மகரந்தம்


[stextbox id=”info” caption=”கிராஃபிக் நாவலில் புதுமை”]

Logicomix_cover

சமீபகாலத்தில் அமெரிக்கப் புத்தகப் பதிப்புலகில் பரவலாகவும், லாபகரமானதாகவும் கூட ஆகி வரும் வகைப் பிரசுரம் க்ராஃபிக் நாவல் எனப்படும், சித்திர நாவல் வகை. இந்தச் சித்திர நாவல்களில் பெருமளவும் ழானர் நாவல்கள் அல்லது வகைப்படுத்தப்பட்ட நாவல்களிலேயே முடங்கி விடுகின்றன. சித்திர நாவல் என்பதே ழானர்தானே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அவற்றுள்ளும் இலக்கியம் என்ற பெரும் ஆற்றில் கலக்கக் கூடிய திராணி உள்ள நாவல்கள் சில உண்டு. பெருமளவும் நாயக வழிபாட்டை மையமாகக் கொண்ட அதிபுனைவு நாவல்களாகவே இருக்கிறன. ( தோர், ஸ்பைடர்மான், ஃபாண்டாஸ்டிக் ஃபோர், அவெஞ்சர்ஸ் இத்தியாதி நாவல்கள் இவை). இவை தவிர சமீபத்துப் பத்தாண்டுகளில் வேறு வகை சித்திர நாவல்கள் வரத் துவங்கி உள்ளன. இவற்றில் சில வாழ்க்கைக் குறிப்பு நாவலகள், சில வரலாற்று நாவல்கள்- வரலாறு என்றால் கத்தி, குதிரை, படையெடுப்பு, வீரசாகசங்கள் என்றில்லை. ஒரு நாவல் பெர்ட்ரண்ட் ரஸ்ஸலும் விட்கென்ஷ்டைனும் பிரிட்டிஷ் சிந்தனை மரபில் ஒரு காலகட்டத்தில் எப்படி பரஸ்பரம் கருத்துப் பகிர்ந்து கொண்டார்கள், வைட் ஹெட் எனும் தத்துவாளரும், ரஸ்ஸலும் எப்படி இணைந்து சில புத்தகங்கள் எழுதினார்கள் என்பன போன்ற சிந்தனை வளர்ச்சி வரலாறை மையமாகக் கொண்ட புத்தகம்.

அந்தப் புத்தகத்தைப் பற்றிய விவரங்களை இங்கே காணலாம்:
இந்தப் பத்தாண்டுகளில் அமெரிக்கப் பொது நூலகங்களில் கூட இத்தகைய கிராஃபிக் நாவல்கள் வாங்கப்படுவது கூடி வருகிறதால், இவற்றுக்கென்று தனியாகவே அலமாரிகள் அனேக நூலகங்களில் காணப்படுகின்றன. இந்த அலமாரிகளில் காணப்படுவன பெருமளவும் ஜப்பானியப் பிரசுரங்கள். மாங்கா எனப்படும் நாவல் வகைகள்.
ஜப்பானியப் பிரசுரகர்த்தர்கள் இங்கிலிஷ் மொழிபெயர்ப்புகளைக் கொணர்ந்து உலகப் புத்தகச் சந்தையில் கணிசமான வருமானத்தைப் பெறத் துவங்கி இருக்கிறார்கள். இந்தச் சந்தையில் மிகக் குறைவான இடத்தைப் பெறுவன இந்தியப் பிரசுரங்கள். அதில் நாம் அதிகம் வியப்புறவும் இடமில்லை. பொதுவாகவே உலகப் புத்தகச் சந்தையில் இந்தியப் புத்தகங்களின் பங்கெடுப்பு, பங்களிப்பு இரண்டுமே மிகக் குறைவானவைதான். இத்தனைக்கும் உலகின் இரண்டாவது பெரும் ஜனத்தொகை கொண்ட நாடு நம்முடையது. எத்தனையோ துறைகளில் பின் தங்கி இருப்பது போலவே இதிலும் நாம் மிகப் பின் தங்கி உள்ளோம்.
ஆனால் உலக நாடுகளின் நூலகங்களில் இந்தியப் புத்தகங்கள் குறைவாக இருப்பது ஒரு வகைப் பிரச்சினை என்றால், இந்திய நூலகங்களிலேயே புத்தகங்கள் குறைவாக இருப்பதும், அனேகப் பொது நூலகங்கள் மோசமான நிலையில் இருப்பதும் என்ன வகை சேதங்களை நம் மக்களிடமும், பண்பாட்டிலும்,ஏன் பொருளாதார/ சமூக அமைப்புகளிலும் கொணர்கின்றன என்பதை எப்படி எப்போது நாம் அறியவும், உணரவும் துவங்கப் போகிறோம்?  அனைத்திலும் அரசியல், ஊழல் என்பது நமக்குப் பழகி அவை குறித்து நாம் மெத்தனத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் என்னவொரு அவலம்? அரசியல், ஊழல் என்பனவற்றைத் தாண்டியும் செயல்திறன், அமைப்பு நேர்த்தி என்பன சாத்தியம் என்பதைப் பல மேலை நாடுகள் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. அது நமக்கு ஏன் சாத்தியப்படுவதில்லை என்பது இந்தியருக்கு விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது.

