இந்திய அடுக்கு – எதிர்காலம், சர்ச்சைகள்

இதுவரை இந்தக் கட்டுரைத் தொடரில், இந்திய அடுக்கின் மூன்று அடுக்குகளைப் பற்றி அலசினோம். இந்த மூன்று அடுக்கின் பலன்கள் ஏராளமாக இன்றே இந்தியா அனுபவித்துள்ளது. இதன் எதிர்காலம், இன்னும் பல சமூகப் புரட்சிகளைக் கொண்டுவரும். நாடு தழுவிய இந்த நிதிப் புரட்சியில் சர்ச்சைகள் ஏராளம். பல சவால்கள் நிறைந்த ஒரு மாபெரும் ப்ராஜக்ட், இந்திய அடுக்கு. எல்லாம் சுபிட்சம் என்று அர்த்தமில்லை. இதைப் பற்றியும் இந்தப் பகுதியில் அலசுவோம்.

பல இந்தியர்களுக்கு, ஏனோ இந்தியா ஒரு வல்லரசாகவில்லை என்ற ஏக்கம் இருப்பது சமூக வலைத்தளங்கள் மற்றும் 

பொது வெளிகளில் தெளிவாகத் தெரிகிறது. எந்த ஒரு நாடும் வல்லரசாக வேண்டும் என்று செயல்படுவது ஒரு நெடுங்கால நன்மை பயக்கும் விஷயமல்ல. இன்று உலகம் முழுவதும் அப்படி முயற்சி செய்த நாடுகளின் தடுமாற்றம் கண்கூடாகத் தெரிகிறது. முன்னாளைய இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், ரஷ்யா அந்தக் கனவுகளைத் துறந்து விட்டனர். மெதுவாக அமெரிக்காவும் அந்த நிலைக்கு வந்துவிடும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இன்று சைனா இந்த முயற்சியில் ஈடுபட்டாலும், அந்த நாடும் இந்த முயற்சிகளைத் துறந்துவிடக் கூடும். உலகின் சிறந்த நாடுகள் என்று பெயர் பெற்ற நாடுகளான, ஸ்வீடன், ஃபின்காந்து, டென்மார்க், கனடா போன்ற நாடுகள் கடந்த 60 ஆண்டுகளாக வல்லரசாகும் எந்த ஒரு நினைப்புடனும் செயல்படவில்லை. இந்த நாடுகளின் வெற்றி, தன்னுடைய குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மேற்கொண்ட முயற்சிகள். இந்திய அடுக்கின் நோக்கம், இந்தியாவை ஒரு வல்லரசாக்குவதல்ல. மாறாக,, அதன் குடிமக்களுக்கு சரியான சந்தர்ப்பங்களை உருவாக்கும் முயற்சி. டாம் ஃப்ரீட்மேன் கூறியது போல, ”இந்திய மக்களின் பேரார்வத்தின் அளவு, ஒரு ஷாம்பெயின் பாட்டிலை 70 ஆண்டுகள் குலுக்கியதற்கு ஈடாகும். இந்த பாட்டில் திறக்கும் பொழுது, வெளிப்படும் வேகம் இவ்வுலகம் கண்டிராதது”

இந்திய அடுக்கின் எதிர்காலம்

முதலில் சொல்லாமல் விட்டுப் போன சில இந்திய அடுக்கு விஷயங்களைப் பார்ப்போம்:

