சிறுகதை: பாட்டையா
ஆசிரியர்: மேலாண்மை பொன்னுசாமி

மரத்திலேயே கனிந்த கனிகள் சுவையானவை என்றாலும் பறவைகள் தேர்ந்தெடுத்து கொத்திய கனிகள் இன்னும் சுவையானவை. அதை சுவைத்தவர்கள் அறிவார்கள்.அதுபோலவே சிறுபிள்ளைகளுக்கு மூத்தவர்கள் சொல்லும் கதைகளும். அதனாலேயே குழந்தைகள் பெரும்பாலும் சில கதைகளை மீண்டும் மீண்டும் “அந்தக்….கதை…சொல்லு” என்று கேட்பார்கள்.அந்த கதைசொல்லி தாத்தாக்களும் பாட்டிகளும் நம் உறவாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அவர்களே ஒரு சமூகத்திற்கான முன்னவர்கள்.
மேலாண்மை பொன்னுசாமியின் ‘பாட்டையா’ என்ற கதை ஊருக்கே தாத்தாவான கதைசொல்லியைப் பற்றியது. ஒவ்வொரு கிராமத்திலும் அப்படி ஒருவர் இருப்பார் அல்லது இருந்தார. அவரை “காந்திகாலத்தில பெறக்கவேண்டிய மனுசன்,” என்ற ஒரே வாக்கியத்தில் அலட்சியமாகவும் பெருமையாகவும் ஊருக்குள் சொல்வார்கள். எங்கள் ஊரில் என்பால்யத்தில், இந்தக்கதையில் வரும் அரிஞ்சர் பாட்டையா போன்ற பாலுப்பிள்ளைதாத்தா எனக்கும், என்அய்யாவுக்கும், ஊரில் சிலருக்கும் கதைசொல்லியாக இருந்தார்.
என்நினைவின் ஒருபக்கத்தில் ஓரமாக இருந்த அவரை, பதின் வயதில் மீண்டும் மையத்திற்கு இழுத்து வந்தது இந்தக்கதைதான். மீண்டும் அவர் அன்று எங்களுக்கு சொல்லியது என்ன? வாழ்ந்து காட்டியது என்ன? என்று சிந்திக்கவும், புரிந்து கொள்ளவும், அதன்வழி மனிதர்களைப் பார்க்கவும், அணுகவும் இந்தக்கதை முகாந்திரமாக இருந்தது. பாட்டையாக்களை நினைவுபடுத்தவும், கதைகளே தேவைப்படுகின்றன.
பாட்டய்யாக்கள் குழந்தைகளுக்காக காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு பெரியவர்களிடம் பேசுவதற்கு பெரும்பாலும் எதுவும் இருப்பதில்லை. இன்றையப்பாட்டையாக்கள் மாத்திரைகளால் உறங்கிக்கொண்டோ, தனித்தோ கிடக்கிறார்கள். சிலஆண்டுகளுக்கு முன்புவரைக்கூட திண்ணைகளில், வெயில்காலத்தின் இரவுகளில் வாசல்களில் கயிற்றுக்கட்டில்களில் கதைகளின் முனகல்கள் கேட்டன. இன்று வயசாளிகள், சகவயசாளிகளுக்கு ஊரின் கதைகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இப்பொழுது துவங்கியிருக்கும் கோடையில் வாசல்களில் ஆட்கள் கயிற்றுக்கட்டில்களில் நிலவொளியில் படுத்திருக்கிறார்கள். ஓரத்தில் ஒற்றைக்காலை தூக்கிப்போட்டபடி பிள்ளைகள் அருகில் இல்லை. கதைகள் பிடிக்காது பிள்ளைகள் இருக்கமுடியாது. எனில்? உள்ளூரில் படித்து வந்த பிள்ளைகளுக்கு நேரமிருந்தது. இன்று பிள்ளைகள் படிப்பதைவிட,படிப்பதற்கான பயணக்களைப்பில் உள்ளே உறங்கிக்கிடக்கின்றன. சாயுங்காலம் வீதியைப் பார்க்கையில் பத்து வயதிற்குள்ளான பிள்ளையின் முகமா?நடையா?குரலா?! இவை என்று பிள்ளைகளைப் பார்க்க யோசனையாக இருக்கிறது.
