நீளும் சாலைகள், பயணங்களும்தான்…

Women_Jumping_hurdles

அமெரிக்காவின் நாற்பத்தி ஐந்தாவது ஜனாதிபதிக்கான தேர்தல் திருவிழாவின் உச்ச கட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நீண்ட நெடிய அரசியல் வரலாறு கொண்ட அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி என்கிற பெருமையை ஹில்லாரி கிளிண்ட்டன் பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். என்னதான் அமெரிக்கர்கள் தங்களை இந்த உலகின் உரத்த சிந்தனையுள்ள முன்னேறிய சமூகம் என பெருமையடித்துக் கொண்டாலும் கூட, கடந்த 228 ஆண்டுகளில் ஒரு பெண்ணை ஜனாதிபதியாக்கி பார்க்காதது வெட்கப்பட வேண்டிய ஒன்றுதான்.
அமெரிக்க ஜனநாயகத்தின் முதல் தேர்தல் 1788 முதல் தொடர்ந்து நடந்துவந்தாலும், கடந்த 1920ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதிதான் பெண்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையே வழங்கப்பட்டது. அதுவரை பெண்கள் நாலாந்தர குடிமக்களாகவே கருதப்பட்டனர். பெண் என்பவள் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப்பெற்று, அவர்களை கவனித்து, கணவனை திருப்தி செய்ய பிறந்தவள் என்பதுதான் நிதர்சன நிலையாக இருந்தது. வீடுதான் அவள் உலகம், கணவரின் சம்பாத்தியத்திலோ, சொத்திலோ உரிமைகள் ஏதும் இல்லாதவர்களாகவே இருந்தார்கள்.
இந்த வகையில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்ட நிகழ்வு அமெரிக்க பெண்ணிய வரலாற்றின் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. இதனையொட்டியே அமெரிக்க அரசும் இந்த் நாளை ”Women’s Equality Day” என சிறப்பித்து கொண்டாடுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான தொடர் போராட்டங்களின் விளைவாகவே பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். 1875ல் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி தனது வாக்கினை பதிவு செய்து அதற்காக கைது செய்யப்பட்டு தண்டனையை எதிர்கொண்ட பெண்ணிய போராளி Susan B.Anthony (1820 – 1906) தான் அமெரிக்காவின் முதல் பெண் வாக்காளர். அவர் மீது தொடரப்பட்ட வழக்கும், தண்டனையும் அதன் மீதான விவாதங்களுமே பெண்ணிய உரிமைகளுக்கான போராட்டங்களை தீவிரமாக்கியது.
வாக்குரிமை என்பது முதல் புள்ளியாக இருந்தாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் நிதர்சனங்களை புரிந்து கொண்ட அமெரிக்க ஆட்சியாளர்கள் பெண்களுக்கான உரிமைகள் ஒவ்வொன்றாய் வழங்கிடத் துவங்கினர். ஆண்களுக்கு நிகரான கல்வி, வேலைவாய்ப்பு, சம்பளம் என பல்வேறு மட்டங்களில் பெண்களுக்கான அடிப்படை உரிமைகளாக சட்டபூர்வமானது. ஆனாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவது அத்தனை எளிதானதாக இல்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும். ஆரம்ப காலங்களில் ஆசிரியர், செவிலியர், அலுவலக செயலாளர் வேலைக்கு மட்டுமே என்பதைப் போல சில கட்டுப்பாடுகள் பெண்களுக்கு என்றிருந்திருக்கிறது. மருத்துவம், சட்டம், பொறியியல், அரசியலிலும் பல துறைகளில் நுழையவும், பங்களிக்கவும் பெரும் போராட்ட்டங்களுக்குப்பின் தான் அவர்களால் வர முடிந்திருக்கிறது.
எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் என அறிவுசார் சமூகத்தினர் பலரும் தங்கள் எழுத்துக்கள், கருத்துக்களின் மூலமாக பெண்ணியக்க போராட்டங்களை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவியிருக்கின்றனர். Betty Friedan எழுதிய The Feminine Mystique பெண்களுக்கான உரிமைகளை பேசும் முக்கியமான நூலாக இருந்திருக்கிறது. “Feminism is a movement to end sexism, sexist exploitation and oppression.” என்று தன் எழுத்துக்களின் மூலம் பெண் மற்றும் சமூக உரிமைகளுக்காகப் போராடிய BELL HOOKS, பெண்களுக்காகவும், கறுப்பின மக்களுக்காகவும் தன் எழுத்துக்கள், பேச்சுக்கள் மூலமாக தொடர்ந்து போராடிய MAYA ANGELOU இன்னும் பல பெண்கள் அயராது உழைத்துப் பெற்ற உரிமைகள் தான் இன்று பெண்களை சுதந்திரமாகவும், தங்கள் கனவுகளை நனவாக்கவும் செய்து கொண்டிருக்கிறது. இவகளைப் போலவே 1931ல் நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்க பெண்ணான Jane Addams (1860 – 1935) தான் வாழ்ந்த காலகட்டத்தின் மிக முக்கியமான பெண்ணிய போராளி என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கீகாரத்திற்கான அமெரிக்க பெண்களின் போராட்டம் பல்வேறு தளங்களில் நூற்றாண்டுகளைக் கடந்து இன்றுவரை தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளை தட்டிக் கேட்டு சமத்துவ சமூக அங்கீகாரத்திற்காக போராடிய இந்த நிஜமான பெண்ணிய போராளிகளின் பட்டியல் நீளமானது. இந்த நேரத்தில் அவர்கள் அனைவரையும் நாம் நன்றியுடன் நினைவு கூர்வது அவசியம்.
இந்த நூற்றாண்டின் அமெரிக்கப் பெண்கள் பலரும் நன்கு படித்து ஆண்களுக்கு நிகராக நல்ல பதவியிலும், பொறுப்பிலும் இருக்கிறார்கள். அரசியல், கல்வி, கலை, விளையாட்டுத்துறை, மருத்துவம், நீதித்துறை , விண்வெளி ஆராய்ச்சி, பொறியியல், விவசாயம் என்று அனைத்துத்துறையிலும் பெண்கள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தாலும் கூட கடந்த நூற்றாண்டுகளின் நாலாம் தரத்திலிருந்து இரண்டாம் தரத்திற்குத்தான் உயர்ந்திருக்கிறார்களோ என எண்ணிடக்கூடிய வகையில்தான் நிதர்சனங்கள் இருக்கின்றன. பாலின சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டிய பல சட்டங்கள் இன்றும் ஆண்களுக்குச் சாதகமாகவே இருந்து வருவதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
No-fault divorce எனும் சட்டம் பெண்களுக்கு போதிய பாதுகாப்பினை வழங்கவில்லை என்னும் குற்றச்சாட்டு இப்போது வலுப்பட்டு வருகிறது. நினைத்த நேரத்தில் எந்தவிதக் காரணமும் சொல்லாமல், அப்படியே காரணங்கள் இருந்தாலும் அதை நிறுவ வேண்டிய அவசியம் இல்லாமல் தம்பதிகள் மணவிலக்கு பெறமுடியும் என்பது பொருளாதாரத்தில் தற்சார்பு அடையாத நடுத்தர மற்றும் கீழ்நிலையில் உள்ள பெண்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி. இதனால் பாதிக்கப்படும்பெண்கள் அவர்களின் குழந்தைகள், குடும்பச்சூழல், வாழ்வாதாரங்களை கருத்தில் கொண்டு அதற்கான சட்டத்தில் தீர்வுகள், திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்கிற குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியிருக்கிறது.அமெரிக்காவின் பல மாநிலங்களில் இன்றும் பெண்கள் தங்கள் கருவை கலைப்பதற்கு உரிமையில்லாத நிலை தொடர்வதும் வருத்தம் தரும் நிதர்சனம்.
