[stextbox id=”info” caption=”அறிவுஜீவியின் சுயவிமர்சனம்”]
சமூகங்களின் பொதுப்பேச்சிலும், சினிமாக்களிலும் கல்லூரி ஆசிரியர், அறிவியலாளர், மெத்தப் படித்தவர் என்ற கதாபாத்திரங்கள் எப்போதும் விநோத மனிதர்களாகவே சித்திரிக்கப்படுகிறார்கள். அது சாமானியரிடம் இத்தகையோர் பற்றிய கருத்துகளையே பிரதிபலிப்பதால் அந்த வகை உருவாக்கங்கள் மேன்மேலும் உறைந்து பரவலான பிம்பங்களாகி விடுகின்றன. அறிவுஜீவிகள் என அறியப்படுவோர் எப்போதும் தங்களுக்குள்ளே ஒரு உலகை அமைத்து அதில் உழல்பவர்கள் என்றும், நடைமுறை வாழ்க்கையின் யதார்த்தத்தை அறிந்திராதவர்கள் என்றும் பல முத்திரைகள் அவர்களின் மேல் கேள்விகள் இன்றி குத்தப்படுகின்றன.
இதற்கான காரணம் என்னவென்று கேட்டால் அறிவுஜீவிகளின் பக்கம் இருந்து கிடைக்கும் பதில், “சாமானியர்களால் அல்லது பொது ஜனத்தால் நாங்கள் பேசும் விஷயங்களைப் புரிந்து கொள்ள இயலாது. அதற்குத் தேவையான வாசிப்போ, சிந்தனையோ, அர்ப்பணிப்போ அவர்களிடம் இல்லை அல்லது அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. அதை இவ்வகை கிண்டல்களின் மூலம் கடந்து செல்கிறார்கள்.” என்ற வகையில் இருக்கும். அந்த விளக்கத்தை ஒட்டு மொத்தமாகப் புறம் தள்ளி விடவும் இயலாது.
அதில் உண்மை இருக்கிறது என ஆமோதிக்கும் வேளையில், தங்களை அறிவுஜீவி என பாவித்துக் கொள்பவர்களின் பக்கம் உள்ள பிரச்னைகளையும் சுட்டிக் காட்டத் தேவையிருக்கிறது. இதை எதிர் அணியிலிருந்து ஒருவர் பேசும் போது அதில் ஒரு எதிர்மறைச் சார்பு வந்து விடுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் உள்ளிருக்கும் ஒருவர் தன்னையும் தன் கூட்டத்தையும் திரும்பிப் பார்த்து விமர்சிக்கும் பொழுது அது தவிர்க்கவியலாத குரலாகி விடுகிறது.
அப்படிப்பட்ட அறிவுஜீவியின் சுயவிமர்சனம் இங்கே ஒலிக்கிறது. அமெரிக்காவின் அறிவுலகத்தை நோக்கிய விமர்சனம் என்றாலும் இது எல்லா நாடுகளிலும் – தில்லி/ இந்திய அறிவுலகத்தையும் சேர்த்து தான் சொல்கிறோம் – காணக் கிடைக்கும் ஒரு நிலையைப் பற்றியே பேசுகிறது. தற்போது இணையத்திலும் தமிழ் இலக்கிய, கலை பண்பாட்டு சூழலிலும் புழங்கும் சிந்தனையாளர்கள் படிக்க வேண்டிய சிறு கட்டுரை. குறையுள்ள விமர்சனமாக எடுத்துக்கொள்ளும் சிந்தனையாளர்கள் மறுப்புத் தெரிவிக்கலாம். அப்படி தெரிவிக்கும் தோறும் இந்த கட்டுரைக்கு வலு சேர்க்கும்படியாக அமைந்துவிடும் என்பதுதான் நிதர்சனம்.