  1. ஒப்புதல் அடுக்கு (consent layer) – இந்த அடுக்கு, இன்னும் உருவாக்கத்தில் உள்ளது என்று சொல்லியிருந்தேன். 2017 –ல் முதன் முறையாக இந்த ஒப்புதல் அடுக்கில் ஒரு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவேறியது. CBSE பள்ளிகளின் இறுதியாண்டும் மதிப்பெண்கள், மாணவர்களுக்குக் காகிதமாக வழங்கப் படவில்லை. மாறாக, இதை ஒரு டிஜிட்டல் பெட்டகத்தில் (digital locker) ஒரு மின்னணு ஆவணமாக வைக்கப்பட்டது. ஒவ்வொரு 12 –ஆம் வகுப்பு மாணவனும், தன்னுடைய செல்பேசி அல்லது கணினி மூலம் இந்த மதிப்பெண் தாள்களை தரவிறக்கிக் கொள்ளலாம். மேலும், சேர வேண்டிய கல்லூரிக்கு இந்த மின்னணு மதிப்பெண் தாள்களைப் பார்க்க அனுமதியும் அளிக்கலாம் – ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும். இவ்வாறு, இந்த மதிப்பெண் தாள்கள் வெகு எளிதாக எத்தனைப் பல்கலைக்கழகங்களுக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம். அனாவசியமாக, நகல் எடுத்து, காடுகளை அழிக்க வேண்டாம். இது போன்ற அருமையான முயற்சிகள் மேலும் அடுத்த சில ஆண்டுகள் தொடரும்.
  2. ஒப்புதல் அடுக்கு, வீட்டுப் பத்திரம், ரேஷன் கார்டு, பிறப்பு, இறப்பு என்று முக்கிய ஆவணங்களுக்கு அடுத்தபடியாக ஒரு மின்னணு முறையாக மாற வாய்ப்பிருக்கிறது
  3. PayTM போன்ற பல சேவைகள் வந்துவிட்டாலும், இன்னும் அதன் தாக்கம் முழுமையடையவில்லை. இன்றைய 70 மில்லியன் பரிமாற்றங்கள், மாதம் ஒன்றிற்கு 200 மில்லியனாக 2020 –க்குள் உயரும். வியாபாரிகளும், நுகர்வோரும் இந்த நிதிப் புரட்சியின் முழுப் பயனையும் அனுபவிக்கையில், விசா போன்ற அமைப்புகள் இந்தியாவில் தொடர புதிய வழிகளைக் கண்டறிய வேண்டும். முதன் முறையாக, அமெரிக்க நிறுவனங்கள் இந்தியப் புதுமைகளைக் கண்டுத், தங்களின் முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.
  4. இந்திய அடுக்கின் இன்னொரு முக்கிய அடுத்த கட்ட முயற்சி, சாலைச் சுங்கம் வசூலிப்பதை எளிதாக்குவது. இது FasTag என்று சொல்லப்படுகிறது. RFID மூலம் இயங்கும் இந்த மின்னணு முறை, எல்லாவித வண்டிகளிலும் பயன்படுத்தலாம். வடகிழக்கு அமெரிக்காவில் இயங்கும் EzPass போன்ற அமைப்பு இது. அமெரிக்க மாநிலமான MA –வில் எல்லா வண்டிகளும் நெடுஞ்சாலையில் இந்தமுறையைப் பின்பற்றுகின்றன.


