- பருவம் – சகாப்தத்தின் குரல்கள்
- ஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை
- அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன்
- ஒற்றன் – அசோகமித்திரன்
- நிறமாலை
- ரா. கிரிதரனின் “ராக மாலிகை”
- லஜ்ஜா: அவமானம்
- துருவன் மகன்
- கம்யூனிஸப் பொன்னுலகில் அகதிகளுக்கு இடமில்லை
- பாகீரதியின் மதியம் – விமர்சனம்
- புத்தக அறிமுகம்: கடலெனும் வசீகர மீன்தொட்டி
- களியோடை
- தத்வமஸி: புத்தக அறிமுகம்
- பாமாவின் கருக்கு
- பர்மா வழிநடைப் பயணம் – வெ. சாமிநாத சர்மா
- கண்ணனை அழைத்தல்
- பாரதியின் இறுதிக்காலம்
- குவெம்புவின் படைப்புலகம்
- தி.ஜானகிராமனின் மோகமுள் வாசிப்பு அனுபவம்
- “இரு புறமும் சுழலும் கடிகாரம்” பற்றி
- புறத்தைச் சொல்லி அகத்தை அடையாளம் காட்டும் எழுத்து
- இமையம் எழுதிய ‘எங் கதெ’ நாவல் பற்றி
- ஆகாரசமிதை
- உயர்ந்த உள்ளம்
- எல்லைகள் அற்ற வெளி
- மிருத்யுஞ்சய்
- ப. கல்பனாவின் குரல்: பார்வையிலிருந்து சொல்லுக்கு
- தப்பித்தல் நிமித்தம்
- ரணங்கள்: ஃ பிர்தவுஸ் ராஜகுமாரன்
- ஒளிர்நிழல் – கரிப்பின் விசாரணை
- சு. வேணுகோபாலின் ‘வலசை’ நாவல் பற்றி
- பசு, பால், பெண்
- தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்
- வெங்கட் சாமிநாதன் – தொடரும் பயணம்
- திருவரங்கன் உலா
- ச. தமிழ்ச்செல்வனின் ’பேசாத பேச்சு’
- அஃகம் சுருக்கேல்
- அறுபடலின் துயரம் – பூக்குழி
- ஆழி, அக்னி, அரவிந்தன் நீலகண்டன்
- தீப்பொறியின் கனவு
- புத்தக அறிமுகம்: முருகவேளின் ‘முகிலினி’
- மொட்டு விரியும் சத்தம்- நூல் அறிமுகம்
- தீர்த்த யாத்திரை – தீராத யாத்திரையின் சுயமி
- இரா. முருகனின் நளபாகம்
- பின்கட்டு
சிறுகதை: பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்…
ஆசிரியர்: அம்பை

ஒரு மே மாதத்தில் பழைய புத்தகங்களைப் பிரித்து வைக்கும் போது இந்தியா டுடேவின் இலக்கிய ஆண்டு மலரை எடுத்து வைத்தேன்.1995 ஆம் ஆண்டின் ஆண்டு மலர். எஸ்.ரா, ஜெயமோகன், இரா.முருகன், கோமல் சுவாமிநாதன், சி.சு.செல்லப்பா, கல்யாண்ஜீ, கலாப்ரியா, யுவன், தெளிவத்தை ஜோசப், அம்பை, வாஸந்தி என்று நீளும் இலக்கியவாதிகளை அதிலிருந்து தெரிந்து கொண்டேன். அந்த இதழின் படைப்புகளின், படைப்பாளர்களின் இலக்கிய முக்கியத்துவத்தை அன்று அறியவில்லை. வாசிப்பதற்கு நன்றாக இருக்கிறது என்று அந்தப் புத்தகத்தைத் தைத்து வைத்தேன்.
புலிக்கட்டம், அனந்தசயனம் காலனி, நஞ்சு, சிலிகன் வாசல், ஆயிரம்கால் மண்டபம், பீலி மேலே போகிறது, வேறு வேறு, பார்வைகள், வாடிவாசல், காதில் வெண்டைக்காய் என்ற நாடகம் என்று அனைத்துமே மீண்டும் மீண்டும் வாசிக்கத்தூண்டும் படைப்புகள்.
