யுவதி

நான் யுவதியாக இருந்தபோது அடிக்கடி விலங்கு காட்சி சாலைக்கு செல்வதுண்டு. அடிக்கடி போய்க்கொண்டிருந்ததால் அங்கு இருக்கும் விலங்குகளிடம் – என் சம வயது பெண்களிடம் இருந்ததைவிட – அதிக நட்பு ஏற்பட்டது. மனிதர்களிடமிருந்து விலகி இருப்பதற்காகவே விலங்கு காட்சி சாலைக்கு தினமும் சென்றேன். அங்கு இருக்கும் ஒரு இள வயது, புத்திசாலியான கழுதைப் புலியுடன் எனக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. நான் அவளுக்கு ப்ரென்ச் மொழி கற்றுக் கொடுத்தேன். மாற்றாக அவளுடைய மொழியை எனக்கு கற்றுக் கொடுத்தாள். இப்படியாக இனிமையாக பொழுது கழித்தோம்.

என்னை கெளரவிப்பதற்காக என் அம்மா மே மாதத்தில் ஒரு நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தாள். அது பற்றிய நினைவு இரவு நேரத்தில் எனக்கு மிகுந்த மன உளைச்சலைத் தந்தது. நான் எப்போதுமே நடன நிகழ்ச்சிகளை வெறுத்தேன். குறிப்பாக, என்னை கெளரவிப்பதற்காக நடத்தப்படும் நடன நிகழ்ச்சிகளை மிகவும் வெறுத்தேன். 1934ஆம் வருடத்திய மே மாதத்தின் ஒரு அதிகாலை நேரத்தில் கழுதைப் புலியை பார்க்கச் சென்றேன்.

“எனது நடன நிகழ்ச்சிக்கு இன்றிரவு போக வேண்டும். என்ன ஒரு அக்கப்போர்,” என்றேன். “நீ அதிர்ஷ்டசாலி. எனக்குப் போக ஆசை ஆனால் எனக்கு ஆடத் தெரியாது. போனால் வம்பாவது பேசிக் கொண்டிருப்பேன்,” என்றாள்.

“சாப்பிடுவதற்கு வகை வகையான பண்டங்கள் இருக்கும். வீட்டிற்கு வண்டிக் கணக்கில் சாப்பாட்டுக் கூடைகள் வந்ததைப் பார்த்தேன்.”

“ஹூம் அப்படியிருந்தும் ஏன் இந்த அலுப்பு?” என்றாள் கழுதைப்புலி, வெறுப்புடன். “என் நிலை பற்றி யோசித்துப் பார். ஒரு நாளுக்கு ஒரு வேளைதான் சாப்பாடு. அதுவும் ரத்த வாடை அடிக்கும் கவுச்சி.”

மண்டையில் ஒரு துணிச்சலான யோசனை தட்டியதால் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டேன். “ஒன்று செய்…எனக்கு பதிலாக நீ போய்விடு.”

“நம்மிருவருக்கும் உருவப் பொருத்தம் சிறிதுமில்லை. இல்லையென்றால் கண்டிப்பாகப் போவேன்,” என்று கவலையுடன் பதிலளித்தது கழுதைப் புலி.

“மாலை நேர வெளிச்சத்தில் யாருக்கும் கண் சரியாகத் தெரியாது. நீ மாறுவேடமிட்டுக் கொண்டால் உன்னை யாரும் அடையாளம் கண்டுபிடிக்க மாட்டார்கள். அங்க அளவுகளில் நாம் இருவரும் ஒருவரை ஒருவர் ஒத்திருக்கிறோம். என்னுடைய ஒரே நண்பி நீதான். உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், எனக்கு பதில் நீ போ.”

சிறிது யோசைனை செய்தாள். அவள் யோசனையில் நான் சொன்னதை ஒத்துக்கொள்வதில் இருக்கும் ஆர்வம் தெரிந்தது. சற்றும் எதிர்பாராதபோது, “சரி,” என்றாள்.