http://thesmartset.com/intellectuals-are-freaks/
[/stextbox]
[stextbox id=”info” caption=”ஒலிம்பிக்ஸ்- பிரிட்டன்-இந்தியா…”]
Work while you work
Play while you play
நர்சரி பள்ளிக் காலங்களில் படித்தவைகளில் மற்ற எவற்றை எல்லாம் நாம் தொடர்கிறோமோ இல்லையோ, இந்த Theodor Adorno குறிப்பை நாம் விடாமல் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். வருடாவருடம் வரும் சுதந்திர தினம், அக்டோபர் 2 போன்ற தினங்களில் மட்டும் நாட்டுப் பற்று பீரிட்டு எழுவது, காந்தியைப் பற்றி இட்லி சாப்பிட்டு முடிக்கும் வரையாவது நினைப்பது என்ற வரிசையில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடக்கும் வருடத்தில் இந்தியாவின் மெடல் எதிர்பார்ப்பையும் சேர்த்துக்கொள்ளலாம். அதுவும் சமூக வலைத்தளங்கள் வளர்ந்திருக்கிற இக்கால கட்டத்தில், என்ன என்னவெல்லாம் எதிர்பார்ப்புகள், லட்சியங்கள், புலம்பல்கள்..! ஒரு பெண் வெள்ளிப் பதக்கத்தை வென்றதும் நாடே கன்யாகுமரி பௌர்ணமி மாலை அலை போல் ஆர்ப்பரித்து… பின் எல்லாம் அடங்கி… ஒலிம்பிக்ஸ் நிறைவு நாள் கொண்டாட்டங்களுக்கு கூட நாம் நிற்கவில்லை… இனி அடுத்த நான்கு ஆண்டுகளுக்குப் அப்புறம்தான் ஒலிம்பிக்ஸ்ப்பற்றி நினைப்போம்…இன்னொரு பதக்கம் கிடைக்காமலா போய்விடப்போகிறது?
1996 அட்லாண்டா ஒலிம்பிக்ஸில் பிரிட்டன் வாங்கிய தங்கப்பதக்கம் ஒன்றே ஒன்று. மொத்தப் பதக்கங்களின் எண்ணிக்கை 15.
2012 லண்டன் ஒலிம்பிக்ஸில், தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 29; மொத்தப் பதக்கங்களின் எண்ணிக்கை, 65. அமெரிக்கா, சீனாவிற்கு பின் மூன்றாவது இடம்.
2016, ரியோவில் தங்கப்பதக்கங்கள் 27, மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 67; அமெரிக்காவிற்கு அடுத்த, இரண்டாவது இடம். சீனாவால் மூன்றாம் இடத்தைத்தான் கைப்பற்ற முடிந்தது.
பிரிட்டனுக்கு இது எப்படி சாத்தியமாயிற்று? அமெரிக்கா, சீனா, ரஷ்யா – இந்த மாபெரும் (நிலப்பரப்பில்) நாடுகள் பொதுவாக ஒலிம்பிக்ஸ்ஸில் முன்னணியில் இருப்பவை. ஆனால் பிரிட்டன், ஒரு சின்னத் தீவுதான். எப்படி சாத்தியம்?
பிரிட்டன் ஒரு முன்னேறிய நாடு, சரி. அரசாங்கம் ஏராளமான நிதி ஒதுக்கியிருக்கிறது, சரி…ஆனால் நிதி ஒதுக்கினால் மட்டும் போதுமா?
வெற்றுப் புலம்பல்களை கைவிட்டுவிட்டு பிரிட்டனின் இந்த வெற்றிக் கதையிலிருந்து நாம் எவற்றையெல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டும்?
ஒரே ஒரு கோபிசந்தின் அகாடமியிலிருந்து இத்தனை உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் வெளிவர இயலும் என்றால் பாரதம் போன்ற ஒரு பிரமாண்டமான தேசத்தில் உலகத்தரம் கொண்ட வீரர்களை அடையாளம் காட்ட எத்தனை அகாடமிகள் தேவைப்படும்?
ராக்கெட், சாட்டிலைட் விடும் போதே இந்தியா போன்ற ஒரு ஏழை தேசத்திற்கு எதற்கு இதெல்லாம் என்ற வெற்று கூச்சல்கள் கேட்பவர்கள் இருக்கும் சூழ்நிலையில் நமக்கு சாத்தியமா?