[/stextbox]


[stextbox id=”info” caption=”பதின்மவயதினருக்கான கிராஃபிக் நாவல் “]

tween

புத்தக மதிப்புரை என்பதில், கடினமான சொற்களைப் பிரயோகித்து, ‘ஆழமாக’ யோசித்து, ருசிக்கவியலாத கருத்துகளைக் கசப்பு மருந்து போலக் கொடுப்பது என்பது ஒரு வழி முறை. அது தமிழில் கொஞ்சம்தான் கிட்டும். இங்கிலிஷில் பற்பல வகைகளும் கிட்டுவதால், இது ஒரு நன்கு அறியப்பட்ட வழி முறையாகவே கூட இருக்கிறது. இன்னொரு எல்லைக் கோட்டில், எந்தப் புத்தகத்தையும் சர்க்கரைப் பாகில் ஊறவைத்த சொற்களால் அபிஷேகம் செய்து, பஞ்சாமிர்தமாக வாசகர்களுக்குக் கொடுப்பது. இந்த வழிமுறையில், எல்லாப் புத்தகங்களும் அற்புதப் படைப்புத் திறன் கொண்டவர்களால் எழுதப்படுவன என்ற பிரமையும், எந்தப் புத்தகமுமே வாசகர் என்ற ஆட்டு மந்தைக்குக் கொடையாக அளிக்கப்படுவதான பாவனையும் நிலவும்.