என் பத்துவயதின் ஞாயிறு அன்று, உறக்கம் கலையாத அதிகாலையில் கைகள் என் தலைமீது படிய அய்யா அம்மாவிடம், “பாலுப்பிள்ள அய்யா தவறிட்டாராம்..பாத்துட்டு வர்றேன். பாப்பா எழுந்திருச்சதும் மெதுவா சொல்லு,” என்றார்.
“இதுக்கிட்ட என்னன்னு நாஞ்சொல்றது…செத்து போறதுன்னா என்னாங்கும். இல்ல எனக்கு புரியாத எதாச்சும் கேக்குமே..நீங்க வந்துட்டு இதுக்கிட்ட சொல்லி கூட்டிக்கிட்டு போங்க..” என்னும் போதே நான் விசுக்கென்று எழுந்தமர்ந்தேன்.
பின்பு மெதுவாக மனதினுள் மறைந்த தாத்தா, இந்தக் கதைக்குப்பின்பே என்னுள் மீண்டும் எழுந்து வந்தார். விடுதியிலிருந்து வீட்டிற்கு வரும் நாட்களில் வீட்டில், எங்களூர்க்காரர்களிடம் அவரைப் பற்றி கேட்டு வைப்பதும், இன்றும் பழைய ஆட்களை காண்கையில் ’பாலுப்பிள்ளை தாத்தாவ தெரியுமா?’ என்று பேசத்தொடங்குவது என் வழக்கம்.அந்தக்குடும்பமே எங்கள் ஊரில் வேர் இல்லாமல் போனாலும் அவரை நினைக்கும் ஆட்கள் இன்றும் உண்டு.
ஏழாங்கிளாஸ் பாடம் நடத்துகையில் அரிஞ்சர் பாட்டையா ஞாபகம் வந்து உறுத்தியது என்று ஒரு ஆசிரியரின் நினைவிலிருந்து இந்தக்கதை தொடங்குகிறது. மொத்தக்கதையும் கிராமத்தில் வாழ்ந்து அரசாங்கப்பள்ளியில் படித்த ஒவ்வொருவருடன் பொருந்திப் போகக்கூடிய கதை .
பழைய நினைவுகளை ஏக்கமாக நினைப்பதற்காக நான் இந்தக்கதைகளைப் பற்றி எழுதவில்லை. நாம் எதன்மூலம் இந்தவாழ்க்கையை புரிந்து கொள்ள முடியும் என்ற புரிதலுக்காக…கதைகள் சிறுவயதில், பதின்மையில் எந்தஅளவு நம் ஆளுமையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்காக எழுதுகிறேன். கதைகள் ஏன் தேவை என்பதற்காகவும். என்றும் நம்ஆழம் தனித்தது. அதற்கு துணையாக நிற்ககூடிய தகுதி எவற்றிற்கு உண்டு என்று நான் உணர்கிறேனோ, அதை பகிர்வதற்காக இதை எழுதுகிறேன். கதைகளும் ஒருவகையான பகிர்தல்கள் தானே.
இந்தக் கதையில் பாட்டையாவின் இறப்புநாளில் பாட்டைய்யாவின் எதிர்வீட்டு நிழலில் வாத்தியார் அவருடனான தன்நாட்களை நினைத்திருக்கிறார். பாட்டையா என்ற ஆளுமை தனக்கு என்னவாக இருக்கிறார் என்று மனதில் அலசிக் கொண்டிருக்கிறார்.