அம்பையின் இந்தக் கதை எனக்கு அம்மா, அம்மாச்சி, பெரியம்மா, பக்கத்துவீட்டு அம்மா, அத்தை, அக்கா என்று அனைவரையும் மனதில் கொண்டுவரும் கதையாக இருக்கிறது. இசையும், பாரதிபாட்டுகளும், ஸ்லோகங்களும் தெரிந்த குமுதாம்மா போலவே படிப்பறிவில்லாத விவசாயியான எங்க அம்மாச்சியும், சமையல்கட்டைத் தவிர ஏதுமறியாத அம்மாவும், படித்த அக்காவும், வேலைக்கு செல்லும் தங்கையும் ஏதோ ஒருவகையில் வீடு, சமையலறை என்ற விஷயங்களில் ஒன்றுபோலவே இருக்கிறார்கள்.
இந்தக்கதையில் வரும் குமுதாம்மா சமையலறை, சமையல் இவற்றிலிருந்து, உணவை ஆதாரமாக வைத்து, தான்இருக்குமிடத்தில் அன்பால் தனக்குப்பிடித்த சூழலை கட்டியெழுப்பிக்கொள்கிறார்.
கணவரின் வேலைநிமித்தம், மூன்று பிள்ளைகளின் வாழ்வின் பொருட்டு மாநிலங்கள் மாறி, நாடுமாறி வாழ்ந்தாலும் ஒரே மாதிரியான வாழ்க்கை. சுவையான உணவை, மருந்தாகும் உணவை மற்றவர்களுக்காக அளிக்கும் அந்தக் கரங்கள், வாழ்வின் சுவையை உணவைக் கொடுப்பதன் வழி சொல்கின்றன.
ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் தனக்கான தெய்வங்களை உடன் வைத்துக்கொண்டு, குமுதாம்மா விவாகரத்தான மகளுக்காக வெளிநாடு செல்கிறார். அங்கே தினமும் மகள் உணவிட ஒரு அணில் கூட்டத்தை, வாழ்க்கை வேகத்தில் அவள் மறந்திருந்த பாரதிபாடல்களை, சுவையான உணவுகளை, பக்கத்துவீட்டாரை அவள் வாழ்வில் நுழைத்துவிட்டு அவளின் சோர்வான நம்பிக்கையிழந்த வாழ்வை சுவையாக்கிவிட்டு வருகிறாள்.

‘காலடி எடுத்து வைக்கும் போதெல்லாம் பாதத்தின் அடியே ஸ்திரமான தரை இல்லாதது போல உணர்ந்தாள்’ என்று கதையில் ஒருவரி வரும். பெரும்பாலும் வாழ்வின் ஏதோ ஒருகட்டத்தில் இப்படி உணராத பெண்கள் இல்லை. ஆண்களுக்கும் இப்படியிருக்கலாம். அதை கடந்து நடக்க, புறமாகவும் அகமாகவும் பிடிமானங்கள் தேவையாக இருக்கின்றன.
இந்தக்கதையில் வரும் குமுதாம்மாவின் மகளுக்கு பாரதியின் கவிதைகள் அப்படியானவைகளாக இருக்கின்றன. வாழ்வின் உண்மையான தளத்தில், யாரும் உடன்வர இயலாத தனிமையில் துணையாக வருபவைகளை அந்த அம்மா மகளுக்கு நினைவுபடுத்திவிட்டு செல்கிறார்.
எங்களின் தமிழாசிரியர் எங்களிடம், “எவ்வளவு பெரிய வேலையிலிருந்தாலும், குடும்பத்திலிருந்தாலும், பிள்ளைகளுக்கான நேரம் போக கொஞ்சம் புத்தகம் வாசிங்க,” என்று சொல்லிக்கொண்டேயிருப்பார். இன்று பெரியநெருக்கடிகள் இல்லை என்பதால் பிள்ளைகள் புன்னகையுடன், “எங்க நேரம்? உங்கள மாதிரியா?” என்பதிலேயே தெரிந்துவிடும். என்றாலும் அடுத்த சந்திப்பிலும் சொல்வார்.
நான் வேலைக்கான தேர்வுகளில் தொடர்ந்து தோல்வியடைந்த நாட்களில் அம்மாச்சியுடன் வயல்வீட்டில் பலநாட்கள் இருந்தேன். வீட்டிலிருந்து கிழக்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் கண்முன்னே விரியும் பச்சைமலைக்குன்றை நோக்கி, வெற்றுப் பார்வையுடன் நீண்டநேரம் அமர்ந்திருக்கும் என்னிடம் அம்மாச்சி, “புளியம்பழம் பொறுக்கப் போலாம் எந்திரிகண்ணு. காமாட்டு வயல்ல தண்ணி பாஞ்சுருச்சான்னு பாத்துட்டுவாம்மா, எந்திரி.. மலையாங்காட்டுல பெரண்ட நல்ல சதைப்பிடிப்பா இருக்கும் கிள்ளிட்டு வரலாம்,” என்று பிடித்து இழுத்துக்கொண்டு செல்வார். அம்மாக்கள் வாழ்வினை நோக்கி நம்மை செலுத்துவதற்காகவே பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்.
