அரசியல் தலைவர்கள், ஆன்மீகத் தலைவர்கள், துறை வல்லுனர்கள் முதலியவர்களுக்கு இடையில் சாதாரண மக்கள் மத்தியில் இருந்து கருத்துருவாக்குகிறவர்களாக, அவர்களை வழிநடத்துபவர்களாக சிலர் தோன்றுகிறார்கள். அவர்கள் பின்னால் இயக்கங்களோ, ஸ்தாபனங்களோ, பண/ஜாதி/இன பலங்களோ இருப்பதில்லை .
சுதந்திர இந்தியாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல், சமுதாய நிலைப்பாடுகளில் எவை நாட்டிற்கும், மக்களுக்கும் நல்லவை என்று உடனடியாகவும், தெளிவாகவும் சுட்டி வழி நடத்திய, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் சோ முதன்மையானவர்; அபூர்வமானவரும் கூட.
பல துறைகளில் ஈடுபட்டு சிறப்பாகவும், தனித்துவத்துடனும், மிகுந்த செல்வாக்குடனும் செயல் பட்ட அவரது மறைவு சம்பிரதாயத்துக்காகவன்றி உண்மையிலேயே ஈடு செய்ய முடியாதது. ஏனெனில் அவர் போல் ஒருவரை இனி என்றும் காண்பதரிது.
அவரது குடும்பத்தார், நண்பர்கள், சக துக்ளக் ஊழியர்கள், வாசகர்கள், அபிமானிகளுடைய இழப்பின் துக்கத்தில் பங்கேற்கிறோம். – சொல்வனம்.