சில நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவர், உங்களுக்குப் பிடித்தமான எழுத்தாளர்கள் பட்டியலில் ஆதவன், இந்திரா பார்த்தசாரதி ஆகியவர்கள் இல்லைதானே, என்று கேட்டார். எனக்குக் ஆச்சரியமாக இருந்தது. தீவிரமான ஆசகன் ஒருவனுக்கு ஆதவனையோ, இ.பா.வையோ பிடிக்காமல் போக என்ன காரணம் இருக்க முடியும்? இவர்களிருவரையும் எடுத்துவிட்டால் எத்தனை பேர் எஞ்சுவார்கள், என்ற எண்ணம் ஏற்பட்டது.
பின்பு ஆதவன் கதைகளைப் படிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவரது ‘நிழல்கள்‘ எனக்கு மிகவும் பிடித்த கதை. உளவியல் ரீதியில் ஒரு காதல் ஜோடியின் எண்ணங்களையும் உணர்வுகளையும் விவரிக்கும் சுவாரஸ்யமான கதை. இக்கதையை நான் பலருக்கும் சிபாரிசு செய்திருக்கிறேன். ஆனால் தற்போது படிக்கும்போதுதான் இக்கதையின் பூர்ணத்துவமின்மை, போதாமை உறைத்தது. இசை, கவிதை, நாவல், சிறுகதை போன்றவற்றில் நமது இரசனையை அவ்வப்போது தற்போதைய அனுபவங்களுடன், அவ்வனுபவங்களின் வாயிலாகப் பெற்ற அறிவுடன் உரசிப் பார்த்துத் திருத்திக் கொள்வது அவசியம் என்று தோன்றுகிறது. ஆதவனைப் பற்றியும் இ.பா.வைப் பற்றியும் செல்போனில் பேசிய எனது நண்பர் ஏளனப் புன்னகையோடு என்னைப் பார்ப்பது போலவும் தோன்றுகிறது. ‘
‘நிழல்கள்‘ பனி முடிந்து தத்தம் இருப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்லும் காதலர்கள் இரவு வேளையில் நடந்து செல்லும்பொழுது அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் மூலம் தத்தம் உணர்வுகளை வெளிப்படுத்துவது மூலமும் அவற்றிற்கு ஒருவர் மீது ஒருவர் புரியும் எதிர்வினைகள் மூலமும் நகர்கிறது. கதாநாயகன் காதலியிடம் பூடகமாக எதையோ கோரிக்கொண்டே இருக்கிறான். அது உடலுறவா, முத்தமா, தழுவலா எதுவுமே தெரியவில்லை. எதுவாயிருந்தாலும் பஸ்கள் தொடர்ந்து வந்து போகும், போக்குவரத்து மிக்க சாலையில் அது எப்படி சாத்தியம் என்பது அவனுக்கு உறைப்பதில்லை. காதலிக்கும் இது பற்றிய பிரக்ஞை இருப்பது போலத் தோன்றவில்லை.
அவள் தன்னைப் பூர்ணமாக அவனுக்குச் சமர்ப்பிக்கவில்லை என்று கருதுகிறான் அவன். அவள் குட்நைட் என்று சொல்லிவிட்டு கன்சலேஷன் ப்ரைஸ் போலப் புன்னகையொன்றை சிந்திவிட்டுப் போய் விடுவாள். அவன் தன் நினைவுகளுடன் போவான், அவனது பஸ் ஸ்டேண்டை நோக்கி நடக்க வேண்டும். அவற்றின் முற்றுகைக்குள் புழுங்கித் தவித்தவாறு பஸ்ஸுக்குக் காத்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறான். இரண்டு நாய்கள் சல்லாபிப்பதைப் பார்க்கும் அவன், “நாய்கள் யோசிப்பதில்லை“, என்கிறான்.
“அவனுடைய மெளனத்தையும் பார்வையின் திசை யையும் சிரத்தையாகக் கவனித்துக் கொண்டிருந்த அவள், குபீரென்று சிரித்தாள். தன் வார்த்தைகள் அவளை அதிரச் செய்யுமென்றும் புண்படுத்துமென்றும் எதிர்பார்த்திருந்த அவன் அவள் சிரித்ததும் தடுமாறிப் போனான். ஒரு முட்டாளைப் போல உணர்ந்தான்.
“திடீரென்று தொடங்கியதைப் போலவே, திடீரென்று நின்றது அவள் சிரிப்பு. அவள் முகத்தில் ஒரு ஆயாசமும் வாட்டமும் தேங்கியிருந்தன. எல்லாச் சிரிப்புகளுமே குதூகலத்தையும் உல்லாசத்தையும் மட்டுமே வித்தாகக் கொண்டவையாக இருப்பதில்லை. ”சில சமயங்களில் என்னை இதயமற்ற ஒரு கொடிய ராட்சஸியைப் போல உணரச் செய்து விடுகிறீர்கள்” என்றாள் அவள்.