பாலுப்பிள்ளை தாத்தா இறந்த அன்று, சின்னப்பிள்ளைகள் இழவு வீட்டில் நிறைய நேரம் இருக்கக் கூடாது என்று யாரோ ஒருவரால் தூக்கி வரப்பட்டு வீட்டில் விடப் பட்டது மட்டுமே என் நினைவில் இருக்கிறது.இங்கெல்லாம் அன்றும், இன்றும் பத்துவயதுப் பெண்பிள்ளையை குழந்தையாகவே பார்க்கும் மனநிலை மாறாத ஆட்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
நிலவொளி சரிந்த முற்றத்தில் பிள்ளைகளுக்குக் கதை சொல்லும் பாட்டைய்யாவைத் தேடி பிள்ளைகள் சூழ்கின்றன. அவர் பிள்ளைகளுக்காக அங்கிருக்கிறார்.வயசாளிகளின் பேச்சுக்களுக்கு சிறுவர்களின்றி யாரும் கவனம் கொடுப்பதில்லை.அவர்களுக்கு பிள்ளைகளும், பிள்ளைகளுக்கு அவர்களும் தேவைப்படுகிறார்கள்.
கதையின் ஆசிரியர் கதா பாத்திரம் சிறுவயதில் அவசரஅவசரமாக இரவு உணவை முடித்துவிட்டுக் கதை கேட்க பாட்டையாவைத் தேடி ஓடுகிறான். அதுபோல பறக்கும் மனநிலை எதிலாவது இருந்தால் அந்த நாளின் மையமாக அதுமாறும். காலையில் எழும்போதே இன்றைக்கு இதைசெய்துவிட்டால் அந்த மையத்தைச் சுவைக்கலாம் என்று ஆழ்மனதிற்குத் தெரியும். நாம் மற்றவற்றைப் பெரும்பாலும் சரியாக செய்வோம். அந்த மையமாக இருக்கும் தகுதி கொண்டவை, சிறுவயதில் கதைகள். வளர்ந்த பின்னும் அதே தான் என்று நினைக்கிறேன்.
வாழ்வை இனிமையாக்கும் கதைகள். இனிமை என்பது வயது ஏற, ஏற இனிமை என்பதன் பொருள்மாறும் புரிதலோடு இணைந்தது.
மூன்றாம் வகுப்பின் ஒரு ரணகளநாளில் என்னை குளிக்க வைக்கையில் அம்மா அழுதுகொண்டே, “பச்சப்பிள்ளய இப்படியா குச்சியில அடிப்பாரு..ராட்சசன்,”என்று அய்யாவைத் திட்டிக்கொண்டிருக்கையில் எட்டிப்பார்த்த அய்யா, “குளிச்சிட்டியா….போலாமா பாப்பா,” என்றார்.
“ம்மா….அய்யா டியூசன் எனக்கு வேணாம்,”
“என்ன பாவம் பண்ணித் தொலச்சனோ…வாத்தியாரக் கட்டிக்கிட்டு நான் படுறபாடு பத்தலன்னு இதுகளும் .எல்லாத்திலயும் மண்டக்கிறுக்கு. வாத்தியாரு வேலதானே…பெரிய..”என்ற அம்மா சத்தம் கேட்டுத் திரும்பி, துண்டு எடுத்துவந்து எனக்கு துவட்டிவிடும் அய்யாவைப் பார்த்ததும் வாயை மூடிக்கொண்டார்.
சத்தம்வராமல் அழுதபடி நடந்த என் வலதுகையைப் பிடித்தபடி ,அய்யா டியூசன் செல்லும் வழியிலிருந்து விலகி அடுத்த வீதிக்குள் நுழைந்தார். வாசலில் பத்து பிள்ளைகள் சூழ மர ஈசிச்சேரில் அமர்ந்திருந்த பாலுப்பிள்ளை தாத்தாவிடம், “நம்ம பாப்பா. நீங்கப் பாத்துக்கங்கய்யா,”என்றார்.
“ஊருபிள்ளங்களே உன்கிட்ட வருது..”என்று சிரித்தபடி தாத்தா நிமிர்ந்து உட்கார்ந்தார்.
“என்னால முடியலங்கய்யா..நல்லா படிக்குது.கணக்கு ஏறமாட்டிக்குது…எல்லாத்திலயும் கொஞ்சம் பூஞ்சை..”
“ம்..”என்ற தாத்தா அய்யா பிடித்திருந்த என்கையில் குச்சியின் அடிதடத்தைப்பார்த்ததும், “என்னய்யா இது..”என்றதும் அய்யா தலையை குனிந்து கொண்டார்.
