இந்திய டிஜிட்டல் புரட்சி

I think Visa, MasterCard and Discover will not be around five years from now in India because we are moving payments to marginal cost
மனிஷ் சபர்வால்அர்.பி.ஐ. – டிசம்பர் 2017

ஒரு அமெரிக்கர் அல்லது கனேடியரை அவர்களது நாட்டில், அரசாங்கம் அவர்களது அடையாளத்தைக் காட்டச் சொன்னால், தன்னுடைய காரோட்டி உரிமத்தைக் (driver’s license) காட்டுவார்கள். இதில் அவர்களது புகைப்படம் இருக்கும். அத்துடன், சின்ன ப்ளாஸ்டிக் கார்டாக இருப்பதால், எங்கும் எடுத்துச் செல்ல தோதான விஷயம். இதையே ஒரு 12 வயது சிறுவனையோ அல்லது சிறுமியையோ காட்டச் சொன்னால் என்ன செய்வார்கள்? குறைந்த பட்சம் 16 வயதானாலே காரோட்டி உரிமத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
மேற்கத்திய இந்த முறை இடிக்கிறது அல்லவா? ஏன்? காரோட்டுதல் என்பது ஒரு குடிமகனுக்கு அளிக்கப்படும் ஒரு உரிமை. 18 வயதானால், ஓட்டுப் போட அனுமதிப்பதைப் போன்றது. இது அடையாளமாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் இந்த நாடுகளில் காரோட்டாமலே இருந்து விடலாம். கனடாவில் அரசாங்க உடல்நல கார்டு உள்ளதால், இந்தக் கார்டை ஒரு அடையாளமாகக் கொள்ளலாம். அமெரிக்காவில் அதுவும் கிடையாது. பல நூறு தனியார் காப்பீடு நிறுவனங்கள் அட்டைகளை தனக்குத் தோன்றியபடி அடித்துத் தள்ளுகிறார்கள்.

  1. கனடாவின் உடல்நல அட்டையாகட்டும், அல்லது காரோட்ட உரிமமானாலும் (அமெரிக்கா/கனடா) சரி, இரண்டுமே மாநில அரசுகளால் அளிக்கப்படுபவை. இவை தேசிய அடையாளங்கள் அல்ல.
  2. கனடாவில் SIN மற்றும் அமெரிக்காவில் SSN என்பதே மத்திய அரசாங்கம் அளிக்கும் அடையாளம். ஆனால், இதில் புகைப்படம் கிடையாது.
  3. இலை மறைவாய், காய் மறைவாய் சில அரசாங்க, வங்கி மற்றும் கடன்/வரி விஷயங்களுக்காக இந்த அடையாளத்தைப் பகிர வேண்டி வரும். அமெரிக்காவில் SSN என்பது சீரியஸான விஷயமே அல்ல. எல்லா வணிகர்களும் சர்வ சாதாரணமாய்க் கேட்பார்கள்.
  4. காகிதத்தை மையமாகக் கொண்ட அரசாங்கங்கள் செய்த ஒரு முயற்சி, SSN மற்றும் SIN. இன்றைய மின்னணு உலகில் இதில் உள்ள குறைகள் மிகப் பெரிதாக விஸ்வரூபம் எடுக்கிறது.
  5. இந்திய அரசாங்கம், UIDAI என்ற அமைப்பைத் தொடங்கி, மேற்குலகின் கொள்கைகளை மட்டும் எடுத்துக் கொண்டு அதன் குறைபாடுகளை அறவே நீக்கி உருவாக்கிய முயற்சிதான் ஆதார்.


இந்திய அரசாங்கத்தின் நோக்கு, நாளொன்றிற்கு, 100 மில்லியன் ஆதார் அடையாளக் கோரிக்கைகளை 5 நொடிகளுக்குள் பதிலளிக்கும் சேவை. இத்தனைக்கும், இந்த 5 நொடிக்குள் நடக்கும் விஷயங்கள் மிகவும் நவீனமான ஒரு தொழில்நுட்பப் புரட்சி:

  1. ஆதார் எண் என்பது வெறும் ஒரு எண் – இதை வைத்துக் கொண்டு யாரும் எதையும் செய்ய முடியாது.
  2. கருவிழி வருடல் என்பது, ஆதாரின் உதவியினால், இன்று சாதாரண செல்பேசிகளில் சாத்தியம்.
  3. கருவிழி வருடல் (iris scan) மற்றும் ஆதார் எண் என்ற இரண்டும் UIDAI -க்கு அனுப்பப்பட்டால், 5 நொடிக்குள், இன்னார் ஒரு மெய்யான இந்தியப் பிரஜை என்று இந்தச் சேவை சொல்லிவிடும்.
  4. இதற்கான செலவு, அரசாங்கத்திற்கு .1 பைசா – அதாவது 1,000 கோரிக்கைகளை நிறைவேற்ற, அரசாங்கத்திற்கு ஆகும் செலவு 1 ரூபாய். இதைவிடக் குறைந்த செலவில் இத்தனை நவீன சேவை என்பது எங்குமே இயலாத காரியம்!
  5. இந்தக் கோரிக்கையை முன் வைக்கும் நிறுவனத்திற்கு, UDAI என்ன பதிலளிக்கிறது? இன்னார் ஒரு மெய்யான இந்தியப் பிரஜை அல்லது இந்த விவரத்துடன் ஆதார் தரவுதளத்தில் ஒரு பதிவும் இல்லை. அவ்வளவுதான். வாட்ஸாப்பில் வரும் வதந்தியைப் போல, அரசாங்கம், உங்களின் ஜாதகத்தை அம்பானியிடம் தராது!


சரி, இதனால் என்ன பயன்? ஏன் இதற்கு இப்படியொரு பில்ட் அப்?
முதலில், UDAI செய்த வேலை – முதல் ஆதார் எண் ஒதுக்குவதற்கு முன், ஆதாருடன் மின்னணு முறையில் எப்படித் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை வெளியிட்டதுதான். பல்லாயிரம், சேவை நிறுவனங்கள் ஆப்பிள் ஆப்ஸ்டோர், மற்றும் கூகிள் ப்ளேஸ்டோரில் ஒரு சின்ன நிரலை உருவாக்கினால், போதும். அந்த நிறுவனத்தின் நுகர்வோர் இந்த நிரல் மூலம் தங்களின் அடையாளத்தை எளிதில் நிறுவனத்துடன் சரி பார்த்துக் கொள்ளலாம்.
இந்த அமைப்பு வெற்றி பெற மிக முக்கியமான தேவை, காமிராவுடன் வரும் ஒரு செல்பேசி. இந்தியாவில் இன்று 1,183 (1,183,040,925 – Sep 2017) மில்லியன் (2017) செல்பேசிகள் உள்ளன. கிராமங்கள், சிறு நகரங்கள், பெறு நகரங்கள் என்று எங்கும் இந்தியர்கள் செல்பேசிகளைப் பயன்படுத்துவதால், இந்தத் தொழில்நுட்பப் புரட்சிக்குத் தேவையான நுகர்வோர் எந்திரம் வெறும் செல்பேசிதான். செல்பேசி இல்லாதோர் பெரும்பாலும் குழந்தைகள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆதார் மூலம் நடக்கும் இந்திய அடுக்கு தொழில்நுட்பம் காகிதத்தை எதிர்த்து உருவாகியுள்ள ஒரு மின்னணு புரட்சி.
இந்திய அடுக்கு என்று பலமுறை சொல்லியுள்ளேன். இந்த இந்திய அடுக்கு என்றால் என்ன?

  1. நான்கு மென்பொருள் அடுக்குகள் கொண்ட அமைப்பு ‘இந்திய அடுக்கு’. இதில் எல்லாவற்றிற்கும் அடிப்படை ஆதார் என்னும் அடுக்கு – இதை presenceless layer என்று அழைக்கப்படுகிறது – தமிழில் ’முன்னிலையற்ற அடுக்கு’ என்று சொல்லலாம். மற்ற அடுக்குகள் அனைத்தும் இந்த அடிப்படை அடுக்கை அடையாளத்திற்காகப் பயன்படுத்தும்.
  2. அடுத்தபடியாக வருவது காகிதமற்ற அடுக்கு – paperless layer. இது மிகவும் முக்கிய பயன்களை உருவாக்கும் அடுக்கு. அதாவது, ஒருவரின் டிஜிட்டல் அடையாளம் வெகு எளிதாக ஒரு நிதி நிறுவனத்திடம் பரிமாற்றிக் கொள்ள உதவும் அடுக்கு. உதாரணத்திற்கு ஒரு வங்கியில் நீங்கள் கணக்கு வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். மற்றொரு வங்கி உங்களைக் கவரும் ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்துகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களது டிஜிட்டல் அடையாளத்தை புதிய வங்கியிடம் மிக எளிதில் மாற்றிக் கொண்டு, நீங்கள் அவர்களின் புதிய சேவையைப் பயன்படுத்தலாம். இதில் காகிதமே தேவையில்லை. இதைப் பற்றி விரிவாகப் பிறகு அலசுவோம்.
  3. அடுத்தபடி, காசற்ற அடுக்கு – cashless layer. இங்குதான் ஒரு நிதித் தொழில்நுட்பப் புரட்சியே நிகழ வாய்ப்புள்ளது. பல தரப்பட்ட செலவுகளுக்கு நீங்கள் உங்களது டிஜிட்டல் பணப்பையை (digital wallet) பயன்படுத்திப் பல சேவைகளையும் பெறலாம். நுகர்வோர் மற்றும் வணிகத்திற்கு மிகக் குறைந்த செலவில் இந்த அடுக்கு நிதிப் பரிவர்த்தனை (financial transactions) செய்ய உதவும். இன்று PayTM போன்ற சேவைகள் இந்த அடுக்கில் இயங்குகின்றன. இதைப் பற்றியும் விரிவாக அலசுவோம்.
  4. எல்லாவற்றிற்கும் மேலாக ஒப்புதல் அடுக்கு – consent layer. இந்த அடுக்கு இன்னும் முழுவதும் உருவாக்கப்படவில்லை. இதன் குறிக்கோள் – எந்த ஒரு ஆதார் சொந்தக்காரரும், தன்னுடைய விவரங்கள் எந்த அளவு, எப்படி, யாருடன், எத்தனை நாட்கள் பகிர்ந்து சொள்வது என்பதை முடிவெடுக்க முடியும். இதனால், பலவகை சேவைகள் – நிதி சேவைகளுக்கு அப்பால், கல்வி, உடல்நலம், அரசாங்க சலுகைகள், போன்ற பல பரிவர்த்தனைகள் எளிமையாக்கப்படும்.