“”நீ மட்டும்? இங்கிதமோ நாசூக்கோ அற்ற காட்டுமிராண்டியைப் போல என்னை உணரச் செய்கிறாய்”.,
என்கிறான்.
பூரணமான அனுபவத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக இவ்விதமான சாமர்த்தியமான உரையாடல்களையும், கதை நகர்வுகளையும் கொண்ட கதைகளை நாம் உன்னதமானவை என்று நம்புகிறோம். இன்னுமொரு சாம்பிள்:
“”இதோ பார் – உன்னிடமிருந்து நான் வேண்டுவது அதுவல்ல – ஏதோ ஒன்றை நான் கவர முயற்சிப் பதாகவும் நீ காப்பாற்றுவதாகவும் நினைக்கிறாயே, அதுவல்ல; எனக்கு வேண்டியது நீ – பூரணமான திரைகளற்ற நீ; முழுமையாக நீ – புரிகிறதா உனக்கு? எனக்கு வேண்டியது அதுமட்டுந்தான் என்றால், எங்கேயாவது ஒரு நாற்றமடிக்கும் சந்தில் யாரையாவது…”
“அவள் அவன் வாயைப் பொத்தினாள். ”ப்ளீஸ்” என்றாள்.
”அந்த ஒன்றுக்காக நான் உன்னை அணுக வில்லையென்று சொல்ல வந்தேன்” என்கிறான். அவள் அவனுடன் அவனுடைய அறைக்கு வரச் சம்மதிக்கிறாள். அவன், “எனக்கு மூட் களைந்து விட்டது. வேறு ஏதாவது ஒரு நாள் பார்ப்போம், ” என்கிறான்.
பஸ் ஸ்டாண்டிற்கு நடக்கும்பொழுது, ‘உண்மையில், மற்றவர்களிடமிருந்து அவளைப் பிரித்துக் காட்டியது எது, என்னைக் கவர்ந்தது எது?” என்று அவன் யோசித்தான். ‘என்னிடம் அவளுக்கிருக்கும் நம்பிக்கையையும் மதிப்பையும் கலையாமல் வைத்திருப்பது எது?” சாலை விளக்குகளின் வெளிச்சங்களினூடே, வெளிச்சங்களுக்கிடையிலிருந்த நிழல்களினூடே, அவன் விரைவாக…” நடக்கிறான். . ‘வெளிச்சம் வரும்போது, கூடவே நிழல்களும் வந்து விடுகின்றன‘ என்று அவன் நினைத்தான்,” என்று கதை முடிகிறது.
எது வெளிச்சம்? எது நிழல்? ஆதவனுக்கே வெளிச்சம்.
மிலன் குந்த்ரா ஒரு நேர்காணலில் தனது கதையொன்றில் வரும் இதே போன்ற தருணமொன்றைக் குறித்துப் பேசுகிறார்.
கதாநாயகனான ஜெரோமில் என்ற கன்னிப்பையன் ஒரு பெண்ணுடன் நடந்து கொண்டிருக்கிறான். அந்தப் பெண் திடீரென்று அவனது தோளில் சாய்ந்து கொள்கிறாள். மிலன் குந்த்ரா அதை விவரிக்கிறார்– வாழ்வின் இந்தக் கணம் வரை ஜெரோமில் அனுபவித்த அத்தனையிலும் உன்னதமான தருணம் இதுதான். ஒரு பெண்ணின் தலையைத் தனது தோள்களால் தாங்குவது, என்கிறார். இதிலிருந்து அவனது காம இயல்பை அறிந்து கொள்ள முனையும் மி.கு. ஒரு பெண்ணின் தலை அவளது உடலைக் காட்டிலும் அதிகம் பொருளுடையதாய்த் தோன்றுகிறது. இதனால் அவளது உடல மீது அவன் கவனம் செலுத்தவில்லை நேரு பொருளல்ல. ஆனால், அவன் அவளது உடலை நிர்வாணமாக காண ஆர்வமுறவில்லை. நிர்வாணமான அவளைத் உடலால் ஒளியூட்டப்பட்ட முகத்தையே அவன் விரும்புகிறான். அவளது உடலைச் சொந்தமாக்கிக் கொள்ள முயலவில்லை. தன் மீது அவளுக்கிருக்கும் காதலை வெளிப்படுத்த தன் உடலை முற்றாகத் தந்துவிடத் துணிந்த பெண்ணின் முகத்தையே அவன் விரும்பினான். அவனது இந்த நிலைக்கு மி.கு. ஒரு பெயரையும் வழங்குகிறார்– ‘tenderness’.
இதுதான் இயல்பானதென்று தோன்றுகிறது. ஆதவனின் நாயகனுக்குத் தோன்றுவது காதலல்ல. ஒரு கணவன் மனைவியிடமேகூட இத்தகைய நிர்ப்பந்தம் புயலை ஏற்படுத்திவிட முடியும். இதற்கு ஆதவனின், “முதலில் இரவு வரும்,” கதை ஒரு சாட்சி.
ஆதவனின் நிழல்கள் சிறுகதை – http://azhiyasudargal.blogspot.in/2010/04/blog-post_17.html