செயற்கை நுண்ணறிவு (AI)

நாம் செயற்கை நுண்ணறிவு என்பதை சரியாகத் தான் அணுகிக் கொண்டிருக்கிறோமா என்று அடிப்படைகளையே அசைத்துப் பார்க்கின்ற எதிர்த் தரப்புக் கருதுகோள் உள்ளது. மனிதனின் மூளை ஒரு கணினியைப் போன்றது என்று எங்காவது யாராவது சொல்லக் கேட்டிருப்பீர்கள். இது உண்மையான கூற்றுத்தானா என்பதே ஒரு சாரார் எழுப்பும் கேள்வி. கணினியானது, அறிந்து கொள்ளும் அனைத்தையும் தகவல்களாக (“பைட்டுகளாக”) மாற்றிச் சேமித்து, தேவைப்படும் போது அணுகி வெளிக்கொணர்கிறது. ஆனால், நமது மூளை, இப்படித் தகவல்களைச் சேமித்து வைப்பதில்லை, அது அறிந்து கொள்ளும் செய்திகளுக்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே இருக்கிறது என்பது மாற்றுத் தரப்பு. நாம் கேட்ட ஒரு கதையை நாம் வேறொருவரிடம் மீளச் சொல்லும் போது ஒவ்வொரு முறையும் சிற்சில தகவல்கள் மாறூவது, இன்னும் இது போன்ற சில சோதனைகளைக் கொண்டு இப்படிக் கருதுகிறார்கள்.