சுருக்கமாகச் சொல்லப் போனால்:

  1. ’முன்னிலையற்ற அடுக்கு’, அதாவது presenceless layer, தேவைக்கேற்ப ஒருவரின் அடையாளத்தை வெளிப்படுத்த உதவும் – authentication on demand
  2. காகிதமற்ற அடுக்கு – அதாவது paperless layer, தேவைக்கேற்ப ஒருவரின் ஆவணங்களை வெளிப்படுத்த உதவும் – documents on demand
  3. காசற்ற அடுக்கு – அதாவது cashless layer, தேவைக்கேற்ப ஒருவரின் நிதிப் பரிவர்த்தனைகள் செய்ய உதவும் – financial transactions on demand
  4. ஒப்புதல் அடுக்கு – அதாவது consent layer, தேவைக்கேற்ப ஒருவரின் அனுமதி பெற உதவும் – permission on demand

கடந்த 8 ஆண்டுகளில் (2017), இந்த இந்திய டிஜிட்டல் முயற்சி ஒரு அரசாங்க ப்ராஜக்ட் என்பதையே நம்பவே கடினமாக உள்ளது. 3 கி.மீ. பாதாள ரயில் நீட்டிப்பிற்கு மேற்குலகில் 5 வருடம் ஆகிறது; 4 கி,மீ. நகர மைய நெடுஞ்சாலை நீட்டிப்பு 5 வருடமாகிறது!

  1. 2009 –ல் ஆதார் ப்ராஜக்ட்டுக்காக UIDAI என்ற அரசு நிறுவனம் உருவாக்கப்பட்டது
  2. 2010 –ல் UIDAI (Universal Identification Authority of India) எப்படி ஆதார் அடையாளங்களைக் கோர வேண்டும் என்ற வரைமுறையை (Aadhar Auth API) வெளியிட்டது. முதல் ஆதார் நம்பர் இன்னும் எவருக்கும் அளிக்கப்படவில்லை!
  3. 2011 –ல் NPCI (National Payments Corporation of India) என்ற அரசு நிறுவனம், மத்திய அரசாங்க சலுகைகளைப் பெற, ஆதாரை மையமாகக் கொண்ட ஒரு பணம் செலுத்தும் சேவையைத் தொடங்கியது. கிரேடிட் கார்டற்ற முதல் இந்திய பணம் செலுத்தும் முறை உருவானது
  4. 2012 –ல் UIDAI, மின்னணு நுகர்வோர் அறிதல் (eKYC – Electronic Know Your Customer) சேவையை அறிமுகப்படுத்தியது. இதற்கு ஆதார் எண்ணும், கருவிழி ஸ்கேன் மற்றும் செல்பேசியில் OTP இவை மட்டுமே தேவை. காகிதம் கிடையாது!
  5. 2015 –ல் CCA (Controller of Certifying Authorities) என்ற அரசாங்க அமைப்பு, டிஜிட்டல் சான்றிதழ் மற்றும் காப்புப் பெட்டகங்களை (digital certification and locker) அறிமுகப் படுத்தியது. மேற்குலகில் சில தனியார் நிறுவனங்கள் இந்தச் சேவையைப் புரிகின்றன. பெரும்பாலும் இவை டிஜிட்டல் சான்றிதழ் அமைப்புகள். இவ்வகை டிஜிட்டல் சான்றிதழ், பாதுகாப்பாக இணையத்தைப் பயன்படுத்த உதவும் கருவிகள். டிஜிட்டல் காப்பகங்கள் மேற்குலகில் தனியார் நிறுவனங்கள் அதிக வெற்றியின்றி சில ஆண்டுகளாக அளித்து வருகின்றன. தனியார் நிறுவனம், காப்புப் பெட்டகங்களை தீய நோக்குடன் (வேறென்ன, எல்லாம் லாப நோக்குதான்) பயன்படுத்தி விடுமோ என்று பலரும் அஞ்சுகிறார்கள்
  6. 2016 –ல் NCPI, ஒருங்கிணைக்கப்பட்ட மின்னணு பணம் செலுத்தும் இடைமுகப்பை (Unified electronic payments Interface) அறிமுகப்படுத்தியது. உலகின் மிக நவீனமான மின்னணு பணம் செலுத்தும் இடைமுகப்பை இதுவே ஆகும்.


