[stextbox id=”info” caption=”அமெரிக்கர்களின் பகல் கனவு”]
அமெரிக்கர்கள் தொடர்ந்து ’சீனா உடையும், நொறுங்கிச் சின்னாபின்னமாகும்’ என்று கனவு காண்பதில் நேரம் கழித்துக் கொண்டிருக்கையில், சீனா அண்ட சராசரங்களையும் எப்படி ஆள்வது என்று கனவு கண்டு கொண்டிருக்கிறது. வளர்ந்த ஏகாதிபத்தியம் தன் உந்து சக்தியை இழந்தபின் எப்படிக் காலம் கழிக்கும் என்பதற்கு அமெரிக்கா உதாரணமென்றால், வளர்ந்து உலக அதிபத்தியத்தைப் பிடிக்க முயலும் ஏகாதிபத்தியம் எப்படி நடந்து கொள்ளும் என்பதற்குச் சீனா உதாரணம் எனலாம். இரண்டுமே தொடர்ந்த அரசியல், ராணுவ, பொருளாதார சூதாட்டத்தில்தான் அதிகாரத்தை வென்று/இழந்து, மறுபடி வென்று வருகின்றன, வந்தன. ஆனால், எதிர்காலம் எப்படி இருக்கும் என்று இரு நாட்டிலும் ‘நிபுணர்கள்’ எதிரெதிர் முடிவுகளுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இங்கே ஒரு அமெரிக்கரின் பகல் கனவு.
http://nationalinterest.org/feature/china-will-probably-implode-16088
[/stextbox]
[stextbox id=”info” caption=”சீனாவின் பிரும்மாண்டப் பொய்மைகள்”]
இந்தியாவை கடும் ஊழல் நிறைந்த நாடு என்றும், அதிலும் தமிழகம் உச்சக்கட்ட ஊழல்கள் நிறைந்த சில மாநிலங்களில் ஒன்று என்றும் நாம் கருதுகிறோம். நம் இந்திய அரசியலாளரும், பெரு நிதிக் கிழார்களும் வருமானத்தையும், சன்மானத்தையும் ஒளித்துக் கருப்பாக்கி அன்னிய நாட்டு வங்கிகளில் பதுக்குவதில் வல்லவர்கள். ஒரு சிலர் உள்நாட்டிலேயே பினாமிப் பெயர்களில் சொத்துக்களை வாங்கிக் குவித்திருப்பதில் மிகவுமே வல்லவர்கள். இதெல்லாம் நமக்கு வதந்திகளாகத்தான் தெரியும். என்றாலும் அவ்வப்போது ஊடகத்தின் மீது இந்தத் திருட்டுக் கும்பலுக்கு இருக்கும் கடும் கட்டுப்பாட்டை எல்லாம் மீறி நிஜம் கசிந்து விடுகிறது. ஆக, இந்தியாவின் அதிகாரக் கும்பல் ஒரு பெரும் திருட்டுக் கும்பல் என்று நாம் நம்புகிறோம்.
ஆனால், உலகத்தின் பெரும்பாலான அதிகாரக் கும்பல்கள் இப்படித்தான் திருடர்களின் கொட்டாரமாக இருக்கின்றன. இது நமக்கு ஒருவாறான ஊகமாகத் தெரியும். அதை நாம் அதிகம் கவனிப்பதில்லை. நமக்கு நம்மைக் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதற்கே நேரம் போதவில்லை, அதையெல்லாம் யார் கவனிப்பது ?