தாத்தா என்னைப்பார்த்து பொக்கைவாய் விரிய புன்னகைத்து, “வாடி பாப்பாத்தி…”என்றதும் நான் ஓடிப்போய் அவரை கட்டிப்பிடித்துக்கொண்டேன். கன்னத்தின் உப்புதடத்தில் முத்தமிட்ட தாத்தா, “ஐயா..முத்தம் இனிக்குதே…”என்று பிள்ளைகளைப் பார்த்துச் சிரித்தது இன்றும் மாறாமல் உள்ளுக்குள் இனிக்கிறது.
தாத்தாவின் கதைகளில் ஜான்சிராணி, சுபாஷ், காந்தி அதிகமாக வருவார்கள். தன்தலைக்கு மேல் இருக்கும் அவர்களின் படங்களைக் காட்டியபடி சொல்வார். அரிச்சந்திரன் கதை, சிரவணன் கதைகளை மீண்டும், மீண்டும் சொல்வார். சிபியின் கதையும், தர்மர் யட்சன் கதையும், பீமன் பகன் கதைகளை அவரே ரசித்துச் சொல்வார். வீட்டுப்பாடம் முடிச்சாக் கதை,வாய்பாடு ஒப்பிச்சா கதை, அழகாக எழுதினா கதை, பொய் சொல்லாம உண்மையச் சொன்னா கதை என்று எங்களை ஒரு மாயப் பூஞ்சவுக்கால் விரட்டிக் கொண்டிருப்பார்.
இந்தக்கதையில் சிறுபிள்ளைகளை வசீகரிக்கும் சாகசக்கதைகள், அவர்களை பின்னோடச்செய்யும் வீரதீரக்கதைகளை பாட்டைய்யா சொல்கிறார். அவை அந்த ஆசிரியரின் வாழ்க்கைப்பார்வையில் நுண்ணிய, அதேநேரம் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கதையில் சொல்லப்படுகிறது. ஆம்…அந்தசக்தி அவற்றிற்கு உண்டு. கதையில் வரும் ஈனாப்பூச்சி..அண்ட பேரண்டப்பட்சிகள் பிள்ளைகள் மனதில் கனவை உருவாக்குபவை. கதையில் ‘பாட்டையா ஒரு ராசாதான்’ என்று ஒருவரி வரும்.அது கதைசொல்லிகளோடு இருந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
மேலும் கதைசொல்லிகளாக மட்டும் அவர்கள் இருப்பதில்லை. பாலுப்பிள்ளைதாத்தா வீட்டின் இரண்டாம் கட்டில் அன்னாந்து பார்த்தால் சதுரமான வழி இருக்கும். ஏணி போட்டு ஏற வேண்டும். மேலே அம்புலிமாமா போன்ற கதைப்புத்தகங்கள் பழைய விளையாட்டுப் பொருட்கள் இருக்கும். அதை எடுக்க, திரும்பி வைக்க, பிள்ளைகள் சரசர என்று ஏறுவார்கள். நானும், இன்னொருவனும் கீழேயே நின்று அவர்களைப் பார்த்துக்கொண்டும், கெஞ்சிக்கொண்டும் இருப்பதைப் பார்க்கும் தாத்தா கையைப் பிடித்தபடி “ஏறு” என்பார். கிட்டத்தட்ட வாயிலுக்கு இரண்டு படி இருக்கையில் அவர் பிடி நழுவுகையில், உள்ளங்காலை கையில் ஏந்தி “மேல கால எடுத்து வையி..எடு கால,” என்பார்.உள்ளே ஏறி நின்று திரும்பி அவரைப்பார்த்து நாங்கள் சிரித்தால், “அவ்வளவுதாண்டா தங்கங்களா,” என்று சொல்லிச் சிரிக்கும் குரலை, இன்றும் நான் செய்யும் சில செயல்களுக்குப் பின்னால் கேட்கிறேன். என் மனதின் குரல். அவர் எங்கிருந்தோ சொல்லிக் கொண்டிருக்கிறார்.