இந்த டிஜிட்டல் புரட்சிக்கு முக்கிய தேவைகள் மூன்று:

  1. ஒரு வங்கிக் கணக்கு
  2. ஆதார் பதிவு
  3. செல்பேசி – காமிராவுடன்

இதைவிட எளிமையான தேவைகள் உள்ள ஒரு நிதியமைப்பு உலகில் எங்கும் இல்லை. ஆனால், இந்தியாவில் பல கோடி மக்கள் வங்கிக் கணக்கு இல்லாமல் இருந்தார்கள் (இன்னும் இருக்கிறார்கள்). இதை JAM என்கிறார்கள் – அதாவது, Jan Dhaan Account, Aadhar and Mobile.
இந்திய அரசாங்கத்தின் நோக்கம் எல்லா குடிமக்களுக்கும் இந்தச் சேவைகள் சென்றடைய வேண்டும் என்பதே. பொதுவாக, இந்தியாவில், சந்தையை விரிவாக்குவது என்பது தனியார் நிறுவனத்திடம் அரசாங்கம் விட்டுவிடும். நலிவுற்றோர் நலனுக்காக, அரசாங்கம், தானே முன்வந்து பல திட்டங்களையும், மானியங்களையும் செய்யும். இப்படிச் செயல்பட்டதில், இந்தியா பெரிதாக பயனடையவில்லை. இந்தத் தொழில்நுட்பம், இந்த இரண்டு விஷயங்களையும் ஒரே திட்டத்தில் நிறைவேற்ற முயற்சி செய்துள்ளது. இந்திய அடுக்கு, மற்றும் ஜந்தான் வங்கிக் கணக்கு ஒரு 60 கோடி இந்தியரை இன்னும் சில ஆண்டுகளில் அமைப்புடைய பொருளாதாரத்திற்குள் (organized economy) கொண்டு வரும். மேலும், மற்ற இந்திய அடுக்குகள், மிக மலிவாக நிதிப் பரிவர்த்தனைகள் செய்ய உதவும். எல்லாம் தடையின்றி நடந்தால், உலகின் மிகப் பெரிய பொருளாதாரப் புரட்சியாக மலர இந்திய அடுக்கு வழி வகுக்கும்:
இன்று அரசாங்கம், இந்த அடிப்படை மூன்று விஷயங்களில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.
அடுத்த பகுதியில், இந்த அடுக்களின் பயன் மற்றும் தொழில்நுட்பத்தை விரிவாக அலசுவோம்.
தமிழ்ப் பரிந்துரை
எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். சில புதிய சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்.

ஆங்கிலச் சொல் தமிழ்ப் பரிந்துரை
India stack இந்திய  அடுக்கு
Driver’s license காரோட்டி உரிமம்
Presenceless layer   முன்னிலையற்ற அடுக்கு
Paperless layer காகிதமற்ற அடுக்கு
Cashless layer காசற்ற அடுக்கு
Consent layer ஒப்புதல் அடுக்கு
Digital wallet டிஜிட்டல் பணப்பை
Financial transactions நிதிப் பரிவர்த்தனை
Authentication on demand தேவைக்கேற்ப அடையாளம்
Documents on demand தேவைக்கேற்ப  ஆவணங்கள்
Financial transactions on demand தேவைக்கேற்ப நிதிப் பரிவர்த்தனைகள்
Permission on demand தேவைக்கேற்ப அனுமதி
eKYC – Electronic Know Your Customer மின்னணு நுகர்வோர் அறிதல்
Organized economy அமைப்புடைய பொருளாதாரம்

 

One Reply to “இந்திய டிஜிட்டல் புரட்சி”

  1. வந்தே மாதரம். எப்போதும் போல அருமை. இன்னும் இந்த விஷயங்கள் பரவலாகத் தெரியவைக்கப்படவேண்டும். அரசாங்கத்தின் உண்மையான மற்றும் சரியான முயற்சி வெற்றி பெற வேண்டும். இதனால் பல அடுக்குகளில் உள்ள ஊழல் ஒழிந்துள்ளதும் குறிப்பிடத்தக்கதே. வாழ்க பாரதம். ஜெய்ஹிந்த்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.