இந்தக்கதையில் குமுதாம்மா தன்கணவனை இழந்து, நாத்திகக் குடும்பமான தன் இன்னொரு மகளின் வீட்டில் தங்குகிறார். அங்கு புத்தகத்திற்காக அடித்தப் பலகையில் தன் பிளாஸ்டிக் டப்பாவின் தெய்வங்களை அமர்த்துகிறார். மீண்டும் அங்கும் சுற்றியுள்ளவர்கள் மேலான அன்பை உணவென்னும் அக்கறையால் பொழிகிறார்.
அவளின் வீணையை மல்லாக்க வைப்பதற்கு போதுமான இடமில்லாத வீடு.அது நின்றுகொண்டே இருக்கிறது. அவர் சமையலில் தன்னைக் கரைத்துக்கொள்வதை ஒரு யோகம் போல செய்வதாக கதை உணர்த்துகிறது. ஆனால் முன்பெல்லாம் அவள் எங்கு சென்றாலும் திரும்ப வருவதற்கு அவள்வீடு இருந்தது. இப்போது அது இல்லாததால் தனிமையில் சோர்வடைகிறார்.
தன் கடைசிக் காலத்தில் அம்மாச்சி எங்களுடன் இருந்தபோது அவரின் ஏக்கம் தெரிந்தது. அவரின் இறந்த பின்நாட்களில் தான் அவரின் அன்றாடத்தின் மனிதர்களை நாங்கள் அறிந்தோம். எவ்வளவு நெருங்கிய உறவென்றாலும் அன்றாட வாழ்வில் இருப்பதில்லை. மின்கம்பம் வேலை செய்பவர்கள், பள்ளிக்குச் சென்று திரும்பும் மலையடிவாரத்துப் பிள்ளைகள், சுள்ளிகள் பொறுக்க வருபவர்கள் என்று அம்மாச்சி தனக்கான மனிதர்களை அங்கே சேர்த்து வைத்திருந்தார்.
வாழ்வு எவ்வளவு நவீனமானாலும், எங்கு பறந்தாலும், மனம் அத்தனை விரைவில் தன் ஆழத்தை மாற்றிக் கொள்வதில்லை போலும். இன்றும் வேறு ஊருக்குக் குடிபெயர்ந்தவர்கள், தன் ஊருக்குச் செல்வதை வாழ்வின் இறுதிகாலத்து விருப்பமாகச் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள் தானே?
இந்தக்கதையில் குமுதாம்மாவிற்காக அவர்வசித்த வீட்டை வாங்கித்தர மகள்கள் முடிவெடுப்பதோடு கதை முடியும். ஒருஇல்லம் என்பதும் ஒரு ராஜ்ஜியம் போலத்தான். அதன் அரசிகள் அதில் அன்றி மனம் நிறைவதில்லை என்பதை இந்தக்கதை சொன்னாலும் கதையின் முழுப் பரிமாணம் வேறு.
எங்கு சென்றாலும் பராசக்தி முதலியோருடன் இருக்கும் குமுதாம்மா, தன்மகள் குடும்பத்தின் இறைமறுப்பை, அதைப்பற்றிய கேள்வியின்றித் தன்சகமனிதரை ஏற்றுக்கொள்ளும் முதிர்ச்சியான மனநிலையில் இருக்கிறார்.
வீட்டின் சமையலறையிலிருந்து எல்லாஉயிர்களுக்குமான நேசம், ஔியின் கீற்றுபோல பாய்ந்து அவரின் வாழ்வையும் தன்னளவில் வெளிச்சமானதாக மாற்றுகிறதாகத் தெரிகிறது.