இது தமிழில் நிறையவே உண்டு. தினசரித் தாள்களில் வரும் பெரும்பாலான புத்தக மதிப்புரைகள் இந்த வகை. அனைத்தையும் பாராட்ட வேண்டும் என்றால் அதற்குப் பெயர் மதிப்புரை இல்லை, அது வெற்றுப் புகழ்ச்சி என்பதை பத்திரிகையாளர்களோ, பதிப்பாசிரியர்களோ அறியவில்லையா என்றால், தனி நபரளவில் அறிந்திருப்பார்கள். அமைப்பளவில் அப்படி ஓரு தாராளம் ஏன் வருகிறது என்பதுதான் எளிதில் விளக்க முடியாத விஷயம்.
இந்தக் குறிப்பில் கொடுக்கப்படுவது நிஜமாகவே வித்தியாசமான வகை மதிப்புரைக்கான சுட்டி. இது மேற்படி சட்டகங்களில் சிக்காத வகை. இதில் சொற்களுக்கு ஈடான எடை, சித்திரங்களுக்கு உண்டு. சித்திரங்கள் சிலவிடங்களில் சொற்களே இல்லாமலே கூடக் கருத்தைக் கொடுக்கின்றன. ஆனால் இப்படி ஒரு புத்தக மதிப்புரையைச் சித்திரங்கள் மூலம் கொடுக்கும் முறை ஏன் கையாளப்பட்டது என்றால், பதில் சுலபமானதுதான். மதிப்புரை பெறும் புத்தகம், ழானர் என்று தனியே வகைப்படுத்தப்படும் நாவல்களையே கொண்ட க்ராஃபிக் நாவல்களில் ஒரு குறிப்பிட்ட பகுதி. [இது கணிசமான பகுதி என்பதற்கான சமூகக் காரணங்களைப் பிறிதொரு சமயம் பார்க்கலாம்.]
பதின்ம வயது இளைஞர்களின் மன அலைப்புறுதல்களைப் பற்றியனவாகவோ, வயது வந்தவர்களின் உலகை அவர்கள் விமர்சனங்களோடு அணுகத் துவங்கும் நிலையில் அவர்கள் தம்மையும் எப்படி பிரித்தறியத் துவங்குகிறார்கள் என்பதையும் சித்திரிக்கும் நாவல்கள் இவை. இந்த வகை நாவல் ஒன்றை இந்தக் குறிப்பில் கிட்டும் சித்திர விமர்சனம் எடுத்துக் கொள்கிறது. சிக்கலான சொற்களாலும், கடினமான தர்க்கத்தாலும் அணுகத் தேவை இல்லாத வகைப் புத்தகங்கள இவை என்பது ஒரு காரணம், இன்னொன்று இப்புத்தகங்கள் குறிப்பால் உணர்த்தும் கருத்துகள் அந்த வயதினரை உடனடியாகச் சென்று சேர்பவை என்ற காரணம். விமர்சனம் அதே வழிமுறையைப் பின்பற்றினால் என்ன ஆகும் என்று பார்க்கும் நோக்கம் மூலாதாரக் காரணமாக இருக்கலாம்.
ஒரு சிற்றூரில் வாழும் இரு பதின்ம வயதுப் பெண்கள், இன்னும் வயதுக்கு வராதவர்கள், சூழலில் இருக்கிற, வயதுக்கு அப்போதே வந்த பெண்கள்/ பையன்களிடையே எழும் உறவுச் சிக்கல்களோடு, தம் பெற்றோரிடயே ஏற்படும் உறவுச் சிக்கல்கள், பிற வயதானவர்களிடையே எழும் பல உறவுச் சிக்கல்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதே நாவலின் மையம். இந்த விமர்சகர் வழக்கமான கட்டுரை ஒன்றின் வழியே இந்த நாவலை அணுகாமல், தானே சித்திரங்கள் வரைந்து, அதுவும் புத்தகத்தில் சைத்ரிகர் பயன்படுத்திய அதே பாணியைப் பின்பற்றிப் படங்கள் வரைந்து தன் விமர்சனத்தை அப்படங்கள் வழியே கொணர்கிறார். இனி விமர்சனத்தைப் படித்துப் பாருங்கள், இல்லை இல்லை, பார்த்துப் படியுங்கள்.

URL
[/stextbox]


[stextbox id=”info” caption=”சித்திரங்களின் வழியே புத்தக விமர்சனம்”]

