வேம்பில் ஒரு செண்பகம்

பூப்பெய்திய பருவம் முதல்
கசப்புக்குள்ளே சில
இனிய உணர்வுகளின்
ஊடுறுவல்கள்

இளமையின் நியதிகளான
வாழ்வியல் காற்றின்
வேகங்களை
திசைகள்
நிர்ணயித்துக்கொண்டிருக்கிறது

வயதின் மூப்பில்
உலர்ந்துகொண்டிருக்கும்
இளமையின் சுவைகள்
ஆறிப்போன
உணவாகி
வெறுமையாக செரித்துவிடுகிறது

முதிர் பருவத்தை நோக்கி
கசந்துகொண்டிருக்கும்
சுவர்களில்
ஒட்டிக்கொண்டிருக்கிறது
இளமையின் நிறுவிட
இயலாத சுவடுகள் மட்டும்

துணையின்றி பயணிக்கவும்
ஆயத்தமானது
இயல்புகள் இழந்த
உடல்

காலம் முழுவதும் அடைகாத்த
வெம்மை
உதிர்ந்து மெல்லிய விசும்பலாய்
தேய்ந்து கனவுகளற்று
ஏகாந்த மகிழ்வானது

வெட்கத்தில் கூசி சிவந்த
உணர்வுகள்
தவிர்க்க முயன்று தவித்து
சில்லுகளாகிக்
கொண்டிருக்கிறது
வயதின் ஏற்றத்தில்

அனைத்தையும் துடைத்து
சுத்தமாக்கி
ஒதுங்கி ஒதுக்கி
மகிழ நினைக்கும் மனதுக்குள்
கூடுகட்டி குழைகிறது
ஏதோ ஒரு குழப்பம்

வலியின் உள்ளே
வாசமாய் மலர்ந்திருந்த
இளமையும்
இனிமையும்
கைகளிலிருந்து
நழுவியதாலும்
இருக்கலாம். . . . .

2 Replies to “வேம்பில் ஒரு செண்பகம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.