“கிருஷ்ணா ரா….” என்று அந்தஅம்மாள் காக்கையையோ,அணிலையோ சோறு வைக்க அழைக்கிறாள். கிருஷ்ணா ரா ….என்ற அழைப்பின் மூலம் தன் வாழ்விற்குள் இனிமையை இழுத்துக்கொள்கிறாள். எங்கள் பகுதியில் வாசலில் காலையில் கண்ணனின் பாதங்களை தினமும் வரையும் போது, “கண்ணா வா..,”என்று நினைக்கும் வழக்கமுண்டு. கண்ணன் என்ற உருவகம் அன்பு, இனிமை என வாழ்வின் நேர்மறையான சுவையாக கொள்ளப்படுகிறது. இந்தக் கதையிலும் ஒரு அன்னை, தன் செயல்களத்தின் ஜன்னல் இடைவெளியில் தெரியும் பிரபஞ்சத்தின் இனிமையை அழைக்கிறாள்.
இதை எழுதுகையில் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘கிருஷ்ணமதுரம்’ என்ற வாழ்பனுவக் கட்டுரை நினைவிற்கு வருகிறது. அதில் இனிப்புப் பூரணமிட்ட போலியை ஜெயமோகனுக்குக்கொடுக்கும் ராதாபக்தர், “ உடம்ப பாத்துக்க கிருஷ்ணா,” என்று சொல்வார். ஒருநேரத்து உணவளிப்பவர் நமக்கு சொல்லாமல் சொல்வது அதைத்தான். நாமும் சகமனிதருக்கு, பிறஉயிர்களுக்கு உணவளிக்கையில் அதையே செய்கிறோம். கிருஷ்ணமதுரம் கட்டுரை இந்த அளவில் ஒருபரிமாணத்தில் மட்டும் நிற்கும் ஒன்றல்ல.
உணவு சமைக்கும் ஒவ்வொருவரும் விருப்பத்தோடு உண்பவரைக் கண்டு மனம் நிறைகிறார்கள். முதல் கவள உணவை எடுத்து விவசாயிக்கு நன்றி சொல்லி, அவர் எங்கிருந்தாலும் தன்குடும்பத்தோடு நல்லாயிருக்கணும் என்று நினைத்த பின்பு உணவுண்ணும் வழக்கம் எங்களுக்கு எப்படியோ சிறுவயதிலிருந்து உண்டாகியிருந்தது. அதனால் என்ன நடந்துவிடப்போகிறது? என்பது வேறு. உணவை விளைப்பவர், அதைச் சமைப்பவர்கள் நன்றாக நடத்தப்படுவது இன்று குறைந்திருக்கிறதாகத் தோன்றுகிறது.
அதனாலேயே வீட்டில் சமைப்பது இன்று சுமையாகி இருக்கிறது. அம்மாச்சி ஒரு விவசாயி. அவர் சமையலில் சலித்துப்போகவில்லை. காரணம் தாத்தா வேலைகள் செய்து கொடுத்தார். அம்மாவுக்கு சமையல் காலை நேர போராட்டமாக இருந்து இன்று சலிப்பாக மாறியிருக்கிறது. காரணம் அய்யா நேரத்துக்கு வேலைக்கு செல்ல வேண்டும். அவர் எந்தவகையிலும் உதவிசெய்யாதவர். இன்று அக்காவுக்கு சமைப்பது என்பது வேண்டாவெறுப்பு. காரணம் படித்துவிட்டு, வேலைக்கு செல்லும் வாய்ப்பில்லாத குடும்பச்சூழலில் சமைக்கும் கசப்பு அவளுக்கு. திருமணமாகி ஒருமாதமாக சமைக்கும் தங்கைக்கு அது சவால். நேரத்திற்கு வேலைக்குச் செல்ல வேண்டும். ஆனால் மீண்டும் தாத்தாவின் அதே மனநிலை இன்றைய இல்லத்தரசர்களுக்கு வந்திருப்பதால், அந்தச் சவாலில் தானும் பங்கெடுத்து “கிருஷ்ணா ரா,” என்று புன்னகைக்கிறார்கள்.
நடைமுறை வாழ்விலிருந்து சற்று விலகி நடக்கும் போது, சமூகம் தனியே போகாதே என்று வன்மையாகவோ, மென்மையாகவோ நம்மைக் கண்டிக்கிறது. ஆனால் அரிதாக ஒன்றிரண்டு ஆட்கள் சேர்ந்து நடக்காமல் கொஞ்சம் தள்ளி நடந்தா என்ன, நாங்க இல்லையா என்ற நம்பிக்கையை தருக்கின்றனர். அப்படி இந்தக் கதையில் இந்த அம்மா தன் பிள்ளைகளின் வாழ்வில் குறுக்கிடாமல், அவர்களின் வாழ்வைப்பார்த்தபடி, அவர்கள் தடுமாறும் நேரங்களில் கைப்பிடிக்கிறாள்.