5. GST என்ற விற்பனை வரி, இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த முயற்சி அல்ல. ஆனால், இதன் பின் இயங்கும், ஒரு மிகப் பெரிய விற்பனை வரி சார்ந்த தரவு தளம், இந்திய வியாபாரத்தையே மாற்றும் சக்தி கொண்டது. BBPS (Bharat Bill Payment System) என்ற இந்த முயற்சி, மாதம் ஒன்றிற்கு 1 பில்லியன் மின்னணு பொருள் விவரப் பட்டியல்களை (electronic invoices) கையாளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மின்னணு பொருள் விவரப் பட்டியல்களை இணையம், செல்பேசி, அல்லது, பின்தொடர் (offline) முறைகளில் தாக்கல் செய்யலாம். மேலும், வாடிக்கையாளர்களும், இந்த அமைப்பைக் கொண்டே பொருட்களுக்குப் பணமளிக்கலாம் (இந்திய அடுக்கின் காகிதமற்ற முறைகளைப் பின்பற்றலாம்). இதில் உள்ள அருமையான ஒரு தொலைநோக்கான விஷயம் என்னவென்றால், இந்த மின்னணு பொருள் விவரப் பட்டியல்களை ஒரு டிஜிட்டல் பெட்டகத்தில் (digital locker) தேக்கிக் கொள்ளலாம். வங்கிகளிடம் கடன் வாங்கும் பொழுது, வியாபாரங்கள் இந்திய அடுக்கின், ஒப்புதல் அடுக்கு (consent layer) மூலம், தங்களுடைய வியாபார விவரங்களைச் சமர்ப்பிக்கலாம். இதில் எங்கும் காகிதம் இல்லை. இன்னும் சில ஆண்டுகளில், உலகில் முதன் முறையாக இந்தியாவில் இந்த மாற்றம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6. இன்று ஏறத்தாழ 15 மில்லியன் ஆதார் அடையாளக் கோரிக்கைகள் நாளொன்றிற்கு அரசாங்கத்திடம் (15 million authentication requests/day) முன்வைக்கப்பட்டு, சரியா, இல்லையா என்ற பதில் கிடைக்கிறது. இதன் பெரும் பயன்பாட்டாளர்கள்:
a. செல்பேசி நிறுவனங்கள்
b. பங்குச் சந்தை தரகர்கள்
c. வங்கிகள்
d. UPI மூலம் இயங்கும் சேவைகள்
7. மிக முக்கியமான இந்த முன்னேற்றங்கள் முழுவதும் இந்திய அரசாங்கத்தை அதிகமாக பாதிக்கவில்லை. இடைத் தரகர்களும், அரசியல்வாதிகளும் ஊழல் செய்வதால்தான் இந்திய குடிமகனின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை என்பது உலகறிந்த ஒன்று. இந்திய அடுக்கு அரசாங்க சேவைகளுக்கு இன்னும் சில ஆண்டுகளில் பயனில் வந்தவுடன், இடைத் தரகர் என்ற ஒருவர் தேவையின்றிப் போவார்கள். இன்று, இந்திய அடுக்கின் வீச்சு, வியாபாரத்துடன் சம்பந்தப்படுத்தப்படுகிறது. இன்னும் சில வருடங்களில், இது இந்தியக் குடிமகனின் முக்கியக் கருவியாக மாறும் சக்தி கொண்டது
8. இந்திய வங்கி முறைகள் கடந்த 70 ஆண்டுகளாக நடந்த முறையிலிருந்து அதிகம் மாறவில்லை. இந்திய அடுக்கு, சாதாரணர்களுக்கு நியாய வியாபார வட்டி, செல்பேசி மூலம், நேரடி வங்கித் தொடர்பு என்று காகிதமற்ற ஒரு முறையை இன்னும் 2 அல்லது 3 ஆண்டுக்குள் உருவாக்கிவிடும் என்று நம்பப்படுகிறது
9. செல்பேசி வசதி அதிகமில்லாத கிராமங்களில், ஒரு வங்கித் தொடர்பாளர் (banking correspondent), வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் ஒரு மின்னணு சேவை செயலாக்காளராக (electronic services enabler) இன்று பல கிராமங்களில் இயங்கி வருகிறார்கள். வங்கிகளின் நோக்கம் இன்று 4 கோடி குடும்பங்களின் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்வது. இதில் மிகப் பணக்காரர்கள், மற்றும் நடுத்தர வர்கத்தினர் அடங்கும். இந்திய அடுக்கு மூலம், வங்கிகள், மிகக் குறைந்த செலவில் இன்னும் 20 கோடி இந்தியக் குடும்பங்களுக்கு வங்கிச் சேவைகளை எடுத்துச் செல்ல வேண்டும். இது இன்னும் சில ஆண்டுகள் பிடித்தாலும், மிகப் பெரிய சமூக மாற்றத்தை இது உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை
10. இந்திய வர்த்தகம், இன்றைய நிலையை விட, 10 முதல் 50 முறை இதனால் விரிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்திய அடுக்கு சர்ச்சைகள்