AldenReview01

சித்திரங்கள் வழியே புத்தக விமர்சனம் எழுதுவதை லாஸ் ஏஞ்சலிஸ் ரெவ்யு ஆஃப் புக்ஸ் என்கிற பத்திரிகை தொடர்ந்து ஊக்குவிப்பதாகத் தெரிகிறது. இந்த வகை விமர்சனத்தில் இன்னொன்றைப் பார்ப்போம்.
ஒரு கிராஃபிக் புத்தகத்தை அணுகுவதில், உள்ளடக்கத்தில் கதை என்பதையோ, கரு என்பதையோ கருதிப் பேசுவதை பிரதானப்படுத்தாமல், அதில் வரையப்பட்ட சித்திரங்களின் தரம், தன்மை, பொருத்தம், அளிப்பின் நேர்த்தி ஆகிய தொழில் நுணுக்க விவரங்களை நோக்கியே எழுதப்பட்டிருக்கிறது என்பது இந்த விமர்சனத்தின் தனித்தன்மை. அதன் வழியே ஓவியத்தைப் பயிலாத, வெறும் பார்வையாளராக மட்டுமே அணுகும் என் போன்றவரும், மாறாக தொழில் நுட்ப அறிவும், ஓவியக் கலையும் தெரிந்தவருமே கூட இந்தப் புத்தகத்தைப் பார்ப்பதை இன்னொரு கோணத்தில் கொண்டால் எத்தனை மாறுபாடான புரிதல் கிட்டுகிறது என்பதை அறிய வழி கிட்டுகிறது.
ஓவியத்தில் பயன்படுத்தப்படும் தூரிகை, அல்லது கருவி- இந்தப் புத்தகத்தில் அது வரையப் பயன்பட்ட பென்ஸில்- புத்தகத்தை எத்தனை தூரம் பாதிக்கும் என்பதை முதலிலேயே சுட்டுகிறார் விமர்சகர். ஆம், இந்த விமர்சகரும் தானே ஓவியம் வரைந்து விமர்சனத்தை அதன் வழியே கொடுக்கிறார். பென்ஸில் கோடுகளைத் தடியாகவோ, மெலிதாகவோ வரைவது எப்படி பார்வையையும், நம் உணர்தலையும் பாதிக்கிறது என்று சுட்டித் துவங்குகிறார். அது தவிர பூர்த்தி செய்யப்பட்ட ஓவியங்கள், அழிக்கப்பட்ட கோடுகள், அழித்ததை மறைக்காமல் காட்டும் ஓவியங்கள், பூர்த்தியாகாமல் விடப்பட்டாலும் பார்வைக்குக் கொடுக்கப்படும் சித்திரங்கள் என்று பலவகை உத்திகளால் புத்தகத்து ஆசிரியர் தன் குறிக்கோளை எப்படி எட்டுகிறார் என்பதை நமக்கு விளக்குகிறார்.
இதுதான் எத்தனை வித்தியாசமான விமர்சனம் என்று பார்ப்பதைத் தாண்டி நாம் பல விஷயங்களைக் கற்கிறோம். அதே நேரம் புத்தகமும் நுட்பமாகவே விமர்சிக்கப்படுகிறது என்பதையும் கவனிக்கிறோம்.
[/stextbox]


[stextbox id=”info” caption=”பிரபஞ்ச ஒலி”]