மீண்டும் பிள்ளைகள் இவளின் ஆதாரம் நழுவும் நேரத்தில் கைநீட்டுகிறார்கள். இந்த வாழ்வறம் இன்று கொஞ்சம் நழுவும் நேரத்தில் இந்தக்கதை வாசிக்கப்பட வேண்டிய ஒன்று. இது யாராவது சொல்லித்தான் தெரியவேண்டுமா? என்றால் இன்றைய உலகமயமான வாழ்வில் பொருளியல் தேடலில் தன் வாழ்வே தனக்கு சுமையாகும் காலத்தில், தனிமனிதப் பதற்றம் காரணமாக, அறியாமல் கடிவாளமிட்ட நம் மனதிற்கு இதுபோன்ற கதைகள் தேவைப்படுகின்றன.
வாழ்வின் எதார்த்தம் என்பது நம்பிக்கை போலவே நம்பிக்கை இன்மையும், இனிமையைப் போலவே கசப்பும், நிறைவைப் போலவே வறுமையும் நிறைந்தது என்பதால் “செயல் செய் பார்த்தா” என்று சொல்லி புன்னகைக்க கண்ணன் ஏதோ ஒரு வடிவில் தேவைப்படுகிறான். இந்தக்கதையில் வீடு, பக்கத்துவீடு என்ற எல்லையிலேயே எந்தநாட்டிலும் இருக்கும் குமுதாம்மா, தன் செயலின் மூலமே வாழ்வை நிறைவாக ஆக்கிக்கொண்டு, மற்றவர் வாழ்விற்கும் சுவை தருபவராக இருக்கிறார்.
அம்மா தனிமனுஷி இல்லை.அவள் ஒரு ஸ்தாபனம் என்று கடைசியில் குமுதாம்மாவை அவரின் மகள் சொல்வாள். இன்றுவரை இல்லத்தரசிகள் ஒவ்வொருவருமே ஒருஸ்தாபனமே.
பொறியியல் படித்த இல்லத்தரசியான அண்ணி குழந்தைகள் பிறப்பிற்குப் பின் தனக்காக தையலைத் தேடிக்கண்டடைந்தாள். அந்த ஒருதுளி அவளின் பெருங்கடலை இனிமையாக்குவதைச் சொல்லிக்கொண்டேயிருக்கிறாள்.
தனக்கான ஒன்று மனிதர்க்கு என்றும் தேவைப்படுகிறது . இந்தக் கதையில் அந்த அன்னைக்கு அவளுக்கான சிறு ஒருஇல்லம். அந்த இல்லம் ஒருகுறியீடு மட்டும்தான். தனக்கான ஒன்றைக் கண்டடையாத வாழ்வில் எத்தனை இருந்தாலும் அடியில் ஓட்டையான பானைதான் வாழ்வு.
பெண்கள் சமையல், வீடு, குடும்பம் என்பதில் தன்நிறைவுடன் செயல்படும் காலம் மாறி தனக்கான வேலை, தனக்கான விருப்பத்தேர்வுகளில் மனம் நிறைவு காண்கிறது. இதெல்லாம் அறியாமல் தன்இயல்பிலேயே அப்படி நிறைவுகாணும் ஆளுமை ஒன்றை அம்பை காட்டுகிறார்.
ஆனால் இன்று மீண்டும் படித்த இல்லத்தரசிகள் கணிசமாக அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கதை பெண்களைப் பார்த்து கனிவுடன் புன்னகைக்கும் ஒரு அன்னையின் புன்னகையாக எனக்குத்தோன்றும்.இன்று பசங்களுக்குமே இந்தக்கதை சிலவற்றைச் சொல்கிறது என்று தோன்றுகிறது.
ஒரு தனிமனுஷியின் வாழ்வு மற்றும் அனைவரையும் போல அமையும் செயலில் அவர் கண்டடையும் மனநிறைவைச் சொல்வதால் மனிதரின் அடிப்படையான நடைமுறை விஷயத்தைப் பற்றி பேசுகிறது . அந்த மனுஷி தன்னை அந்தத் தளத்திலிருந்து சற்று மேலெழுந்தவராக அதே செயலினால் மாற்றிக்கொள்கிறார். ஒருகதை தன்னை வாசிப்பவரால் உருமாறுவது. பொருள்கொள்ளப்படுவது. அம்பையின் புன்னகை எனக்குப் புரிவதால் நானும் புன்னகைக்கிறேன். முகம் காணப் புன்னகைக்கும் சேய் என.
கமலதேவி