்னா அலயாதீங்க,”
“அலஞ்சு ஆவனுமே,” என்று சலித்தபடி எழுந்து சென்றார்.
கோகிலா வேலுவை முறைத்தாள்.
அவன் மெதுவான குரலில், “உன்ன மாறி சொகவாசியா…அங்க சுடுகாட்ல வந்து ஒக்காந்து பாரு தெரியும்,” என்றவன், “அய்யோ…வாய்தவறுது. . மவராசியா ஆயுசோட இரு. நம்ம விமலா போனவருஷம் செத்து போனுச்சே. . என்னால எரியறதபாத்துக்கிட்டு ஒக்கார முடியல. எளந்தேகம் குப்புற போட்டு எரிச்சம். . என்னடா பொழப்புன்னு இருந்துச்சு,” என்றான்.
“சொகவாசின்னு யாருமில்ல,” என்றபடி எழுந்து கீழே கிடந்த காகிதக் கோப்பைகளைப் பொறுக்கினாள்.
சடங்குகள் முடிந்து ரதத்தில் அவளின் அவ்வாவை ஏற்றி ஆண்கள் முன் செல்ல பின்னால் பெண்கள் நடந்தார்கள். அனைவரும் நடந்து முச்சந்தியில் நின்றார்கள்.
“இந்தா,” என்று பொறியை நீட்டிய வேலுவை, சித்தி பார்த்த பார்வையில் அவன், “அங்க போடுங்க,” என்றான். இவள் புரியாமல் பார்க்க அவன்மெதுவாக, “அங்க போடு,” என்றபடி அனைவருக்கும் கொடுத்து முடித்த பின் இவளருகில் வந்து நின்றான். முன்னால் பாதையைக் கட்டும் சடங்குகள் நடந்துகொண்டிருந்தன.
“இதெல்லாம் செஞ்சு பழகிக்கலாமில்ல,”
“ஊருக்குள்ள நாந்தான் செய்யறது…ஒங்கப் பழக்கம் கொஞ்சம் மாறினது. எப்பவாச்சும் செய்யறதால தவறுமோன்னு தயக்கம். . அப்பாவுக்கு நல்லாத் தெரியும்,”
“ம்…. அதுதான் அமுதா வீடு,” என்றாள்.
அவன் புரியாமல் நெற்றியை சுருக்கினான். “நம்ம கூட படிச்சுது. . ரெண்டாவது பெஞ்சில,” என்றவளை மறித்து, “ஆமா… நம்ம ஸெட்டுல முதல்ல போனது…. ஒவ்வொரு எழவு விழறப்பவும் நம்ம பிள்ளங்க. . பசங்க யாரையாச்சும் நாந்தான் பாத்துட்டே இருக்கேன்…நம்மபிள்ளங்க ரெண்டு மூண நானே நின்னு எரிச்சப்ப ஒருவாரமா சரிவர தூக்கமே இல்ல. அப்பா சொல்லும் வயசு தாண்டுனா மனசுக்கு சலிச்சு போயிரும்ன்னு,” என்றபடி நகர்ந்தான்.
பார்த்துக்கொண்டேயிருந்த சித்தியை நேராகப் பார்த்து, “ஃப்ரண்டு சித்தி,” என்றாள். “தைரியம் பிடிச்சக் கழுத,” என்ற சித்தி திட்டுகிறாளா? கொஞ்சுகிறாளா? என்றறிய அவள் முகத்தைப் பார்க்க எத்தனித்த கோகிலாவை கும்பல் ஓரமாகத் தள்ளியது.
அவள் ரதம் நகர்வதைப் பார்த்தபடி நின்றாள். ரதம் நகர்ந்ததும் தெருவில் வண்ணாரப்பிள்ளை வெள்ளை வேட்டியை பாதையில் விரித்து, “வுளுந்து கும்பிட்டுட்டு வூட்டுக்கு போலாம்…மச மசன்னு நிக்காம,” என்றாள். உறவுக்கார பொம்பிளையாட்கள் முட்டிமடக்கி விழுந்து கும்பிட்டு அவரவர் எழுந்து திரும்பிப் பார்க்காமல் சென்றார்கள்.
கோகிலா விழுந்து எழுந்த போது ரதம் கண்ணிலிருந்து மறைவதைக்கண்டு இனிமே பாக்க முடியாது என்று நினைத்ததும், என்னவென்று அறியாத ஒரு ஏக்கத்தை உணர்ந்து மேற்கே திரும்பினாள். அமுதாவின் வீடு இருந்த இடத்தில் புதிய வீடு இருந்தது. மனம் சலிக்கத் திரும்பியவளின் கையைப் பற்றிய அந்த அம்மாள், “நீ அமுதா கூட்டாளி தானே,” என்றாள். நரையோடிய தலையும் முதுமை படர்ந்துகொண்டிருந்த உடலுமாக இருந்தாலும்,அவள் மனம் அமுதாவின் சித்தியைக் கண்டு கொண்டதும் தலையை ஆட்டினாள்.
அந்தஅம்மா இவளின் கன்னங்களையும், கையையும், முதுகையும் தடவிக்கொண்டேயிருந்தாள்.
“இப்பதான் எழவு வீட்லருந்து வர்றேன். . உன்னயப்பாக்கலயே,”
“உள்ள இருந்தேம்மா,” என்றவளின் கன்னங்களை அந்தஅம்மாள் மீண்டும் ஒருமுறை தடவி, “திரும்பிப்பாக்காம போ,” என்றாள்.
திரும்பி நடந்த கோகிலா அங்கிருந்த அடிகுழாயை சின்னப்பையன் அடித்துக்கொடுக்க முகத்தைக்கழுவினாள். தண்ணீரை இருகைகளிலும் ஏந்திக் குடிக்கும் போது புரையேறி இருமலாக வந்தது. கண்ணீர் வழிய இருமியவளின் தலையில் தட்டிய அவளின் அத்தை, “கைய எறக்கிக்குடி. . செங்குத்தா தொண்டையில எறக்குனா,” என்றாள்.
துப்பட்டாவால் முகத்தைத்துடைத்த கோகிலா, அமுதா வழி சொல்லிய தெருவில் நடந்தாள்.