maddening

செவிச் செல்வம் என்றே தமிழில் அழைக்கிறார்கள். பழந்தமிழ் இலக்கியமாகட்டும், பண்டை இந்திய இலக்கியமாகட்டும் எல்லாமே துவக்கத்தில் கேள்வி ஞானமாகவே பரிமாறப்பட்டிருக்கிறது, காலந்தோறும் கடத்தப்பட்டு தலைமுறைகளுக்குக் கருவூலமாக இருந்திருக்கின்றது. சொற்களில் பிழையற்ற கடத்தல், வெறும் கேள்வி ஞானத்தால் மட்டுமே நடப்பது என்பது அத்தனை சுலபமல்ல. கடும் தரக் கட்டுப்பாடு இருந்திருக்க வேண்டும். ஒலியைப் பிரதானமாகக் கொண்ட தத்துவங்கள் இந்திய மரபில் நாடெங்கும், தமிழர் நடுவேயும் இருக்க இந்தத் தரக்கட்டுப்பாடு வெகு காலம் தொடர்ந்தது ஒரு முக்கியக் காரணம். பிரணவ மந்திரம் என்று நாம் அறியும் ஒரு கருத்துடைய மையத்தில் உள்ளது ஒரு ஒலி. ஒலிகளுக்கெல்லாம் மூலாதாரமான ஓர் ஒலி ஓம் காரம் என்றும், பிரபஞ்ச சிருஷ்டிக்கு முந்தையது அந்த ஒலி என்றும் நமக்கு பன்னெடுங்காலமாகச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறதில்லையா?
சமீபத்தில் பிரபஞ்சமெங்கும் ஓர் ஒலி கேட்கிறது, அதை அறிவியலாளர்கள் கேட்டும் இருக்கிறார்கள் என்று ஒரு தகவல் உலகச் செய்தித் தளங்களில் பரப்பட்டது, ஆனால் இந்தியர்கள் இதுதான் எங்களுக்கு ஏற்கனவே தெரியுமே என்று மார் தட்டத் துவங்கு முன்னரே இந்தச் செய்தி தவறானது, தகவல் அலசலில் ஒரு பிழையால் இப்படி ஓர் முடிவு கிட்டியது என்று அறிவியலாளர்கள் மறுத்ததாகத் தகவல் வெளி வந்தது.
இப்படி ஓர் பிரபஞ்ச ஒலியைப் பற்றிய தகவல் அல்ல இந்தக் குறிப்பைத் தூண்டிய சுட்டியில் இருக்கும் செய்தி. ஆனால் கிட்டத் தட்ட அதே போன்ற ஆனால் புவியுலகில் எங்கும் கேட்கிற ஓர் ஒலி பற்றியது. சமீபத்தில், மேற்குலகில் பற்பல இடங்களில், பல தனி நபர்கள் நாளில் பல நேரமும் தம்முடைய சூழலில் ஓர் ஒலியை, ஒரு தொனியை, ஒரு இடைவிடாத கீழ் ஸ்தாயியில் உள்ள ரீங்கரிப்பைக் கேட்பதாகச் சொல்லத் துவங்கி இருக்கிறார்கள் என்று இந்தச் சுட்டியில் உள்ள சிறு கட்டுரை சொல்கிறது. ’ லோ ஹம்’ என்று இங்கிலிஷில் இதை வருணிக்கிறார்கள். [குறிப்பை எழுதும் பத்தியாளரும் இப்படி ஓர் ஒலியை அனேக நேரம் கேட்கிறார் என்பதையும் சொல்ல வேண்டும்.]