நம்மைப் போல, தம்மையே சவுக்காலடித்துக் கொண்டு துன்பத்தில் மகிழ்வைத் தேடாமல் யூரோப்பியருக்கும், அமெரிக்கருக்கும் பொழுது போக வேறு கேளிக்கைகளையே நாடுவது ஒரு பண்பாடு. அந்தக் கேளிக்கையில் ஒன்று எப்படி ஆசிய, ஆஃப்ரிக்க, லத்தின் அமெரிக்க மக்களின் பண்பாடுகளை ஏளனம் செய்வது, அழிக்க முயல்வது, அந்த மக்கள் நடுவே எப்படிப் பிரிவினை வாதங்களை விதைப்பது என்று தொடர்ந்து யோசிப்பதோ, அதைச் செயல்படுத்துவதோ ஆகும். அந்த நாட்டு மக்களுடன் தன்னார்வல அமைப்புகள், மத அமைப்புகள், பல்கலைகள் வழியாக ஆழ்ந்த உறவு கொண்டும், தம் நாட்டுத் தனியார் அறக்கட்டளைகளின் அறமல்லாத முயற்சிகள் வழியேயும், அரசுகளின் ஏகாதிபத்திய முயற்சிகளுக்குத் துணையாக நிற்கும் சில மத நிறுவனங்களின் பெரும் நிதித் திரட்டிலிருந்தும், மேற்படி நிலப்பரப்புகளில் வசிக்கும் தமது கைக்கூலிகளுக்குச் சன்மானமாகக் கொடுப்பது எப்படி என்று தொடர்ந்து யோசிப்பது ஒருவகைக் கேளிக்கை. அவர்கள் மூலம் பிரிவினை வாதம், இனக்குரோதங்கள், மதச் சண்டைகள் என்று பலவகை விஷச் சிந்தனையைப் பரப்புவது இன்னொரு விதக் கேளிக்கை.
இவை பற்றி அறிவது இந்த வகைப் பண்பாட்டுப் போர்முறையில் ஒரு இலக்காகப் பயன்படுத்தப்படும் நமக்கு இவர்களின் கேளிக்கைகளிலிருந்து ஒதுங்கி நின்று தப்பிப் பிழைத்திருக்கப் பயன்படும்.
பல வெள்ளையரல்லாத நாடுகள் பற்றி இப்படி இழிபிரச்சாரம் மேற்கொள்ளும் மேற்கின் ஊடகங்கள் எழுதுவன எல்லாமே பொய் என்று நாம் ஒதுக்கவும் தேவை இல்லை. எப்படி இந்திய ஊடகங்களின் பெருவாரிச் செய்திகள் பொய்யானாலும், சிறு பங்கு உண்மை நமக்குக் கசிந்து கிட்டுகிறதோ, அதே பாணியில் உண்மை மேற்கின் ஊடகங்களிலிருந்தும் நமக்குக் கிட்டும். அந்த உண்மைகளை நாம் எப்படி வைக்கோல் போரில் உள்ள ஊசியைக் கண்டெடுப்பது போலக் கண்டெடுக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது சூட்சுமம்.
உதாரணமாக, சீனா என்ற ஒரு உலக ஆதிக்க சக்தி பற்றி மேற்கு என்னென்னவோ வதந்திகளை வெகுகாலமாகப் பரப்பி வந்திருக்கிறது. அவற்றில் சில பல நிஜமானவை என்பதை அந்நாட்டிலிருந்து வெளிநாட்டுக்குக் குடியேறியவர்களோ, அல்லது ஓடி வந்தவர்களோ புத்தகங்கள், கட்டுரைகள், ஊடக பேட்டிகள் ஆகியன மூலம் சொல்லி வருகிறார்கள். சில புத்தகங்கள் சீனாவிலேயே வெளியிடப்பட்டு வெளியில் கிட்டுகின்றன.