  1. முதலில் இந்திய அடுக்கின் நம்பகத்தன்மையைக் குறைத்த விஷயம், அதை உயர்த்தியவரின் செயலாலே வந்தது. நந்தன் நிலேகனி, 2014 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டது ஏனென்று தெரியவில்லை. ஆனால், இவரின் வாழ்நாள் சாதனைகளை, தவிடுபொடியாக்கிய விஷயம், இவர் அரசியலில் ஈடுபட்டது. இன்று, அதிலிருந்து விடுபட்டு, பல அருமையான சாதனைகளை நிகழ்த்தினாலும், இந்த அரசியல் நிழல் அவரையும் , இந்திய அடுக்கையும் தொடர்வது மறுக்க முடியாத விஷயம்.
  2. சில தன்னார்வலர்கள் இந்த இந்திய அடுக்கை உண்மையாக்கக் கடுமையாக உழைத்தும், இவர்களின், வெளியுலக, ஆலோசனை நிறுவனங்கள் சற்று சந்தேகத்தை எழுப்புவது உண்மைதான். இந்திய அரசாங்கம், சில முக்கிய பதவிகளில், லாபத்திற்காக இயங்கும் வெளியுலக லாப ஆலோசனை பணிகளில் ஈடுபட ஒரு இடைவெளி இருக்க வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும். இல்லையேல் அமெரிக்க லாபியிஸ்டுகள் போல ஆகிவிடும். அமெரிக்காவில் இன்று சட்டங்கள், பல பெரிய நிறுவனங்களைத் தாண்டி அமுல்படுத்துவதில் ஏராளமான சிக்கல் இருப்பது, இந்த லாபியிஸ்டுகள் செய்யும் நிழல் வேலைகளால் என்பது உலகறிந்த விஷயம்