அதிகாலை நேரமாதலால் விலங்குச் சாலையில் வேலை செய்பவர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்தார்கள். வேகமாக கூண்டைத் திறந்தேன். சடுதியில் தெருவில் இருந்தோம். வீட்டிற்கு போவதற்காக டாக்ஸி அழைத்தேன். வீட்டில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நான் மாலையில் அணிவதற்காக எனது அறையில் வைத்திருந்த ஆடையை எடுத்தேன். சிறிது நீளம் அதிகமாக இருந்தது. தடிமனான குதி பொருத்திய எனது காலணியுடன் நடப்பதற்கு சிரமப்பட்டாள் கழுதைப் புலி. அவளது மயிர் நிறைந்த கையை என் கையைப்போல் தோன்றச் செய்வதற்காக கையுறைகளை கண்டெடுத்தேன். சூரியன் முழுவதுமாக உதிப்பதற்குள் காலணியுடன் எனது அறையை பலமுறை சுற்றி வந்து ஓரளவுக்கு நேராக நடக்க பழகிக் கொண்டாள். நாங்கள் இருந்த மும்முரத்தில் எனது அம்மா என் அறைக்கதவைத் திறந்ததைக் கிட்டத்தட்ட கவனிக்கவில்லை. நல்லவேளை கதவு திறப்பதற்குள் கழுதைப் புலி எனது படுக்கையின் அடியில் ஒளிந்து கொண்டாள்.

“உனது அறையில் கெட்ட வாடை அடிக்கிறது” என்று ஜன்னலைத் திறந்தாள் அம்மா. “இன்று இரவிற்குள் நீ கண்டிப்பாக நறுமண நீரில் குளித்து விடு. வேண்டுமென்றால் என்னுடைய நறுமண குளிபொருட்களையும் எடுத்துக்கொள்.”

“கண்டிப்பாக.”

அவள் அதிக நேரம் அங்கிருக்கவில்லை. வாடையை அவளால் தாங்க முடியவில்லை போலும். “காலையுணவிற்கு தாமதமாக வராதே,” என்றபடி என் அறையிலிருந்து வெளியேறினாள்.

கழுதைப் புலியின் முகத்தை மறைக்க வழி கண்டுபிடிப்பது மிகச் சிரமமாக இருந்தது. பல மணி நேரம் முயன்றோம், ஆனால் என்னுடைய அனைத்து யோசனைகளையும் நிராகரித்தாள். கடைசியாக “ஒரு வழி கிடைத்தது. உங்கள் வீட்டில் வேலைக்காரி இருக்கிறாளா?” என்றாள்.

சற்று குழப்பத்துடன், “இருக்கிறாள்,” என்றேன்.

“அருமை. உனது வேலைக்காரிக்கு போன் போடு. அவள் வந்தவுடன் அவள் மேல் தாவி அவளது முகத்தைக் கிழித்து விடுவோம். இன்றிரவு எனது முகத்திற்கு பதிலாக அவளது முகத்தை அணிந்து கொள்கிறேன்.”

“இது நடைமுறைக்கு ஒத்து வராது. முகமில்லாவிட்டால் அவள் இறந்து விடுவாள். பிணத்தை யாராவது கண்டுபிடித்து விடுவார்கள். நாம் கண்டிப்பாக சிறை செல்வோம்,” என்றேன்.

“அவளைச் சாப்பிடும் அளவிற்கு நான் பசியுடன் இருக்கிறேன்,” என்றாள் கழுதைப் புலி

“எலும்புகள்?”

“அவையும்தான். செய்வோமா?” என்றாள்

“முகத்தை கிழிப்பதற்கு முன் அவளை கொன்றுவிடுவேன் என்று வாக்களித்தால்தான். இல்லாவிட்டால் மிகவும் வலிக்கும்.”

“சரி. எனக்கு எல்லாம் ஒன்றுதான்.”

சிறு பதற்றத்துடன் என் வேலைக்காரி மேரியை போனில் கூப்பிட்டேன். நடன நிகழ்ச்சியின் மேல் வெறுப்பு மாத்திரம் இருந்திருக்காவிட்டால் கண்டிப்பாக இதைச் செய்திருக்க மாட்டேன். மேரி உள்ளே நுழைந்தபோது அக்காட்சியை பார்க்க விருப்பமில்லாமல் சுவரைப் பார்த்து திரும்பிக் கொண்டேன். வெகு நேரம் ஆகவில்லை. ஒரு சிறு முனகல், அவ்வளவுதான், எல்லாம் முடிந்து விட்டது. கழுதைப் புலி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். சிறுது நேரம் கழித்து, “இதற்கு மேல் என்னால் சாப்பிட முடியாது. அவளுடைய இரண்டு கால்களும் பாக்கி இருக்கின்றன. ஒரு பை இருந்தால் கொடு. அதில் வைத்து பிறகு சாப்பிட்டுக் கொள்கிறேன்,” என்றாள் கழுதைப் புலி.