இவையெல்லாம் எத்தனை நம்பகமானவை என்பதை நாம் உறுதியாகச் சொல்ல முடியாது என்றாலும், ஏராளமான சான்றுகள் கிட்டும்போது நாம் அவற்றில் ஒரு பங்கையாவது நம்பலாம் என்று தோன்றுகிறது. தகவல்களில் பிழை இராது, ஆனால் எப்படி அவற்றைச் சூழல், வரலாறு, பண்பாட்டு நியாயங்கள் ஆகிய ஒரு கொத்துக் காரணங்களின் பின்னணியில் புரிந்து கொள்கிறோம், புரிதலில் யாருடைய நலனைக் காப்பது நமக்கு முக்கியமாக இருக்கிறது என்பனவெல்லாம் சில அடிப்படைக் கூறுகள். அப்படிப்பட்ட சில செய்திகளில் சீனாவில் எங்கும் பரவி இருக்கும் கடும் ஊழலும், அதிகாரக் கூட்டத்தின் தலைவிரித்தாடும் அக்கிரமச் செயல்களும் பற்றிய செய்திகளும் உண்டு. இவை நமக்குத் தொடர்ந்து கிட்டி வருவதற்குக் காரணமாக மேற்கத்திய ஊடகங்களையும், அரசுகளின் வழக்கமான திருகுதாள வேலைகளையும் சொல்லலாம்.
இவற்றுக்கு ஒரு சான்றாகச் சீனச் செய்தி ஊடகங்களிலேயே அவ்வப்போது அரசு ஊழியருக்குக் கிட்டும் தணடனை பற்றிய செய்திகள் உள்ளன. இத்தகைய அதிகாரத் துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு, கடுங்காவல், கடும் உழைப்பு முகாம், தூக்குத் தண்டனை என்று பல கடும் தண்டனைகளை அவ்வப்போது கொடுத்து வருகிறது சீனா.
இங்கு கொடுக்கப்படும் ஒரு கட்டுரையில் சீன அதிகாரிகள் என்னவொரு பிரும்மாண்டமான ஊழல் அமைப்பைக் கட்டி இருக்கிறார்கள் என்பதற்குச் சில சான்றுகள் கொடுக்கப்படுகின்றன. இதை எழுதியவர் சீனப் பிரஜைதான். இன்னமும் சீனாவில் வசிப்பதாகத் தெரிகிறது. நாவலாசிரியரும், கட்டுரையாளரும் கூட. இவர் ஓரளவு சோக நகைப்போடும், ஆழ்ந்த துயரோடும் இவற்றை எழுதுவதாகவும் தோன்றுகிறது. அதை வைத்து இவர் மேலை நுகர்வோரின் துய்ப்புக்காக இதை எழுதவில்லை, தன் தேச மக்களின் விழிப்பு நடக்கட்டும் என்று எழுதுவதாக நாம் கருத இடமிருக்கிறது.
எதிர்க் கட்சிகளோ, மாற்றுக் கருத்துகளோ அடியோடு அழிக்கப்படும் ஒற்றைக் கருத்தியல், ஒற்றைக் கட்சி ஆட்சி முறையில் இப்படிப்பட்ட பிரும்மாண்ட ஊழல் நிலவுவதில் அதிசயம் இல்லை. தமிழகத்தில் நிலவும் ஒற்றைக் கருத்தியல் என்பது திராவிடியம் என்ற கொடும் விஷம். அது ஐம்பதாண்டுகளில் தமிழகத்தில் பெரும் சுரண்டலை நிறுவி இருக்கிறது. ஒரு சிறு மாநிலத்தில் இத்தனை கொள்ளை அடிக்க முடிந்ததென்றால், சீனாவைப் போன்ற பிரும்மாண்டமான நிலப்பரப்பில் ஒற்றை அதிகாரமாக இருக்கும் கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள் என்னவொரு பிரும்மாண்டமான ஊழல் அரசை நிறுவி இருப்பார்கள் ?
அடி முடியைக் காண முடியாத பேருரு சிவன் என்று இந்துப் புராணங்கள் சொல்கின்றன, அதே போல உலகெங்கும் நிலவிய கம்யூனிஸ்டு கட்சிகளின்/ ஆட்சிகளின் அழிப்பு சக்திக்கும், ஊழல்களுக்கும், அராஜகத்திற்கும் அடி முடி காண முடியாத பேருரு இருப்பது தெரிகிறது.