சாத்தியமே…
https://www.theguardian.com/sport/2016/aug/05/britain-team-gb-medals-rio-olympics
http://www.skysports.com/olympics/news/15234/10548015/analysing-the-reasons-behind-team-gbs-success-at-rio-olympics-2016
[/stextbox]
[stextbox id=”info” caption=”தெரு விளையாட்டு”]
உலகின் பெருநகரங்களை இன்று எதிர் நோக்கும் பிரச்னைகளில் ஒன்று போக்குவரத்து நெரிசல். அதிகரித்து வரும் வாகனங்களால் நகரின் பல பகுதிகளை அடைய நீண்ட நேரம் பிடிப்பது மட்டுமன்றி, வாகனங்களின் புகையினால் ஏற்படும் சுற்றுப்புறச் சூழலின் கேடு நகர வாசிகளை கடுமையாகப் பாதிக்கிறது. இதைத் தடுக்கும் விதமாக நகரின் மையைப் பகுதிகளுக்கு வரும் வாகனங்களுக்கு அதிக கட்டணம் விதிப்பது, கார் எண்களைப் பொறுத்து (ஒற்றை /இரட்டை) வாகனங்களை அனுமதிப்பது என்று பல முயற்சிகளை நகர நிர்வாகங்கள் செய்து வருகின்றன.
இதுபோன்ற ஒரு முயற்சிதான் நகரின் முக்கிய வீதிகளில் வாகனங்களை அனுமதிக்காமல் அவற்றை விளையாட்டுக் களங்களாக மாறுவது. வீதிகளில் கூடைப் பந்து, மேசைப் பந்து போன்ற விளையாட்டுகளை நடத்துவது யூரோப்பின் பல நகரங்களில் பிரபலமாகி வருகிறது. இவற்றை பல முன்னணி நிறுவனங்கள் ஏற்று நடத்துகின்றன. ருமேனியாவின் தலைநகரான புகாரெஸ்டிலும் கடந்த ஏழு வருடங்களாக கோடைக்கால வாரயிறுதிகளில் இது போன்ற நிகழ்ச்சிகளை ‘வயா ஸ்போர்ட்ஸ்’ என்ற நிறுவனம் நடத்திவந்தது. ஆனால் இந்த வருடம், இந்நிகழ்ச்சிகளை நடத்த புகாரெஸ்டின் மேயர் முட்டுக்கட்டை போட்டிருக்கிறார். ஏதோ சிலர் விளையாடுவதற்காக, நூற்றுக்கணக்கானோர் செல்லும் வழிகளுக்குத் தடை போட இயலாது என்ற காரணத்தையும் அவர் தெரிவித்திருக்கிறார். என்ன காரணத்தால் அவர் அப்படிச் செய்தார்? புகாரெஸ்ட் பழைய வழிக்கே மீண்டும் திரும்புகிறதா என்ற வினாக்களை எழுப்புகிறது இக்கட்டுரை.
https://www.theguardian.com/cities/2016/aug/04/reclaiming-streets-cars-bucharest-mayor-via-sport
[/stextbox]
[stextbox id=”info” caption=”இனிக்கும் சிற்பம்”]
தேனீக்கள் என்றால் நம் நினைவுக்கு வருவது மலர் விட்டு மலர் சென்று அவை சேகரித்துத்தரும் சுவையான தேனும், ராணித்தேனீயின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டு அவை வாழும் சமூக வாழ்க்கையும்தான். இவை வாழும் தேன்கூட்டை அடிப்படையாகக் கொண்டு ‘தி ஹைவ்’ எனும் பிரம்மாண்ட சிற்பத்தை உருவாக்கியிருக்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த சிற்பி ஊல்ஃப்காங் பட்ரெஸ்ஸ். இத்தாலியில் நடைபெற்ற 2015ஆம் ஆண்டின் உலக எக்ஸ்போவுக்காக உருவாக்கப்பட்ட இந்தச் சிற்பம் இப்போது லண்டனில் உள்ள ராயல் பொட்டானிகல் கார்டனில் வைக்கப்பட்டிருக்கிறது. அலுமினியத்தால் ஆன இந்தச் சிற்பத்தில் கிட்டத்தட்ட 1000 எல் ஈ டி விளக்குகள் பதிக்கப்பட்டிருக்கின்றன. இவை கம்பியில்லாத முறையில் அருகிலுள்ள தேன்கூடுகளோடு இணைக்கப்பட்டிருக்கின்றன. தேன்கூடுகளில் உள்ள தேனீக்களின் நடவடிக்கைகளைப் பொருத்து, இந்த விளக்குகளும், ‘ஹைவில்’ ஒலிக்கப்படும் இசையும் மாறுபடும். ‘தி ஹைவைப்’ பற்றி மேலும் அறிய
http://www.smithsonianmag.com/arts-culture/sculpture-controlled-live-honeybees-180960006/?no-ist
[/stextbox]