“பூ சின்னம் தைக்கப்பட்ட ஒரு பை அலமாரியில் இருக்கிறது. அதிலிருக்கும் கைக்குட்டைகளை வெளியே எடுத்து வைத்துவிட்டு பையை எடுத்துக்கொள்.” நான் சொன்னபடி செய்தாள். “இப்போது திரும்பிப் பார். நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன் பார்,” என்றாள்.

கண்ணாடியின் முன்னால் மேரியின் முகம் பொருத்திய தன் முகத்தை அழகு பார்த்துக் கொண்டிருந்தாள் கழுதைப் புலி. எது தேவையோ அதை எடுக்கும் விதத்தில் மேரியின் முகத்தை மிகத் துல்லியமாக கடித்து எடுத்திருந்தாள்.

“கண்டிப்பாக நல்ல வேலை செய்திருக்கிறாய்,” என்று பாராட்டினேன்.

மாலை நெருங்குவதற்குள் கழுதைப் புலி நன்றாக அலங்காரம் செய்திருந்தாள். “நான் வானத்தில் மேலே மிதப்பது போல் உணர்கிறேன். இந்த மாலைப் பொழுது ஒரு இனிமையான பொழுதாக அமையும் என்று கண்டிப்பாக நம்புகிறேன்.”

கீழிருந்து இசை கேட்டது. “இப்போது கீழே போ. கண்டிப்பாக என் அம்மாவின் பக்கத்தில் நிற்காதே. அவள் நானில்லை என்பதை கண்டுபிடித்து விடுவாள். அவளைத் தவிர மற்ற யாரையும் எனக்குத் தெரியாது, போ.”. அவளுக்கு முத்தம் கொடுத்து வழியனுப்பினேன். அவளின் மீதிருந்து கெட்ட வாடை அடித்தது.

இரவானது. அந்நாளைய நிகழ்வுகளின் உணர்வுப் பெருக்கால் அலுப்புதட்டியதால் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஜன்னலோரம், அப்பாடா என்று உட்கார்ந்தேன். ஜானதன் ஸ்விஃப்ட் எழுதிய கல்லிவரின் பயணங்கள் என்று ஞாபகம். சற்றேறக்குறைய ஒரு மணி நேரம் கழித்து ஏதோ சரியில்லாதது போல் உணர்ந்தேன். சிறு முனகல்களுடன் ஒரு வெளவால் ஜன்னல் வழியே உள்ளே வந்தது. வெளவால்களிடம் எனக்கு பயம் அதிகம். ஒரு நாற்காலியின் பின்னால் ஒளிந்து கொண்டேன். என் பற்கள் தந்தி அடித்தன. முட்டி போட்டு உட்கார்ந்ததுதான் தாமதம், வெளவால் இறக்கையை அடிக்கும் ஒலியை மிஞ்சும் வகையில் என் கதவில் ஒரு பெரும் ஓசை கேட்டது. கோபத்தால் வெளிறிப்போன முகத்துடன் உள்ளே நுழைந்தாள் என் அம்மா.

“அப்போதுதான் சாப்பிட உட்கார்ந்திருந்தோம்,” என்றாள் அம்மா, “உன் இடத்தில் உட்கார்ந்திருந்த அது எழுந்து, “நான் கொஞ்சம் நாற்றமடிக்கத்தான் செய்கிறேன், அதனால் என்ன? இருக்கட்டும், நான் கேக் சாப்பிடுவதில்லை!” என்று சத்தம் போட்டது. அதன்பின் அது தன் முகத்தைக் கிழித்துத் தின்றது. அப்புறம் அது ஒரே தாவலில் ஜன்னல் வழியே காணாமல் போனது.”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.