பாட்டையா கதையில் ஆசிரியர் பாட்டய்யாவுக்கு வாய்க்கரிசி போடுகையில் சமூகம், குலம், சாதி, உறவு என்ற கோடுகளை அழிக்கிறார். கிராமத்தில் இன்றும் அது எளிதானதல்ல. கதைகள், இலக்கியங்கள் என்றும் எல்லைகளை ஏதோ ஒருவகையில் மாற்றி அமைக்கின்றன. வீட்டிற்குவரும்போது தன் பிள்ளைகள் கார்ட்டூன் பார்ப்பதைப் பார்க்கும் ஆசிரியர் “ பாட்டையா” கதை சொல்கிறார் என்று சொல்வதோடு கதையை பொன்னுசாமி முடிக்கிறார்.
ஏதோ ஒரு வடிவில் கதைசூழ் உலகம் இது. வாழ்விற்குத் தேவையான ஆதாரம். அந்த இடத்திலிருந்து இலக்கியம் நோக்கி நகர்கையில் அது வேறு ஒரு வாழ்க்கைப் பரிமாணத்தை, நம்மைச் சூழ்ந்துள்ள பிரபஞ்சத்தை உணர, முன்னாலிருக்கும் சகனைப் புரிந்துகொள்ள உதவுகிறது .தான் பிறனாவும், அதுவாகவும் மாறும் வாய்ப்புக் கிடைக்கிறது. அது குறைவதால் கூட, இன்று இத்தனை பதற்றம் சார்ந்த நோய்கள் வருகின்றன என்று தோன்றுகிறது. பாட்டய்யா கதை பெற்றோர்களுக்கானது என்றும் எனக்குத் தோன்றுகிறது.
பின்கட்டுச் செடிகளின் நடுவே ஒரு மல்லிச்செடி மட்டும் உயரமாக தளதளவென்று நிற்கும். பூக்காத அதைபற்றிக்கேட்டால் தாத்தா, “பூத்தாதான் செடியா? அது பூக்க நினக்கல,”என்பார்.அது நான் மாற்றார் மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதற்கு அடிப்படையாக இருந்த நிகழ்வு.
இப்படி கதைகளும், கதைசொல்லிகளின் வாழ்வும், அவர்களின் பார்வைகளும் மிகவும் தேவையான ஒன்று. இன்றும் யூ டியூபில் பவா செல்லதுரை சொல்லும் கதைகளை ஆசையாகக் கேட்கிறேன். நமக்கான கதைசொல்லி இருப்பது வாழ்வின் மிகப்பெரிய வாய்ப்பல்லவா? இந்தக்கதையில் பொன்னுசாமியின் ஆசிரியர் கதா பாத்திரம் எனக்கு இரண்டாகப் பிரிந்து தெரிகிறார். ஒன்று ஆசிரியரான தந்தையாக, இன்னொன்று சகவயது நானாக.. அப்படி மாற்றி மாற்றி வருவது வாசிக்கையில் நல்ல அனுபவமாக இருக்கும்.
இந்தக்கதையில், “சும்மா கிடக்காத..தனித்துவமாக இரு,” என்று ஒருவரி வரும். அது பொன்னுசாமி பாட்டையா நமக்கு சொல்வதாக தமிழ்தேர்வில் எழுதினேன். ஊரோட ஒத்து போ…நீ சராசரிதான்…என்பவை அதிமாக சிறுவயதில் அறிவுரையாகக் கேட்டவை. அதுவும் பெண்பிள்ளைகளுக்கு …கலெக்டரானாலும் சட்டி கழுவனும்…கட்டினவனுக்கு துணிதுவக்கனும் என்பார்கள்.
நாங்கள் மிகச் சாதாரணமானவர்களாக இருந்தாலும் பாட்டைய்யாக்கள் தான் எங்களை தங்கபாப்பாத்தியாகவும்,அண்ட பேரண்ட பட்சிகளாகவும், அறிவுள்ள ராணிகளாகவும், வலிமைமிக்க ஈனாப்பூச்சிகளாகவும் பறக்கவிட்டவர்கள். அவர்களின் ஒவ்வொரு கதைகளும் எங்கள் கன்னத்துமுத்தங்கள். பொன்னுசாமியை வணங்கி…