சீனக் கம்யூனிஸ்டு கட்சியின் நாடு தழுவிய பேரதிகாரத்தின் சிப்பந்திகள் என்னவொரு கொள்ளை அடித்திருக்கிறார்கள் என்பதைச் சில சான்றுகள் மூலம் இந்தக் கட்டுரை பதிவு செய்கிறது. படித்துப் பாருங்கள்.
வெறும் செய்தி என்ற அளவை எல்லாம் தாண்டி புராணங்கள், பழங்கதைகள் ஆகியவற்றின் பிரம்மாண்டமான கதை சொல்லல் அளவை எல்லாம் தாண்டிய பேருரு என்பதால் இதை வருணிக்க ஒரு புதுச் சொல்தான் உருவாக்கப்பட வேண்டும் என்று கட்டுரையாளர் தன் கருத்தை முதலிலேயே சொல்கிறார்.
‘அல்ட்ரா அன்ரியல்’ என்ற ஒரு வருணனை அது. ‘அதீத நிஜமல்லாமை’ (அல்லது பிரும்மாண்டப் பொய்மை ) என்று நாம் இதை மொழி பெயர்க்கலாமோ?
http://lithub.com/modern-china-is-so-crazy-it-needs-a-new-literary-genre/
[/stextbox]
[stextbox id=”info” caption=”இந்தியாவில் எழும் தனியார் நகரங்கள்”]
முந்தைய குளக்கரைச் செய்தியை படித்த உடன் ஊழலில் சீனாவுக்கு இந்தியா குறைந்ததா என்று நம் ஊர் இடது சாரிகள் உடனே ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விடுவார்கள். தம் சொந்த நாட்டைத் தாமே மட்டம் தட்டிக் காட்டுவதன் மூலம் தம் புரட்சி சித்தாந்தத்தை நிரூபித்து விட்டதாகக் குதூகலப்படுவார்கள். அவர்களையும் கொஞ்சம் குஷிப்படுத்தலாமே என்று இந்தச் செய்தி.
இந்தியாவில் அனைத்து இடங்களிலும் நமது அரசுகளின் வழக்கமான செயலற்ற நிலை, அல்லது தண்டமான நகரப் பராமரிப்பு வேலைகள் என்று எத்தனையோ ஊழல்களோடு வாழ இந்தியராகிய நாம் கற்றுக் கொண்டு சில நூறாண்டுகள் ஆயின. ஆமாம், நம்மைச் சுரண்டுவது காலனிய காலத்து அராஜக அரசு எந்திரமாகச் செயல்பட்ட அமைப்புகள். இன்று நம்மவரின் கீழ் நம் குருதியை மாந்திக் குடிப்பதில் இவையே திறம்பட்டவையாக உள்ளன.
ஆனால், சில இடங்களில் மக்களும், தனியார் நிறுவனங்களும் மொத்த நகரத்தையே தம் பொறுப்பில் எடுத்துக் கொண்டு, தமக்கான குடியிருப்புகள், சாலைகள், மின் சக்தி விநியோகம், குடிநீர் விநியோகம், போக்குவரத்து வசதிகள் என்று நிறுவத் துவங்கி இருப்பதாகச் செய்தி கிட்டுகிறது. அப்படிப்பட்ட ஒரு நகரம் குருகாவ்ன்.
தலை நகரான புதுதில்லியின் எல்லையில் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் விவசாயப் பாழ் நிலங்களில் கட்டப்பட்ட இந்த நகரம், முழுக்கத் தனியார் நிறுவனங்களால் உருவமைக்கப்பட்டுள்ளது.