இந்திய அடுக்கு, ஒரு ஆரம்ப நிலை தொழில்நுட்ப நிறுவனம் போல உருவாகிய ஒன்று. இதன் முக்கிய நல்முகம், இதனாலேதான், 8 ஆண்டுகளில், உலகில் எங்கும் நிகழாத நிதிப் புரட்சி இந்தியாவில் சாத்தியமானது. ஆனால், இந்த அணுகுமுறையின் முக்கியக் குறை, ஒரு பில்லியன் மக்களின் அந்தரங்கத்தைப் பற்றிய அதிகக் கவலையில்லாமல் செயல்படுவது. தொலிநுட்ப ரீதியில், ஆதார் மற்றும் இதர சேவைகள் மிகவும் பாதுகாப்பானவை என்பது உண்மை. ஆனால், இதில் சில குறைபாடுகள் இருப்பதும் உண்மை:
http://www.cse.iitm.ac.in/~shwetaag/papers/aadhaar.pdf – இந்த ஆராய்ச்சிக் கட்டுரை, அரசியல் சாயம் தடவாமல், குறைகளை முன்வைக்கிறது. 
a. வங்கிகள்/செல் நிறுவனகங்கள் போன்ற அமைப்புகள் ஆதார் அடையாளத்தைச் சரி பார்க்க UIDAI –யுடன், ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒப்பந்தத்தின்படி, UIDAI இந்த அடையாளப் பணிகளை செய்ய அனுமதிக்கும். இவர்கள் AUA/ASA  என்று அழைக்கப்படுகிறார்கள். வங்கிகள் ஒரு வாடிக்கையாளரிடம் ஆதார் அடையாளத்தைப் பல விஷயங்களுக்காகக் கோரலாம். நீங்கள் புதிதாக கணக்கு தொடங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்காக, கண்டிப்பாக வங்கி உங்கள் ஆதார் அடையாளத்தைக் கோரும். பிறகு, அந்த வங்கி மூலம், பங்குச் சந்தையில் நீங்கள் விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். இதற்காக மீண்டும் அந்த வங்கி உங்களிடம் கேட்டு உங்களது ஆதார் அடையாளத்தைப் பெற வேண்டும். ஆனால், ஏற்கனவே அவர்களிடம் உங்களது ஆதார் அடையாளம் இருப்பதால், அதையே பயன்படுத்த முயலலாம். உங்களது அனுமதியின்றி இதை அவர்கள் செய்யக் கூடாது. ஆனால். நடைமுறையில் எத்தனை வங்கிகள்/ செல் நிறுவனங்கள் பின்பற்றுகின்றன என்பது தெரியாது. ASA அமைப்புகள் மீது திடீர் ஆடிட் செய்வது முக்கிய அரசாங்கப் பொறுப்பு
b.ஆதார் ASA அமைப்பில் இன்னொரு சிக்கலும் உள்ளது. ஒரு முக்கிய நபரின் ஆதார் எண் மற்றும் அவரது           அடையாளம் தவறான கைகளில் சிக்கினால், அவரது மற்ற நடவடிக்கைகளை அவரது எந்த அனுமதியுமின்றி சட்டப் புறம்பாக கண்காணிக்கும் முயற்சி. இதற்கும் ஒரே தீர்வு, இவ்வகை அமைப்புகளை திடீர் ஆடிட் செய்வது
c. இன்னொரு குறை, இந்த அமைப்புகளில் பணி புரிவோர் – அதாவது, UIDAI, NPCI, CCI போன்ற அமைப்புகள் – அங்கு வேலை செய்து கொண்டே அடையாள தில்லு முல்லுக்களைச் செய்வது. இந்தக் குறையை இயற்பியல் பாதுகாப்பு முறைகளைப் (Physical security measures) பின்பற்றி இந்த அமைப்புகளில் பணி புரியும் யாராக இருந்தாலும், சோதனைகளுக்கு உட்பட வேண்டும். இது ஒரு முக்கிய அரசாங்கப் பொறுப்பு
4. இந்திய வருமான வரிக்கு முக்கியமான விஷயம் PAN எண். ஆதார் அடையாளமும் PAN எண்ணையும் இணைக்க 2017 –ல் அரசாங்கம் எடுத்துக் கொண்ட முயற்சி ஒரு குழப்பமான விஷயம். இணையம் வழியாக இரண்டையும் இணைக்க முற்பட்டாலும், பலரும் இதனால் அவதிப் பட்டார்கள். சரியாக ஒன்று சேர்க்கப்படாத தரவு ஒரு நுகர்வோர் பிரச்சினையல்ல. அரசாங்கப் பிரச்சினை. இந்திய மக்களிடம் இந்த தரவுக் கோளாருக்காக கட்டணம் வசூலிப்பது தவறு
5. இந்திய அடுக்கின் நன்மைகளை இன்னும் எளிமையாக விளக்க அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டும். இவர்கள் உருவாக்கும் persona based விடியோக்கள் முழுவதும் விஷயத்தை விளக்காமல் சும்மா பற்பசை விளம்பரம் போல காட்சியளிக்கிறது. இவர்கள் கலையுலக திறமைகளை இதற்காகப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை

தமிழ்ப் பரிந்துரை

எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன்சில புதிய சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்

ஆங்கிலச் சொல்

தமிழ்ப் பரிந்துரை

India stack

இந்திய  அடுக்கு

Consent Layer

ஒப்புதல் அடுக்கு

Digital locker

டிஜிட்டல் பெட்டகம்

Banking correspondent

வங்கித் தொடர்பாளர்

Electronic services enabler

மின்னணு சேவை செயலாக்காளர்

Physical security measures

இயற்பியல் பாதுகாப்பு முறைகள்


 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.