இதைப் போலவே பணியிடங்களில், கல்வி நிறுவனங்களில் பெண்களின் மீது நிகழ்த்தப்படும் பாலியல் சீண்டல்கள் மற்றும் அத்துமீறல்களைப் பற்றி தனியே ஒரு புத்தகமே எழுதலாம். அத்தனை வன்முறைகள். பாதிக்கப்பட்ட பெண் மீதே குற்றம் சொல்லும் வகையில் உள்ள சில ஷரத்துக்களை ஆண்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். குற்றம் செய்தவன் இந்த ஓட்டைகளில் இருந்து தப்பித்து சுதந்திரமாய் திரிவது தொடர்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புக்கும் அவமானங்களுக்கும் ஆளாகின்றனர். இதைப் பற்றி ஜனாபதி தொடங்கி உள்ளூர் அரசியல்வாதிகள் வரை கவலையோடு பேச மட்டுமே செய்கின்றனர். உருப்படியாக எதுவும் செய்த பாடில்லை.
பல பணியிடங்களில் பதவிகள் ஒன்றாய் இருந்தாலும் கூட ஊதிய நிர்ணயங்களில் பாகுபாடு தொடர்கிறது. பெண் என்பதால் சில பொறுப்புகள் மறுக்கப்படுவதும், உளவியல் ரீதியான தொல்லைகள், வேலை நெருக்கடிகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மோனிகா லெவின்ஸ்கி விவகாரத்தில் அமெரிக்க அதிபரின் அலுவலகத்திலேயே ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பில்லை என்பது இன்றளவும் ஜீரணிக்கமுடியாத ஒன்று.
ஒரு பெண் குடும்ப வன்முறை என புகார் அளித்தால், அவள் தன் கணவன் தன்னை துன்புறுத்துகிறான் என்பதற்கான சாட்சியையும், ஆதாரங்களையும் தரவேண்டும் என்கிறது அமெரிக்க காவல் துறை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை இருக்கும் பட்சத்தில் ஓரளவு சட்ட பாதுகாப்பு கிடைக்கிறது. இவற்றையெல்லாம் சீராக்கும் சட்டங்களைக் கொண்டு வர பல மாநிலங்களும் தங்களால் ஆன அளவுக்கு முயன்று கொண்டிருக்கின்றன. ஆனாலும் அவற்றின் வேகம் போதாது என்கின்றனர் பெண்ணிய போராளிகள்.
பெண்களின் நிலமை இப்படியிருக்க, திருநங்கைகளுக்கு பெண்களுக்குரிய அனைத்து உரிமைகளும் கொடுக்கப்பட வேண்டும் என சட்டமிருந்தாலும் பொது இடங்களிலும், வேலை செய்யுமிடங்களிலும் அவர்கள் பல்வேறு கேலிகளுக்கும், அவமதிப்புக்கும் ஆளாகின்றனர். சமீபத்தில் கூட ஒரு திருநங்கை தனக்கு பெண்களுக்கான கழிவறையை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்று போராடி தன் உரிமையை மீட்டார். இதில் இன்னும் சுவாரசியமாக திருநங்கையரை வெறுத்து ஒதுக்கி கேலி செய்து அவமதிப்பவர்கள் பெரும்பாலும் பெண்களாக இருப்பது நகைமுரண். இந்தியாவைப் போலவே இங்கும் திருநங்கையர் சமூகத்தின் அத்தனை அவமானங்களையும் எதிர்கொள்கின்றனர்.
நூற்றாண்டுகள் கடந்தாலும் அமெரிக்கப் பெண்கள் கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம். பாலின சமத்துவம் என்பது இருபாலாரும் ஒருவரை ஒருவர் புரிந்து அங்கீகரிக்க வேண்டியது என்பதை ஆண்களும், அரசாங்கமும் புரிந்து ஓத்துழைத்தால் வருங்கால சமூகத்தின் நன்மைக்கும், மேன்மைக்கும் நல்லது செய்தவர்களாவோம்.

One Reply to “நீளும் சாலைகள், பயணங்களும்தான்…”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.