துரிதமாக வளர்ந்து விட்ட இந்த நகரம் அரசு அமைப்புகளின் அங்கீகாரத்துக்காக எல்லாம் காத்திருக்காமல் கட்டப்பட்டு, இயங்கத் துவங்கி, சுமார் பத்து லட்சம் பேர் குடியேறி, பல்லாண்டுகளாக வசித்தும் வருகிறார்கள். ஆனால், மற்ற நகரங்களில் அரசு அமைப்புகள் நடத்துவதில் என்னென்ன பிரச்சினைகள் எல்லாம் உண்டோ அவை இங்கும் இருக்கின்றன என்று இந்த அறிக்கை சுட்டுகிறது.
கட்டுரை பிரசுரமானது பிரிட்டிஷ் பத்திரிகையான த கார்டியன் என்ற செய்தித்தாளில். படித்துப் பாருங்கள்.
[stextbox id=”info” caption=”உலக ஏகாதிபத்தியத்தைக் கொட்டும் தேள்கள்”]
யூரோப்பியருக்குச் சமீபத்தில்தான் உறைக்கத் துவங்கி இருக்கிறது – ஆசியாவிலும், ஆஃப்ரிக்காவிலும் தேள் கொட்டினால் தமக்கும் விஷம் ஏறும் என்பது. இந்தத் தேள் சாதாரணத் தேளும் இல்லை. இந்தியாவை ஆயிரம் ஆண்டுகள் முன்பே கொட்டிய தேள். பிறகு, யூரோப்பியத் தொற்று நோய் இந்தியாவைப் பீடித்துக் கொண்ட போது இந்தத் தேள் சிறிது வேலை செய்யாமல் இருந்தது.
அரபு/ துருக்கிய/ மங்கோலிய ஏகாதிபத்திய முயற்சிகள் இஸ்லாமிய முகமூடியோடு வந்து கொட்டிய தேள்கள். இன்று அந்த இன அடையாளங்கள் தேவைப்படாமல் நேரடியாக இஸ்லாமிய ஏகாதிபத்திய முயற்சியாகவே யூரோப்பில் எங்கும் தாக்குதல்கள் நேர்கின்றன. இவை யூரோப்பியர் முன்பு விதைத்துப் போன விஷ மரங்களின் கனிகள்தாம் என்பது ஒரு பக்கம் உண்மைதான், என்றாலும் யூரோப்பியர் இந்த விளைச்சலை எதிர்பார்க்கவில்லை என்பது தெளிவு.
கீழே உள்ள இரு சுட்டிகளில் எப்படி காஸொவோ என்ற சிறு நிலப்பகுதி இன்று இஸ்லாமியத்தின் ஒரு பயங்கரவாதக் கிளையின் ஆதிக்கத்தின் கீழ் வந்திருக்கிறது என்பதையும், இன்னொன்று பாஸ்னியா என்கிற மிதவாத இஸ்லாமியத்தின் முன்னாள் உறைவிடம் இன்று ஐஸிஸ் என்கிற கொடுங்கோல் இஸ்லாமியத்தின் கீழ் மிதிபடுகிறது என்பதையும் சொல்கின்றன.
காஸொவோவில் பயங்கரவாதத்தை விதைப்பது உலகெங்கும் வஹ்ஹாபியம் என்ற கொடுங்கோல் இஸ்லாமியத்தைப் பரப்பப் பெரு முயற்சி செய்து வரும் சௌதி அரேபிய மதக் குருமார்கள்தான் என்கிறது நியுயார்க் டைம்ஸ். அந்த மதகுருமார்களுக்குப் பின்னே சௌதி அரசின் ஏராளமான எண்ணெய் வளத்தில் கிட்டிய நிதி நிற்கிறது.
பாஸ்னியாவில் ஆள முயல்வதோ, சமீபத்துக் காளான், ஐஸிஸ் என்னும் கொடுங்கோல் முயற்சி என்று டெர் ஷ்பீகல் எனும் ஜெர்மனியப் பத்திரிகை தகவலளிக்கிறது.
http://www.spiegel.de/international/europe/islamic-state-presence-in-bosnia-cause-for-concern-a-1085326.html
[/stextbox]