இந்த ஒலியைக் கேட்பவர்கள் சிலருக்கு இந்த ஒலி சீக்கிரமே பெரும் தொல்லையாகி விடுகிறது, மன உளைச்சலையும், சகிப்பின்மையையும் தூண்டி வாழ்வை நரகமாக்குகிறது என்று தெரிய வந்திருக்கிறதாம். சில உளைச்சல்பட்டவர்கள் தம் சுயக் கட்டுப்பாட்டை இழந்து, துப்பாக்கியை ஏந்தி தம் சூழலில் உள்ள பலரைக் கொல்லவும் முயன்றிருக்கிறார்கள் என்றும் இக்கட்டுரை சொல்கிறது. இன்னொரு தளத்தில், பெரும் திமிங்கிலங்களும், டால்ஃபின் எனப்படும் வகைக் கடல் வாழ் உயிரினங்களும் கூட்டமாகக் கரையில் வந்து ஒதுங்கி உயிரை விடுவதைப் பற்றிய செய்திகள் நமக்குக் கிட்டத் துவங்கி இருக்கின்றன. கடலில் பல நாடுகளின் போர்க்கப்பல்கள், மேலும் இதர வணிகக் கப்பல்களிலிருந்து வெளிப்படும் பல வகை எந்திர/ தகவல் பரிமாற்றக் கருவிகளின் அல்லது தேடல் கருவிகளின் ஆழ்ந்த ஒலிகளால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதால் இந்த ஆழ்கடல் வாசிகளான உயிரினங்கள் நிலை தடுமாறி கரை சேர்ந்து உயிரிழக்கின்றன என்று ஒரு தரப்பு வாதம் இருக்கிறது.
இந்த ஹம் அல்லது ரீங்கரிப்பு மிகக் கீழ் ஸ்தாயியில் இருப்பதால், ஒலி அடங்கிய நேரங்களிலேயே துல்லியமாகக் கேட்க முடிகிறதாம். இதைத் துவக்கத்தில் மருத்துவர்கள் டின்னிடஸ் என்கிற செவிப்புலனின் பழுதைச் சார்ந்தது என்று கருதியிருக்கிறார்கள். எல்லா ஜனக் குழுக்களிலும் குறிப்பிட்ட சதவீதம் மனிதருக்கு, டின்னிடஸ் எனப்படும் செவிக் குறைபாடு எழும், அந்தக் குறைபாட்டைப் பலரும் அங்கீகரிப்பதில்லை, அது முற்றி காது செவிடான பின்னரெ அவர்கள் இந்த டின்னிடஸ் முன்பே தமக்கு அறிவித்திருக்கிறது, தம் செவிப் புலன் பழுதாகி வருவதை என்று அறிகிறார்கள் என்று புறம் தள்ளி விட்டிருக்கிறார்கள். ஆனால் கூகிள் யுகத்தில் இப்படித் தமக்கு ஓர் ஒலி கேட்கிறது, இதை வேறு யாரும் கேட்கிறார்களா என்று ஓரிருவர் எழுதிப் பார்க்கவும் பல்லாயிரம் பேர்கள் இப்படித் தாமும் ஓர் ஒலியைக் கேட்பதாகத் தெரிவிக்க, இந்த ரீங்கரிப்பு உலகெங்கும் கேட்கிறது, ஜனத்தொகையில் சுமார் 2%த்தினரே இந்த ஒலியைக் கேட்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இது வெறும் செவிப் பழுதைச் சார்ந்ததில்லை என்ற கருத்து இப்போது பரவலாகி வருகிறதாகத் தெரிகிறது.
ஆனால் எது இந்த வகை ஒலியை உலகெங்கும் எழுப்புகிறது? இதன் விளைவுகள் என்ன? அந்த நபர்களுக்கு என்ன பிரச்சினைகள் எழும், சமூகங்களை இது பாதிக்குமா? இந்தக் கேள்விகளுக்கும், இதை வேறு அறிவியலாளர்கள் சோதிக்கத் துவங்கி இருக்கிறார்களா என்ற கேள்விக்கும் இந்தக் கட்டுரையில் சில பதில்கள் கிட்டுகின்றன. படித்துத்தான் பாருங்களேன்!
https://newrepublic.com/article/132128/maddening-sound

