[stextbox id=”info” caption=”வாசித்தலையும் தடுக்கிறதா வறுமை ?”]
புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை சிறுவயதிலேயே அறிமுகப்படுத்த வேண்டும் என்று சொல்வதுண்டு. ஆனால், புத்தகங்கள், குறிப்பாக சிறுவர் புத்தகங்கள், விற்கும் விலையைப் பார்த்தால் குறைந்த வருமானமுள்ள ஒரு குடும்பத்தால் அவற்றை வாங்க முடியுமா என்பது கேள்விக்குறி. இந்த நிலை இங்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ளதுதான் என்கிறது இந்தக் கட்டுரை.
அமெரிக்காவில் உள்ள சில நகரங்களில் எடுக்கப்பட ஆய்வுகள், குறைந்த வருமானமுள்ள வீடுகளில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் வாங்கப்படுவது மிகவும் குறைவு என்று தெரிவிக்கின்றன.
உதாரணமாக ஃபிலடெல்ஃபியா மாநகரின் நடுத்தரக் குடும்பங்களில் சராசரியாக ஒரு குழந்தைக்கு 13 புத்தகங்கள் வாசிக்கக் கிடைக்கின்றன. ஆனால், அதே நகரிலுள்ள வறுமைப் பகுதிகளில் 300 குழந்தைகளுக்கு ஒரு புத்தகம் என்ற நிலைதான் உள்ளது.
இது குழந்தைகளின் வார்த்தைத் திறனையும் பாதிக்கிறது. வளமையான குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை, தன் 4 வயதிற்குள் 45 மில்லியன் வார்தைகளைக் கற்றுக்கொள்கிறது. ஆனால், வறுமைக் குடும்பத்தைச் சேர்ந்த அதே வயதுக் குழந்தை 13 மில்லியன் வார்த்தைகளை மட்டுமே அறிந்து வைத்திருக்கிறது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம், குறைந்த வருமானமுள்ள குடும்பங்களில் உள்ளவர்கள், பொது நூலகங்களையும் பயன்படுத்தத் தயங்குவதுதான். புத்தகங்களைக் கொடுக்கத் தவறினால் கட்டவேண்டிய அபராதம் போன்றவை இதற்கான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. வாசிப்பில் உள்ள இந்த ஏற்றத்தாழ்வுகளை அகற்ற சீக்கிரமே ஒரு தீர்வு கண்டறியப்படாவிட்டால், செல்வத்தினால் ஏற்படும் இடைவெளியுடன், கல்வியினால் ஏற்படும் இடைவெளியும் சமுதாயத்தில் அதிகரித்துக்கொண்டே செல்லக்கூடும். இதோடு கூட அமெரிக்க நகர்களின் வரி வருமானம் குறைந்து கொண்டே போவதால், அவை தம் நிதி வெட்டுகளில் அடிக்கடி பொது நூலகத்துக்கான நிதி ஒதுக்கலையும் விட்டு வைப்பதில்லை, குறைத்த வண்ணம் இருக்கின்றன. நூலகர்களின் எண்ணிக்கையையும் குறைத்த வண்ணம் இருக்கின்றன.
http://www.theatlantic.com/education/archive/2016/07/where-books-are-nonexistent/491282
[/stextbox]
[stextbox id=”info” caption=”சட்டபூர்வ அரசால் பயங்கரவாதத்தை அழிக்க முடியாது – ஜெர்மனியின் உள்துறை அமைச்சர்”]
மேற்காசியாவில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்குப் பிறகு பெருமளவில் அகதிகள், துருக்கி வழியாகவும், கிரீஸ் வழியாகவும் யூரோப்பின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று குடியமர்வதைப் பற்றி இந்தப் பகுதியில் பார்த்திருக்கிறோம். அதன் காரணமாக வன்முறைச் சம்பவங்கள், யூரோப்பின் பல பகுதிகளிலும் நிகழத் தொடங்கியுள்ளன என்று யூரோப்பின் பல தலைவர்கள் கவலை தெரிவித்த செய்திகளையும் பார்த்திருக்கிறோம்.
இந்தச் செய்தி ஜெர்மனியில் நடந்த அது போன்ற ஒரு வன்முறைச் சம்பவத்தைப் பற்றிச் சொல்கிறது. பதினேழு வயதான அகதி ஒருவன், தொடர்வண்டி ஒன்றின்மேல் தாக்குதல் தொடுத்து, அதிலிருந்த ஹாங்காங் பயணிகள் சிலரை கோடாரியாலும், கத்தியாலும் காயப்படுத்தியுள்ளான். இது ஒரு ‘பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கை’ என்று தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றிலும் அவன் குறிப்பிட்டுள்ளான். அவனுக்கும் ஐ.எஸ் இயக்கக்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று ஜெர்மனியின் போலீசார் விசாரித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தச் சம்பவம் பற்றி, ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் கொடுத்த பேட்டியும் இதில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. படித்துப் பாருங்கள்.
https://www.bundesregierung.de/Webs/Breg/EN/FederalGovernment/Cabinet/ThomasdeMaiziere/_node.html
[/stextbox]
[stextbox id=”info” caption=”மன்னிப்பு கேட்பதும் அரசியல் யுக்தியே”]
சீனாவுக்கு அருகிலுள்ள குட்டித் தீவான தைவானின் வரலாறு, குழப்பங்கள் நிறைந்தது. பல்வேறு பழங்குடி மக்களால் நிறைந்திருந்த இந்த நாட்டை, டச்சுக்காரர்கள் ஆக்கிரமித்தபோது, சீனாவிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டுவந்து குடியமர்த்தினார்கள். அதன் பிறகு, சீனக் கொள்ளையர்கள், ஜப்பான் என்று பலர் கை மாறிய இந்தத் தீவு நாடு, இப்போது சுயாட்சி பெற்ற நாடாக இருந்துவருகிறது. ஆனாலும் சீனா, இதைத் தன்னில் ஒரு பகுதி என்று கூறி வருகிறது.
இந்தப் போராட்டங்களுக்கு இடையில் அதிகமாக அவதிப்பட்டவர்கள், அங்குள்ள பழங்குடியினர்தான். கிட்டத்தட்ட 400 வருடங்களுக்கும் மேலாக பல பேர் கையில் அகப்பட்டுக் கொண்டு அவர்கள் அனுபவித்த துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இதற்காக, இப்போது தைவானின் அதிபர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்க, ‘வரலாற்று நீதிக் குழு’ ஒன்றையும் அமைப்பதாகக் கூறியிருக்கிறார். இது தைவானுக்கு சீனா உரிமை கொண்டாடுவதை எதிர்க்கும் ஒரு வியூகம் என்றும், தைவான் காலனியாக இருந்த ஒரு தனி நாடு என்பதை நிலைநிறுத்தும் முயற்சி என்றும் கூறப்படுகிறது.
[குறிப்புகள்: கிருஷ்ணன் சுப்ரமணியன்]