[/stextbox]

[stextbox id=”info” caption=”அறிவியல் செல்லும் பாதை”]

Island-of-Knowledge

இற்றைக் காலத்தை அறிவியல் யுகம் என்கிறார்கள், சிந்தனையாளர்கள் பலரும். மதம்/ ஆன்மிகம்/ பண்பாடு/ மரபு ஆகியன வழிநடத்தி வந்த மானுடரை இப்போது அனேகமாக அறிவியலே வழி நடத்துவதாகவும் சொல்லப்படுகிறது. உலகெங்கும் மதம்/ பண்பாடு/ மொழி/ தேசம் என்ற பல புராதன சமூக இணைப்பு முறைகளிடையே நடக்கும் பல வகை மோதல்களால் பல கோடி மக்கள் பெரும் துன்பங்களில் சிக்கி அல்லாடுகிறார்கள் என்பதைத் தினம் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் நாம் காண்கிறோம். அப்படி இருக்க, அறிவியலே மக்களை வழி நடத்துகிறது என்றால் என்ன ஐயா அர்த்தமிருக்கிறது அந்த அறிவிப்பில் என்று கேள்வி கேட்பீர்கள்.  அறிவியலும் அப்படி ஒன்றும் அனைத்தையும் கடந்த அணுகல் இல்லை என்கிறார் இந்தச் சுட்டியில் காணப்படும் மதிப்புரையின் இலக்கான புத்தகத்தின் ஆசிரியர், க்ளைய்ஸர் என்பார்.
ஆமாம், பெரிய மேதாவி, அறிவியலின் குறைபாடுகளைக் கண்டு விட்டாராக்கும், ஏதாவது மதக்குழுவின் பிரச்சாரகராயிருக்கும் என்பீர்களாயின், அதுதான் இல்லை. இவர் ஒரு இயற்பியலாளர். அதுவும் உலகத்தின் தலையாய பல்கலைகளில் ஒன்றில் போதிப்பவர். மார்ச்செலோ க்ளெய்ஸர் என்ற இந்த இயற்பியலாளர் அறிவியல் வழியே எதார்த்தம் பற்றி நமக்குத் தெரிவது நிரந்தரமாகவே குறைபாடுள்ளது, தவிர எதார்த்தம் என்னும் பிரும்மாண்டமான மர்மத்தில் அறிவியல் என்பது மெதுவே வளர்ந்து வரும் ஒரு சிறு தீவுதான் என்று சொல்கிறார்.
அதோடு நிற்காமல், இந்த மெதுவே வளர்ந்து வரும் தீவின் எல்லை பெரிதாகப் பெரிதாக, நாம் எத்தனை தூரம் அறியாமையில் மூழ்கி இருக்கிறோம் என்று நாம் அறிவதும் மிகவுமே பெரிதாகி வருகிறது என்றும் சுட்டுகிறார். எதார்த்தத்தின் பரிமாணங்கள் எத்தனை என்று நாம் அறிவது கூடச் சாத்தியமில்லாதிருக்கையில், அனைத்தையும் இணைத்த விளக்கம் கொடுக்கும் கோட்பாடு ஒன்றை நாம் அடைவது சாத்தியமென்று சில அறிவியலாளர்கள் சொல்வது பேதமை என்கிறார்.
நாம் அண்ட பேரண்டத்தின் பிரும்மாண்ட வெளியில் ஒரு துளியூண்டு மூலையில் கால- இட வெளியின் சிறு சில்லுப் பகுதியில் சிக்கி இருக்கிற மிகச் சிறு ஜீவராசிகள், நம்முடைய மூளை என்ற ஒரு அவயமோ மிகவுமே குறைகள் கொண்ட ஒரு உறுப்பு. நம் கருவிகள், கோட்பாடுகள் எல்லாமே ஒரு சிறு காலத் துண்டின் சிற்சில பிரச்சினைகளைத் தீர்க்க நாம் உருவாக்கிக் கொண்டுள்ள சிறு உபாயங்கள் அவ்வளவே என்று நம் அகங்காரப் பலூனை கருணையற்ற தர்க்கம் என்னும் சிறு குண்டூசியால் குத்தி உடைத்து விடுகிறார்.
இதை எல்லாம் அவர் ஏதோ அரூபமான தர்க்கப் பிரச்சினயாகப் பார்க்கிறாரா என்றால், அதுவும் இல்லை. தான் பல பத்தாண்டுகளாகப் பயின்று வந்த அறிவியல் துலக்க முயற்சிகளில் தமக்கு ஏற்பட்ட பல அனுபவங்களைச் சொல்லி அவை தமக்குக் கொடுத்த படிப்பினைகளையே நம் முன் வைப்பதாகச் சொல்கிறார். அத்தகைய சம்பவங்களையும் புத்தகத்தில் கொடுக்கிறாராம். ஆனால் அறிவியலை இவர் ஒதுக்கச் சொல்கிறாரா என்றால் இல்லை. அறிவியல் என்ற ஒரு அணுகலைத் தம் விளக்கங்கள் மேலும் வலுப்படுத்தும் என்றும் நிதர்சன நோக்கு அவசியம் என்றும் மட்டுமே சொல்கிறாராம்.
புத்தக விமர்சகர் தன் பங்குக்கு மாற்று விளக்கங்களைக் கொடுக்கிறார். அவை இந்தப் புத்தகத்திற்கு வலு சேர்க்கும் முயற்சிகளாகவே இருக்கின்றன. அவைதான் என்ன? படித்துப் பாருங்கள்.
http://lareviewofbooks.org/article/a-peculiar-oceanography/


[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.